Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

சென்னை: சாவு வீட்டில் கஞ்சா போதை, தகராறு! - கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஐசிஎஃப் ரெளடி

சென்னை ஐசிஎஃப் அம்பேத்கர் நகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்த நாகேந்திரன். இவரின் மகன் கருணா என்ற கருணாகரன் (35). இவர் மீது ஐசிஎஃப் காவல் நிலையம், வில்லிவாக்கம் காவல் நிலையம் ஆகியவற்றில் ஒரு கொலை வழக்கு, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, திருட்டு என 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஐசிஎஃப் பகுதியில் ரெளடியாக வலம் வந்த கருணா, அதே பகுதியில் ஒரு சாவு வீட்டிற்கு சென்றார். கஞ்சா போதையிலிருந்து கருணா, அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கொலை

பின்னர் வீட்டுக்கு வந்த கருணா, இரவு 7 மணியளவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டுக்கு வந்த சிலர், கருணாவை அழைத்துள்ளனர். வெளியில் வந்த கருணாவை சுற்றி வைத்த அந்தக் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் கருணா, கீழே சரிந்தார். கருணாவில் அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் உள்ளவர்கள் வெளியில் வந்தனர். அதைப்பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

பின்னர் கருணாவை மீட்ட பொதுமக்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கருணா உயிரிழந்ததார். இதுகுறித் து ஐசிஎஃப் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கருணாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை

இதையடுத்து கொலை நடந்த இடத்துக்குச் சென்ற போலீஸார் அங்கு விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ஐசிஎஃப் போலீஸார் கூறுகையில், ``ஐசிஎஃப் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ரெளடி கருணா என்கிற கருணாகரன். இவர் குடியிருக்கும் பகுதியில் உள்ள ஜி -பிளாக்கில் சம்மனசு என்ற மூதாட்டி மரணமடைந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தில் கருணா கஞ்சா மற்றும் குடிபோதையில் கலாட்டா செய்துள்ளார். அதை தட்டிக்கேட்டவர்களை கருணா, தாக்கியுள்ளார்.

பின்னர் மாலை 6.30 மணியளவில் கருணா, வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 20 வயதுடைய இளைஞர், கருணாவிடம் சாவு ஊர்வலத்தில் நடந்த தகராறு தொடர்பாக சமதானம் பேச வெளியில் வரும்படி அழைத்துள்ளார். அதை நம்பி கருணாவும் வெளியில் வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மேலும் சில ரெளடிகள் கத்தியை எடுத்து முகத்தில் வெட்டி கருணாவை கீழே தள்ளியுள்ளனர். பின்னர் கல்லை தூக்கி அவரது முகத்தில் போட்டு விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

கொலை

Also Read: சென்னை: `அறை முழுவதும் ரத்தம்; பூட்டிய வீட்டுக்குள் பெயின்ட்டர் கொலை!' - சிக்கிய நண்பர்

ரெளடி கருணாவை முன்விரோதம் காரணமாக அதே பகுதி சி பிளாக்கைச் சேர்ந்த விஜய், ஜி பிளாக்கைச் சேர்ந்த சாலு, இ பிளாக்கைச் சேர்ந்த அசோக் -தீனா, ஷாம் மற்றும் ஜோஸ்வா ஆகியோர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவருகிறோம்" என்றனர்.

குடியிருப்பு பகுதியிலேயே ரெளடி கருணா, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஐசிஎஃப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/chennai-rowdy-murdered-in-icf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக