Ad

திங்கள், 31 அக்டோபர், 2022

Live: தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னையில் தொடரும் கனமழை!

திருவெற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கிண்டி, திருவான்மியூர் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்து வருகிறது.

கனமழை

அதேபோல சென்னை புறநகர் பகுதிகளிலும் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில், இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கனமழை எச்சரிக்கையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மழை

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழை தொடரும் எனவும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/heavy-rain-in-tn-chennai-and-surrounding-area

Doctor Vikatan: வழுக்கைத்தலையில் முடி வளரச் செய்யுமா சின்ன வெங்காயம்?

Doctor Vikatan: சின்ன வெங்காயத்தை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிப்பதன் மூலம் வழுக்கையான பகுதிகளிலும் முடி வளரும் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உண்மையா? எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

கீதா அஷோக்

கூந்தல் உதிர்வுக்கான டிப்ஸில், சின்ன வெங்காயத்தை அரைத்துப் போடச் சொல்லும் குறிப்பு பலராலும் பகிரப்படுகிறது. இப்படி குறிப்பு சொல்பவர்கள் யார் என்பதை முதலில் கவனியுங்கள். தவறான ஃபார்வேர்டுகளை நம்பியும், போகிற போக்கில் யாரோ சொல்வதையும் வைத்து எந்த விஷயத்தையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர்கள்.

இயற்கையானது என்றாலும் எந்தப் பொருளிலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். உதாரணத்துக்கு வெந்தயம்.... அது நல்லது என்றாலும் சிலருக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். வெங்காயமும் அப்படித்தான். வெங்காயத்தில் சல்ஃபர் எனப்படும் கந்தகச்சத்து மிக அதிகம்.

எனவே வெங்காயத்தை அப்படியே பச்சையாக அரைத்து, தலையில் தேய்த்துக்கொள்ளும்போது அது உங்கள் முடியை மெலிதாக்கிவிடும். முடி அறுந்து உதிரத் தொடங்கும். வெங்காயம் கூந்தலுக்கு நல்லது என்ற எண்ணத்தில் அதை கற்றாழையுடன், தயிருடன் என எதனுடன் எல்லாமோ சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் உபயோகிக்கிற கற்றாழையும், தயிரும் கூந்தலுக்கு நல்லதுதான் என்றாலும், அவற்றுடன் நீங்கள் சேர்க்கும் வெங்காயம், அவற்றின் நல்ல தன்மைகளையும் சேர்த்து அழித்து விடும். எனவே உங்களுடைய கூந்தலின் தன்மை, அதன் பிரச்னை தெரிந்தே எதையும் உபயோகிக்க வேண்டும். மூலிகைகள் என்பதாலேயே அவை எல்லோருக்கும் உகந்தவை என்று அர்த்தமில்லை. ஒவ்வொரு மூலிகைக்கும் பல்வேறு குணாதிசயங்கள் இருக்கும். அவை எல்லாம், எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. கூந்தலுக்கு நல்லது என நீங்கள் பின்பற்றும் ஒரு குறிப்பால் உங்களுக்கு வேறு பாதிப்புகள் வரக்கூடும்.

கூந்தல்

உதாரணத்துக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்கள், வீஸிங் உள்ளவர்கள், காலையில் எழுந்ததும் அடுக்குத் தும்மல் போடுபவர்கள் போன்றோருக்கெல்லாம் இப்படி எல்லா டிப்ஸும் பக்க விளைவுகள் இல்லாமல் வேலை செய்யும் என்று சொல்வதற்கில்லை.

இயற்கையான பொருளை உபயோகிப்பதானாலும் அதற்கு முன் நிபுணர்களையோ, மருத்துவரையோ சந்தித்து ஆலோசனை பெற்ற பிறகு பின்பற்றுவதே சரியானது. உங்களுக்கு வழுக்கை பிரச்னை இருந்தால் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையைப் பின்பற்றுவதுதான் சரியாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-doctor-vikatan-can-chives-make-hair-grow-in-baldness

செண்பகவல்லித் தாயாரும் ஜெகந்நாதப் பெருமாளும் அருளும் நந்திபுர விண்ணகரக் கோயிலில் அஷ்டமித் திருவிழா!

பொன்னியின் செல்வன் புத்தகத்தின் முதல் பாகத்தின் நாற்பது மூன்றாவது அத்தியாயத்தில் பழையாறை நகரத்தின் தோற்றத்தை விவரிப்பார் கல்கி. குந்தவை தேவியைக் காண வரும் வந்தியத்தேவன் பழையாறை நகரத்தை அரிசிலாற்று தென்கரையில் நின்று ரசிப்பதாகக் கதை அமைந்திருக்கும். 

சேக்கிழார் பெருமான் பாடலில், 

"தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்துபாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை” எனக் குறிப்பிட்டு அந்த நூலில் கல்கி அழகாய் வர்ணித்திருப்பார். அதில் வந்தியத்தேவன் குந்தவை பிராட்டியைச் சந்திக்க வந்த நாளன்று கிருஷ்ண ஜயந்தி. திருவிழாக் கோலமாக பழையாறையை காட்சிப்படுத்தியிருப்பார் கல்கி. பழையாறையில் இருக்கும் நந்திபுர விண்ணகர கோயிலைச் சுற்றியே அனைத்து விழாக்களும் நடைபெறும். அந்தக் கோயிலின் வாசலில் நின்றுதான் ஆழ்வார்க்கடியான், "கண்டேன் கண்டேன் கண்டேன் கண்ணுக்கினியானை கண்டேன்" என்று பாடி சலசலப்பை ஏற்படுத்துவார். அதைக் கண்டே செம்பியன் மாதேவியும் குந்தவை தேவியும் வானதி தேவியும் ஆழ்வார்க்கடியானிடம் பேசுவார்கள்.

நந்திநாதர்
அத்தகைய சிறப்பு மிக்க கோயில்தான் பழையாறையில் இன்றும் இருக்கும் நந்திபுர விண்ணகர கோயில். அந்தக் காலத்தில் பெருமாளின் ஒவ்வொரு பண்டிகைகளிலும் அரசர் அரசிகளும் இந்த கோயிலில் வந்து பெருமாளையும் தாயாரையும் வணங்கிச் செல்வது வழக்கம். செண்பகவல்லி தாயாரும் ஜெகந்நாத பெருமாளும் அருளும் இந்த நந்திபுர விண்ணகர கோயிலில், அஷ்டமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். 

திருவிழா கொண்டாடும் காரணம்

ஒருமுறை தாயார் பெருமாளிடம் "என்னை உங்கள் மார்பில் ஏற்றுக்கொள்ளுங்கள்" என வேண்டுகிறாள். பெருமாள் அதற்கு "நீ பூலோகத்திற்குச் சென்று எனக்காகக் காத்திரு, நான் அங்கு வந்து உன்னை ஏற்றுக்கொள்கிறேன்" என்கிறார். அதன் படி தாயாரும் இந்த பழையாறை நந்திபுரத்திற்கு தை அமாவாசை நாளன்று வந்து செண்பகவல்லி தாயாராக ரூபம் கொண்டு பெருமாளையே எண்ணிக் காத்திருக்கிறாள். தாயாருக்குக் கொடுத்த வாக்கின் படி பெருமாள் ஜெகந்நாதனாக உருவம் பெற்று ஐப்பசி மாதம் வெள்ளிக்கிழமை (அதாவது ஐப்பசி மாத அஷ்டமி) நாளன்று தாயாரை தன்னோடு சேர்த்துக்கொள்கிறார். இந்தக் கோயிலில் தாயார் கிழக்கு முகமாகவும் பெருமாள் மேற்கு முகமாகவும் காட்சி தருகின்றனர். பெருமாள் தாயாரை ஏற்றுக்கொண்ட நாளான ஐப்பசி மாத அஷ்டமி நாளை ஒவ்வொரு ஆண்டும் அஷ்டமி திருவிழாவாக இந்தக் கோயிலில் கொண்டாடுகின்றனர். 

இந்த வருடம் (31-10-2022) அக்டோபர் 31-ம் தேதி மாலை முதல் இந்த விழா தொடங்கியிருக்கிறது. அன்று மாலை முதலே ஸ்ரீ சுத்த யாகம் தொடங்கப்பட்டு பெருமாளுக்குப் பூஜைகள் நடைபெறும். அடுத்த நாள் பெருமாளுக்குப் பெரிய திருமஞ்சனம் வெகு விமரிசையாக நடைபெறும்.
பெருமாள்

யாரெல்லாம் யாகம் வளர்ப்பர்?

குழந்தை பாக்கியம் வேண்டுவோர், பதவி உயர்வு கிடைக்கவேண்டும் என்று நினைப்போர், கல்யாணம் ஆகாத ஆண் பெண் என அனைவரும் இந்த யாகத்தில் கலந்து கொள்வர். இந்த யாகத்தை மனப்பூர்வமாகப் பெருமாளை வணங்கிச் செய்தால் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த யாகத்திற்கு வேண்டிய பொருள்களை அளித்தும் பலனைப் பெறலாம். தேன், பால், தயிர், மஞ்சள், ஹோம பொருள்கள் ஆகியவற்றைத் தரலாம். இங்கே பிரசாதமாக வெண்பொங்கல், புளியோதரை, சக்கரைப்பொங்கல் ஆகியவை தரப்படுகின்றன. யாகத்தில் பங்கு கொள்வோர் முன்பதிவு செய்து இங்கு வந்து பங்குகொள்வர். இந்த ஆண்டு நாளை மற்றும் நாளை மறுநாளும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது இந்த யாகம். யாகத்தில் கலந்து கொள்வது மட்டுமின்றி இந்த நாளில் பெருமாளையும் தாயாரையும் தரிசிப்பதே சிறப்பான ஒன்றாகும்.



source https://www.vikatan.com/spiritual/temples/the-highlights-of-nandhipura-vinnagara-perumal-temple-ashtami-festival

வாழ்த்துங்களேன்...

கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்.

அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை - அமிர்தகடேஸ்வரரின் அருள் வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

அடுத்து 15.11.22 முதல் 28.11.22 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் - நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள்.

விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 10.11.22

பிறந்த நாள் :

 தி.விஜயலட்சுமி, புதுச்சேரி

 ரா. தன்ஷிகா, காஞ்சிபுரம்

 பா.இந்திரா பிரியதர்ஷினி, புதுச்சேரி

 ப.ரகுராம், புதுச்சேரி

 எல்.ராமச்சந்திரன், சென்னை

 என்.சிவா, கும்பகோணம்

 வ.ரஞ்சித்குமார், தென்காசி

பெ.கேசவன், கடலூர்

 ரவீந்தர், நாகப்பட்டினம்

 சு.சேதுராமன், சென்னை

 பி.மாணிக்கம், சென்னை

 பா.நீலமேகம், சென்னை

 நீ.அமுதவேல், மதுரை

 சே.கவிதா, கன்னியாகுமரி

 ரா.திவ்யா, மதுரை

 வே.காந்திமதி, அருப்புக்கோட்டை

 செந்தில்நாதன், தூத்துக்குடி

 ஹ.அம்சலேகா, சென்னை

 வி.ஸ்ரீனிவாசன், சென்னை

 மு.கமலேஷ், சென்னை

 வி.என்.ஜீவகுமார், சென்னை

 கா.ஜெகந்நாதன், திருவாரூர்

 எல்.ராமதாஸ், மதுரை

 ஐ.சுரேஷ்பாபு, திண்டிவனம்

 சி.மல்லிகா, காஞ்சிபுரம்

 பா.சுகுணவதி, சிதம்பரம்

 என்.பரந்தாமன், சென்னை

 எம்.எஸ்.பார்த்திபன், திருச்சி

 எல்.திவாகர், திருவாரூர்

 கே.வனிதாஸ்ரீ, சென்னை

 எம்.லாவண்யா, சென்னை

 சி.கோவிந்தம்மாள், சென்னை

 வெ.சுசீலா, சென்னை

 ஆ.கண்ணன், சென்னை

 பா.லோகநாதன், சென்னை

 எஸ்.அங்கமுத்து, சென்னை

 ரா.சாந்தி, சென்னை

 நா.அமுதா, வந்தவாசி

 கு.விஜயா, ஆற்காடு

 எம்.பரிமளா, சென்னை

 எம்.வேலுமணி, விழுப்புரம்

 கி.பாலாஜி, வேலூர்

 எம்.ராமநாதன், திருத்தணி

 எஸ்.கார்த்திகேயன், மதுரை

திருமண நாள் :

 எஸ்.செந்தில்குமார்-சுமித்ரா, சென்னை

 பா.ராகவன்-கீதா ராணி, மதுரை

 பி.நிரஞ்சன்-மகாலட்சுமி, கடலூர்

 எம்.கிருஷ்ணா-சைலஜா, சென்னை

 சி.பரணீதரன்-தேன்மொழி, திருச்சி

 டி.சந்திரகாந்த்-ஷ்யாமளா, திருச்சி

 நா.குமரேசன்-அலமேலு, திருவாரூர்

 என்.திருப்பதி-மீனாட்சி, சென்னை

 ஜெ.ரமேஷ்-வனிதா, திருவண்ணாமலை

 கே.பிரகாஷ்-ஜெயக்கொடி, சென்னை

 இரா.வெங்கட்-அம்பிகா, திருச்சி

 எஸ்.ராமசாமி-சுசீலா, சென்னை

 எஸ்.கே.ராமன்-சரிதா, சென்னை

 மா.திருக்குமரன்-விஜயா, கரூர்

 எஸ்.விவேக் ராஜன்-ப்ரியா, சென்னை

 சு.ஜெயராமன்-சுசித்ரா, சென்னை

 கா.மலரவன்-தேவிகா, திருச்சி

 எம்.தண்டபாணி-செல்வி, சென்னை

 பொ.ஆறுமுகம்-சீதாலட்சுமி, மதுரை

 எஸ்.கங்காதரன்-ராணி, சென்னை

இனிய நாள் விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

`வாழ்த்துங்களேன்'

சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்ன-600 002

Email: sakthi@vikatan.com



source https://www.vikatan.com/news/general-news/wishes-to-readers-11

01.11.22 செவ்வாய்க்கிழமை - Today RasiPalan | Indraya Rasi Palan | November - 01 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/01112022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

சென்னை ஐஐடி-யின் அறிவிப்பு... எதிர்க்கும் திமுக-வினர்! - என்ன காரணம்?!

இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக காசி இருக்கிறது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பண்டைய கலாசாரம், பாரம்பர்யம், அறிவுத் தொடர்பை மீண்டும் கண்டறியவும் கொண்டாடவும் வசதியாக வாரணாசியில் 'காசி தமிழ்ச் சங்கமம்' நிகழ்ச்சி நடத்த முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை என ஒரு மாதம் நடைபெறுகிறது.

கருத்தரங்குகள், விவாத அரங்குகள், கலாசார-பாரம்பர்ய நிகழ்வுகள் எனப் பல்வேறு நிகழ்வுகளுக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சென்னை ஐஐடி, தமிழகத்திலிருந்து 3,000 பேரை அயோத்தி மற்றும் காசிக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறது. இதற்கு ஒருபுறம் பா.ஜ.க-வினர் வரவேற்பு தெரிவித்திருக்கும் நிலையில், மற்றொருபுறம் தி.மு.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

பா.ஜ.க - தி.மு.க

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய அரசின் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற முன்முயற்சிக்கு அறிவுசார் ஒத்துழைப்பை வழங்கவிருக்கிறது. தமிழகத்துக்கும், வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையிலுள்ள ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை வெளிக்கொணருவது இதன் நோக்கம்.

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதனால், தமிழகத்தின் 12 வெவ்வேறு இடங்களிலிருந்து கலை, இலக்கியம், ஆன்மிகம், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களை காசிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும், சென்னை, கோவை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளிலிருந்து ரயில்களுடன் இணைக்கப்பட்ட சிறப்புப் பெட்டிகள் மூலம் பல்வேறு குழுக்களாகக் காசிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

ஒவ்வொரு குழுவினரும் புறப்பட்டுத் திரும்பி வர எட்டு நாள்கள் வரை ஆகும். காசி, அயோத்தி உள்ளிட்ட இடங்களைப் பார்வையிடுவதுடன், கங்கையில் படகு சவாரியும் மேற்கொள்வர். விருந்தினர்களின் பயணச் செலவு, தங்குமிடம் இலவசம். விருப்பமுள்ளவர்கள் https://ift.tt/1C9cAXO என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்' எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "கல்வியில் ஆன்மிகம் கலப்பது தப்பு அல்ல. ஆனால் மதவெறி கலந்துவிடக் கூடாது. பொதுக்காசை எடுத்து இப்படி வீசலாமா... மறைமுகமாக இதில் வேறு ஏதோ இருக்கிறது" என்றார்.

நாராயணன் திருப்பதி

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "தமிழ்நாட்டுக்கு எது நல்லது செய்தாலும், அதைக் கெடுதல் என்றுதான் இங்கு இருக்கக்கூடியவர்கள் சொல்வார்கள். தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் எப்போதெல்லாம் நல்லது நடக்கிறதோ, அப்போதெல்லாம் அதைக் கெடுதல் என்று சொல்வார்கள். அதனால் இவர்களுடைய விமர்சனங்களைப் பொருட்படுத்தவேண்டியது கிடையாது.

நம்முடைய கலாசாரம், பண்பாட்டைப் பெருமைப்படுத்துவதற்காக ஏதேனும் ஒன்றைச் செய்தால் அதிலும் குறை கண்டுபிடிப்பது என்பது தவறான விஷயம். ஆகவே இவர்களுடைய விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் ஆகவேண்டிய நல்ல காரியங்களை, ஆக்கபூர்வமான காரியங்களைப் பார்ப்பது சிறந்தது. இதில் அரசு நிதி எதுவும் வீணடிக்கப்படவில்லை" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/announcement-of-chennai-iit-dmk-opposing-why

மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்கள்... தமிழ்நாடு பிறந்த கதை! | The Imperfect Show



source https://www.vikatan.com/news/politics/the-imperfect-show-comments-show-dated-31-10-2022

Doctor Vikatan: கருத்தடை மாத்திரைகள் பீரியட்ஸை தள்ளிப்போட உதவுமா?

Doctor Vikatan: என் வயது 28. பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி பீரியட்ஸை தள்ளிப்போட வேண்டியிருக்கிறது. இதற்கு மாத்திரைகள் பயன்படுத்துவது சரியா? வேறு என்ன வழி?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மருத்துவர் ஸ்ரீதேவி

பீரியட்ஸை தள்ளிப் போடுவது என்பது பலரும் செய்கிற விஷயம் தான். பீரியட்ஸை தள்ளிப்போட பல வழிகள் உள்ளன. ஒருவேளை ஏற்கெனவே நீங்கள் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதாவது, 21 நாள்களுக்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர் என்றால், எத்தனை நாள்களுக்கு உங்களுக்கு பீரியட்ஸை தள்ளிப்போட வேண்டுமோ, அத்தனை நாள்களுக்கு அதே மாத்திரைகளை நீங்கள் தொடர்ந்து உபயோகிப்பது ஒரு வழி. அதை நிறுத்திய பிறகு உங்களுக்கு பீரியட்ஸ் வந்துவிடும்.

நீங்கள் ஏற்கெனவே கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், இன்று 2-ம் தேதி என்றும், உங்களுக்கு 5-ம் தேதி பீரியட்ஸ் வரும் நாள் என்றும் வைத்துக்கொள்வோம். நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கிற கருத்தடை மாத்திரையை நிறுத்தாமல் தொடரலாம். நீங்கள் எப்போது நிறுத்துகிறீர்களோ அப்போது தான் பீரியட்ஸ் வரும். இது ஒரு வழி.

நீங்கள் எந்தவித கருத்தடை முறையையும் பயன்படுத்தவில்லை என்றால் மருத்துவர் உங்களுக்கு புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார். இதில் இரண்டு வகையான மாத்திரைகள் உள்ளன. அதில் Norethisterone வகை மாத்திரைகளை ஒருநாளைக்கு 2 முதல் 3 வேளைகள் எடுக்கச் சொல்வார்கள். உங்களுக்கு எந்த நாள் பீரியட்ஸ் வரும் என கணிக்கிறீர்களோ, அதற்கு மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு முன்பிருந்து அந்த மாத்திரைகளை எடுக்கச் சொல்லி உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். நீங்கள் எத்தனை நாள்களுக்கு பீரியட்ஸை தள்ளிப்போட நினைக்கிறீர்களோ, அத்தனை நாள்களுக்கு இந்த மாத்திரையைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டியிருக்கும்.

periods

இந்த மாத்திரைகளை நிறுத்திய ஒன்றிரண்டு நாள்களில் உங்களுக்கு பீரியட்ஸ் வந்துவிடும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த மாத்திரையை நீங்கள் எந்த நேரத்தில் எடுக்கிறீர்களோ, அதே நேரத்தில் தினமும் தவறாமல் எடுக்க வேண்டும். மாத்திரை எடுக்க மறந்தாலோ, ஒன்றிரண்டு வேளை தவறவிட்டாலோ இடையிலேயே உங்களுக்கு பீரியட்ஸ் வர வாய்ப்பு இருக்கிறது. இந்த மாத்திரை எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. 'டீப் வெயின் த்ராம்போசிஸ்' எனப்படும் கால்களில் ரத்தம் கட்டும் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மாத்திரைகளால் பாதிப்பு மேலும் தீவிரமாக வாய்ப்பு உண்டு. 'டீப் வெயின் த்ராம்போசிஸ்' பாதிப்பு உள்ளவர்களுக்கு வேறு மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

பீரியட்ஸை தள்ளிப்போடுவது என்பது உங்களுக்கு சிம்பிளான விஷயமாகத் தோன்றலாம். ஆனாலும் அதற்கு முன் உங்கள் முழுமையான உடல்நலம் குறித்து மருத்துவரிடம் சொல்லிவிட்டு, அவரது பரிந்துரையின் பேரில் மட்டுமே மாத்திரைகளை எடுக்க வேண்டும். அடிக்கடி இந்த மாத்திரைகளை எடுப்பதால் பக்கவிளைவுகள் வரலாம். ஒருமுறை எடுப்பதாலேயேகூட சிலருக்கு மாதவிலக்கு சுழற்சியில் பிரச்னைகள் வரலாம். மார்பகங்கள் கனத்து வலிப்பது போல உணரலாம். வாந்தி, வயிற்றுக்கோளாறு, மனநிலையில் மாற்றங்கள் போன்றவை வரலாம்.

periods

தவிர இரண்டாவதாக நான் குறிப்பிட்ட இந்த மாத்திரை கருத்தடைக்கானது அல்ல. எனவே மாத்திரையை நிறுத்திய பிறகும் உங்களுக்கு பீரியட்ஸ் வரவில்லை என்றால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று டெஸ்ட் செய்து பார்ப்பது அவசியம். 21 நாள்கள் எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை நீங்கள் எடுத்திருந்தால் மட்டுமே அது கருத்தடையாகவும் மாதவிலக்கைத் தள்ளிப்போடும் வகையிலும் வேலை செய்யும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-can-birth-control-pills-help-delay-periods

Motivation Story: 15,000 க்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சை; நோயாளியின் நண்பன் டாக்டர் தேவி ஷெட்டி!

`மருந்துகள் நோயை குணப்படுத்தலாம். ஆனால், மருத்துவர்களால் மட்டுமே நோயாளிகளை குணப்படுத்த முடியும்.’ - சுவிட்சர்லாந்து மருத்துவர் கார்ல் ஜங் (Carl Jung).
டாக்டர் தேவி ஷெட்டி

மனிதர்கள், மருத்துவர்கள்மேல் வைத்திருப்பது அபாரமான நம்பிக்கை. எப்பேர்ப்பட்ட தீராத நோயையும் மருத்துவர் தீர்த்துவிடுவார் என்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை. இந்த பலவீனம்தான் பலருக்குப் பணம் பார்க்கும் வழி. இதய அறுவை சிகிச்சையையே எடுத்துக்கொள்வோமே... அரசு மருத்துவமனையில் இலவசம். தனியார் மருத்துவமனைகளில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கட்டணம். பணத்துக்குத் தகுந்த சிகிச்சை, வசதிகள், கவனிப்பு. எல்லா மருத்துவர்களும் இப்படிப்பட்டவர்கள் இல்லை. விதிவிலக்கானவர்களும் உண்டு... இதயநோய் நிபுணர் டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டியைப்போல!

பெங்களூரு. டாக்டர் தேவி ஷெட்டியின் நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனை. உள்ளே நுழைந்ததும் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள் அத்தனை பேரும் வழிபட தனித்தனி வழிபாட்டுத்தலங்கள். யாருக்கு, எந்த நோயாக இருந்தாலும் அதற்கான தீர்வு தொடங்குவது இந்த இடத்திலிருந்துதான். உள்ளே போனால் வரவேற்புக்கூடம். `இங்கே வங்காள மொழியில் பேசலாம்’ என்கிற அறிவிப்புப் பலகை. கர்நாடகவாசிகள் கன்னடத்தில் பேசுவார்கள்; ஆங்கிலமும் இந்தியும்கூடத் தெரியும். பிறகு ஏன் வங்க மொழி? அண்டை நாடான பங்களாதேஷிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அதிகம். நோயாளிகளுடன் வரும் நண்பர்கள், உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் சிரமப்படாமல் உரையாடும் வசதிக்காக வங்க மொழி.

டாக்டர் தேவி ஷெட்டி

டாக்டர் தேவி ஷெட்டி நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை பாணியே வேறு. அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படிக் குறிப்பிடுகிறார்... `இன்றைய நவீன மருத்துவம், ஒரு மருத்துவர் பரிவோடு, ஒரு நோயாளியைத் தொட்டுப் பேசும் முக்கியத்துவத்தை அடியோடு இல்லாமல் ஆக்கிவிட்டது. ஒரு நோயாளி என்னிடம் வரும்போது, அவருக்கான எல்லா பரிசோதனைகளும் செய்யப்பட்டிருக்கும். அந்த ரிப்போர்ட்டுகளையும் நான் படித்திருப்பேன். அவருக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். அந்தச் சூழ்நிலையில், நான் என் ஸ்டெதாஸ்கோப்பைப் பயன்படுத்தவேண்டிய தேவையே இருக்காது. ஆனாலும், நான் என் ஸ்டெதாஸ்கோப்பை எடுத்து நோயாளியின் மார்பில் வைத்துக் கேட்பேன். அவருடைய இதயத்துடிப்பையும், நுரையீரல் செயல்பாட்டையும் கவனிப்பேன். நான் நோயாளியைத் தொடவேண்டிய தேவையே இல்லை. ஆனாலும் நான் ஒவ்வொருவரையும் தொட்டுப் பேசுகிறேன். தொடுதலின் சக்தி ஆச்சர்யகரமானது.

நான் நோயாளியைத் தொடுகிற கணத்தில், அவரின் தோளைச் சுற்றி என் கைகளைப் போட்டுக்கொள்வேன். அவருக்கு அது என்மேல் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தும். ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள்தான் அவருடன் உரையாடுவதற்கான நேரம். அந்த நேரத்துக்குள் மரணத்தின் விளிம்பில் நடக்கும் ஆபரேஷனுக்கு அவரைத் தயார்படுத்திவிடுவேன். அவர் என்னை முழுமையாக நம்ப ஆரம்பித்துவிடுவார். அவரின் கண்களை நேருக்கு நேராகப் பரிவோடு பார்த்து, அவரோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு பேசவேண்டியது மிக அவசியம். இந்த உலகிலுள்ள மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் எல்லாவற்றையும்விட தொட்டுப் பேசும் இந்த வழிமுறைக்கு மிகச்சிறந்த குணப்படுத்தும் சக்தி உண்டு. ஆனால், எதிர்பாராதவிதமாக தொட்டு சிகிச்சை அளித்தல் என்கிற இந்தத் தத்துவம், நோயாளிகளின் மேலான பரிவு, அக்கறை இவையெல்லாம் படிப்படியாக இப்போது இல்லாமலேயே போய்விட்டன. இது மிக மோசமான சூழ்நிலை. ஆனாலும் இவையெல்லாம் திரும்ப வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’

டாக்டர் தேவி ஷெட்டி

இதுதான் தேவி பிரசாத் ஷெட்டி. அதனால்தான் பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளெல்லாம் அவரைத் தேடி வந்தன. அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வால்ஸ்ட்ரீட் ஜர்னல் அவரை `தி ஹென்றி ஃபோர்டு ஆஃப் ஹார்ட் சர்ஜரி’ என்று வர்ணித்தது. நோயாளியிடம் பரிவுகாட்டித் தொட்டுப் பேச வேண்டும் என்பதை தேவி ஷெட்டி கற்றுக்கொண்டது ஒரு பெரிய ஆளுமையிடம். அது ஒரு சுவாரஸ்யமான கதை. அதற்கு முன்பு தேவி ஷெட்டியைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு...

1954-ம் ஆண்டு, கர்நாடகாவிலுள்ள தக்‌ஷிண கன்னடா மாவட்டத்திலிருக்கும் கின்னிகோலி என்கிற கிராமத்தில் பிறந்தவர் தேவி ஷெட்டி. வீட்டில் ஒன்பது குழந்தைகளில் எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர். பள்ளியில் படிக்கும்போது, கிறிஸ்டியான் பார்னார்டு (Christiaan Barnard) என்ற மருத்துவரைப் பற்றிக் கேள்விப்படுகிறார். பார்னார்டு இதய அறுவை சிகிச்சை நிபுணர். அவர் உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்தார் என்கிற செய்தியைக் கேள்விப்படுகிறார் ஷெட்டி. அன்றிலிருந்து தானும் ஓர் இதய அறுவை சிகிச்சை நிபுணராக ஆக வேண்டும் என்கிற லட்சியம் அவருக்குள் துளிர்விடுகிறது. படிப்படியாக அதை நோக்கி அவர் பயணம் செய்கிறார்.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மங்களூர் கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டமும், பொது அறுவை சிகிச்சையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பிறகு லண்டனிலுள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸில், எஃப்.ஆர்.சி.எஸ் பட்டம் வாங்கினார். 1989-ல் இந்தியாவுக்குத் திரும்பியவர், கொல்கத்தாவிலுள்ள பி.எம்.பிர்லா ஹாஸ்பிட்டலில் பணியாற்றினார். அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போதெல்லாம் தொடுதலின் மகத்துவம் அவருக்கே தெரியாது. அறுவை சிகிச்சைக்குப் பிறகுகூட ஏழை நோயாளிகளென்றால் யாரும் தொட்டுப் பேச மாட்டார்கள். அன்றைய காலகட்டத்தில் மொபைல்போன்கள் இல்லை. ஆபரேஷன் தியேட்டரில் ஒரு லேண்ட்லைன் போன் மட்டும் இருந்தது.

ஒருநாள் டாக்ட தேவி ஷெட்டி ஆபரேஷன் தியேட்டரில் ஓர் அறுவை சிகிச்சையில் இருந்தார். அப்போது அந்த போன் அழைப்பு வந்தது. அவருடன் இருந்த மயக்க மருத்துவர் போனை எடுத்துப் பேசினார். மறுமுனையில் பேசியவர் தேவி ஷெட்டியை வீட்டுக்கு வரும்படி அழைத்திருக்கிறார். இந்தத் தகவலைக் கேட்டதும், ``நான் ஒரு ஹார்ட் சர்ஜன். ஒரு நோயாளியின் வீட்டுக்குப் போய் நான் என்ன செய்யப்போகிறேன்?’’ என்றார் தேவி ஷெட்டி. அன்றைக்குத் திரும்பத் திரும்ப அந்த போன் அழைப்பு வர, வேறு வழியே இல்லாமல் அழைத்தவரின் வீட்டுக்குப் போனார் தேவி ஷெட்டி. அழைத்தவர் வேறு யாருமில்லை... அன்னை தெரசா.

அன்னை தெரசாவுக்கு ஹார்ட் அட்டாக். அதற்கு சிகிச்சையளித்தவர் டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி. பின்னாளில் அன்னை தெரசாவுடனான தனது நாள்களைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் டாக்டர் ஷெட்டி... ``எனக்கு எளிமையின் ஆற்றலையும், இரக்கத்தின் ஆற்றலையும், அன்பின் ஆற்றலையும் அறிமுகப்படுத்தியவர் அன்னை தெரசாதான். அவர் ஒரு கன்னியாஸ்திரீ. அவருடைய வேலை என்பது பிரார்த்தனை செய்வது. ஆனால் அவரோ, சக மனிதர்களுக்கு உதவுவதுதான் கடவுளை அடைய சிறந்த வழி என்று நம்பினார்.’’

அன்னை தெரசா

கொல்கத்தாவிலிருந்து பெங்களூருக்குத் திரும்பியவர், தன் இதய அறுவை சிகிச்சைப் பணியைத் தொடங்கினார். 2001-ல் நாராயணா ஹிருதயாலயா (இப்போது நாராயணா ஹெல்த்) மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைத் தொடங்கினார். இதய அறுவை சிகிச்சை மட்டுமல்லாமல், புற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகள், குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை எனப் பல சிகிச்சைகள் இங்கே அளிக்கப்படுகின்றன. ஆயிரம் படுக்கை வசதியுடன் இயங்கிவருகிறது நாராயணா ஹெல்த். ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் இங்கே நடைபெறுகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் தினமும் இங்கே வருகிறார்கள். பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், ஜெய்ப்பூர், மும்பை, மைசூர்... எனப் பல நகரங்களில் மொத்தம் 24 நாராயணா ஹெல்த் மருத்துவமனைகள் இருக்கின்றன.

தேவி ஷெட்டியின் நாராயணா மருத்துவமனையில் மிகக்குறைந்த செலவில் சிகிச்சை என்பதுதான் சிறப்பம்சம். பல தனியார் மருத்துவமனைகள் இதய அறுவை சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டிருக்க, மிகக் குறைந்த செலவில் அறுவை சிகிச்சை அளிக்கிறார் தேவி ஷெட்டி. பல்வேறுவிதமான மருத்துவப் பரிசோதனைகளுக்கும் குறைந்த கட்டணமே இவர் மருத்துவமனையில் வசூலிக்கப்படுகிறது. ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை. இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார் ஷெட்டி. இந்த சாதனைகளுக்கெல்லாம் அடிப்படை அவருக்கு அன்னை தெரசாவுடன் ஏற்பட்ட சந்திப்பு.

இப்போதும் தேவி ஷெட்டியின் அலுவலக அறையில் அன்னை தெரசாவின் புகழ்பெற்ற வாசகம் அடங்கிய ஒரு பலகை மாட்டப்பட்டிருக்கிறது. அதில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது... `பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிட உதவும் கரங்கள் புனிதமானவை.’


source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/motivation-from-the-life-of-doctor-devi-shetty

ரத்தம்... ரணம்... யுத்தம்... ஆப்கானியர்களின் அசுர ஆட்டம்!

எந்த வரைமுறைகளும் இல்லாமல், எந்த லாஜிக்கும் இல்லாமல், ரத்தம் தெறிக்கத் தெறிக்க இருபுறமிருந்தும் ஆட்கள் கூட்டம் கூட்டமாக மோதிக்கொள்ள வேண்டும். இப்படியான சண்டைக்காட்சிகளால் நிரம்பிய திரைப்படங்களுக்கே இப்போது அதிக மவுசு இருக்கிறது. ரசிகர்களுமே அவற்றைத்தான் அதிகமாக விரும்பிப் பார்க்கின்றனர். அந்தவகையில், நாம் இப்போது பார்க்கப்போகும் விளையாட்டை மையமாக வைத்து வெகு சீக்கிரமே கோலிவுட் இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மைதானத்தை டாப் ஆங்கிளில் படம் பிடித்தால் வெறும் புழுதிப் படலம் மட்டுமே ஆக்கிரமித்திருக்கக்கூடிய அந்த விளையாட்டின் பெயர் ‘புஷ்காஷி.’ ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய விளையாட்டு இது.

அமெரிக்கப் படைகள் வெளியேறி தாலிபன்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் முழுமையாக வந்திருந்த சமயத்தில் இணையதளங்களில் சில வீடியோக்கள் வைரலாகின. அவற்றில், ஆயுதம் ஏந்திய தாலிபன் படைவீரர்கள் குழந்தைகள் ஆடும் ராட்டினத்திலெல்லாம் ஆடிக் குதூகலித்ததை பெரும்பாலும் அனைவரும் ரசித்துப் பார்த்திருப்போம். ‘குழந்தைப் பசங்க சார்...’ என உலகமே தாலிபன்களை நோக்கி சர்க்காஸ்ட்டிக் கமெண்ட்டுகளை வீசியது. ஆனால், இவ்வாண்டு தொடக்கத்தில் தாலிபன்கள் தடையை நீக்கி விளையாட அனுமதித்திருக்கும் ‘புஷ்காஷி’ ஆட்டம் குழந்தை மனம் படைத்தவர் களுக்கானதல்ல. வேட்டைத்தனத்தின் தாண்டவமும், ஆதிமனித மனத்தில் நிரம்பியிருந்த குரூரமும் முழுமையாக வியாபித்திருக்கும் போட்டி அது.

தமிழ்நாட்டின் ‘ஜல்லிக்கட்டு’, கர்நாடகாவின் ‘கம்பாலா’ போன்று நமக்குப் பரிச்சயமான விலங்குகளைப் பயன்படுத்தி ஆடும் ஆட்டத்தைப் போன்றதுதான் புஷ்காஷியும். ஆனால், இதன் வீரியம் நாம் இதற்கு முன் கண்டிராதது. செத்துப்போன ஆடுகள் அல்லது கன்றுகளின் தலைகளை மட்டும் அகற்றிவிட்டு அவற்றின் சிதையை மையமாக வைத்தே இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. சிதைகளைத் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, சில சமயங்களில் அவற்றினுள் மணலை அடைத்தும்கூடப் பயன்படுத்தப்படுகிறது. கரடுமுரடான மைதானத்தில் குதிரை மேல் அமர்ந்திருக்கும் வீரர்கள் இரு அணிகளாகப் பிரிந்து கொள்வார்கள். ஆடு அல்லது கன்றினுடைய பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்ட அந்தச் சிதையைப் பறித்துக்கொண்டுசென்று தூரத்தில் இருக்கும் ‘நீதியின் வட்டம்’ என அழைக்கப்படும் அந்த வட்டத்தினுள் போடவேண்டும். நீதியின் வட்டத்தை நெருங்கவிடாமல் எதிரணியினர் தடுப்பார்கள். அவர்களைத் தாண்டி அந்த வட்டத்தை அடைய வேண்டும். கால்பந்தில் கோல் அடிப்பதைப் போன்றதுதான் இதுவும். ஆனால், கால்பந்துக்கென்று நிறைய வரைமுறைகள் இருக்கின்றன. எக்கச்சக்கமான விதிமுறைகள் இருக்கின்றன. இங்கே அதெல்லாம் பெரிதாகக் கிடையாது. மேலே குறிப்பிட்டதைப் போல புழுதி பறக்க ஒரு ஆக்‌ஷன் காட்சியைப் பார்ப்பதைப் போன்ற உணர்வுதான் இதைப் பார்க்கையில் ஏற்படும்.

மேலே குறிப்பிட்டது ‘புஷ்காஷி’ ஆட்டத்தின் ஒரு வகை. இதேபோன்று அணிகளின்றிக் கூட்டமாகவும் வேறுவிதங்களிலும் இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. இந்த விளையாட்டின் பின்னணி என்னவெனத் தேடும்போது, துருக்கி-மங்கோலிய நாடோடிகளின் இடப்பெயர்வின் போது 10 மற்றும் 15-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்த விளையாட்டு தோன்றியதாக ஒரு செய்தி இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் பழங்குடிகள் எதிர்த்தரப்பினரின் கால்நடைகளை வேட்டையாடித் தங்கள் முகாமுக்குக் கடத்தி வரும் வழக்கமே மருவி ‘புஷ்காஷி’ ஆக மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்போது ஆப்கானிஸ்தானில் மட்டு மல்லாமல் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இந்த விளையாட்டு கிளை பரப்பியிருக்கிறது.

ஜல்லிக்கட்டில் மாடுகளைப் பிடிப்பது ஒரு கலையாகவும் வீரத்தின் அடையாள மாகவும் பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்பதும் ஒரு தனி கௌரவமாக பாவிக்கப்படுகிறது. நம் மண்ணுக்கு ஒத்த இதே தன்மைகளை இந்த ‘புஷ்காஷி’ ஆட்டம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்த விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவராலும் சொந்தமாகக் குதிரைகளை வாங்கி அவற்றை முறையாகப் பராமரிக்க முடியாது. அந்த அளவுக்குப் பொருளாதார வசதி அவர்க ளிடம் இருக்காது. இதனால் ஊரிலேயே பெரிய செல்வந்தர்கள் குதிரைகளை வாங்கி இந்த ஆட்டத்திற்கென்றே பிரத்யேகமாகத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக நல்ல அனுபவமுள்ள வெல்லும் திறனுடைய சப்பந்தாஸ்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தங்களின் குதிரைகளைப் போட்டியில் ஆடுவதற்காகக் கொடுக்கிறார்கள். இந்தப் போட்டியில் ஆடி நிபுணத்துவம் பெற்றவர்களே ‘சப்பந்தாஸ்’ என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் போட்டியில் குதிரையோடு ஆடிக் கிடைக்கும் பரிசுப்பொருள்களையும் பணத்தையும் குதிரைக்காரர்களோடு பங்கிட்டுக்கொள்கிறார்கள். பரிசைத் தாண்டி, பெருமிதத்தின் அடையாளமாகக் கருதும் தங்களின் குதிரை வெல்ல வேண்டும் என்பதே செல்வந்தர்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.

கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, உள்ளூர் அமைப்புகள் என ஆப்கானிஸ்தானை ஆள நடந்த யுத்தத்தின் போதுமே எல்லாத் தரப்பும் இந்த ஆட்டத்தை ஊக்குவித்திருக்கிறது. 90-களின் இறுதியில் தாலிபன்கள் ஆட்சியிலேயே இந்த ‘புஷ்காஷி’ ஆட்டத்திற்கு முழுமையாகத் தடைவிதிக்கப்பட்டது. மக்களின் பிரதான பொழுதுபோக்காக இந்த ஆட்டம் இருப்பது அறமற்ற செயல் என்பதால் தாலிபன்கள் தடைவிதித்திருக்கிறார்கள். இடையில் அமெரிக்கப் பிடியில் ஆப்கானிஸ்தான் சென்றபோது இந்த ஆட்டம் வழக்கம்போல ஆடப்பட்டது. இப்போது தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். மக்களின் பொழுதுபோக்குகளுக்கு மூடுவிழா நடத்தும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர். ஆயினும், இந்த முறை ‘புஷ்காஷி’ தப்பித்துவிட்டது. தாலிபன்களும் இந்த விளையாட்டிற்கு அனுமதி கொடுத்து விட்டனர். கடந்த பிப்ரவரி-மார்ச்சில் தேசிய சாம்பியன்ஷிப் தொடரும் நடந்து முடிந்திருக்கிறது. நாடே குலைந்துபோய் மீள முடியாமல் அன்றாடமே சங்கடமாகிப் போயிருந்த சூழலிலும் அந்தத் தொடருக்கு வீரர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் அந்த மக்களின் பாரம்பரியத்தில் இந்த ஆட்டம் எவ்வளவு ஊறியிருக்கிறது என்பதை உணர முடியும். என்னதான் இருந்தாலும் வயலன்ஸ் கொஞ்சம் ஜாஸ்திதான் பாஸ்!



source https://sports.vikatan.com/sports-news/buzkashi-is-afghanistan-sports

31.10.22 திங்கட்கிழமை - Today RasiPalan | Indraya Rasi Palan | October - 31 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/31102022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

சனி, 29 அக்டோபர், 2022

சூரசம்ஹாரம்: பகைவருக்கு அச்சம்; பணிபவருக்கு ஞானம் வழங்கும் முருகனின் ஆயுதங்கள் 26!

பகைவருக்கு அச்சத்தையும் பணிபவருக்கு ஞானத்தையும் வழங்கும் முருகனின் ஆயுதங்கள் 26!

முருகக்கடவுள்

அக்டோபர் 30-ம் தேதி நாளை சூரசம்ஹார நிகழ்வு: ஆணவத்தில் ஆண்டவனையே எதிர்த்து மாமரமாய் நின்ற சூரனை சம்ஹாரம் செய்த கந்தவேளைப் போற்றிப் பணிவோம்!

முருகன்

கந்தனின் கரங்களில் இருக்கும் ஆயுதங்கள் பகைவருக்கு அச்சத்தையும் பணிபவருக்கு ஞானத்தையும் வழங்க வல்லவை. முருகனின் ஆயுதங்கள் 26 என்கின்றன புராணங்கள்! அவை...

முருகப்பெருமான்

ஞானமே அஞ்ஞானத்தை வெல்லும்.  ஆணவம், கன்மம், மாயை எனும் சூரபத்மன், சிங்கமுகன், தாருகன் ஆகியோரை அழித்து ஞானம் அளித்த ஞானவேலே முதன்மையான ஆயுதம்.

வேல் பூஜை

'குக்குடக் கொடி தரித்த பெருமாளே'...என்கிறது திருப்புகழ். அறியாமை எனும் இருளைப் போக்கி மெய்யறிவைப் புகட்டும் முருகனின் கொடியும் ஒரு ஆயுதமே.

சேவல் கொடி

`அங்குசம் கடாவ ஒருகை' என்கிறார் நக்கீரர். மதத்தை அடக்கி அன்பை வலியுறுத்தும் அங்குசமும் முருகனின் ஆயுதமே.

முருகப்பெருமான்

பகைவர்களின் கைகளைக் கால்களைக் கட்டப் பயன்படும் பாசம் எனும் கயிறும் முருகனின் ஒரு ஆயுதமே.

முருகப்பெருமான்

வள்ளி மயிலைக் கரம் பிடிக்க வேடனாக வந்த முருகன் தாங்கி நின்ற ஆயுதம் வில்லும் ஒரு ஆயுதமே.

முருகப்பெருமான்

பிறைமதி என்ற அம்பு கொண்டு முருகன் தாக்க தீவினைகள் மாளும் என்கின்றன ஞான நூல்கள்.

தோரணமலை முருகப்பெருமான்

அசுர சக்திகளின் சிரம் அறுக்க ஆறுமுகன் ஏந்திய ஆயுதம் கத்தி. முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனத்தில் இதைக் காணலாம்.

குதிரை வாகனத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான்

கத்தி ஏந்தும் கந்த பெருமான், கூடவே கேடயமும் ஏந்தியிருப்பார். இது மோதித் தாக்கவும், தாக்குதலில் இருந்து காக்கவும் பயன்படும்.

கந்தன்

கட்டுவாங்கம் எனும் கூரிய நீண்ட வாள். இடுப்பில் செருகிய இந்த வாள் கந்தனின் கம்பீரத்தைக் கூட்டும்.

கந்தன்

காங்கேயர் என்ற வடிவில் முருகப்பெருமான் கோடரி எனும் பரசு ஆயுதம் தாங்குவதாகக் கூறப்படுகிறது.

முருகப்பெருமான்

ஈசனுக்குரிய சூலத்தையும் ஸ்வாமிநாதனாம் முருகப்பெருமான் சூரசம்ஹார நாளில் தாங்கி இருந்தான் என்கின்றன நூல்கள்.

முருகப்பெருமான்

திகிரி, கதை எனப்படும் குண்டாந்தடியை திருமால் அளிக்க முருகன் தாங்கி நின்றானாம்.

திருத்தணி

திருமாலுக்கு உரிய சக்கரத்தையும் முருகன் தாங்கி நின்றான். அரிசிற்கரைபுத்தூரில் உள்ள முருகன் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளான்.

சூரசம்ஹாரம்

உறுதியான எதையும் உடைக்கும் வஜ்ரம் எனும் ஆயுதத்தை ஏந்திய முருகன் அசுர சக்திகளின் எலும்புகளை உடைத்தான்.

சூரசம்ஹாரம்

தண்டம் எனும் நீளமான கைத்தடி ஏந்திய முருகனை பல ஆலயங்களில் தரிசித்து இருக்கலாம். தண்டாயுதபாணி என்றே இதனால் பெயரும் பெற்றான்.

தண்டாயுதபாணி!

சரவணபவன் என்ற வடிவத்தில் 12 கரங்களில் ஒன்றில் உளியை (டங்கம்) வைத்துள்ள முருகன் விசேஷமானவன்.

முருகன்

தாரகாரி என்ற வடிவத்தில் உலக்கை எனும் தோமரத்தை ஒரு கரத்தில் பிடித்துள்ளான் கந்தன்.

கந்தன்

சௌரபேய சுப்ரமண்யரின் கரங்களில் ஒன்று மன்மதனுக்குரிய கரும்புவில்லை ஏந்தியுள்ளது.

சுப்ரமண்யன்

அதேபோல மற்றொரு கரம் மலரம்புகள் எனும் தாமரை, அசோகு, மா, முல்லை, நீலம் ஆகிய பூக்களால் ஆன பாணத்தையும் கொண்டுள்ளது.

பழநி முருகன்

நாதத்தை எழுப்பி மாயை அகல முருகன் ஏந்திய ஆயுதம் மணி. இதுவும் ஒரு ஞானப்படை. 'பாடின் படுமணி' என்கிறார் நக்கீரர்.

பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் சூரசம்ஹாரம்

பிரம்மசாஸ்தா கோலத்தில் முருகப்பெருமான் ஏந்திய ஆயுதம் ஜபமாலை. இதுவும் ஒரு ஞானப்படை.

முருகப்பெருமான்

ஜபமாலையோடு மற்றொரு கரத்தில் இருப்பது கமண்டலம். கிண்டி எனும் இது ஒரு மரத்தின் காயால் ஆனது. இது பிரம்மனுக்கு உரியது.

தோரணமலை முருகன்

ஞானமெனும் தாமரையும் முருகனுக்கான ஞானப்படையே. திருச்செந்தூர் முருகன் வலது கையில் தாமரை ஏந்தியிருப்பார்.

திருப்பரங்குன்றம் முருகன்

அக்னிஞாத சுப்ரமணியர்  கோலத்தில் யாகாக்னியை வளர்க்க
சுருவமும், நெய்(ஆஜ்ய) பாத்திரமும் ஏந்தி இருப்பார்.

காங்கேய சுப்ரமணியர் கோலத்தில் பூரண கும்பம் ஏந்தி இருப்பார். கோடியக்கரை அமிர்தகரை சுப்ரமணியனை தரிசியுங்கள்.

குன்றத்தூர் முருகன்

சேவலையே கரத்தில் ஏந்திய அற்புதக் கோலமும் கொல்லிமலை ஆலயத்தில் இருந்ததுண்டு என்கிறார்கள் பெரியவர்கள்.

lord murugan


source https://www.vikatan.com/ampstories/spiritual/gods/holy-festival-thiruchendur-kandha-sasti-special-article