Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

குட்கா விவகாரம்: அ.தி.மு.க செய்த தவறு... குழப்பத்தில் தி.மு.க - நடந்தது என்ன?

சட்டமன்றக் கூட்டத் தொடரில் தடை செய்யப்பட்ட குட்காவைக் கொண்டு வந்த வழக்கில் புது நோட்டீஸை அனுப்ப, உரிமைக்குழுவுக்கு அனுமதியளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இதையடுத்து, அறிவாலயத்தில் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது தி.மு.க தலைமை.

சபாநாயகர் தனபால்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் தாராளமாகக் கிடைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. இதையடுத்து, 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சட்டசபைக்குள் கொண்டு சென்று சபாநாயகரிடம் காண்பித்தனர். இதன் தொடர்ச்சியாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதன் பின்னர் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஸ்டாலின். இதன்பேரில் தடையும் விதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தலைமை நீதியரசர் சாஹி, நீதியரசர் செந்தில்குமார் அமர்வு இன்று காலை 11 மணிக்கு அளித்த தீர்ப்பில், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்வதாகத் தெரிவித்தனர். மேலும், `உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் புதிதாக உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளது உயர் நீதிமன்றம். இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், கொறடா சக்ரபாணி உள்ளிட்டோருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த வழக்கில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.

ஸ்டாலின்

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தி.மு.க வழக்கறிஞர்களிடம் பேசினோம். ``உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாக நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக, தமிழ்நாட்டில் குட்காவைத் தயாரிப்பதற்கும் விற்பதற்கும்தான் தடை உள்ளது. அதைப் பயன்படுத்துவதற்குத் தடை இல்லை. இந்த அரசாங்கத்தில் குட்கா எளிதாகக் கிடைக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவே சட்டமன்றத்துக்குள் கொண்டு சென்றோம். குட்காவைத் தயாரிக்கவும் விற்கவும் கூடாது, ஆனால், அதைக் கையில் வைத்திருப்பதில் குற்றம் இல்லை என்பதை அடிப்படையாக வைத்தே இந்த வழக்கை எதிர்கொண்டோம்.

2017-ம் ஆண்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஃபைலும் குட்கா வியாபாரி செங்குன்றம் மாதவராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியும் ஒத்துப் போனதாகச் சொல்லப்பட்டது. இதுதொடர்பாக, தலைமைச் செயலருக்கு வருமான வரித்துறை அனுப்பிய ஃபைல் காணாமல் போய்விட்டது என்றெல்லாம் தகவல் வெளியானது. இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் அபிடவிட் ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்தப் ஃபைலை வாங்கியது ராமமோகன ராவ் எனவும் தகவல் வெளியானது. அப்போது அரசு தரப்பில், `நாங்கள் குட்காவைத் தடை செய்துவிட்டோம்' எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கருத்தை முறியடிக்கும் வகையிலேயே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கர்

தவிர, சட்டமன்ற உரிமைக்குழுவின் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் இருக்கிறார். அவர், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான விவகாரத்தில் தி.மு.க தலைவர் மீது மானநஷ்ட வழக்கைப் போட்டிருக்கிறார். மேலும், உரிமைக்குழுவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுப்பினராக இருக்கிறார். அவர் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் மீது தி.மு.க தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இதையெல்லாம் கணக்கில் வைத்து, வேண்டும் என்றே உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது என்ற வாதத்தை முன்வைத்தோம்.

இதையடுத்து, தலைமை நீதிபதி ஏபி.ஷாஹி அமர்வு, 21 எம்.எல்.ஏக்களில் இருவர் இறந்துவிட்டனர். ஆகையால் அவர்கள் இருவர் மீதான மனுக்களும் ஏற்கனவே செயலற்றுவிட்டது. மேலும், ஒரு எம்.எல்.ஏ தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது சட்டப்பேரவை உரிமை மீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீஸில் சட்டச் சிக்கல் மற்றும் குளறுபடிகள் இருப்பதால், மீதமுள்ள 19 எம்.எல்.ஏ-க்களுக்கு, புதிதாக நோட்டீஸ் அனுப்புவும் சட்டப்பேரவை உரிமை மீறல் குழுவுக்கு அனுமதி அளித்தனர். உரிமை மீறல் குழு அனுப்பும் நோட்டீஸை சட்டரீதியாகவே எதிர்கொள்வோம்" என்றனர் விரிவாக.

Also Read: “குட்கா குறித்து பேச முடியாது... உண்மை விரைவில் வெளியே வரும்!”

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரிடம் பேசினோம். ``உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என தி.மு.க தடை உத்தரவைப் பெற்றது. இதனை நீக்குவதற்கு ஆளும் தரப்பில் முயற்சி செய்யாததும் ஒரு காரணம் எனக் கருதுகிறோம். எனவே, புதிதாக நோட்டீஸை அனுப்புமாறு நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர். அடிப்படைத் தவறுகளைச் சரிசெய்துவிட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்புவோம்" என்றார்.

உரிமைக்குழு ஏற்கெனவே அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டு நிலையில், `புதிதாக என்ன நோட்டீஸ் அனுப்பப் போகிறார்கள்?' என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது அறிவாலயம்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/madras-high-courts-judgement-regarding-gutka-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக