Ad

திங்கள், 31 ஜூலை, 2023

நமக்குள்ளே... மகப்பேறு நிதியுதவித் திட்டம்... தேவை, அவசர சிகிச்சை!

இந்திய அளவில் பெண்கள் நலத்திட்டங்களில் தமிழக அரசு முன்னோடியாகவே இருந்துவந்துள்ளது. அவற்றில் ஒன்றுதான், 1989-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித்திட்டம். தாய், சேய் ஊட்டச்சத்தை உறுதிப் படுத்தும் இத்திட்டம், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருக் கிறது என்று வரும் குற்றச்சாட்டுகள், அரசால் உடனடி கவனம் கொடுக்கப்பட வேண்டியவை.

இந்தத் திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு கர்ப்பகாலம், பிரசவத்துக்குப்பின், குழந்தைக்கு முத்தடுப்பு ஊசி செலுத்திய பின்னர் என மூன்று தவணைகளில் ரூ.14,000, மற்றும் ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் என ரூ.18,000 மதிப்பிலான உதவி வழங்கப்படுகிறது. ஆனால், ‘மூன்று தவணைகளும் காலம் தாழ்த்தியே கொடுக்கப்படுகின்றன. இதனால் கர்ப்பிணிகளின், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்கான திட்டம் என்ற இத்திட்டத்தின் நோக்கமே சிதைகிறது’ என்று இந்தத் திட்டத்தின் செயல்தன்மை குறித்து எப்போதுமே புகார்கள் இருந்துவருகின்றன. இந்நிலையில், ‘கடந்த இரண்டு வருடங்களாக இந்தத் திட்டத்தில் ஊட்டச்சத்துப் பெட்டகமோ, உதவித் தொகையோ வழங்கப்படவில்லை’ என்கிறார்கள், இதன் பயனாளர்களான ஏழைப் பெண்கள்.

இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ‘இந்தத் திட்டத்தில், மத்திய அரசு வழங்கும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதியும் சேர்த்து வழங்கப்படுகிறது. அதற்கான இணையதளப் பதிவேற்றத்தில் உள்ள சிக்கல்களால், உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. விரைவில் சரிசெய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இந்தத் திட்டம் தொடர்பான அரசு அலுவல் நடைமுறைகளோ, தொழில்நுட்பப் பிரச்னைகளோ ஆண்டுகளாக சரிசெய்யப்படாமல் இருக்கின்றன என்றால், இதன் பயனாளர்களான பெண்களுக்கு, ஏழைப் பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தரவிரும்பாத முக்கியத்துவத்தை, மற்றும் அவர்கள் மீதான அலட்சியத்தையே அது காட்டுகிறது. ஏற்கெனவே, உதவித்தொகை வழங்குவதில் அலைக்கழிப்புகள், ஊட்டச் சத்துப் பெட்டகங்கள் வழங்குவதில் இழுபறி என்று கர்ப்பிணிகளும், தாய்மார்களும் புலம்பும் நிலையில்தான் உள்ளது. இந்நிலையில், திட்டமே இப்போது ஸ்தம்பித்து நிற்கிறது.

அதிக எண்ணிக்கையிலான ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான், நம் மாநில மருத்துவக் கட்டமைப்பின் பலம். அதுதான் அடித்தட்டு மக்களுக்கும் சிகிச்சை சென்று சேர வழிவகுக்கிறது. அதன் மூலமே மகப்பேறு உதவித்திட்டமும் வழங்கப்படுகிறது. இந் நிலையில், `பதிவேற்றுவதில் தொழில்நுட்பக் கோளாறு’ என்று ஆரம்பப்புள்ளியில் சிக்கலை வைத்துக்கொண்டு அரசு சாக்கு சொல்வது கண்டனத்துக்கு உரியது. தேர்தலின் போது வார்டு வார்டாக, வீடு வீடாக என ஒருவர் விடாமல், ஓர் ஓட்டு விடுபடாமல் `பரிசுப் பணம்’ கொடுக்க அரசியல் கட்சிகளால் முடிகிற நாட்டில், அரசாங்கத்தால் நலத்திட்டங்கள் தேங்குவதை என்னவென்று சொல்வது?

கர்ப்பிணிகளும், பிரசவித்த தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள். அந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட திட்டமே இப்படி நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதை சுட்டிக்காட்டி செயலாற்ற வைப்போம் தோழிகளே!.

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

அடுத்த இதழ்


source https://www.vikatan.com/health/women/namakkulle-editorial-page-august-15-2023

``திமுக யாத்திரை நடத்தினால், `எம் மகன், என் பேரன்’ என்று பெயர் வைப்பார்கள்!” - அண்ணாமலை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை பயணத்தில் சிவகங்கை வந்தார். அம்பேத்கர் சிலையில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கிய அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தொண்டர்களுடன் அங்கிருந்து மதுரை ரோடு, நெல்லுமண்டி தெரு, கோட்டை முனியாண்டி கோவில் தெரு, வாரச்சந்தை ரோடு வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். நடைபயணத்தின் போது ஆங்காங்கே கூடியிருந்த பொதுமக்கள் பலரும் அண்ணாமலையை சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் இருந்து பேசும்போது, "சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகவே இருக்கிறார். அவருக்கான அரசு ஊதியம் வருகிறது. அமைச்சருக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். எந்த வேலையுமே செய்யாமல் சிறையில் இருந்தபடியே சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவதாகச் சொல்லி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். உண்மையிலேயே நம்பர் ஒன் மாநிலமாக மாற்றிவிட்டார். ஆம்., இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்று மாற்றியிருக்கிறார்.

7 லட்சத்து 53 ஆயிரம் கோடி தமிழக அரசு வாங்கிய மொத்த கடன். குறிப்பாக, சொல்லணும்னா நம்ம ஒவ்வொருத்தர் தலையிலும் ரூ. 3லட்சத்து 52 ஆயிரம் கடன் ஏற்படுத்தி வச்சிருக்காங்க. இது தான் திராவிட மாடல் அரசு. இன்றைய தேதியில் புதிய கடன் ஏதும் வாங்காமல் இருந்தாலே இந்த கடனை வட்டியுடன் அடைக்க இன்னும் 27ஆண்டுகள் ஆகும்.

தமிழகத்தில் 5,500 மதுக்கடைகள் இருக்கு. வேகமாக ஒரு துறை வளர்கிறது என்றால் அது மதுக்கடை துறை தான். மதுவின் மூலம் தமிழக அரசுக்கு வரக்கூடிய வருமானம் 22 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

ரூ. 35 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் இன்றைக்கு ரூ. 44 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இன்னும் பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை வந்தால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்படும்.

பா.ஜ.க, நாங்கள் நடத்தும் யாத்திரை என்பது என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடத்துகிறோம். ஒருவேளை தி.மு.க இதுபோன்ற ஒரு யாத்திரையை நடத்தினால், என்ன பெயர் வைத்திருப்பார்கள் தெரியுமா.. `என் மகன், என் பேரன்’ என்ற பெயர் வைத்திருப்பார்கள்.

உதயநிதி ஸ்டாலின் மகன் சமீபத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். மொபைல் டெக்னாலஜியில் 6ஜி, அதாவது, 6 வது தலைமுறை வந்திருக்கிறது. தி.மு.க குடும்பம் 4ஜி, 4-வது தலைமுறை அரசியலுக்குள் வந்திருச்சு.

இந்தத் தொகுதியின் எம்.பி ஊழல் நிறைந்த எம்.பி.யாக உள்ளார். இதேபோல், முன்னாள் எம்.பி மற்றும் மத்திய அமைச்சரும் ஊழல் நிறைந்தவராகவே இருக்கிறார். இந்தியாவிலேயே ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேருக்கும் அமலாக்கத்துறை விசாரணை நடப்பது ப.சிதம்பரம் குடும்பத்தில் மட்டும் தான்.

சிவகங்கை எந்த வளர்ச்சியும் பெறவில்லை. சிவகங்கை தொகுதியில் கிராபைட் தொழிற்சாலை கொண்டு வரப்படவில்லை. கொண்டு வந்திருந்தால், பல்லாயிரக்கணக்கானோர்க்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி எல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை.

எப்போதும் எங்களுடைய பிரதமர் வேட்பாளர் ஒரே ஒருவர்  தான். அது மோடி மட்டும் தான். உங்க கூட்டணியில யார் பிரதம வேட்பாளர்ன்னு ஒரு காங்கிரஸ் நண்பர் ஒருத்தர்கிட்ட கேட்டேன். அவர் அழகாகச் சொன்னார். திங்கள்கிழமை நிதிஷ்குமார், அவர் நைட் கிளம்பி போயிடுவாரு. செவ்வாய்கிழமை காலையில மம்தா பானர்ஜி பிரதமர், புதன்கிழமை கே.சி.ஆர், வியாழக்கிழமை உத்தவ் தாக்ரே வருவாரு. அது எல்லாம் சரி, என்ன ராகுல் காந்தி பெயரையே சொல்லலைன்னு கேட்டேன். எங்க தலைவரு, சனி, ஞாயிறு  தான் வருவார்"னு சொன்னார். ஆனால், ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருப்பவர் தான் நம் உத்தம தலைவர் மோடி" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/if-dmk-conducts-the-pathayatra-they-will-name-our-son-and-my-grandson-says-annamalai

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 1 முதல் 6 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


source https://www.vikatan.com/spiritual/astrology/astro-predictions-for-the-period-of-august-1st-to-6th

இன்றைய ராசிபலன் 1.8.23 | Horoscope | Today RasiPalan | செவ்வாய்க்கிழமை | August 1 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/01082023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

ஞாயிறு, 30 ஜூலை, 2023

சேலம்: பெண் குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டும் மர்ம நபர் - தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை

சேலம், 2-வது அக்ரஹாரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக, சேலம் பெரிய வீராணம் பகுதியைச் சேர்ந்த 45 வயது தொழிலாளி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடன் அவரின் 40 வயது மனைவியும் உடனிருந்து கணவனைக் கவனித்து வந்தார். இந்த நிலையில், இரண்டு நாள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய நிலையில், சம்பந்தப்பட்ட தொழிலாளியின் மனைவிக்கு செல்போனில் தொடர்புகொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், மருத்துவமனையில் குளித்துக்கொண்டிருந்தபோது ரகசியமாக வீடியோ எடுத்து வைத்திருப்பதாகக் கூறி, தான் அழைக்கும் இடத்துக்கு வரவேண்டும் என மிரட்டியிருக்கிறார்.

மேலும், அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அவர் குளித்துக்கொண்டிருந்த வீடியோவை அனுப்பிவைத்திருக்கிறார். இதைக் கண்ட அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மீண்டும் செல்போனில் தொடர்புகொண்டு பேசிய அந்த நபர், தான் கூப்பிடும் இடத்துக்கு வராவிட்டால் அவர் குளிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியிருக்கிறார்.

அதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண் சேலம் டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் கோகிலா விசாரணை செய்துவருகிறார். மேலும் முதற்கட்டமாக மருத்துவமனையில், வேலை பார்த்து வரும் மருத்துவமனை உதவியாளர்கள் மற்றும் காவலாளிகளிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சேலத்தில் தனியார் மருத்துவமனை பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/crime/person-who-took-a-video-of-a-woman-taking-a-bath-and-threatened-her

முதல்வரிடம் புகாரளித்த திமுக கவுன்சிலர்கள்; கிலியில் அமைச்சர் மஸ்தான் - இது திண்டிவனம் திகுதிகு!

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக இருந்துவரும் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் இருந்துவருகிறார். திண்டிவனம், செஞ்சி மற்றும் மயிலம் சட்டமன்றத் தொகுதிகள் இவரது மாவட்ட எல்லைகளாக இருக்கின்றன. இம்முறை அமைச்சரான மஸ்தான் மீது, பல்வேறு எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர் அந்த மாவட்ட உடன்பிறப்புகள். ஆனால், கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது,  மாற்றுக்கட்சியிலிருந்து புதியதாக தி.மு.க-வுக்கு வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது, தனது ஆதரவாளர்களுக்கே பொறுப்புகளை வழங்கியது உள்ளிட்ட காரணங்கள் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தத் தொடங்கின. இவை, மரக்காணம் ஒன்றிய உள்ளாட்சித் தேர்தல், திண்டிவனம் நகர்மன்றத் தேர்தலின்போது உட்கட்சிப்பூசலாக எதிரொலித்தது.

அமைச்சர் மஸ்தானிடம் வாக்குவாதம் செய்த தி.மு.க நிர்வாகிகள்

இதற்கிடையே, கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து, நகரமன்றக் கூட்டத்திலிருந்து 13 தி.மு.க அதிருப்தி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததும், அவர்கள் கே.என்.நேருவைச் சந்தித்துப் புகார் வாசித்ததும் கட்சிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், கடந்த 24-ம் தேதி அமைச்சர் மஸ்தான் முன்னிலையில், திண்டிவனத்திலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில், 'திண்டிவனம் நகர தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்' நடைபெற்றது. அப்போது, 'பொறுத்தது போதும் பொங்கியெழு' எனும் தொனியில், தங்களது ஆதங்கங்களை வெளிப்படையாகக் கொட்டித் தீர்த்த கழக நிர்வாகிகள், "தி.மு.க என்ன உங்க கட்சியா?" என்றெல்லாம் மஸ்தானை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். அமைச்சர்மீது கழக நிர்வாகிகளிடையே இருந்த அதிருப்தி, அந்தக் கூட்டத்தில் பலமாக வெடித்தது.

இது குறித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணைச்செயலாளர் டி.கே.பி.ரமேஷிடம் பேசினோம். "எல்லோரிடமும் இணக்கமாகப் பழகக்கூடியவர் என்றுதான், கழக நிர்வாகிகள் எல்லோரும் மஸ்தான் அவர்களை மாவட்டச் செயலாளராக ஏற்றுக்கொண்டோம். அது காலப்போக்கில் விஷமாகிவிட்டது. அவர் யாருக்கும் எதுவும் செய்வதில்லை, சுயநலமாகத்தான் பார்க்கிறார். பழைய கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு பொறுப்புகூட இருக்கக் கூடாதென நினைக்கிறார். தனக்கும், தன் வாரிசுக்கும் போட்டியாக வந்துவிடக் கூடாதென பழைய நிர்வாகிகளை அழிக்க நினைக்கிறார். ஆனால், தனக்கு துதிபாடுபவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு மட்டும் இரண்டுக்கும் மேற்பட்ட கட்சி பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார். இவற்றை பழைய கட்சிக்காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

டி.கே.பி.ரமேஷ்

நம் கட்சி (தி.மு.க) ஆட்சிக்கு வந்தால், நாமும் அங்கீகரிக்கப்படுவோம் என்றுதான், தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த காலங்களிலும் கட்சிக்காக கஷ்டப்பட்டோம். ஆனால், அவரது ஆதரவாளர்களைத் தவிர மற்ற நிர்வாகிகளை மாற்றாந்தாய் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறார். கொரோனா காலத்தில் கட்சிக்காக 1 ரூபாய்கூட செலவு செய்யாத கண்ணன் இன்று திண்டிவனம் நகரச் செயலாளராகவும், நிர்மலா ரவிச்சந்திரன் சேர்மனாகவும் இருக்கின்றனர். சி.வி.சண்முகம், மருத்துவர் ராமதாஸ் வசிக்கும் இந்த திண்டிவனம் பகுதியில்... அவர்களை எதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர்களை நகரச் செயலாளராக போட்டிருக்க வேண்டும். ஆனால், 78 வயதான ஆசிரியர் கண்ணனை ஒரு பொம்மையாக அந்தப் பொறுப்பில் அமர்த்தியிருக்கிறார் அமைச்சர் மஸ்தான்.

இவரும், இவருடைய மகனும் அரசுப் பிரதிநிதியாக, கட்சி பொறுப்புகளிலும் இருக்கலாம்... நாங்களெல்லாம் மேலே வரணும் என நினைக்கக் கூடாதா! செஞ்சி நகர்மன்றத் தலைவராக இருக்கும் அமைச்சரின் மகனான மொக்தியாரின் பெயரை மாவட்டம் முழுவதும் கட்சி நிகழ்ச்சிகளில் பெரிதாகப் போடுகிறார்கள். அதேபோல், திண்டிவனம் நகரத்தையே கெடுத்து வைத்தது அமைச்சரின் மருமகன் ரிஸ்வான்தான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராக வேலை செய்துவிட்டு, மாற்றுக்கட்சியிலிருந்து அண்மையில் தி.மு.க-வுக்கு வந்த சந்திரன்தான், ரிஸ்வானின் ஏஜென்டாக திண்டிவனத்தில் செயல்படுகிறார். அவர் சொல்படிதான் நகராட்சியே செயல்படுகிறது. இப்போது கட்சிக்கு வந்த அவருக்கு, விளையாட்டு மேம்பாட்டு அணியில் மாவட்ட அமைப்பாளர் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள்.

கட்சிக்காரர்கள் யாருக்கும் இங்கு உரிய மதிப்பில்லை, புறக்கணிப்பு செய்யப்படுகிறோம். கவுன்சிலர்களுக்கு டெண்டர்களை முறையாகப் பிரித்துக் கொடுக்காமல், அ.தி.மு.க ஒப்பந்ததாரர்களுக்கே தருகிறார்கள். தி.மு.க ஒப்பந்ததாரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். திண்டிவனத்தில் 70% கழக தோழர்கள், இப்போது அமைச்சர் மஸ்தான் மீது அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். இவை அனைத்தும்தான் அன்றைய கூட்டத்தில் எதிரொலித்தது.

முதலமைச்சர் ஸ்டாலின் - செஞ்சி மஸ்தான்

நாங்களெல்லாம் அரசியலில் அநாதை ஆகக் கூடாதென தலைமையும், சின்னவரும் எங்களை ஆதரிக்கின்றனர். ஆனால், 'உன்னால் என்ன பண்ண முடியுமோ, பண்ணிக்கோ' என்கிறார் அமைச்சர் மஸ்தான். நாடாளுமன்றத் தேர்தல் வேறு வருகிறது. எனவே, இத்தகு பாகுபாடுகளைக் களைந்து, பாரபட்சமின்றி, எல்லோரையும் ஒருங்கிணைத்து அமைச்சர் செயல்பட வேண்டும்" என்றார் ஆதங்கமாக.

இந்த நிலையில், அதிருப்தியின் உச்சத்துக்கே சென்ற திண்டிவனம் நகர தி.மு.க கவுன்சிலர்கள் சுமார் 13 பேர், கடந்த 29.07.2023 காலையிலேயே அறிவாலயத்துக்கு படையெடுத்திருக்கின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினை வழியிலும், உதயநிதியை நேரிலும் சந்தித்துப் புகார் வாசித்ததோடு, மனுவும் அளித்திருக்கிறார்களாம். தலைமையிலும் 'இது குறித்து விசாரிக்கிறேன்' என்று கூறி அனுப்பியிருக்கின்றனராம்.

முதலமைச்சர் மற்றும் உதயநிதியை சந்தித்த திண்டிவனம் திமுக-வினர்.

இது குறித்து அமைச்சர் மஸ்தானிடம் விளக்கம் கேட்க அழைத்தோம். "நான் ஓர் இயக்கத்தில் இருக்கும் நபர் என்பதால், இயக்கத்தின் நெளிவு சுளிவுகளைப் பார்க்க வேண்டும். கட்டுப்பாடுடன் கட்சியைக் கட்டிக்காக்க வேண்டும். ஒரு சிலர் சிறுபிள்ளைத்தனமாக தவறுகள் செய்திருந்தாலும், மறப்போம் மன்னிப்போம் என்று செயல்படும் நபர்நான். விவரமாக நான் நேரில் பதில் கூறுகிறேன்" என்று முடித்துக்கொண்டார்.

அவர் மேலும் பதிலளிக்கும் பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராகயிருக்கிறோம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/as-internal-conflict-in-tindivanam-dmk-increased-dmk-councilors-met-the-chief-minister-and-lodged-a-complaint

Doctor Vikatan: டெஸ்ட் எல்லாம் நார்மல்; ஆனாலும் தொடரும் உடல்வலியும் சோர்வும்... தீர்வு என்ன?

Doctor Vikatan: எப்போதும் தீராத உடல்வலி இருக்கிறது. வைட்டமின் குறைபாடுகள் எதுவுமில்லை. தைராய்டு, ரத்தப் பரிசோதனை மற்றும் எலும்பு தொடர்பான பரிசோதனை களையும் செய்து பார்த்துவிட்டோம். எதிலும் குறையில்லை, ஆனாலும் உடல்வலியும் சோர்வும் தொடர என்ன காரணம்?

- Saravanan, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

ஸ்பூர்த்தி அருண்

அளவுக்கு அதிக களைப்பும் சோர்வும் உள்ளதாகச் சொல்பவர்களுக்கு முதலில் வைட்டமின் குறைபாடுகள் உள்ளனவா என்று பரிசோதிப்போம். தைராய்டு, அனீமியா உள்ளதா என்று பார்ப்போம். வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 குறைபாடுகள் நம்மூரில் மிகவும் சகஜம். இதைத் தாண்டி வேறு காரணங்களை யாரும் யோசிப்பதில்லை.

தசைகளில் வலி இருப்பதாக உணர்ந்தால் அந்தத் தசைகள் இறுக்கமாகியிருக்கலாம். உடற்பயிற்சிகள் செய்யும்போது இது போன்ற தசை இறுக்கம் நீங்கும். எலும்புகளும் தசைகளும் வலுவடையும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடா, ஜங்க் உணவுகள் சாப்பிடுவோர், தான் நன்றாகச் சாப்பிடுவதாகவும் தனக்கு எனர்ஜி நன்றாக இருக்கும் எனவும் நம்புவார்கள். ஆனால், அப்படியில்லை.

தூக்கமின்மை

அடிக்கடி வெளியில் சாப்பிடுவதும் அதிகமான அசைவம் சாப்பிடுவதும் உடலில் ஒருவித மந்தத் தன்மையை ஏற்படுத்தி, களைப்பைக் கொடுக்கும். போதுமான தூக்கம் மிகமிக முக்கியம். ஒருநாள் நன்றாகத் தூங்கவில்லை என்றாலே, அடுத்த நாள் நம் எனர்ஜி வெகுவாகக் குறைவதை உணர முடியும். எல்லோருக்கும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம்.

ஆனால், பலரும் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் சரியான தூக்கமின்றி இருப்பார்கள். தூக்கக் கடனை சேர்த்துக்கொண்டே போவார்கள். இன்று ஒரு மணி நேரம் குறைவாகத் தூங்கினால், மறுநாள் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்கி ஈடுகட்டலாம் என நினைக்கக் கூடாது. இன்னும் சிலர் 10 மணி நேரம்கூட தூங்குவார்கள். ஆனால், அந்தத் தூக்கம் முழுமையாக இல்லாவிட்டால் மனது ஓய்வை உணராது.

ஆழ்ந்த உறக்கம்தான் மனதை அமைதிப்படுத்தும். அடுத்தநாள் வேலைக்குத் தேவையான புத்துணர்வைத் தரும். நம்மில் பலரும் வாரத்தில் 5 நாள்கள் சரியாகத் தூங்கிவிட்டு, வார இறுதியில் வெளியே செல்வது, தாமதமாகச் சாப்பிடுவது, தாமதமாக உறங்குவது என இருப்பார்கள். அது அடுத்து வரப்போகும் வாரத்தில் நிச்சயம் பிரதிபலிக்கும். இளம் வயதில் உடல் ஓரளவு இதைச் சமாளித்துக்கொள்ளும். 40-க்குப் பிறகு சிரமமாகும். 60 ப்ளஸ்ஸில் அதிக பிரச்னைகளைத் தரும்.

அடுத்ததாக மனநலம்... ஸ்ட்ரெஸ், அதன் விளைவாகத் தூக்கமின்மை, கவலை போன்றவை தொடரும் பட்சத்தில் அவற்றின் விளைவுகள் உடல்ரீதியாகவும் வெளிப்படும். சிலருக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளால் ஸ்ட்ரெஸ் வரும்.

ஸ்ட்ரெஸ்

இன்னும் சிலருக்கு எப்போதுமே ஸ்ட்ரெஸ் இருக்கும். அது மனநலனை பாதித்து, உடல் களைப்பு, சோர்வு, தசைவலி போன்றவற்றை ஏற்படுத்தும். இதை `சொமட்டைசேஷன் ஆஃப் மென்ட்டல் ஹெல்த்' ( somatization of mental health) என்போம். அதாவது மனநல பிரச்னைகளால் வரும் உடல்நல பாதிப்புகள்.

எனவே, மேற்குறிப்பிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் விஷயத்தில் பிரச்னைக்கு என்ன காரணம் என அறிந்து அதைச் சரியாக்க முயற்சி செய்யுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-all-tests-are-normal-but-body-aches-continue-what-is-the-solution

Doctor Vikatan: பழங்களை விதையுடன் சாப்பிடுவது செரிமானப் பிரச்னையை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: மாதுளை, திராட்சை போன்ற பழங்களை விதையுடன் உண்பது செரிமானப் பிரச்னையை ஏற்படுத்துமா?

- Meenakshi Mohan, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஆரோக்கியமான உடல்நலம் உள்ளவர்கள், விதைகளுடன் உள்ள பழங்களைச் சாப்பிடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அதுவே `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' மாதிரியான குடல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள், விதைகளுடன் உள்ள பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். அவர்களுக்கு அந்த விதைகள் செரிமானமாவதில் பிரச்னைகள் வரலாம். அந்த விதைகளின் காரணமாக அவர்களுக்கு குடல் பிரச்னைகள் தீவிரமாகலாம். அடிக்கடி மலம் கழிக்க வேண்டி வரலாம்.

மற்றபடி ஆரோக்கியமானவர்களுக்கு விதைகள் உள்ள பழங்களைச் சாப்பிடும்போது அவற்றில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியத்துக்கு உதவும். இன்று வசதியின் காரணமாக பலரும் விதையில்லா (சீட்லெஸ்) பழங்களை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். உதாரணத்துக்கு விதையில்லாத திராட்சைகளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பிறகு தனியே 'கிரேப்சீட் எக்ஸ்ட்ராக்ட்' என்ற பெயரில் விதைகளின் சாரத்தை ஆயிரக்கணக்கில் செலவழித்து வாங்கிச் சாப்பிடுவோரும் இருக்கிறார்கள்.

மில்க் ஷேக்

அதே போல எந்தப் பழத்தையும் அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. அதை அரைத்து வடிகட்டி, கூடுதல் இனிப்பும் பாலும் சேர்த்து ஜூஸாகவோ, மில்க் ஷேக்காகவோ குடிப்பது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.

மாதுளம் பழம், திராட்சை போன்றவற்றை விதைகளுடன் அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. வயிறு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் மட்டும் இந்த விஷயத்தில் கவனமாக இருந்தால் போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-does-eating-fruits-with-seeds-cause-digestive-problems

Doctor Vikatan: மைதாவில் தயாரிக்கப்படும் பிரெட்டை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பது ஏன்?

Doctor Vikatan: மைதாவில் செய்யப்படுவதால் பிரெட் ஆரோக்கியமற்ற உணவு என்று சொல்கிறார்கள். அதே நேரம் உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு அதைப் பரிந்துரைப்பது ஏன்? இதை எப்படிப் புரிந்துகொள்வது? குழந்தைகளுக்கு சாண்ட்விச், பிரெட் ஜாம் கொடுப்பது சரியானதா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

மைதா என்பது சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து. அது ரசாயனங்கள் சேர்த்து ப்ளீச் செய்யப்படுகிறது. எனவே மைதா ஆரோக்கியமற்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு பிரெட் எளிதில் செரிமானமாகும் என்பதால்தான் அதைக் கொடுக்கச் சொல்வார்கள். இப்போது பெரும்பாலும் பிரெட் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதற்கு பதில் இட்லி அல்லது இடியாப்பம் கொடுக்கச் சொல்கிறார்கள். ஆவியில் வேகவைத்த அவை எளிதில் செரிமானமாகும்.

நம்மில் பலரும் காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை. இவற்றில்தான் நார்ச்சத்தும், வைட்டமின்கள், தாதுச்சத்துகளும் அதிகம் இருக்கும். இப்போது துரித உணவுகள் சாப்பிடும் பழக்கம் பலரிடமும் அதிகரித்திருக்கிறது. அந்த உணவுகளில் பெரும்பாலும் மைதா உணவுகள் இடம் பெறுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் குழந்தைகளுக்குக் கூட மலச்சிக்கல் பிரச்னை சகஜமாகி விட்டது.

சமீபத்திய விளம்பரங்களில் மலச்சிக்கலுக்கான மருந்துகள் அதிகம் இடம்பெறுவதுகூட இதன் பிரதிபலிப்புதான். நார்ச்சத்து குறைவாகவும் மாவுச்சத்து, கொழுப்பு, சர்க்கரை, உப்பு போன்றவற்றை அதிகமாகவும் எடுத்துக்கொள்வதுதான் இந்தப் பிரச்னையைத் தீவிரப்படுத்தும்.

ஜாம் என்பதும் ஆரோக்கிய உணவல்ல. அதில் அளவுக்கு அதிகமான சர்க்கரை, கெமிக்கல்கள், நிறமிகள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதால் தொடர்ந்து அதைச் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு குடல் தொடர்பான பிரச்னைகள் வரலாம். செரிமானம் பாதிக்கப்படும். பிரெட், பட்டர், ஜாம், சீஸ், கெட்ச்சப் போன்றவற்றைக் கூடியவரை தவிர்ப்பதே ஆரோக்கியமானது.

ஐஸ்க்ரீம் கேக் சாண்ட்விச்

அந்த வகையில் குழந்தைகளுக்கு பிரெட், ஜாம் அல்லது சாண்ட்விச் கொடுப்பது சரியானதல்ல. என்னதான் சிறுதானிய பிரெட் என்று சொன்னாலும் அதில் நார்ச்சத்து இருக்காது. எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி பிரெட், பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது. எப்போதாவது கொடுக்கலாம். குறிப்பாக மலச்சிக்கல் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு இவற்றைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/diet/doctor-vikatan-why-recommend-maida-bread-to-patients

தீயப் பழக்கங்களிலிருந்து உங்களை விடுவிக்கும் ஸ்ரீ அனுமன் சாலீசா - மூல மந்திரமும் தமிழாக்கமும்!

அனுமனை எண்ணி வழிபட்டாலே அங்கு ஸ்ரீராமரும் தோன்றிவிடுவார். ரகுகுல ரட்சகனான ஸ்ரீஅனுமன் தைரியத்தை அளிக்கும் கடவுள். மனதில் குழப்பமோ, கவலையோ, அச்சமோ இருந்தால் அனுமனை தரிசிப்பதோ, தியானிப்பதோ நல்லது. நிச்சயம் உங்கள் துயரங்கள் யாவையும் நீக்க வல்லவர் அனுமன். அதிலும் அனுமனை அனுமன் சாலீசா எனும் இந்த துதி சொல்லி வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கிறார்கள் ஆன்றோர்கள்.

துளசிதாசர் வட மொழியில் அருளிய அனுமன் சாலீசா எனும் பாடலை மெய்யுருகப் பாடிப் பணிவாருக்கு கிரக தோஷங்கள் நீங்கும். குறிப்பாக சனி பகவானின் அருள் கிடைக்கும். நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெறலாம். இந்த மந்திரத்தை வீட்டில், கோயிலில், திருமடங்களில், தனிமையான இயற்கை சூழலில் அமர்ந்து பாராயணம் செய்யலாம். செவ்வாய்,  சனிக்கிழமை, திருவோண, மூல நட்சத்திர நாள்களில் பாராயணம் செய்வது சிறந்தது. தீய பழக்கங்களில் விடுபட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த அனுமன் சாலீசா பாடல் நிச்சயம் உதவி செய்யும்.

துளசிதாசர் தூங்கிக்கொண்டிருந்தபோது கனவில் கலிபுருஷன் தோன்றினார்.

"துளசிதாசரே, நீர் ராமநாம ஜபத்தின் வழியே மக்களை புண்ணிய ஆத்மாக்களாக மாற்றி வருகிறாய். கலியுக தர்மத்துக்கு இது நல்லதல்ல. இப்படி நீர் செய்தால் நான் யாரைப் பற்ற முடியும்! எனவே ராமநாம ஜபத்தை நிறுத்தும். இல்லாவிட்டால் உம்மைக் கொல்ல வேண்டி வரும்'' என்று மிரட்டினார்.

துளசிதாசர்

கனவிலிருந்து விழித்துக்கொண்ட துளசி தாசர் `ராம பக்தனான தன்னையே கலி இப்படி மிரட்டுவான் என்றால், சாதாரண பக்தர்களின் நிலை என்ன' என்று நினைத்து அஞ்சினார். ராமபக்தர்களுக்கு அச்சம் வந்தால் அங்கே ஆஞ்சநேயர் தோன்றுவது வழக்கமாயிற்றே, உடனே துளசிதாசர் உலகம் உய்ய துன்பங்கள் தீர்க்கும் ஆஞ்சநேயர் துதி ஒன்றைப் பாடத் தொடங்கினார். அந்தத் துதி, அனு மனின் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்லும் பாடலாக அமைந்தது

அற்புதமான இந்த அனுமன் சாலிசா வைப் பாடுபவர்களுக்குக் கிடைக்கும் பலன்களையும் துளசிதாசரே பட்டியல் இடுகிறார்.

இதைப் பாடி ஆஞ்சநேயரைத் துதிப்பவர்களுக்குத் துன்பங்கள் தீரும். வெற்றிகள் குவியும். அவரைத் தொடர்ந்து துதித்துவந்தால் தடை இல்லாத ஆனந்தம் பெருகும். சிவன ருளும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார் துளசிதாசர்.

இசையோடு சேர்ந்துபடித்தாலே 5 முதல் 8 நிமிடத்துக்குள் முடித்துவிடக்கூடிய மிக எளிமையான பாடல் அனுமன் சாலிசா. செவிமடுத்தாலே புத்துணர்ச்சி பெருகும் என்பார்கள்.

மன பயம் உள்ளவர்கள், எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்கள், காரியத் தடையினால் கஷ்டப் படுபவர்கள், கிரக தோஷங்களால் துன்புறுவோர் அனுமன் சாலிசாவைப் பாராயணம் செய்து வந்தால், அவற்றில் இருந்து விடுபடலாம். குறிப்பாக சனிதோஷம், ஏழரைச்சனி, அஷ்டம சனி நடப்பவர்கள் தவறாமல் ஆஞ்சநேயரைத் துதித்துவந்தால் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

இதோ துளசிதாசர் அருளிய அனுமன் சாலிசா...

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்

அனுமன் தரிசனம்

1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர

2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா

5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை

6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன

7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே

11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ

13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா

15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே

16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்

20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை

25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை

29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே

அனுமன் சாலிசா

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை

34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ

36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

பவன தன்ய ஸங்கட ஹரன மங்கள் மூர்த்தி ரூப்
ராம லகன ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப் 

ஸியாவர ராமசந்த்ரகீ ஜய பவனஸுத ஹனுமான்கீ ஜய
போலோ பாயீ ஸப ஸந்தனகீ ஜய

தமிழில் அனுமன் சாலீஸா:

ஜெய ஹனுமானே ஞான குணக் கடலே உலகத்தின் ஒளியே வானரர் கோவே.

ராமதூதா ஆற்றலின் வடிவே அஞ்சனை மைந்தா வாயு புத்திரனே வணக்கம்.

வெல்ல முடியாத வீரனே! பெருந்திறல் உருவே ஞானத்தை அருள்வாய், நன்மையைத் தருவாய்.

தங்கத் திருமேனியனே, பட்டாடை அணிபவனே மின்னும் குண்டலமும் அலைமுடியும் கொண்டவனே.

இடி, கொடி போன்ற கரங்கள் கொண்டோனே! முஞ்சைப் பூணூல் தோளில் அணிந்தோனே.
 
ஈசனின் அம்சமே கேசரி மைந்தனே ஒளிமிக்க உன் வீரத்தை உலகமே வணங்குமே

பேரறிவாளியே! பொறுமையின் உச்சமே நற்குண வாரியே! ராமசேவையில் மகிழ்வோனே!

உன் மனக்கோவிலில் ஸ்ரீராமர், அனுமனே ராம சங்கீர்த்தனத்தில் உன் வாசம்!

அனுமன்


நுண்ணிய உருவானாய் அன்னை சீதை முன் தோன்றினாய்! தீயவர் வீழ இலங்கையை எரித்தாய்!

அசுரரை அழித்த பலசாலியே ஸ்ரீராம அவதார நோக்கை முடித்த மாருதியே

சஞ்சீவி கொணர்ந்து லக்குவனை எழுப்ப விஞ்சிய அன்புடன் ராமனுனைத் தழுவினார்.

உனைப் பெரிதும் புகழ்ந்த ராமன் பரதனைப் போல நீ உடனிருப்பாய் என்றார்

ஆயிரம் நாக்கு கொண்ட ஆதிசேஷனே உன் பெருமையைப் புகழ இயலும் என்றும் சொன்னார்

சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும் நாரதர் கலைமகள் அஷ்ட நாகங்கள்

எமன், குபேரன், எண் திசைக் காவலரும், புலவரும் உன் பெருமைகளைச் சொல்ல முடியுமோ!

ஆருயிர் நண்பன் சுக்ரீவன் அரசு பெற்றிட ராமனின் நட்பால் உதவிகள் புரிந்தாய்

உன் அறிவுரையை விபீஷணன் ஏற்றதால் அரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்.

வானத்தில் ஒளிர்ந்த ஞாயிறைப் பிடித்தே சுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்

பலவானே, ராமனின் மோதிரம் கவ்வியே நீள் ஆழியைக் கடந்ததில் வியப்பெதும் உண்டோ

உலகினில் முடியாதக் காரியம் யாவையும் நினதருளாலே முடிந்திடும் உண்மை

ராமராஜ்ஜியத்தின் காவலன் நீ, அங்கு நுழைந்திட முடியுமோ  நின்னருள் இன்றி

உன்னைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம், காவலாய் உடன் நீ வர ஏதிங்கு அச்சம்

உன்னால் மட்டுமே யாவுமே முடியும், மூவுலகும் உன் பலத்துக்கு முன்னே நடுங்கும்

தீயப்பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ, வீரனுன் திருப்பெயரை  சொல்வாரை

நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும், பலமிகுந்த நின்திருப்பெயர் சொல்லிட

தொல்லைகள் தீர்ந்திட அனுமன் அருள்வான், மனம், வாக்கு, செயலால் தியானிப்பவர்க்கே

தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடுவாய், ராமனின் பணிகளை நீயே செய்தாய்

வேண்டும் பக்தர்கள் விருப்பங்கள் நிறைவுறும், அழியாக் கனியாம் உன் அனுபூதி பெறுவார்

நான்கு யுகங்களும் உன்புகழ் பாடும், நின் திருநாமமே உலகினில் நிலைத்திடும்

அனுமன்

ஞானியர் நல்லோர் நலம் காப்பவனே, தீயவை அழிப்பாய், ராமனின் இதயக்கனியே

எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும் கேட்டவர்க்கு அருளும் வரத்தை சீதை உனக்கு அளித்தார்

ராம பக்தியின் மூலமே நீதான், என்றும் நீ ஸ்ரீராமனின் சேவகன் நீயே

நின்னைத் தொடர்ந்தே ராமனை அடையலாம், தொடர்ந்து வரும் பிறவித் துன்பம் தீர்க்கலாம்.

உன்னைத் தொழுதிட ராமனடி சேரலாம், ஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறலாம்

மறுதெய்வம் எதுவும் நினையா பக்தரும் அனுமனைத் துதித்தே அனைத்து இன்பமும் பெறலாம்

துன்பங்கள் தீரும் துயரங்கள் மாறும், வல்லிய அனுமனை தியானிப் பவர்க்கே

ஆஞ்சநேயனே வெற்றி, அஞ்சனை மைந்தா வெற்றி, ஞான குருவே நாளும் எமக்கருள் புரிவாய்

நூறுமுறை இப்பாடலைத் துதிப்பவர் எவரோ, அவர் துயர் நீங்கியே ஆனந்தம் அடைவார்

அனுமனின் நாற்பதைப் படிப்பவர் நலம் பல பெறுவார், சிவனருள் பெற்றே ஸித்திகள் அடைவார்

அடியவன் துளஸீ தாஸன் வேண்டுவேன், அனைவர் உள்ளிலும் திருமால் உறைய அருளும்படியே.



source https://www.vikatan.com/spiritual/gods/lord-hanuman-worship-and-spiritual-slogan-hanuman-chalisa-in-tamil

`ஆறு மாசம் டைம்... இல்லனா ஆளை மாத்திருவேன்’ - புதிய மா.செ-க்களுக்கு செக் வைத்த திருமாவளவன்!

இரண்டு, மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர், நகரங்களில் பகுதி வாரியாக பிரித்து மா.செ என மொத்தம் 144 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து, அவர்களை சென்னைக்கு அழைத்து அறிமுக கூட்டம் நடந்தியிருக்கிறது வி.சி.க. கூட்டத்துக்கு மகிழ்ச்சியாக வந்த புதிய மா.செ-க்களுக்கு பல கடினமான அசைமென்டுகளையும் கொடுத்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஜெ.பி ஹோட்டலில் இரண்டாம் தளத்தில் நடந்த மா.செ கூட்டத்தில் நடந்தது என்ன?

திருமாவளவன்

புதிதாக நியமனமான 144 மா,செ-க்களும் முதல்முறை மா.செ-க்கள். அதில் 25 சதவீதம் பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 10 சதவீத பெண்களும் 10 சதவீத பட்டியல் சமூகம் அல்லாதோருக்கு பதவி வழங்கியுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஆண்டாண்டுகளாக ஆட்சியில் இருந்த, இருக்கும் கட்சிகளே ஒற்றை இலக்கில்தான் பெண்களை  மாவட்ட செயலாளர்களாக  நியமித்திருக்கும் நிலையில் வி.சி.க பெண்களுக்கு 10% சதவீதம் ஒதுக்கியிருப்பது ஆச்சரியம்தான்.

மாவட்டச் செயலாளர்கள் 144 பேர், மண்டல செயலாளர்கள் 21 பேர், மண்டல துணைச் செயலாளர்கள் 63 பேர், வடமண்டல தேர்தல் பணிக்குழு 12 பேர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள் என 247 பேர் மட்டுமே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மா.செ கூட்டத்தில் எம்.பி ரவிக்குமார் முதலில் பேசினார். 20 நிமிடம் பேசிய அவர் தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் திருமாவளவன் இருப்பதாகப் பேசி பெருமிதமடைந்தார். அதனை தொடர்ந்து பேசிய திருமாவளவன் 2 மணி உரையாற்றியிருக்கிறார்கள்.

மா.செ கூட்டத்தில் திருமாவளவன்

எச்சரித்த திருமாவளவன்

நம்மிடம் பேசிய கொங்கு மண்டல மா.செ-க்கள்  சிலர் “கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற  தேர்தலில் பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும் என மெலோட்டமாக பேசினார் திருமா. ஆனால் 2026-இல் நாம் பலத்தை நிரூபிக்க வேண்டுமென்ற தொனியில் பல அறிவுரைகளை வழங்கினார். தேர்தல் ரீதியாக கட்சியை பலப்படுத்த பூத் அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்திட வேண்டும். அதே சமயம் கட்சியை அடிமட்டம் வரை கொண்டு சேர்க்கும் விதத்தில் கிளை நிர்வாகிகளை நியமித்திடுங்கள் என ஆணையிட்டார்.

தேர்தல் சமயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு அதரவாக அனைத்து மாவட்ட சிறுத்தைகளும் சீறிப்பாய வேண்டும். வரக்கூடிய தேர்தல்களில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை நாம் கேட்க வேண்டும் என்றால் பூத் வரை நாம் வலிமைபெற வேண்டும் ஆகவே பூத் கமிட்டி நிர்வாகிகளையும் கிளை அளவில் நிர்வாகிகளையும் ஆறு மாதத்துக்குள் கட்டமைக்க வேண்டும். உங்கள் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையெனில் பதவி இருக்காது என்றவாறு எச்சரிக்கையும் விடப்பட்டது” எனச் சொல்லிவிட்டு சேரன் எக்ஸ்பிரஸை பிடிக்க கிளம்பினர் அந்த மா.செ-க்கள்.

திருமாவளவன்

நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!

நம்மிடம் பேசிய வட மண்டல மா.செ-க்களிடம் பேசியபோது “கட்சிக்காரர்கள் சிலர் சமூகத்தில் கட்சிக்கு அவப்பெயர்களை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வருகிறது. புதிய மா.செ-க்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும். சமூகத்துடன் இணக்கமாகவும் நல்ல பெயருடனும் இருக்க வேண்டும் என கட்டளையிட்டாராம் திருமா. பதவியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்றில்லாமல் கட்சியினருடன் நல்ல தொடர்பை ஏற்படுத்தி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்” என்கிறார்கள். 

வட மாவட்டத்தில் கூடுதல் கவனம்!

”வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வி.சி.க இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிடுவது கூட்டத்தில் பேச்சு அடிபட்டிருக்கிறது. அதற்கு மா.செ-க்களாகிய நீங்கள் தான் மாவட்ட அளவில் கட்சியை வலிமையாக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த தொகுதிகளில் பெரும்பாலானவையாக வட மாவட்ட தொகுதிகளை குறிவைக்கிறது வி.சி.க. ஆகவேதான் மா.செ கூட்டத்துக்கு  வட மண்டல தேர்தல் பணிக்குழுவில் இருந்து 12 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கு பூத் கமிட்டி விவகாரங்களை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்” என்றார்கள் கட்சி தலைமைக்கு நெருக்கமான சிலர். 

திருமாவளவன்

புதிய மா.செக்கள் மனம் வருந்தும் படியான சம்பவங்கள் சில நிகழ்ந்ததாகவும் சொல்கிறார்கள். `புதிய மா.செ-க்களுக்கு கட்சித் தலைவர் சான்றிதழ் வழங்குவார்’ என முன்பே அறிவித்திருந்த நிலையில், `திருமா டெல்லி விரைகிறார். சான்றிதழ் வழங்கும் ப்ளான் கேன்சல்’ என்றதும் வாடிபோயினராம் பலரும். மேலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் புதிய மா.செ-க்களை அங்கே நிற்கக்கூடாது, இங்கே நிற்கக்கூடாதென, ஃபோனை கொடுங்கள், திருமா வருகிறார், பக்கத்தில் வரக் கூடாதென ஒரு பாடுபடுத்திவிட்டனர் என்கிறார்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vck-leader-tholthirumavalan-warns-partys-district-representatives-of-vck

‘‘I.N.D.I.A கூட்டணி வெற்றிபெற்றாலும் நல்லதுதான்” - சொல்கிறார் பூவை.ஜெகன் மூர்த்தி

``பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறீர்களே?!”

``மணிப்பூர் சம்பவம் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. அதற்காக, நாங்கள் போராடித்தான் ஆக வேண்டும். நாங்கள் கூட்டணியில் இல்லையென்றால்கூட கவலையில்லை. அதேசமயம் உரிமை சார்ந்த பிரச்னைகளைத் தேர்தல் தொடர்புடைய விஷயங்களுடன் ஒப்பிடுவது தவறானது.”

மணிப்பூர்

“மக்களவைத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும், யார் பிரதமராக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?”

‘‘தமிழகம், புதுச்சேரியைப் பொறுத்தவரை 40 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெற வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். மத்தியில் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ... அவர்கள் வெற்றிபெறப் போகிறார்கள். மக்கள் ஆதரவைப் பெற்றவர் பிரதமராகப் போகிறார். அவ்வளவுதான்.”

தேசிய ஜனநாயக கூட்டணி Vs I.N.D.I.A

‘‘I.N.D.I.A கூட்டணி குறித்து உங்கள் கருத்தென்ன?”

‘‘I.N.D.I.A கூட்டணியைப் பொருத்தவரை அவர்கள் வெற்றிபெறுவதற்கான எண்ணத்தில் புதிய அணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்கள் வெற்றிபெற்றாலும் நல்லதுதான்.”

‘‘பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்து சொல்ல மாட்டீர்களா?”

(சிரிக்கிறார்) ‘‘தாராளமாக வாழ்த்துகிறோம்... மக்கள் மன்றத்தில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்பதே முக்கியம். I.N.D.I.A கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தாலும் வாழ்த்துகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்கள் தேர்வு செய்தால் அவர்களுக்கும் வாழ்த்துகள்.”

பூவை.ஜெகன் மூர்த்தி

‘‘மணிப்பூர் கலவரம் குறித்துப் பேச மாட்டேன் எனப் பிரதமர் சபதம் எடுத்தார் போல் தெரிகிறதே?”

‘‘மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார், பெண்கள் துன்புறுத்தப்பட்ட வீடியோ தொடர்பாகவும் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார். அதேசமயம் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெளிவுப்படுத்த வேண்டும்”.

‘‘சமூக நீதி காக்கின்ற இயக்கம் தி.மு.க என்றால் மறுப்பீர்களா?”

‘‘பட்டியல் சமூக மக்களுக்கு சிறப்பு உட்கூறு திட்டம் இருக்கிறது. அதற்கு ஒதுக்கப்படும் நிதியை வேறெந்த துறைக்காகவும் எடுக்க மாட்டார்கள். ஆனால் தி.மு.க அரசு, பட்டியல் சமூக மக்களுக்கான நிதியை மடைமாற்றி வேறு விஷயங்களுக்காகச் செலவிடுகிறது. சுமார் 1540 கோடியளவுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியை மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்குச் செலவிட்டிருக்கிறார்கள். 2310 கோடி ரூபாயை பொது விநியோக திட்டத்துக்குச் செலவிட்டிருக்கிறார்கள். இதுதான் தி.மு.க-வின் சமூக நீதியா..?”

‘‘நிதி பங்கீடுகளை வைத்து பட்டியல் சமூகத்துக்கு எதிரான இயக்கம் தி.மு.க எனச் சொல்ல முனைவது நியாயமா?”

‘‘பட்டியல் சமூக மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியை மடைமாற்றச் செய்வது எந்த விதத்தில் நியாயம். தி.மு.க ஆட்சியில் இது ஒன்றும் முதல்முறையல்ல. கருணாநிதி முதல்வராக இருந்தபோது டி.வி கொள்முதலுக்கும் சமத்துவபுரத்துக்கும் செலவு செய்தார். இதனைத் தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையமே சுட்டிக்காட்டியது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் இவ்விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல் பார்த்துக் கொண்டனர்.’’

முதல்வர் ஸ்டாலின்

‘‘கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு சீட் கிடைக்கவில்லை... வருகிற 2024 தேர்தலிலாவது சீட் கிடைக்குமா?”

‘‘2019-இல் சீட் கிடைக்கவில்லை என்றில்லை... பொருளாதார சூழல் காரணமாகத் தேர்தலில் நிற்க நாங்களே விரும்பவில்லை. இந்தமுறை போட்டியிடலாமா வேண்டாமா என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுப்போம்!”



source https://www.vikatan.com/government-and-politics/governance/puratchi-bharatham-party-president-poovai-jegan-moorthys-interveiw

இன்றைய ராசிபலன் 31.07.23 | Horoscope | Today RasiPalan | திங்கட்கிழமை | July 31 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/31072023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

சனி, 29 ஜூலை, 2023

``விவசாயிகளை முன்னிறுத்தி, ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது!" - கரூரில் அமைச்சர் மனோ தங்கராஜ்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள வல்லக்குளம், திருமலைநாதன்பட்டி, கிருஷ்ணராயபுரம், வரவனை, மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் ஆவின் பால் குளிர்விப்பு நிலையங்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``அரசு துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனத்தில் பல்வேறு முன்னெடுப்புகள் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, விவசாயிகளின் கால்நடை எண்ணிக்கையை பெருக்கி சீரான வருவாய் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளை முன்னிறுத்தி ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

பேட்டியளிக்கும் மனோ தங்கராஜ்

கரூர் மாவட்டத்தில் மாடுகள் வளர்ப்பதற்கு நல்ல வாய்ப்புகள், சூழல்கள் இருக்கின்றன. எனவே, கரூர் மாவட்டத்தில் ரூபாய் ஒரு கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் நான்கு குளிரூட்டப்பட்ட பால் நிலையங்கள் ஆவின் சார்பில் இன்று துவக்கப்பட்டுள்ளன. கரூர் தோரணக்கல்பட்டி பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில், கரூர் மாவட்டத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் ஆவின் நிறுவனத்தில் சுமார் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால்பண்ணை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வுசெய்தோம். தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு தினசரி வழங்கும் பாலின் தரத்தை நிர்ணயம் செய்து, அதற்கான விலையை வழங்கி வருவது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கூட்டுறவு சங்கங்களின்கீழ் செயல்படும் பால் கொள்முதல் நிலையங்களுக்கு போதிய இயந்திரங்கள் இதற்காக வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், கரூர் மாவட்டத்தில் குறிப்பாக அனைத்து பால் கொள்முதல் நிலையங்களுக்கும் தரத்தை அளவீடு செய்யும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விரைவாக பயன்பெறும் வகையில் பால் கொள்முதல் நிலையங்களில் 10 நாள்களில் பண பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இது எந்த ஆட்சியிலும் முன்னெடுக்கப்படாத நடவடிக்கை என்பதால், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஆவின் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு இணையாக போட்டி போட்டு தரமான பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்களை ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது. தமிழகத்தின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சென்னையில் மட்டும் நடப்பு மாதத்தில் 50,000 லிட்டர் கூடுதல் பால் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேட்டியளிக்கும் மனோ தங்கராஜ்

கடந்த இரண்டு மாத கால தொடர் நடவடிக்கையால் 3.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு கடனாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம், கலப்படமில்லாத 100 சதவீத சுத்தமான பாலை வழங்கி வருகிறது. ரசாயன கலப்புக்கு ஆவின் நிறுவனத்தில் வாய்ப்பில்லை. எனவே, விற்பனை சந்தையில் ஆவின் பால் தரத்திலும் விலையிலும் தனியார் பால் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளது. தீபாவளி பலகாரங்கள் விற்பனை செய்வதற்கு ஆவின் நிறுவனம் தயாராகி வருகிறது. தரமான பலகார வகைகள் சுத்தமான நெய்யில் வழங்குவதற்கு ஆவின் நிறுவனத்தில் எந்த தவறுகளும், குறைபாடுகளும் ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/minister-mano-thangaraj-met-press-people-and-spoke-about-aavin-in-karur

`ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம், ஆனால்..!' அண்ணாமலை கூறுவதென்ன?

ராமநாதபுரத்திலிருந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்' என்ற பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளார். ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் நேற்று மாலை சாமி தரிசனம் செய்த பிறகு, அங்கிருந்து பாதயாத்திரையாக நடந்து கேணிக்கரை வழியாக அரண்மனை பகுதியில் தன்னுடைய முதல் நாள் பாதயாத்திரையை நிறைவுசெய்தார். அதைத் தொடர்ந்து, பாதயாத்திரைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் ஏறி, பொதுமக்கள் முன்பு பேசினார். அப்போது அவர், `` 'என் மண், என் மக்கள்' யாத்திரையின் நோக்கம் என்பது தமிழகத்துக்கு இன்றைய காலகட்டத்துக்கு நம் மண்ணையும் மக்களையும் நேசிக்கக் கூடிய பாரதப் பிரதமர் மோடி தேவை என்பதை வலியுறுத்தவே.

அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி வைத்த அமித்ஷா

கடந்த 9 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக ஆட்சிக்கட்டிலில் இருக்கிறார். இந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் நிதி மட்டும் ரூ.10.76 லட்சம் கோடி. எந்த மாநிலத்துக்கும் வராத நிதி தமிழகத்துக்கு வந்துள்ளது. ஏனெனில் பிரதமர் மோடி தமிழகத்தை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். உலகத்தின் மிகத்தொன்மையான நம் தாய்மொழியான தமிழில் பேசிக்கொண்டிருக்கிறேன். நம் தாய்மொழிக்கு ஒப்பற்ற மொழி இந்த உலகத்தில் வேறு எங்குமே இல்லை. ஆனால் கடந்த 2014-க்கு முன்பு வரை யாரும் இதை பற்றி சொல்லவில்லை. ஆங்கிலம் உள்ளிட்ட அயல்நாட்டு மொழியில் படிக்குமாறு கூறினர். பிரதமர் தமிழனாகப் பிறக்கவில்லை. ஆனால் தமிழை போற்றக்கூடிய மனப்பாங்கை அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த நாள் முதல் உலகத்தின் தொன்மையான மொழி தமிழ்மொழி என்று போற்றி வருபவர்.

ஐ.நா சபையில் `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என ஆரம்பித்து நம் திருக்குறளை உலகம் முழுவதும் படிக்க வைக்க வேண்டும் எனச் சொல்லி வருகிறார். 100 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறார். தமிழ் கலாசாரத்தை பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறார். இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு தமிழனாக இல்லாத ஒரு தலைவன் இப்படி தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் சேர்த்தது கிடையாது. புதிதாக திறந்த நாடாளுமன்றத்தில் தமிழர்களின் கலாசாரத்தை மையப்படுத்தி செங்கோலை கொண்டு சென்றுள்ளார். தமிழகத்தில் 27 மாதங்களாக தி.மு.க-வின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவர்களும் `என் மண், என் மக்கள்' என்று சொல்கின்றனர். ஆனால் ஒரு குடும்பத்திற்காக. என் மக்கள் என்று முதல்வர் சொல்வது அவரின் குடும்ப மக்களுக்காக. என் மண் என்று சொல்வது அவரின் குடும்பத்தினர் சம்பாதித்த மண்ணிற்காக.

ராமநாதபுரத்தில் பொதுமக்கள் முன்பு பேசிய அண்ணாமலை

ஒரே ஒரு குடும்பத்திற்காக, ஒரே மகனுக்காக, ஒரே மருமகனுக்காக இங்கு ஒரு ஆட்சி நடக்கிறது. 2 அமைச்சர்கள்மீது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. ஓர் அமைச்சர் 41 கோடி ரூபாய் வைப்புநிதியாக கணக்கில் வராத பணத்தை வைத்துள்ளார். மற்றொரு அமைச்சரான செந்தில் பாலாஜியைக் காப்பாற்றுவதற்காக முதல்வர், அரசு இயந்திரம் என பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஊழல் என்பது தமிழக அளவில் சாதாரண மக்கள் பேசும் அளவு நடந்து கொண்டிருக்கிறது. அனைத்திலும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் 2024 தேர்தல் வருகிறது. பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைப்பதற்கு பொன்னான வாய்ப்பு வருகிறது.

மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். உங்கள் அன்பை பிரதமருக்கு கொண்டு சொல்வது எங்கள் பொறுப்பு, நீங்கள் விரும்பியதுபோல நடக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். ஆனால், அது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள்தான் எங்கள் பாதயாத்திரைக்கு வலுசேர்க்க வேண்டும். அதைப்பார்த்து மோடி இங்கே போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மோடியை எதிர்த்து 17 பேர் சேர்ந்து ஒன்றாக கூட்டம் நடத்துகின்றனர். அந்த கூட்டத்துக்கு `இந்தியா' என பெயர் வைத்துள்ளனர். இந்தியா என்று சொல்வதற்கு தகுதி வேண்டும். அந்த கூட்டணியில் உள்ள நபர்கள் தமிழகத்தை தனி தமிழ்நாடாக பிரிக்க வேண்டும், காஷ்மீரை தனி நாடு என்று பேசுபவர்கள். அங்கிருக்கும் அனைவரும் ஊழல்வாதிகள். புலிக்குட்டியை பார்த்து பூனைக்குட்டி சூடுபோட்டு கொண்டதை போல, இந்தியாவை நேசிக்காதவர்கள் `இந்தியா' என்று பெயரை வைத்து கொண்டு சுற்றுகிறார்கள். எங்களுக்கு எந்நாளும் நரேந்திர மோடிதான் பிரதமர். ஆனால் அவர்கள் கூட்டணியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரதமர். அவர்களின் கனவு பலிக்காது. தமிழகம் முழுவதும் தேசியத்தை கொண்டு செல்வதுதான் இந்த யாத்திரையின் நோக்கம்.

இந்த மண்ணையும் மக்களையும் யாரும் சூறையாடக் கூடாது என்பதற்காகத்தான் 234 தொகுதிகளிலும் யாத்திரை பயணம் செல்கிறோம். மீண்டும் திராவிடர் கயவர் கூட்டம் நம்மை அண்டிப் பிழைத்து, நம்மிடம் உள்ள சொத்துகளை எல்லாம் பிடுங்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அவர்களை அப்புறப்படுத்த 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஒரு வாய்ப்பாக வருகிறது. இந்த முறை 39 தொகுதிகளிலும், குறிப்பாக ராமநாதபுரம் தொகுதியில் முதல் தொகுதியாக அனுப்பி வைக்க வேண்டியது நம்கடமையாக கொள்ள வேண்டும். ஒரு தராசு தட்டில் சமமாக வைத்து மோடியை பார்க்கும் அளவிற்கு எந்த அரசியல்வாதிக்கும் தகுதி கிடையாது. மோடி என்பவர் அரசியல்வாதி கிடையாது. மக்களுக்காக சேவை செய்யும் சேவகர்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/bjp-state-president-annamalai-speech-at-ramanathapuram-during-his-padayatra

பீகாரில் இரு பிரிவினரிடையே வலுக்கும் மோதல்... இணையதள முடக்கம்! - என்ன நடக்கிறது அங்கே?

பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல், பதற்றம் காரணமாக, அங்கு இணையதள சேவை முடக்கப்பட்டிருக்கிறது. தர்பங்கா நகரில் பஜார் சமிதி சௌக் பகுதியில் ஒரு மதவழிபாட்டுத் தலத்தின் அருகே இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மதரீதியான ஒரு கொடியை ஏற்றியிருக்கிறார்கள்.

பீகார் போலீஸ்

அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதையொட்டி, இரு தரப்பினரிடையே ஜூலை 23-ம் தேதி மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் கற்களால் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

போலீஸாரும் உள்ளூர் நிர்வாகமும் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுதிருப்பதாக அரசு தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த மோதல் சம்பவத்தையொட்டி, தர்பங்கா மாவட்டத்தில் ஜூலை 30-ம் தேதிவரை இணையதள சேவை தடைசெய்யப்பட்டிருக்கிறது.  

அதே மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு மயானம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக, இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்ச்சை நிலவிவந்திருக்கிறது. அந்த விவகாரம், தற்போது மோதலாக மாறியிருக்கிறது.

வன்முறை

ஸ்ரீகாந்த் பாஸ்வான் என்பவர் உடல்நலமின்றி இறந்திருக்கிறார். குறிப்பட்ட மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நிகழ்ந்தபோது, மல்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் வந்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பிலும் வாக்குவாதம் முற்றி, கற்களால் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதில், சில போலீஸார் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸார் தலையிட்ட பிறகு, அங்கு இறுதிச்சடங்கு நடைபெற்று உடல் எரியூட்டப்பட்டிருக்கிறது.

இந்த இரு சம்பவங்களும் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்தச் சூழலைப் பயன்படுத்தி, சமூகத்தில் இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகளை சமூகவிரோத சக்திகள் பரப்பியிருக்கின்றன. எனவே, அங்கு இணையதள சேவை முடக்கப்பட்டது.

இறுதிச்சடங்கு

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், “பொது அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் சமூகவிரோதிகள் பொய்த் தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பதற்காக இணையதள சேவை முடக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தனர். மேலும், “மத வழிபாட்டுத்தலம் அருகே மற்றொரு மதத்தின் கொடியை ஏற்றியது தொடர்பாக 13 பேரும், ஒருவரது இறுதி நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக எட்டுப் பேரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்” என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

சமூகத்தில் வெறுப்பையும் மோதல்களையும் உருவாக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பொய்ச்செய்திகளைப் பரப்பப்படுவதைக் கண்காணிப்பது தொடர்பாக தர்பங்கா மாவட்டத்தில் 44 சைபர் காவல்நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள், அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கலவரம்

ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் மாதம் ராம நவமி ஊர்வலங்களின்போது பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வகுப்புவாதக் கலவரங்கள் நடைபெற்று பதற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, பீகாரில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் அந்த மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தர்பங்கா மாவட்டத்தில் ஏற்பட்ட பதற்றத்தை போலீஸாரும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக களத்தில் இறங்கி தணித்திருக்கிறார்கள். வன்முறை மேலும் பரவாமல் தடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/because-of-the-communal-clash-in-dharbangah-district-of-bihar-there-is-an-internet-ban-till-july-30