Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

சீமானின் தொகுதி மாற்றம்... `நாம் தமிழர்' கட்சியின் தேர்தல் கூட்டணிக் கணக்கு! #TNElection2021

தமிழகத்தில் கொரோனா ஒருபுறம் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்க மறுபுறம் அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆட்டங்களைத் தொடங்கிவிட்டன. பெரிய கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டு ஒதுக்கலாம் என்பது முதல், தங்கள் கட்சிகளில் யாருக்கு சீட்டுக் கொடுக்கலாம் என்பதுவரை முதற்கட்ட முடிவுகளை எடுத்துவிட்டன. பெரிய கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள், தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுவிட வேண்டும் என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றன.

காங்கிரஸ், தே.மு.தி.க போன்ற கட்சிகளோ கூட்டணிக் கட்சிகளிடம் தங்களின் பலத்தைக் காண்பிக்க இப்போதே களத்தில் குதித்துவிட்டன. இதுதவிர, கமலின் மக்கள் நீதி மய்யம், ரஜினியை வைத்து மிகப்பெரிய கணக்கோடும் கனவோடும் காத்திருக்கிறது. இந்தநிலையில், கடந்த இரண்டு தேர்தல்களில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி இந்தமுறை என்ன செய்யப்போகிறது, தேர்தலையொட்டி அந்தக் கட்சியில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

தேர்தல் பிரசாரம்

இயக்கமாகச் செயல்பட்டு வந்த நாம் தமிழர் அமைப்பு, தேர்தலில் போட்டியிடும் கட்சியாகப் பரிணமித்தது 2010-ம் ஆண்டு. தொடர்ந்து நடைபெற்ற 2011 சட்டமன்றத் தேர்தல் நேரடியாகப் போட்டியிடாமல் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்ப் பிரசாரம், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க போட்டிட்ட தொகுதிகளில் எதிர்ப் பிரசாரம் என தேர்தல் களத்தில் சில பங்களிப்புகளைச் செய்தது. முதல்முறையாக, 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கி, தனித்து தேர்தலைச் சந்தித்தது அந்தக் கட்சி. ஒட்டுமொத்தமாக, 4,58,104 வாக்குகள் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07 சதவிகிம் பெற்று, தமிழக அரசியல் கட்சிகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.

தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. 20 தொகுதிகளில் ஆண், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சீமான். வட சென்னை தொகுதி வேட்பாளராகக் களமிறங்கிய காளியம்மாள், கட்சி தாண்டி பொதுவான செயற்பாட்டாளர்களின் கவனத்தையும் ஆதரவையும் பெற்றார். ஒட்டுமொத்தமாக, 16,45,185 வாக்குகள் பெற்றது அந்தக்கட்சி. வாக்கு சதவிகிதம் 1.07 லிருந்து 3.87 ஆக அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், 16 தொகுதிகளில் 50,000-த்துக்கு மேல் வாக்குகளையும் 7 இடங்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது அந்தக்கட்சி. தொடர்ந்து, கடந்தாண்டின் இறுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஒரு ஒன்றியக் கவுன்சிலர் இடத்தையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றினர் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள்.

மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

2021 என்ன முடிவு?

கடந்த தேர்தல்களைப்போல இந்தமுறையும் தனித்துக் களமிறங்கவே முடிவு செய்திருக்கிறார் சீமான். அவர் மட்டுமல்ல, அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களுக்கும்கூட தனித்துப் போட்டியிடுவதுதான் விருப்பமாக இருக்கிறது. ஆனால், அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள்,``தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டுவதைவிட இந்த முறை யாருடனாவது கூட்டணி அமைத்தால்தான் கட்சிக்கு நல்லது. தொடர்ச்சியாகத் தோல்வி அடைந்துகொண்டே வருவது தொண்டர்களுக்கு ஒருவித சோர்வைத் தந்துவிடும். குறைந்தது 2 எம்.எல்.ஏக்களையாவது பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைவதுதான் புத்திசாலித்தனம். ஒருமுறை உள்ளே நுழைந்து, நம் செயல்பாட்டை மக்கள் பார்த்துவிட்டால் அதற்குப்பிறகு வெற்றிபெறுவது சிரமமல்ல'' என சீமானுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால்,``யாரோடு கூட்டணி வைக்குறது சொல்லுங்க. கூட்டணி வச்சு ஜெயிச்சு உள்ள போயி என்ன பண்றது. சட்டை நிறைய சகதி அள்ளிப் பூசிக்கிட்டு, பிராண்டட், 2,000 ரூபாய் சட்டை ரொம்ப நல்ல சட்டைன்னு சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இங்கிருக்கும் கட்சிகளோட கூட்டணியில் சேர்ந்து ஜெயிச்சு உள்ளே போறதும். நம்ம நாட்டுல, பெரியாரியமும் மார்க்சியமும் வீழ்ந்து போனதே அந்தக் கட்சிகள் அவர்களின் தனித்துவத்தை இழந்ததாலதானே.

Also Read: ``இறைச்சிக்கடைகளை மூட முடிவெடுத்தால் பொது இடங்களில் கறி சமைத்து சாப்பிடுவோம்!'' - சீமான் எச்சரிக்கை

நாட்டுல, மத்திய அரசின் எந்தக் கொடுமையான திட்டத்தையும் இன்று கம்யூனிஸ்ட்கள் எதிர்க்க முடியாத நிலையில் இருக்காங்க. இந்தியைத் திணிச்சவங்க கூடவே திராவிடக் கட்சிகள் கூட்டணி வைச்சு அவன் தடையின்றி முழுமையாகத் திணிச்சுட்டான். மாநில உரிமையைப் பறிச்சவன்கூட கூட்டணி வைச்சாங்க. அவன் மொத்தமாக அத்தனை உரிமைகளையும் பறிச்சுட்டுப் போய்ட்டான். அதுமட்டுமல்ல, நான் என் கட்சி மேடையில் பிரபாகரன் படம் வைப்பேன், என் தலைவன் பிரபாகரன்னு சொல்லுவேன், எந்தக் கட்சி அத ஏத்துக்கிட்டு என்கூட கூட்டணி வைப்பாங்க.

என்னுடைய தத்துவத்துக்கு கருத்தியலுக்கு யாரோடும் கூட்டுச் சேர முடியாது. ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பதே என்னுடைய முதன்மையான கொள்கை. பிறகு, நான் யாரோடு கூட்டணி வைப்பது சொல்லுங்கள். ஓட்டரசியல் எல்லாம் எனக்கு இரண்டாம்பட்சம் கூட இல்ல, நாலாம்பட்சம்தான் உரிமை அரசியல்தான் எனக்கு முக்கியம்'' எனக் கொந்தளித்திருக்கிறார் சீமான்.

வேட்பாளர் அறிமுகம்

அதனால், இந்தத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது முடிவாகிவிட்டது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் என சரிக்கு சமமாக வேட்பாளர்கள் களம்காண இருக்கிறார்கள். வேட்பாளர் தேர்வு முடிவு பெற்று, அவர்களிடம் அந்தத் தகவலும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. பொதுவான அறிவிப்பை தேர்தலையொட்டி சீமான் வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த தேர்தல்களைப் போலவே, இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு அனைவரும் வியக்கத்தக்க வகையில் இருக்கும் என்கிறார்கள் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள். பொதுத் தொகுதியில் பட்டியலின வேட்பாளர், தொகுதியில் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவரல்லாத வேட்பாளர்கள், அரசியல் ரீதியாக இதுவரை உரிய பிரதிநிதித்துவங்களைப் பெறாத சமூகங்களில் இருந்து வேட்பாளர்கள், ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு திருநங்கை வேட்பாளராக நிறுத்தியதைப் போல இந்தத் தேர்தலிலும் பல அதிரடிகள் காத்திருக்கின்றன என்கிறார்கள் அவர்கள்.

Also Read: பாடம் கற்றுத் தந்த உள்ளாட்சித் தேர்தல்... பாதையை மாற்றுமா நாம் தமிழர் கட்சி?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்று, அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியினரின் இலக்காக இருந்தது. சீமானும் நாற்பது தொகுதிகளுக்கும் சென்று தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டார். வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட காளியம்மாள், ஒரேயொரு வீடியோ மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார். அவர் வெற்றி பெறுவதற்குக் கூட வாய்ப்பிருக்கிறது என அந்தக் கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 60,000 வாக்குகள் பெற்று நான்காவது இடத்துக்குத்தான் அவரால் வர முடிந்தது. ஒட்டுமொத்தமாக அந்தக் கட்சியும் நான்கு சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது.

'நாம் தமிழர்' காளியம்மாள்

``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வருகையினால்தான் எங்களால் 8 சதவிகித வாக்குகளைப் பெறமுடியவில்லை. அந்தக் கட்சி 4 சதவிகித வாக்குகளைப் பெற்றுவிட்டது. கிராமங்களில் நாங்கள் அதிகம் வாக்குகள் வாங்க, நகர, மாநகரங்களில் அந்தக் கட்சிக்கு வாக்குகள் வாங்கிவிட்டது. ஆனால், கடந்தமுறை போல, இந்தமுறை விட்டுவிட மாட்டோம். 8 சதவிகித வாக்குகளை நிச்சயம் வாங்கி, அரசியல் அங்கீகாரம் பெறுவோம்.

கடந்தமுறை அடிக்கடி புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படக் கூடிய தொகுதியான கடலூரில் நின்றார். ஆனால், அங்கு அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க மற்றும் மக்கள் நலக் கூட்டணி என ஐந்து முனைப் போட்டியாகிவிட்டது. அதனால்தான் அண்ணனால் 12,000 வாக்குகள் மட்டுமே வாங்க முடிந்தது. இந்தமுறை, அண்ணன் தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியில்தான் நிற்கப் போகிறார். எந்தத் தொகுதியில் அவர் எம்.எல்.ஏ ஆனாலும் எங்கள் கட்சி, தமிழகம் முழுமைக்கும்தான் போராடப் போகிறது. அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்தமுறை 8 சதவிகித வாக்குகளையும் எங்கள் அண்ணனை எம்.எல்.ஏ ஆக்காமலும் நிச்சயம் ஓயமாட்டோம்'' என்கிறார் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர்.



source https://www.vikatan.com/news/politics/naam-tamilar-partys-election-strategies-for-2021-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக