Ad

புதன், 30 ஜூன், 2021

தென்காசி: `அம்மா, அப்பாவை பார்த்துவிட்டு வருகிறேன்!’ - காதல் திருமணம் செய்த மகளை வெட்டி கொன்ற தந்தை

சாதி, மத வேறுபாடுகள் கடந்து காதல் திருமணம் செய்து கொள்வோருக்கு பெற்றோர் உறவினர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்புவது மற்றும் ஆணவக் கொலைகள் நடப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், உறவினரைக் காதலித்து திருமணம் செய்ததற்காக ஒரு பெண்ணை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் தென்காசி மாவட்டத்தில் நடந்துள்ளது.

Also Read: நெல்லை: நண்பனின் தாயிடம் தவறாக நடந்த ரெளடி; 5 வருடங்கள் கழித்துக் கொலை செய்த இளைஞர்கள்!

ஊத்துமலை அருகே உள்ள தெற்கு காவலாகுறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், மாரிமுத்து. விவசாய கூலித் தொழிலாளியான அவரது மகள் ஷாலோம் ஷீபா என்பவர் கடந்த இரு வருடங்களாக தனது உறவுக்காரரான முத்துராஜ் என்பவரைக் காதலித்துள்ளார்.

இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வந்ததும் ஷாலோம் ஷீபாவின் தந்தை மாரிமுத்து கடுமையாக எதிர்த்துள்ளார். அதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களை பெற்றோர் அழைத்துவந்து பிரித்து வைத்திருக்கிறார்கள். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டதுடன், பெற்றோருக்குத் தெரியாமல் வெளியூருக்குச் சென்று வாழ்ந்துள்ளனர்.

கொலையான ஷாலோம் ஷீபா

இதனிடையே சொந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் கொடை விழாவுக்காக வந்த இருவரும், முத்துராஜின் வீட்டில் தங்கியுள்ளனர். தன் பெற்றோரும் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் ஷாலோம் ஷீபா பெற்றோரைப் பார்ப்பதற்காக ஆசையுடன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது தந்தை மாரிமுத்து மகளை வீட்டுக்குள் விடாமல் தடுத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

மகள் காதல் திருமணம் செய்தது பிடிக்காமல் ஆத்திரத்தில் இருந்த மாரிமுத்து அரிவாளை எடுத்து வந்து ஷாலோம் ஷீபாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Also Read: `இது ஆணவக் கொலை; கடிதமே சாட்சி!'- நாகையில் தாயால் எரித்துக் கொல்லப்பட்ட ஜனனி குறித்து எவிடன்ஸ் கதிர்

தாய், தந்தையைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்ற காதல் மனைவி கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் கணவர் முத்துராஜை நிலைகுலைய வைத்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஊத்துமலை போலீஸார், கொலை செய்த மாரிமுத்துவை கைது செய்தனர்.



source https://www.vikatan.com/news/crime/girl-murdered-by-her-father-because-of-love-marriage

வீட்டிலிருந்து இனி கோவிட் சிகிச்சை பெறுபவர்களும் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்யலாம்; எப்படி?

கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பலர் மருத்துவ செலவுகள் காரணமாக சிரமப்படும் சூழல் நிலவுகிறது. திடீர் மருத்துவ செலவுகளிலிருந்து ஒருவரை காப்பதில் மருத்துவ காப்பீடு பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த ஓர் ஆண்டில் மருத்துவ காப்பீடு எடுப்பவர்களின் விகிதாச்சாரம் கணிசமாக உயர்ந்துள்ளது என்று இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) வெளியிட்ட தரவுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

மருத்துவக் காப்பீடு பெற்ற ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நோய் சிகிச்சை பெற்றால் மட்டுமே காப்பீட்டின் பலனை அடைய முடியும். ஆனால், கொரோனா நோய்த்தொற்று காரணமாகப் பெருவாரியான மக்கள் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டனர். இதற்கு முக்கிய காரணமாகப் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி போதிய அளவில் கிடைக்காதது காரணமாக உள்ளது.

Quarantine | தனிமைப்படுத்தப்பட்டவர் - Representational Image

Also Read: ஹெல்த் இன்ஷுரன்ஸ் இருந்தாலும் அவசர கால நிதி அவசியம்தான்... ஏன்? - ஆலோசகரின் அட்வைஸ்

பல பிரபல தனியார் மருத்துவமனைகளும் வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வசதிகளை வாடிக்கையாளருக்கு அளித்தன. இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர் மருத்துவமனையின் மருத்துவர் உடன் தொடர்பில் இருப்பார். இதுபோன்ற சிகிச்சைக்கு மருத்துவமனைகள் குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படாவிட்டாலும் இந்த வசதிக்கான கட்டணம், சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்கான கட்டணம், மருந்துகளுக்கான கட்டணம் போன்றவற்றை நோயாளி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், காப்பீட்டு திட்டத்தின் விதிமுறைகளின்படி வீட்டிலிருந்து பெறப்படும் சிகிச்சைகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது. இது பல வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு எடுத்திருந்தாலும் காப்பீட்டின் பயன் கிடைக்காத சூழ்நிலையை ஏற்படுத்தியது.

கொரோனா நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்ட நூறு நபர்களில் 5 சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனால் பெருவாரியான மக்களுக்கு காப்பீட்டின் பயன் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு ஐ.ஆர்.டி.ஏ.ஐ, காப்பீட்டு நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர் வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொண்டாலும் அதையும் காப்பீட்டில் சேர்த்துக்கொள்ளும் புதிய வழிமுறைகளை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் காப்பீடு எடுக்கும்போது சிறிது அதிக பிரீமியம் செலுத்தினால் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்தாலும் காப்பீட்டின் பலனை அடைய முடியும்.

ஏற்கெனவே காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து இருப்பவர்கள், அட் ஆன் பாலிசி (Add on cover) என்கிற முறையில் இந்த வசதியைப் பெற முடியும். புதிதாக பாலிசி எடுக்கும்போதோ, பாலிசியை நீட்டிக்கும்போதோ இந்த வசதியையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

Insurance

Also Read: கோவிட் 19 சிகிச்சை: இன்ஷூரன்ஸில் அதிக க்ளெய்ம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

இந்த விதிமுறை நிச்சயம் பெரும்பாலான வாடிக்கையாளருக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதியைப் பெறுவதற்கு சிறிது அதிக பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கலாம்.

இந்த வசதியை எவ்வாறு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க இருக்கின்றன என்று தெளிவாகத் தெரியவில்லை. அதனால் இந்த வசதி தேவைப்படும் பாலிசிதாரர்கள் தாம் காப்பீடு எடுத்துள்ள நிறுவனத்தைத் தொடர்புகொண்டு இது பற்றிய மேலும் விவரங்களைத் தெரிந்துகொண்டு அந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.



source https://www.vikatan.com/business/insurance/now-you-can-get-home-treatment-coverage-for-covid-19-in-health-insurance-add-ons

வாலாஜாபேட்டை ரயில் நிலையத்துக்கு வயது 165 - `பாரம்பரியம்’ என அறிவிக்குமா தமிழக அரசு?

காஞ்சிக்கு அடுத்தபடியாக விண்ணளவிய கோபுரங்களும், ஆலயங்களும் தன்னகத்தேகொண்டது, ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டை நகரம். ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும் இந்த ஊருக்கு மற்றொரு பெருமையும் இருக்கிறது. தென்னிந்தியாவிலேயே முதல் பயணிகள் ரயில் சேவையும் வாலாஜாபேட்டை ரயில் நிலையத்திலிருந்துதான் தொடங்கப்பட்டது. இதே நாளான, 1856-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, சென்னை ராயபுரத்திலிருந்து வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம் வரை முதல் ரயில் இயக்கப்பட்டது.

வாலாஜாபேட்டை ரயில் நிலையம்

அந்த வகையில், பழைமையும், பெருமையும் வாய்ந்த வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம், 165-வது வயதில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது. அதுமட்டுமின்றி, நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே 1866-ல் சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியாக தொடங்கப்பட்ட சிறப்பும் வாலாஜாபேட்டைக்கு உண்டு. இந்த நிலையில், ‘‘வாலாஜாபேட்டை ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும்’’ என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம்மிடம் பேசிய ரயில் பயணிகள் சிலர், ‘‘காட்பாடி மற்றும் அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்புகளுக்கு மத்தியில் வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம் இருக்கிறது. முக்கிய வழித்தடம் என்றாலும் பல ரயில்கள் இங்கு நின்று செல்வதில்லை. தொழில் நகரங்களான ராணிப்பேட்டை, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, சேலம், ஈரோடு, கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களும், கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி வட இந்தியா செல்லும் வாராந்திர ரயில்களும் வாலாஜாபேட்டை ரயில் நிலையத்தை கடந்துதான் செல்கின்றன.

வாலாஜாபேட்டை ரயில் நிலையம்

இங்கிருந்து மட்டும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலூர், சென்னை, காஞ்சிபுரம், சித்தூர், சோளிங்கர், திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்குக் கல்வி, வேலை, வியாபாரத்திற்காகப் பயணிக்கிறார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த வாலாஜாபேட்டை ரயில் நிலையத்தில், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட சரிவர செய்து தரப்படவில்லை. எனவே, இந்த ரயில் நிலையத்தின் தரத்தை மேம்படுத்தி பாரம்பரியச் சந்திப்பு நிலையமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவருகிறோம். தி.மு.க ஆட்சியிலாவது, பாரம்பரிய நிலையமாக வாலாஜாபேட்டையை அறிவிக்க வேண்டும். அதேபோல், ஆங்கிலேயர் காலத்தில் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட வாலாஜாபேட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்தவும் முதலமைச்சர் ஸ்டாலின் கவனம் கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/walajapet-railway-station-is-now-165-years-old

சேலம்: `15 நாள்ல கொரோனாவை அழிச்சுக் காட்டுறேன்!’ - 200 அடி டவரில் ஏறிய நபரால் பரபரப்பு

சேலம் அண்ணா பூங்கா அருகே சுமார் 200 அடி உயரம் கொண்ட எஃப்.எம் டவர் ஒன்று இருக்கிறது. நேற்று காலை இந்த டவரில் 100 அடி உயரத்துக்கு ஏறிய நபர் ஒருவர், ‘என்னைத் தவிர கொரோனாவை ஒழிக்க யாராலயும் முடியாது. 15 நாள் டைம் கொடுத்துப் பாருங்க’ எனக் கத்திக் கூச்சல் போட்டு கையிலிருந்த நோட்டீஸை அள்ளி வீசியிருக்கிறார். அந்தவழியே சென்ற பொதுமக்கள் இதனைப்பார்த்து பதறிப்போய் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

செந்தில்

சம்பவ இடத்துக்கு வந்த செவ்வாய்பேட்டை போலீஸார், மைக் மூலமாக அந்த வாலிபரிடம் பேச்சுக் கொடுத்து கீழே இறங்கிவரச் சொல்லியுள்ளனர். ‘கொரோனாவுக்கு மருந்து என்கிட்ட மட்டும் தான் இருக்கு. என்னோட கோரிக்கைக்கு அரசாங்கம் ஒத்துழைக்கணும். போலீஸ் என் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என அந்த வாலிபர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். ‘சரி கீழ இறங்கி வாப்பா... உன்னோட கோரிக்கையை அரசாங்கத்துக்கிட்ட சொல்லி நாங்க நிறைவேத்துறோம்’ என போலீஸார் சொல்ல, அந்த இளைஞர் சரசரவென டவரிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார். உடனே போலீஸார் அந்த வாலிபரை செவ்வாய்பேட்டை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

டவரில் ஏறி நிற்கும் செந்தில்

விசாரணையில் அந்த நபர் பூசாரிப்பட்டி அருகிலுள்ள வண்டிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் செந்தில் என்பதும் தெரிந்திருக்கிறது. சொந்தமாக லாரி வைத்து ஓட்டிக்கொண்டிருந்த செந்திலுக்கு அதில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதனையடுத்து லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்திருக்கிறார். சரியாக வேலைக்குப் போகாமலும், அளவுக்கதிமான குடியாலும் செந்திலுடைய மனைவியும் அவரைப் பிரிந்து பெங்களூருவில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக கேட்டுவந்த செந்தில், யாரிடமோ சொல்லி கைப்பட முதல்வர் ஸ்டாலினுக்கு மனு ஒன்றை எழுதிவாங்கியிருக்கிறார்.

அதில், `கொரோனாவால் நாட்டு மக்கள் பசியும் பட்டினியுமாக இருக்கிறார்கள். எவ்வளவு ஊரடங்கு போட்டாலும் கொரோனாவை யாராலும் அழிக்க முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல நம்முடைய இந்திய தேசத்தையுமே என்னால் தான் காப்பாற்ற முடியும். 15 நாள் மட்டும் எனக்கு டைம் கொடுங்கள். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து, அதனை அழித்துக் காட்டுகிறேன்’ என எழுதியுள்ளார். இந்த மனுவைத் தான் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு டவரில் ஏறி நின்று சாலையில் வீசியிருக்கிறார் செந்தில் என்னும் ரஜினி செந்தில் (அந்த மனுவில் அப்படித்தான் குறிப்பிட்டிருக்கிறார்).

செந்திலை விசாரிக்கும் போலீஸார்

இந்த விவகாரம் குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “செந்தில் என்னும் அந்த நபர் அதிகாலை 5 மணிக்கே அந்த டவரில் ஏறியுள்ளார். ஆனால், மக்கள் நடமாட்டம் வந்தபிறகு கத்திக் கூச்சல் போட்ட பிறகுதான் விஷயம் தெரிந்திருக்கிறது. ‘சரி கொரோனாவை எப்படி ஒழிப்பீங்க!’ எனக் கேட்டதற்கு ‘எனக்கு 15 நாள் டைம் கொடுங்க சார்.. நான் ஒழிச்சுக் காட்டுறேன். இந்தியாவையே காப்பாத்துறேன்’ எனச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார். ஏற்கனவே இதுமாதிரி ஒருமுறை டவரில் ஏறியிருக்கிறேன் எனச் சொன்னார். கடைசியில் செந்திலுடைய சகோதரரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து அறிவுரை சொல்லி அவருடன் அனுப்பி வைத்தோம்” என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/the-young-man-climbed-the-200-foot-tower-in-salem-says-he-will-cure-corona

மதுரை: போலி கொரோனா இறப்பு சான்றிதழ் மூலம் குழந்தை விற்பனை! -காப்பகத்துக்கு சீல்; நிர்வாகி தலைமறைவு

மதுரையில் சட்டவிரோதமாக ஆதரவற்றோர் காப்பகம் நடத்தி குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை மீட்டு சமூக ஆரவலர் என்ற பெயரில் மதுரை மாவட்ட நிர்வாகத்தில் செல்வாக்கை பெற்ற காப்பக நிர்வாகியை காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர்.

காப்பகத்தில் இருந்த ஆதரவற்றோர்

மதுரை அருகே சேக்கிப்பட்டியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மனநலம் பாதித்த இளம்பெண், கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அசாருதீன், 4 மாதங்களுக்கு முன்பு மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் சிவக்குமார் நடத்தி வரும் இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் ஒரு வயதான ஆண் குழந்தைக்கு கடந்த 13-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக காப்பக நிர்வாகி சேர்த்துவிட்ட அசாரூதீனுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தைகளுடன் பெற்றோர்

இந்நிலையில் நேற்று முன் தினம் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்ததாகவும் தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறி அதற்கான ஆவணங்கள், புதைக்கப்பட்ட படத்தையும் அசாருதீனுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அனுப்பிய ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதால் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அசாரூதீன் புகார் செய்தார். உடனே விரைந்து செயல்பட்ட காவல்துறையினருடன் மாவட்ட குழந்தை நல அலுவலர்கள், சமூக நலத்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

காப்பகத்தில் இருந்த ஆதரவற்றோர்

குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினார்கள். தத்தனேரி மயானத்தில் குழந்தை புதைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ரசீது எண் போலியானதாக இருந்துள்ளதும், அதே எண்ணில் ஏற்கனவே கடந்த மே மாதம் 75 வயது நிரம்பிய முதியவர் எரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து தத்தனேரி மயான ஊழியர்கள் மற்றும் நரிமேடு நகர்புற மருத்துவமனையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் போலியான ஆவணங்களை உருவாக்கி குழந்தையை புதைத்தது போல ஆவணங்களை உருவாக்கியது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து போலியான ஆவணங்களை தயாரித்துள்ளதாக தத்தனேரி மின்மயானம் சுகாதார ஆய்வாளர், நரிமேடு நகர்புற மருத்துவமனை அலுவலர் தரப்பில் தொண்டு நிறுவனம் மீது புகார்கள் அளிக்கப்பட்டது.

மூடப்பட்ட காப்பகம்

மேலும் தத்தனேரி மயானத்தில் மாநகராட்சி நகர்நல அலுவலர் குமரகுருபரன் விசாரணை நடத்தியபோது இரு நாட்களுக்கு முன்பு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளங்குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை இக்குழந்தையை அடக்கம் செய்ததாக காட்டியுள்ளது தெரிய வந்தது.

காப்பகத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் இதே போல் 2 வயது பெண் குழந்தையை சில நாட்களுக்கு முன் காப்பக நிர்வாகி சிவகுமார் தூக்கி சென்றதாகவும் அதன் பின் குழந்தையை திருப்பி தரவில்லை என்று அங்கு தங்கியிருந்த மற்றொரு பெண் கூறியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காப்பக நிர்வாகி

இதைத்தொடர்ந்து காப்பக பணியாளர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆண் குழந்தையை இஸ்மாயில்புரத்தில் வசிக்கும் கண்ணன் தம்பதியிடம் 5 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தையை கருப்பாயூரணி சாதிக் தம்பதியிடம் விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது. அதை தொடர்ந்து உடனே குழந்தைகள் மீடகப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட அந்த காப்பகம் மூடப்பட்டு, அங்கிருந்தவர்கள் அரசு காப்ப்கங்களுக்கு மாற்றப்பட்டார்கள். தலைமறைவாகியுள்ள காப்பக நிர்வாகி சிவக்குமாரை காவல்துறை தேடி வருகிறது.

புகாருக்குள்ளாகியுள்ள சிவக்குமார், கலெக்டர் அலுவலகம், காவல்துறை அதிகாரிகள் மத்தியில் செல்வாக்குடன் இருந்துள்ளார். அதனால் இவருக்கு நன்கொடைகள் அதிகம் கிடைத்துள்ளது. ஆனாலும், அனுமதியில்லாமல் காப்பகம் நடத்த சமூக நலத்துறையினர் எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வியை மதுரை மக்கள் எழுப்பியுள்ளார்கள்.

மீட்கப்பட்ட குழந்தைகளுடன் பெற்றோர்

சிவக்குமாரை பிடித்து விசாரிக்கும்போதுதான் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள். மதுரையில் சில காலம் இல்லாமல் இருந்த குழந்தைகள் விற்பனை விவகாரம் மக்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/children-sold-with-the-help-of-fake-documents-from-home

தங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 01/07/2021

சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ₹4443-க்கும், ஒரு கிராம் 24 காரட் ஆபரணத் தங்கம் ₹4802-க்கும் விற்பனையாகின்றன.

22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன்: ₹35,544

24 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன்: ₹38,416

வெள்ளி ஒரு கிராம் ₹74.10-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி: ₹74,100



source https://www.vikatan.com/business/news/todays-gold-and-silver-price-in-chennai

புதுக்கோட்டை: வேலைக்குச் சென்ற இடத்தில் பாலியல் தொல்லை! -கணவனை இழந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே வெள்ளாளர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதிகா. இவர் தனது 5 வயது மகளுடன் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்குக் கையில் பூச்சி மருந்து பாட்டிலுடன் வந்து எஸ்.பி நிஷா பார்த்திபனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், ``ஆவுடையார்கோவில் அருகே வெள்ளாளர் கிராமத்தில் எனது 5 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறேன். கணவர் இறந்துவிட்டார். வருமானத்திற்கு வழியில்லை. குடும்பச் சூழல் காரணமாகவும் மகளைக் காப்பாற்றுவதற்காகவும் வேறு வழியின்றி ஆவுடையார் கோவில் மரக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். கணவர் துணையின்றி தனியாக வசித்து வருவதை அறிந்த கடையின் உரிமையாளர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவ்வப்போது எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால், அங்கு வேலைக்குச் செல்வதையே நிறுத்திவிட்டேன். நீண்ட நாள் வீட்டிலேயே முடங்கியிருந்த நிலையில், அதனை மறந்து மற்றொரு வேலை தேடி சென்றேன்.

நான் விலகிச் சென்றாலும், என்னை விடாமல் பின்தொடர்ந்த அந்த மரக்கடை உரிமையாளர் தொடர்ந்து எனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதுடன், அவரது பேச்சுக்கு இணங்காவிட்டால் என்னையும், எனது மகளையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கிறார்.

அறந்தாங்கி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை போலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நானும், என்னுடைய மகளும் பூச்சி மருந்து குடித்து இறப்பதைத் தவிர எந்த வழியும் இல்லை” என்று கண்ணீர் மல்க மனு கொடுத்தார்.

கையில் பூச்சி மருந்து பாட்டிலுடனும், 5 வயது மகளை அழைத்துக் கொண்டும் எஸ்.பி அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/crime/young-woman-who-lost-her-husband-complaint-to-sp-regarding-sexual-harassment

யாருக்காகவும் மாற்றிப் பாட மாட்டேன்..! - ஏ.எம்.ராஜா எனும் ராகதேவனின் இசைப் பயணம் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சிறுவயதில் சலூன் கடையில், பின் மதிய நேரத்தில் தான் முதன்முதலில் ஏ.எம்.ராஜாவின் பாடலை கேட்டேன்.

சலூன் கடைக்காரர் ராஜாவின் தீவிர ரசிகர். என்னை உட்கார வைத்துவிட்டு ஒரு முழு பீடியையும் வாயிலிருந்து எடுக்காமலேயே அப்பாடலை இசைக்கு தகுந்தபடி தலையாட்டி லயித்தது தேன்நிலவு படத்தில் வந்த 'பாட்டு பாடவா' பாடல்தான். ஒப்பனையில்லாத குரல்.. தெளிந்த நீரோடை போல் இசையில் வார்த்தைகள் இனிமையாய் காதில் வந்து விழுந்தன. அந்த இனிய கானத்துக்கு சொந்தக்காரர்தான் ஏமல மன்மத ராஜூ ராஜா எனும் ஏ.எம்.ராஜா.

நடிகர் மோகனின் குரல் பின்னணி பாடகர் சுரேந்தரனின் குரல் என்றால் எப்படி நம்பாமல் இருந்தோமோ அப்படித்தான் ஜெமினி பாடிய பாடலின் குரல் ஏ.எம்.ராஜா என்றால் நம்ப முடியாது. நூறு சதவீதம் பொருந்தக்கூடிய குரல். இன்றளவும் பிரபலமாய் இருக்கக்கூடிய மிஸ்ஸியம்மா படத்தில் வரும் 'வாராயோ வெண்ணிலாவே' பாடலில் மெட்டுக்கேற்ற வார்த்தைகளும் ராஜாவின் குரலும் தெய்வீகமாய் இருக்கும். அதே படத்தில் வரும் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடல் மெதுவாக நூல் பிடித்தால் போல் ஆரம்பித்து மென்காற்றில் பட்டம் விடுவது போல தன் மாயக்குரலில் ஜாலம் புரிந்திருப்பார்.

A M Raja

இளம் வயதிலேயே தந்தையை இழந்த ராஜா, தாயின் ஊரான ரேணுகாபுரத்தில் குடியேறி வேலூரில் தன் இண்டர்மீடியட் வகுப்பை முடித்தார். அங்குதான் நரசிம்மலு நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். மேற்படிப்புக்காக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் போதே பாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுப்பாடினார். கர்நாடக மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்ற இவர் அப்படி பாடியபோதுதான் HMV நிறுவனம் பாட வாய்பளித்தது. தெலுங்கில் "ஓ இதயராணி"," எந்த தூரம்"ஆகிய இரு பாடலை இவரே இசையமைத்து பாடினார். கே.வி.மகாதேவனின் உதவியுடன் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகி இந்த இசைப் பறவை திரை வானில் பறக்க ஆரம்பித்தது.

லியோ காபி விளம்பர இசையை கேட்டு மணிரத்னத்துக்கு ஏ.ஆர் ரகுமானின் இசை ஈர்த்தது போல அன்று ஜெமினி எஸ்.எஸ்.வாசன் இவரின் தெலுங்குப் பாடலை கேட்டு தனது 'சம்சாரம்' படத்தில் பாடும் வாய்ப்பு அளித்தார். பாடல் வரிகளுக்கு உயிர் கொடுப்பது போன்ற இவரின் குரல் அனைவரையும் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை.1951ல் தனது பாடலுக்கு இசையமைக்க உதவிய கே.வி மகாதேவன் இசையில் குமாரி படத்தில் 'இருளிலிலே நிலவொளியிலே' பாடலை எம்.ஜி.ஆருக்கு தனது வருங்கால மனைவி ஜிக்கியுடன் இணைந்து டூயட் பாடினார்.

மாசிலா உண்மை காதலே பாடல்..

#மென்மையே மெல்லிசையாய்

தமிழில் பாடகராக அறிமுகமானபின் லோகநீதி எனும் திரைப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். தமிழில் ஜெமினிக்கு பொருந்துவது போல மலையாளத்தில் சத்யன், பிரேம்நசீருக்கும் அழகாய் பொருந்தின. யாருக்காகவும் தன் குரலில் ஏற்ற இறக்கமோ மாற்றிப் பாடுவதோ இல்லையென தீர்மானமாய் இருந்தார். இரைச்சல் இல்லாத, சுதி விலகாத தெய்வீக குரலாய் அறியப்பட்டார்.

தமிழில் ஜெமினி தவிர்த்து எம்.ஜி.ஆருக்கு பாடிய 'மாசிலா உண்மை காதலே' பட்டி தொட்டியெங்கும் ராஜாவை கொண்டு சேர்த்தது. எஸ்.எஸ்.ஆருக்கு மிகவும் பொருந்திய 'தென்றல் உறங்கிய போதும்' பாடல் எப்போது கேட்டாலும் சலிக்காதவை.

மற்றவர்களது இசையில் இவர் பாடிய பாடல்களை விட இவரே இசையமைத்து பாடிய பாடல்கள் அதிகம் பிரபலமானது. கர்நாடக இசையில் உச்சஸ்தானியில் பாடிய பாடல்கள் வந்துக் கொண்டிருந்த காலத்தில் மென்மையான பாடல்களை இவர் பாடிய போது புதிய சுவை ரசிகர்களுக்கு கிடைத்து பலரை முணுமுணுக்க வைத்தது.

*களத்தூர் கண்ணம்மாவில் ஆடாத மனமும் ஆடுதே, கண்களின் வார்த்தைகள் புரியாதோ..


*குலேபகாவலியில் மயக்கும் மாலை பொழுதே நீ போ போ..


*அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் வரும் மாசிலா உண்மைக் காதலே


*எதிர்பாராதது படத்தில் சிற்பி செதுக்காத பொற்சிலையே


*ரங்கராட்டினம் படத்தில் முத்தாரமே உன் ஊடல் என்னவோ?


*மீண்ட சொர்க்கம் படத்தில் வரும் 'துயிலா..த பெண் ஒன்று கண்டேன்' மற்றும் 'கலையே என் வாழ்க்கையில்' பாடலிலும் தெளிவும் இயல்பும் ஒரு சேர இருக்கும்.

கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம்,சிங்களம் என அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார்.தனது ரொமாண்டிக் வாய்ஸின் மூலம் அனைவரையும் ஈர்த்தார்.

Representational Image

#இசையமைப்பாளர்

1958ல் வந்த சோபா எனும் தெலுங்கு படத்தின் மூலம் இசையமைப்பாளரானார். பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வெற்றிக்கரமாக இரட்டைக் குதிரையில் சவாரி செய்தார். 1959 ஸ்ரீதரின் கல்யாணப்பரிசு மூலம் இசையமைப்பாளராய் தமிழில் அறிமுகமானார்.'துள்ளாத மனமும் துள்ளும்' பாடலில் அனைவரையும் உருக வைத்திருப்பார். அதிலே 'வாடிக்கை மறந்ததும் ஏனோ' பாடலில் மிதிவண்டியின் வேகத்திற்கு ஏற்ப இசையின் வேகமும் செல்லும்படி இருக்கும். இறுதியில் ஒலிக்கும் 'காதலிலே தோல்வியுற்றான்' பாடலில் படத்தின் மொத்த சாரத்தையும் தனது குரலில் தோய்த்துக் கொடுத்திருப்பார்.

அதில் வந்த உன்னை கண்டு நானாட பாடலில் இன்பத்திலும் துன்பத்திலும் கேட்கும்போது பொருத்தமாய் இதமாய் இருக்கும்.

தேன்நிலவு படத்தில் வரும் பாட்டுப்பாடவா பாடல் மிகச்சிறந்த துள்ளலிசை பாடலாக.. இடையில் கிட்டாரில் ஒலிக்கும் போது

துள்ளல் இசையிலும் ஒரு மென்மை இருக்கும்.அதனை வெகுவாக ரசிக்க வைத்தது. 'சின்ன சின்னக் கண்ணிலே மற்றும் காலையும் நீயே மாலையும் நீயே ஒரு தெய்வீக கானமாகவே ஒலித்தது.'நிலவும் மலரும் பாடுது' பாடலில் இசையும் படகில் பயணம் செய்வது போல் இருக்கும்.இதில் ராஜாவின் குரல் மென்மையாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் லயித்து லயித்துப் பாடியிருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் நன்றாய் இருக்கும். முன்கோபம் மிகுந்த ராஜா அவர்கள் இப்படத்தில் இயக்குநருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் அடுத்த படமான நெஞ்சில் ஓர் ஆலயத்துக்கு இசையமைக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.


ஸ்ரீ தர் தவிர மற்ற இயக்குநரின் படங்களிலும் இசையமைத்துள்ளார். கே.சங்கர் இயக்கத்தில் 1962ல் வந்த ஆடிப்பெருக்கு படத்தின் பாடல்களும் இவருக்கு வெற்றியைத் தந்தது. அதில் வரும் தனிமையிலே இனிமை காண முடியுமா பாடல் தத்துவமாகவும் டூயட்டாகவும் கலந்து இருக்கும்.அப்படத்திலேயே சுசிலா பாடும் காவேரி ஓரம் பாடல் அனைவராலும் விரும்பிக் கேட்டவையாகும்.பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குமார் இசையில் ரங்கராட்டிணம் படத்தில் பாடினார்.1973 வீட்டு மாப்பிள்ளை படம் மூலம் மீண்டும் வந்தார்.

Representational Image

இவைகள் தவிர இந்தி, சிங்களப் பாடல்களையும் பாடி உள்ளார்.

தன்னுடன் பாடிய சக பாடகியான ஜிக்கியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகள்கள், இரு மகன்கள் என ஆறு குழந்தைகள். இவரது மகன் சந்திரசேகர் இளையராஜா இசையில் ராசாமகன் படத்தில் காத்திருந்தேன் கண்மணி பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தவிர இந்தியில் பாடிய முதல் பாடகராக ராஜாவும்-ஜிக்கியும் இருந்தனர். திரைத்துறையில் ஏற்பட்ட கசப்பு அனுபவம் காரணமாக விலகி இருந்தாலும் பாடகராக மேடை கச்சேரிகளை செய்து கொண்டிருந்தார். 1989ம் ஆண்டு கன்னியாகுமரியில் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும்போது வள்ளியூர் ரயில் நிலையத்தில் இறங்கி ஏற முயன்ற போது எதிர்பாராத விதமாக கால்தவறி விழுந்து தன் 59வது வயதில் மனைவியின் கண் முன்னே இறந்தார். காற்று இருக்கும் வரை இவரின் கானம் இருக்கும். தனிமை இருக்கும் வரை இவரின் பாடல்களில் இனிமை கண்டு கொண்டே இருப்போம்.

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/special-article-about-a-m-raja

`அண்ணனைக் கோத்துவிட்டார்கள்!’ - கரூரில் விதிமுறைகளை மீறி கடைகள் திறப்பு சர்ச்சை

கொரோனா பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் உள்ளது. இந்த நிலையில், அங்கு 3000 சதுர அடிக்கு மேல் உள்ள நகை, ஜவுளி மற்றும் பாத்திரக்கடைகளை திறக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட கடைகளை இயங்க செந்தில் பாலாஜி வாய்மொழியாக உத்தரவிட்டதாக சொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமைச் செயலாளர் வரை விவகாரம் வரை விவகாரம் செல்ல, அவர் தலையிட்ட பிறகு, வருவாய் கோட்டாட்சியர் இருபதுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு ரூ. 5000 அபராதம் விதித்துள்ளார்.

கரூர்

Also Read: `திமுக ஆட்சியில் அணில்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா?’ செந்தில் பாலாஜியை விமர்சிக்கும் அண்ணாமலை

கொரோனா வைரஸ் பரவும் தன்மையைக் கொண்டு மாவட்டங்களை மூன்று வகையாக பிரித்து ஊரடங்கை தளர்த்தியுள்ளது தமிழக அரசு. முதல் வகையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் முதல் வகையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இரண்டாம் வகையில் உள்ள 23 மாவட்டங்களில் நகை மற்றும் ஜவுளிக்கடை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் மட்டும் நகை, ஜவுளி கடை திறக்க அனுமதிக்கப்பட்டது. அதேவேளையில், முதல் வகையில் உள்ள மாவட்டங்களில் நகை மற்றும் ஜவுளிக்கடை திறப்பதற்கு அனுமதியளிக்கவில்லை தமிழக அரசு. கரூரையைவிட குறைவான நிலையில் கொரோனா வைரஸ் பரவல் உள்ள தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வணிகர்கள் கடைகளை திறக்க அனுமதி கேட்டும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அனுமதி வழங்க மறுத்துவிட்டன.

அபராதம் விதித்தபோது...

இந்த நிலையில் தான், கரூரில் உள்ள முக்கிய வணிக பகுதியான ஜவஹர் பஜாரில் நேற்று காலை (30 - ஆம் தேதி) திடீரென 50 க்கும் மேற்பட்ட நகை, ஜவுளி மற்றும் பாத்திரக் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் பார்த்தனர். இதனை அறிந்த கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம், விதிமுறைகளை மீறி இயங்கிய 20 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ. 5000 அபராதம் விதித்தார். தன்னைச் சந்தித்த கரூர் வணிகர்கள் சிலர் வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மறைமுகமாக கடைகளை திறக்க வாய்மொழியாக உத்தரவிட்டதாக பரவலாக பேசப்படுகிறது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய சமூக ஆர்வலரான சண்முகம்,

"கரூர் பரப்பளவில் சிறிய மாவட்டம். ஆனால், கொரோனா பரவலில் முன்னணியில் உள்ளது. அதற்கு காரணம், இரண்டாம் அலை வந்து தமிழக அரசு லாக்டெளனை அறிவித்தபோது, தொடர்ந்து இங்குள்ள டெக்ஸ்டைல்ஸ் கம்பெனிகள் இயங்கி வந்தன. அதனாலேயே அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மூலம் கரூர் மாவட்ட குக்கிராமங்கள் வரை கொரோனா தொற்று அதிகரித்தது. அதன்பிறகு, சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்தபிறகே, டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி நிர்வாகங்கள் தங்கள் கம்பெனிகளை மூடின. அதனாலேயே, இப்போது கரூரில் அதிகம் கொரோனா தொற்று பரவல் உள்ளது. இந்த நிலையில், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வரும் 5 ம் தேதி வரை லாக்டெளன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்குள்ள சில வணிகர்கள் செந்தில் பாலாஜியை சந்தித்து தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக புலம்பியிருக்கின்றனர். அதனைத்தொடர்ந்து அவர் கடைகளை மதியம் 2 மணி வரை திறக்க வாய்மொழியாக உத்தரவிட்டதாக சொல்றாங்க. கரூர் மாவட்ட கலெக்டரிடமும் இதை வலியுறுத்திருக்கிறார். ஆனால், இதுதான் சான்ஸ் என்று நினைத்து 50 க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் கடைகளை திறந்து, கூட்டத்தை கூட்டிவிட்டார்கள்.

சண்முகம் (சமூக ஆர்வலர்)

இதை அறிந்ததும் சமூக ஆர்வலர்கள் எல்லாம் போய், கடைகளை மூடச் சொன்னோம். ஆனா அவங்க மறுத்துட்டாங்க. உடனே, இதுபற்றி போட்டோ, வீடியோ ஆதாரங்களோடு சமூக ஆர்வலர்கள் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு புகார் அனுப்பினாங்க. அவர் கரூர் ஆட்சியரிடம், 'லாக்டெளன் அமலில் இருக்கும்போது, எப்படி கடைகளை திறக்க அனுமதிக்கலாம்?. உடனே, கடையை மூடச் சொல்லுங்க'னு என்று கடுகடுத்துள்ளார். அப்படியும், 20 க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் கதவுகளை பாதி அளவு சாத்தி வைத்துக்கொண்டு பெருங்கூட்டத்தை உள்ளே அனுப்பி வியாபாரம் பார்த்தாங்க. மதியம் இரண்டு மணியைக் கடந்தும் வியாபாரம் நடந்துச்சு. அதை அறிந்த தலைமைச் செயலாளர் அதிகாரிகளை எச்சரிக்க, அதன்பிறகே கரூர் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் திறந்திருந்த 20 கடைகளுக்கு தலா ரூ. 5000 அபராதம் விதித்ததோடு, எச்சரிக்கையும் செய்தார்" என்றார்.

இதுகுறித்து, செந்தில் பாலாஜி தரப்பில் பேசிய சிலர், "ஒருசிலர் வந்து அண்ணனிடம் கடைகளை திறக்க கோரிக்கை வைத்தது வாஸ்தவம் தான். ஆனால், கரூரின் நிலைமையை எடுத்துக் கூறி, அதற்கு அவர் அனுமதி மறுத்துவிட்டார். ஆனால், அவர்களாகவே கடைகளை திறந்து வியாபாரம் பார்த்துவிட்டு, அண்ணனைக் கோத்துவிட்டார்கள்" என்றார்கள்.

செந்தில் பாலாஜி

ஏற்கனவே, மின்வெட்டு என்று சர்ச்சை சுழலில் சிக்கியிருக்கும் செந்தில் பாலாஜி, அடுத்த சர்ச்சையில் சிக்கியிருப்பது கரூர் மாவட்ட அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/controversy/senthil-balaji-faced-controversy-in-shop-opening-issue

Covid Questions: முதல் தடுப்பூசி போட்ட 4 நாள்களில் பாசிட்டிவ்; இப்போது 2-ம் தடுப்பூசி போடலாமா?

நான் 18.5.2021 அன்று கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். அடுத்த 4 நாள்கள் கழித்து காய்ச்சலும் வயிற்றுப்போக்கும் இருந்தது. டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதியானது. அதையடுத்து 4 நாள்கள் மருத்துவமனையில் இருந்தேன். இந்த நிலையில் நான் 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டுமா?

- கார்மல் ராஜன்(விகடன் இணையத்திலிருந்து)

Dr. சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.

``நீங்கள் சொல்லும் கணக்குப்படி பார்த்தால் முதல் தவணை தடுப்பூசி போட்ட பிறகு நான்கு நாள்கள் கழித்து உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு நான்கு நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறீர்கள். எனவே மொத்தமாக உங்களுக்கு எட்டு நாள்கள் இந்த பாதிப்பு இருந்திருக்கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொறுத்தவரை முதல் தவணை போட்டுக்கொண்டு 85 நாள்கள் கழித்தே இரண்டாவது தவணை போட்டுக்கொள்ளச் சொல்கிறார்கள். நீங்கள் முதல் டோஸ் போட்டுக்கொண்ட மே 18-ம் தேதியிலிருந்து கணக்கிட்டாலே இரண்டாவது தவணைக்கு இன்னும் ஒன்றரை மாதம் அவகாசம் இருக்கிறது. இந்நிலையில்தான் உங்களுக்குத் தொற்று வந்திருக்கிறது. அதன் காரணமாக உங்கள் உடலில் இயற்கையாகவே ஆன்டிபாடிக்கள் உருவாகியிருந்தாலும் அவை முழுமையாக நியூட்ரலைசிங் ஆன்டிபாடிக்களாக மாறாது. இதை எளிமையாக விளக்குகிறேன்.

அன்றாட வாழ்க்கையில் உணவு, நீர், காற்று மூலமாக நமக்குப் பலவித தொற்றுகள் வருகின்றன. அவை வைரஸ் தொற்றாகவோ, பாக்டீரியா தொற்றாகவோ இருக்கலாம். அவற்றை எதிர்க்க இயற்கையாகவே நம் உடலில் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பாற்றல் செல்கள் உருவாகும். இவற்றுக்கு `பைண்டிங் ஆன்டிபாடீஸ்' என்று பெயர். நியூட்ரலைசிங் ஆன்டிபாடீஸ் என்பவை கோவிட் நோய்க்கு எதிராக பிரத்யேகமாக நம் உடலில் உருவாகும் தடுப்பாற்றல் செல்கள். தடுப்பூசி போடுவதால் `வாக்சின் மீடியேட்டடு இம்யூனிட்டி' (vaccine mediated immunity) என்ற எதிர்ப்பாற்றலை உடல் பெறுகிறது.

COVID-19 vaccine

Also Read: Covid Questions: தடுப்பூசி இடைவெளியை அதிகரித்த அரசு... இதற்கு முன்பு போட்டவர்கள் என்ன செய்வது?

இந்த எதிர்ப்பாற்றலானது மேற்குறிப்பிட்ட நியூட்ரலைசிங் ஆன்டிபாடிக்களை உருவாக்கவும் நோய் எதிர்ப்புத்திறனை இன்னும் சில காலத்துக்கு நீட்டிக்கச் செய்யவும் உதவும். அதற்கு நீங்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளத்தான் வேண்டும். முதல்முறை உங்களுக்கு வந்த தொற்று பெரிய பிரச்னைகளைக் கொடுக்காமல் போயிருக்கலாம். மூன்றாவது அலையில் மீண்டும் நீங்கள் பாதிக்கப்படாமலிருக்கவும், அப்படியே மீண்டும் தொற்று வந்தாலும் அது தீவிர பாதிப்பாக மாறாமலிருக்கவும் தடுப்பூசி மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பு".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/can-a-person-take-2nd-dose-after-tested-positive-to-covid-19-post-1st-dose

கோவையில் அதிர்ச்சி: கொரோனா வைரஸுக்கு 5 மாத குழந்தை உயிரிழப்பு!

தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், கோவை மாவட்டத்தில் கொரோனா தாக்கம் இப்போதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கோவையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு 500-க்கு கீழ்தான் உள்ளது.

கொரோனா வைரஸ்

Also Read: திருப்பூர்: பிரசவத்துக்குச் சென்ற பெண்ணுக்கு கொரோனா! - அச்சத்தில் பழங்குடி கிராமம்

கோவை மாவட்டத்தில் மட்டும் பாதிப்பு 500-க்கு அதிகமாக உள்ளது. நேற்று கூட புதிதாக 514 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியமாக, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 5 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அந்த குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனை

இதற்காக மசானிக் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை, கடந்த 23-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 24-ம் தேதி குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

வென்டிலேட்டர் உதவியுடன் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், குழந்தையின் நிலை தொடர்ந்து மோசமாகவே இருந்துள்ளது. இதையடுத்து 27-ம் தேதி இரவு 10.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அந்த குழந்தை உயிரிழந்தது என்று கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

குழந்தை உயிரிழப்பு (கோப்புப் படம்)

இந்தக் குழந்தைக்கு வேறு இணை நோய்கள் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/tamilnadu/5-months-old-baby-died-for-covid-in-coimbatore

Tamil News Today: தமிழகத்தில் கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையம்! - திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயர்ந்துள்ளது. வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் மீதும் ரூ.84.50 விலை உயர்ந்து சிலிண்டர் ரூ.1,687.50ஆக விலையேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையம் திறப்பு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. அதன் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசு, கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையம் தமிழகத்தில் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தத்து. அதன்படி கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மைய கட்டடம் மற்றும் பன்னாட்டு தடுப்பூசி மையத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் திறந்து வைக்கிறார்.

ஸ்டாலின் - வெள்ளை அறிக்கை

இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ரங்கராஜன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-01-07-2021-just-in-live-updates

அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி; பெருந்தொற்றுக்கு முடிவு கட்டுமா இந்தக் கண்டுபிடிப்பு?

2003-ம் ஆண்டு சார்ஸ் பெருந்தொற்றுப் பரவலுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் மீண்டுமோர் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் எப்போது, எந்த வகை கொரோனா வைரஸ் மக்களிடையே இதுபோன்ற பெருந்தொற்றுப் பரவலை உண்டாக்கும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஆகையால், வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்களுக்கு எதிரானதொரு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது அந்த முயற்சியில் வெற்றியும் கிடைத்துள்ளது. இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை எலிகளின் மீது பரிசோதித்தபோது, கோவிட்-19 மீது மட்டுமல்ல, மற்ற வகை கொரோனா வைரஸ்களின் மீதும் செயலாற்றி, கொரோனா வேரியன்ட்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலைச் செயல்பட வைத்துள்ளது.

Protection (Representational Image)

2003-ம் ஆண்டு பெருவெடிப்பை ஏற்படுத்திய சார்ஸ் தொற்று நோய்க்கு காரணமாக இருந்ததும் கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ்தான். இப்போது கோவிட்-19 பெருந்தொற்றுப் பேரிடருக்கும் அதே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்தான் காரணம். இந்நிலையில், கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஏதாவதொரு வைரஸ் தொற்றுநோயை மனிதர்களிடையே உண்டாக்கி, அதன்மூலம் மீண்டுமொரு பேரிடர் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், அனைத்து வகையான கொரோனா வைரஸ்களுக்கும் எதிராகச் செயலாற்றக்கூடிய வகையில் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்களுடைய ஆய்வில் வெற்றியும் கிடைத்துள்ளது.

2019-ம் ஆண்டு டிசம்பரில் கோவிட் பரவல் தொடங்கியதிலிருந்து தடுப்பூசியைக் கண்டுபிடிப்பார்களா, இந்தப் பேரிடருக்கும் அதன் விளைவாகச் சந்திக்கும் இழப்புகளுக்கும் ஒரு முடிவு கிடைக்குமா என்று உலக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இப்போது கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும்கூட, கொரோனா வைரஸின் புதிய புதிய வேரியன்ட்டுகள் பரவத் தொடங்கி, புதிய சிக்கல்களை உருவாக்குகின்றன. எதிர்காலத்தில் இன்னும் பல கொரோனா வைரஸ் வகைகள் மக்களிடையே பரவலாம் என்ற அச்சுறுத்தலும் நம்மிடையே காத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Moderna COVID-19 vaccine

மாடர்னா, ஃபைஸர் - பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள், மனித அணுக்களில் ஆர்.என்.ஏ இழையைக் கொடுப்பதன் மூலம், வைரஸுக்கு எதிராகச் செயலாற்றுகின்றன. இந்த ஆர்.என்.ஏ இழைகள், கொரோனா வைரஸில் (SARS-CoV-2) நிகழும் ஸ்பைக் புரோட்டீன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஸ்பைக் புரோட்டீன் தன்னிச்சையாக இருக்கையில் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் திறனைக் கொண்டிருப்பதில்லை.

ஆனால், மனித உடலைத் தாக்கும்போது, அதற்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கும் நோய் எதிர்ப்பாற்றலைச் சிதைத்துவிடுகிறது. அதுவே, தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவரின் உடல் கொரோனா வைரஸை (SARS-CoV-2) எதிர்கொண்டால், அவருடைய உடலில் இந்தத் தடுப்பூசியின் மூலம் உருவாக்கப்பட்ட ஆர்.என்.ஏ இழைகள், கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கி, வைரஸ் பெருக்கத்தை எதிர்ப்பதற்குத் தயாராக இருக்கும்.

இதை அடிப்படையாக வைத்து, பல வகையான கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் ஆன்டிபாடிகளை உருவாக்கக்கூடிய தடுப்பூசியைத் தயாரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மார்டினெஸ் மற்றும் அவருடைய சகாக்கள் திட்டமிட்டனர். கோவிட்-19 தொற்றின் ஸ்பைக் புரோட்டீனை வைத்து அதற்கு எதிரான தடுப்பூசியில் செயலாற்றும் எம்.ஆர்.என்.ஏ (mRNA) இழைகள் உருவாக்கப்பட்டன.

அதேபோல், நான்கு வகையான எம்.ஆர்.என்.ஏ இழைகளை மார்டினெஸ் குழு உருவாக்கியது. அதில், ஒவ்வொரு எம்.ஆர்.என்.ஏ இழையிலும் மூன்று வகையான கொரோனா வைரஸ்களின் ஸ்பைக் புரோட்டீன்கள் இடம்பெற்றிருந்தன.

Pfizer-BioNTech COVID-19 vaccine

Also Read: காட்டூர்: 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழ்நாட்டின் முதல் ஊராட்சி... நிகழ்ந்தது எப்படி?

அதில் ஒன்று, 2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் வகையினுடையது. இரண்டாவது, 2019 முதல் தற்போது பேரிடரை உண்டாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வகையுடையது. அதுபோக, வௌவால்களில் காணப்படும், மனித அணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், இதுவரை பெரியளவிலான பெருந்தொற்றுக்குக் காரணமாக உருவாகாமல் இருக்கும் இரண்டு வகையான கொரோனா வைரஸ்களும் இருந்தன.

அதாவது, ஒரு பொம்மையின் கால்கள் கேப்டன் அமெரிக்காவுடையவை, உடல் ஸ்பைடர்மேனுடையது. தலை அயர்ன் மேனுடையதாக இருந்தால் எப்படியிருக்கும். அப்படி ஒரே எம்.ஆர்.என்.ஏ வைரஸில் மூன்று வகையான கொரோனா வைரஸ்களின் ஸ்பைக் புரோட்டீன் இடம் பெற்றிருக்கும். இப்படியான ஒரு கலவையாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தடுப்பூசி இருந்தாலும்கூட, அதை எலிகளின் உடலில் பரிசோதித்தபோது, அதன் நோய் எதிர்ப்பாற்றல் மண்டலம், இப்படிக் கலவையாக இருக்கும் புரோட்டீன்களைக் கண்டுகொண்டது.

மேலும், அதன் உடலில் தடுப்பூசியிலுள்ள ஒவ்வொரு வகையான ஸ்பைக் புரோட்டீனுக்கும் எதிரான ஆன்டிபாடிகள் உருவாகின. அதன்மூலம், அந்தத் தடுப்பூசியில் எந்தெந்த கொரோனா வைரஸ்களின் ஸ்பைக் புரோட்டீன்கள் இருந்தனவோ, அந்தந்த வைரஸ்களிடமிருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்ட எலி பாதுகாக்கப்பட்டுள்ளது. அதோடு, அந்தத் தடுப்பூசி தற்போது பீட்டா வேரியன்ட் என்று குறிப்பிடப்படும் இன்னொரு கோவிட்-19 வேரியன்ட் வைரஸுக்கு எதிராகவும் செயலாற்றியுள்ளது இந்த ஆய்வில் தெரியவந்தது.

எலிகளுக்குப் போடப்பட்ட இந்தத் தடுப்பூசி அவற்றை அனைத்து வகையான கொரோனா வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பதில்லை. இருப்பினும், Sarbecovirus என்ற துணைக் குழுவைச் சேர்ந்த வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கின்றன. அந்தத் துணைக் குழுவின் கீழ்தான் சார்ஸ் மற்றும் இப்போது நம்மைத் தாக்கும் கோவிட்-19 அனைத்தும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இந்தத் தடுப்பூசி எலிகளின் உடலில் கொரோனாவுக்கு தூரத்துச் சொந்தமாக அறியப்படும் மெர்ஸ் வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளையும் உருவாக்குவது தெரியவந்துள்ளது.

corona virus

Also Read: `இலவச பீர், குலுக்கல் பரிசு, மாஸ்க் தேவையில்லை!’ - அமெரிக்காவில் தடுப்பூசி நிலவரம் பகிரும் தமிழர்கள்

மாடர்னா மற்றும் ஃபைஸர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்ட எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தையே மார்டினெஸ் குழுவும் பயன்படுத்தியுள்ளது. விரைவில், எலிகளுக்கு அடுத்தபடியாக பெரிய விலங்குகளில் இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டுக்குள் மனிதர்களிடையே பரிசோதனை செய்யும் அளவுக்கு இந்தத் தடுப்பூசி முன்னேற்றம் கண்டுவிடும் என்று மார்டினெஸ் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர். நாமும் நம்பிக்கையோடு காத்திருப்போம்.

மனிதர்களிடையே தொற்றுப் பரவலை உண்டாக்கும் அனைத்து வகையான கொரோனா வைரஸ் வகைகளிடம் இருந்தும் தற்காத்துக்கொள்ள ஒரே தடுப்பூசி கிடைத்தால், இந்தப் பெருந்தொற்றுப் பேரிடருக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்த ஆய்வின் மூலம் துளிர்விடத் தொடங்கியுள்ளது.



source https://www.vikatan.com/news/healthy/scientists-developing-universal-vaccine-against-all-coronavirus-variants

நீலகிரி: இறந்து கிடந்த காட்டுமாடு! - உடற்கூறாய்வு செய்யாமல் புதைத்ததால் வெடித்த சர்ச்சை

வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் நீலகிரியில் பெரும்பாலான வனப்பகுதிகள் தொடர்ந்து துண்டாடப்படுவதால் உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் போன்றவற்றுக்காக யானை, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் இடம் விட்டு இடம் பெயர்வதில் கடுமையான சிக்கல் நிலவி வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடியலையும் வன விலங்குகள் குடியிருப்புகளுக்கும், விளை நிலங்களுக்கும் வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

Indian Gaur

அதிலும் குறிப்பாக இயற்கையான வாழிட சூழலை இழந்து தவிக்கும் Indian Gaur எனப்படும் காட்டுமாடுகள் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களையே தங்களின் புகலிடமாக மாற்றிக் கொண்டுள்ளன. இதனால் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் இறந்த நிலையில் காட்டுமாடுகளை கண்டெடுப்பது அதிகரித்துள்ளது. நேற்று முந்தினம் ஒரே நாளில் மட்டும் இடுஹட்டி பகுதியில் ஒரு காட்டுமாடும், முட்டிநாடு பகுதியில் ஒரு காட்டுமாடும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் கோத்தகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்றும் சடலமாக மீட்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முந்தினம் கட்டபெட்டு பகுதியில் உயிரிழந்த காட்டுமாட்டினை கூறாய்வு செய்யாமலேயே வனத்துறையினர் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் புதைத்து மூடி மறைத்துள்ளனர். இந்த முறைகேட்டை கண்டறிந்த சூழலியல் செயற்பாட்டாளர்கள், வனத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததால் மீண்டும் காட்டுமாட்டின் சடலைத்தை தோண்டியெடுத்து நேற்று கூறாய்வு செய்தனர்.

indian gaur

இந்த முறைகேடு குறித்து நம்மிடம் பேசிய வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனர் சாதிக் அலி, "இறந்த வன விலங்குகளின் உடலை கட்டாயம் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும். வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்திலேயே இந்த விதி உள்ளது. போஸ்ட்மார்ட்டம் செய்வதன் மூலம் மட்டுமே குறிப்பிட்ட வன விலங்கின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முடியும். ஆனால், கட்டபெட்டு பகுதியில் உயிரிழந்த காட்டுமாட்டினை போஸ்ட்மார்ட்டம் செய்யாமலேயே புதைத்துள்ளனர். இந்த தவற்றை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அறிந்து, உடனடியாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தோம். தற்போது அந்த காட்டுமாட்டின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இந்த விவகாரம் குறித்து ரேஞ்சர் ஒருவரிடம் பேசினோம், "இறந்தது ஒரு ஆண் காட்டுமாடு. கால்நடை மருத்துவர்கள் ராஜன் மற்றும் மனோகரன் தலைமையில் உடற்கூறாய்வு நடைபெற்றது. இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

indian gaur

எனினும் உடற்கூறாய்வு செய்யாமலேயே காட்டுமாட்டினை புதைத்தது தொடர்பாகவும், மீண்டும் தோண்டியெடுத்து கூறாய்வு செய்யப்பட்டது குறித்தும் நாம் எழுப்பிய எந்த கேள்விக்கும் வனத்துறை அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.



source https://www.vikatan.com/news/tamilnadu/indian-gaur-postmortem-controversy-in-nilgiris

புல்லட் முதல் மாருதி 800 வரை! -4 மாவட்டங்களில் கைவரிசை காட்டிய முதியவர் கோவையில் சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு உறவினர் ஒருவரை, தன்னுடைய மாருதி 800 காரில் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். சிறிது நேரத்தில், பார்க்கிங் பகுதிக்கு சென்று பார்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த காரை காணவில்லை.

கோவை அரசு மருத்துவமனை

Also Read: சென்னை: 10 ரூபாயால் துப்பு துலங்கிய திருட்டு வழக்கு... நம்பிக்கை துரோகம் செய்த தம்பதி!

அதிர்ச்சியடைந்த ஜெகதீஷ், உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கார் திருடு போனது உறுதியானது.

இதனிடையே கருமத்தம்பட்டி அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த மாருதி 800 கார் ஒன்றை நிறுத்தி விசாரித்தனர். கார் ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீஸார் சந்தேகமடைந்தனர். விசாரணையில்,அந்த நபர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஆரோக்கிய சகாய தர்மராஜ் (56) என்பதும்,

ஆரோக்கிய சகாய தர்மராஜ்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து காரை திருடி வந்ததும் தெரியவந்தது. இந்தத் தகவல் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரேஸ்கோர் போலீஸார், ஆரோக்கிய சகாய தர்மராஜை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

ஆரோக்கிய சகாய தர்மராஜிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை திருடி செல்வதை வாடிக்கையாக வைத்தது உறுதியானது. திருடும் வாகனங்களை ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (65) என்பவருடன் இணைந்து தனித்தனி பாகங்களாக பிரித்து விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்தது.

பழனிச்சாமி

இதனால், பழனிச்சாமியும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 2 ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்குகள் மற்றும் 2 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆரோக்கிய சகாய தர்மராஜ் மீது சென்னை, திருப்பூர், சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.



source https://www.vikatan.com/government-and-politics/crime/coimbatore-police-arrested-old-man-for-vehicle-theft

வட கொரியா: `வரலாறு காணாத பஞ்சம்; அதிகரித்த உயிரிழப்புகள்; அதிகாரிகளை பதவிநீக்கிய கிம் ஜாங் உன்!'

அதிரடிக்கும், அடாவடிக்கும் பேர் போன வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனது வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். அவராகப் பார்த்து, அவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே வட கொரியாவைப் பற்றிய செய்திகள் வெளி உலகிற்குத் தெரிய வரும் என்ற நிலையில், கிம் ஜான் உன்னைப் பற்றிய செய்திகள் கிடைக்காமல் இந்த இடைப்பட்ட காலத்தில் அவரைப் பற்றி ஏராளமான வதந்திகள், செய்திகள் என்ற பெயரில் சுற்றலிலிருந்தன. ஆனால், இந்த முறை இதய நோய் பின்னணியைக் கொண்ட குடும்பத்தை சேர்ந்த கிம் ஜாங் உன் தனது உடல் எடையைக் குறைக்கவும், தீவிரமாக உள்ள நோய் பரவலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் தான் இத்தனை மாதங்களாக வீட்டில் முடங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
வட கொரியாவின் நிர்வாகத்தைத் தனது கண் அசைவில் வைத்துக் கொண்டிருக்கும் கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்கள் எந்த அளவுக்கு அவரை நேசிக்கிறார்களோ அதை விடவும் ஒருபடி மக்கள் மீது அக்கறை காட்டும் நபராகவே அறியப்படுகிறார். 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நேரத்தில் சீனாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் வட கொரியா துரிதமாகச் செயல்பட்டு எல்லைகளை மூடி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி மக்களை முடக்கியது.

இயற்கை பேரிடர் வட கொரியா

அதன் காரணமாக, 2020-ன் முற்பகுதியில் வட கொரியா கொரோனா நோய்த்தொற்றின் முதலாம் அலையைச் சிரமமின்றி சமாளித்தது. ஆனால், 2020-ன் பிற்பகுதியில் கிம் ஜாங் உன்-னின் தற்காப்பு நடவடிக்கைகளை மீறி நோய்த்தொற்று பரவல் வட கொரியாவில் தீவிரமடைந்தது. ஆனால், வட கொரியாவில் கொரோனா வழக்குகளே இல்லையென்றும், நிலைமை சீராக உள்ளதாகவும் அதிபர் கிம் ஜாங் உன் செய்தி ஊடகங்களிடம் தம்பட்டம் அடித்தார். வட கொரியாவில் தீவிரமடையத் தொடங்கிய கொரோனா வைரஸ் வெகு சீக்கிரத்திலேயே பேரழிவை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, வட கொரிய அரசு பிற நாடுகளின் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவது, விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்தை நிறுத்துவது மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை விதிப்பது எனக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியது. கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைக்கப்பட்டதன் காரணத்தால் வட கொரியா வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
ஏற்கனவே, கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் நிலைகுலைந்து நின்ற அந்நாடு கூடுதலாக இயற்கை பேரிடர் மற்றும் பொருளாதார பாதிப்பால் கலங்கிப்போனது. அதன் காரணமாகக் கடந்த சில மாதங்களாக வட கொரியாவில் கடும் பட்டினியும் பஞ்சமும் நிலவிக் கொண்டிருக்கிறது. 1990-களில் சோவியத் யூனியன் உடைந்தபோது முதல் முறையாக வட கொரியா மிகக் கடுமையான பஞ்சத்தை எதிர்கொண்டது. அதற்குப் பிறகு, தற்போது மீண்டும் பசியும், பட்டினியும் அங்கு தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அணுசக்தி திட்டத்தின் காரணமாக வட கொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருப்பதாலும், இயற்கை பேரிடர்களால் பயிர்கள் நாசமாகி விட்டதாலும் தற்போது அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் பல ஆயிரம் ரூபாய்க்கு அதுவும் கடும் தட்டுப்பாட்டுடன் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பொதுவெளியில் தலைகாட்டத் துவங்கியிருக்கும் கிம் ஜாங் உன், நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு உயர் மட்ட அதிகாரிகள் தான் காரணம் என்று சமீபத்தில் நடந்து முடிந்த உயர்மட்டக் கூட்டத்தில் கடுமையாகச் சாடியிருக்கிறார். வெறும் எச்சரிக்கையோடு விட்டுவிடாமல் மக்களின் பசிக்கும், பட்டினிக்கும், கொரோனா உயிரிழப்புகளுக்கும் அரசு அதிகாரிகளின் அலட்சியமும், பொறுப்பற்ற செயல்பாடும் தான் காரணம் என்று கூறி ஏராளமானவர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக வட கொரிய ஊடகங்கள் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளன. அமைச்சரவையிலிருந்தும் பலர் அதிபரால் தூக்கியெறியப்பட்டுள்ளதால் கூடிய விரைவில் புதிய அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/news/international/north-koreas-kim-sacks-top-officials-after-covid-19-grave-incident

புனிதவதி, கமலவதி, திலகவதி... சைவ சமயத்தின் 3 ரத்தினங்கள்! - அதிகாலை சுபவேளை

இன்றைய பஞ்சாங்கம்

1. 7. 21 ஆனி 17 வியாழக்கிழமை

திதி: சப்தமி மாலை 6.37 வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம்: பூரட்டாதி காலை 6.49 வரை பிறகு உத்திரட்டாதி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை

எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை

நல்லநேரம்: காலை 12.30 முதல் 1.30 வரை

ஹயக்ரீவர்

சந்திராஷ்டமம்: ஆயில்யம் காலை 6.49 வரை பிறகு மகம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

வழிபடவேண்டிய தெய்வம்: லட்சுமி ஹயக்ரீவர்

புனிதவதி, கமலவதி, திலகவதி... சைவத்தின் 3 ரத்தினங்கள்!

நம் மரபில் ஆண் பெண் இருபாலருக்குமே ஆன்மிக வளர்ச்சியில் சமபங்கு உண்டு. இன்னும் சொல்லப்போனால் பல நேரங்களில் பெண்களே முன்னோடிகளாக இருந்து சமயப் பணி செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களில் மூவரை சைவம் மூன்று ரத்தினங்கள் என்று போற்றும். புனிதவதி, கமலவதி, திலகவதி ஆகிய மூவரே அந்த ரத்தினங்கள். சைவத்தில் ஐந்தெழுத்து மிகவும் புனிதமானது, மகத்துவமானது. அதேபோன்று ஐந்தெழுத்தில் தம் பெயரைக் கொண்டதாலோ என்னவோ இவர்கள் பெரும் று பெற்றார்கள். ஒருவகையில் இவர்கள் பெரும் ஆன்மிகப் பணிகளின் தொடக்கப் புள்ளிகளாக இருந்தவர்கள். தங்களைத் தியாகம் செய்து சமயத்தை வாழவைத்தவர்கள். இவர்களிடமிருந்து பெரும் தொண்டு தொடங்கியது. அப்படிப்பட்ட மகத்தான அந்த மூன்று ரத்தினங்கள் குறித்தும் அவர்கள் சமயத்துக்கு ஆற்றிய தொண்டு குறித்தும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்

இன்றைய ராசிபலன்கள்

விரிவான இன்றைய பலன்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்:

நம்பிக்கை : மனதில் நம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். செயல்களும் அனுகூலமாகும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். - நம்பிக்கை அதானே எல்லாம்!

ரிஷபம்:

மகிழ்ச்சி : குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் பணவரவும் உண்டு. சகோதர உறவுகளிடம் மனஸ்தாபம் ஏற்படலாம் என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. - ஆல் இஸ் வெல்!

மிதுனம் :

அலைச்சல் : புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குங்கள். சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கடகம் : சோர்வு : அதிகாலையில் சோர்வு காணப்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் நன்மைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி தாமதமானாலும் கிடைத்துவிடும். இறைவழிபாடு நல்லது. - எல்லாம் நன்மைக்கே!

சிம்மம்: கவனம் : புதிய முயற்சிகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் அக்கறை அவசியம். யாரோடும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். இறைவழிபாடு செய்ய வேண்டிய நாள். - கேர் ஃபுல் ப்ளீஸ்!

கன்னி: நன்மை : எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்துசேரும். சகோதர உறவுகளுக்கு உதவுவீர்கள். பிற்பகலுக்கு மேல் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. - நாள் நல்ல நாள்!

துலாம்: நிதானம் : செலவுகள் அதிகரிக்கும். பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். என்றாலும் செயல்களில் கூடுதல் கவனமும் நிதானமும் தேவை. குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. - டேக் கேர் ப்ளீஸ்!

விருச்சிகம்: அனுகூலம் : செயல்கள் அனுகூலமாகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் நிறைந்திருக்கும். - என்ஜாய் தி டே!

தனுசு: சுறுசுறுப்பு : காலை முதலே சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். செயல்கள் சாதகமாகும். சகோதர உறவுகளால் நன்மை கிடைக்கும். குடும்பத்திலிருந்த மனஸ்தாபம் நீங்கும். - ஜாலி டே!

மகரம்: விவாதம் : பணவரவு உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாகும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. என்றாலும் யாரோடும் விவாதம் தவிர்ப்பது நல்லது. - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

கும்பம்: பிரச்னை : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. என்றாலும் சிறு சிறு பிரச்னைகள் வந்துபோகும். நிதானம் தேவை. - சவாலே சமாளி!

மீனம் : ஆரோக்கியம் : மன உறுதியுடன் செயல்படும் நாள். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் அக்கறை தேவை. - ஹெல்த் இஸ் வெல்த்!



source https://www.vikatan.com/spiritual/gods/three-rathnas-of-saivam

''சசிகலாவின் ஜெராக்ஸ்தான் தினகரன்!'' - சொல்கிறார் ஜெயக்குமார்

ஆட்சி அரியணையிலிருந்து இறங்கிவிட்டாலும்கூட, 'இரட்டைத் தலைமை சர்ச்சை, சசிகலா ஆடியோ ரிலீஸ், சசிகலாவோடு தொடர்பிலிருந்தவர்கள் நீக்கம்' என தொடர்ச்சியாக அதிர்ந்து வருகிறது அ.தி.மு.க வட்டாரம்!" அரசியலைவிட்டு இனி ஒருபோதும் விலகமாட்டேன்" என வீறுகொண்டு எழுந்துள்ள சசிகலா, 100-வது ஆடியோ ரிலீஸை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்தேன்....

''அ.தி.மு.க தோல்வி குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கான அறிவிப்புகூட இன்னும் கட்சித் தலைமையிடமிருந்து வெளிவரவில்லையே ஏன்?''

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.

''ஜனநாயக அரசியலில், வெற்றி - தோல்வி இயல்பானதுதான் என்றாலும்கூட கட்சியின் தோல்வி குறித்து ஆராயப்படவேண்டும். ஆனால், அதற்கு இன்னும் கால நேரம் இருக்கிறது. இது கோவிட் நோய்த்தொற்றின் 2-வது அலை பரவிவரும் நேரம். அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடந்துவரும் அ.தி.மு.க., இந்தப் பெருந்தொற்று நேரத்தில், பெருங்கூட்டம் கூட்டுவதைத் தவிர்க்கவேண்டும் என நினைக்கிறது.

கட்சி சார்பில் நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே, 'சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து விரைவில் ஒவ்வொரு மாவட்டத்தினருடனும் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ஒருங்கிணைப்பாளரும் துணை ஒருங்கிணைப்பாளரும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள். எனவே, நோய்த்தொற்று குறையும்போது நிச்சயம் இதுகுறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெறும்!''

''அ.தி.மு.க-வின் தோல்விக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?''

''அரசின் நிதி நிலைமையைக் கருத்திற்கொண்டு, எந்தெந்த திட்டங்களையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அவற்றை மட்டுமே தேர்தல் வாக்குறுதிகளாக முன்வைத்தது அ.தி.மு.க. ஆனால், நிறைவேற்ற சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளை எல்லாம் முன்வைத்து பிரசாரம் செய்தது தி.மு.க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் நிறைவேற்றவே முடியாத பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க கூட்டணியினர் வெளியிட்டனர். இந்த சட்டமன்றத் தேர்தலிலும் 500 வாக்குறுதிகள் கொடுத்துள்ளனர். இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால், பல லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். அவ்வளவு பணம் எங்கே இருக்கிறது? அதனால்தான் இப்போதே, 'நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்கப்போகிறோம்' என்கிறார் நிதி அமைச்சர். தேர்தலின்போது, தி.மு.க-வின் பிரசார பலத்தினால் இந்தப் பொய்யான வாக்குறுதிகள் எல்லாம் மக்களிடையே எடுபட்டுவிட்டது. இந்த தற்காலிக வெற்றியினால், இன்றைக்கு ஆட்சிப் பொறுப்புக்கும் வந்துவிட்டனர். மற்றபடி மக்கள் யாரும் தி.மு.க-வை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.... தி.மு.க கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது!''

மு.க.ஸ்டாலின்

''கட்சித் தலைமைகள் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொண்டிருந்தால், அ.தி.மு.க-வுக்கு வெற்றி சாத்தியப்பட்டிருக்கும்தானே?''

''அப்படியெல்லாம் எங்கள் கட்சித் தலைமைக்குள் எந்தவித பிணக்கும் இல்லை. அ.தி.மு.க என்பது மிகப்பெரிய கட்சி. இங்கே அண்ணன் தம்பிக்குள் சில கருத்துகள் இருக்கும். அதை மீடியாதான் ஹேஸ்யமாக பூதாகரப்படுத்துகின்றன. கட்சிக்குள் என்னென்னவோ பிரச்னைகள் இருப்பதாக செய்தி வெளியிட்டனர். ஆனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் கையொப்பமிட்டே முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்படுகிறன. ஆக, கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை!'' சில முடிவுகளில் உடன்பாடு குறித்த சில கருத்துகள் அவ்வப்போது வெளிவந்தாலும்கூட, இறுதியில் நல்லதொரு முடிவு எட்டப்படுகிறதா என்பதை மட்டும்தான் பார்க்கவேண்டும்! உதாரணமாக கட்சி எடுத்த முடிவின்படி எதிர்க்கட்சித் தலைவர், கொறடா, பொருளாளர், செயலாளர் என நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பேற்றுக்கொண்டு சட்டசபை கூட்டத்தொடரில் ஒற்றுமையாக பங்கேற்றதையும் பார்த்தீர்கள்தானே!''

''ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்-ஸில் ஆரம்பித்து நீங்கள் உள்பட கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட பொறுப்புகளை வகித்துவருவது எந்தவகையில் நியாயம்?''

''பதவிகளை எப்படி பகிர்ந்து அளிக்கவேண்டும் என்பதெல்லாம் கட்சியின் கொள்கை முடிவு... 'ஒருவருக்கு ஒரு பதவி' என்று நான் சொல்லமுடியாது! எனவே, இப்போது நீங்கள் சொல்கிற இந்த கருத்தைக்கூட நாளை கட்சி கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்... அல்லது எடுத்துக்கொள்ளாமலும் போகலாம்!''

''அ.தி.மு.க-வினர் யாரும் சசிகலாவை நம்பமாட்டார்கள்; அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்றெல்லாம் பேசிவிட்டு, சசிகலா ஆடியோ ரிலீஸாவதைக் கண்டு பதற்றமடைவது ஏன்?''

டி.டி.வி.தினகரன் - சசிகலா

''பதற்றமெல்லாம் ஒன்றும் கிடையாது. சசிகலாவையும் டி.டி.வி தினகரனையும் ஒருநாளும் பிரிக்க முடியாது. சசிகலாவின் ஜெராக்ஸ்தான் தின்கரன்! சசிகலா ஆசீர்வாதத்தினால்தான் அ.ம.மு.க என்ற கட்சியே ஆரம்பிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் 3 % வாக்குகளைக்கூட அவர்களால் பெறமுடியவில்லை. ஆக, கட்சிக்காரர்களிடமும் செல்வாக்கு இல்லாத, மக்களிடமும் செல்வாக்கு இல்லாத ஒருவரை யார் தலைவராக அங்கீகரிப்பார்கள்? எனவே, அ.தி.மு.க-வில் ஒரு வீண் குழப்பத்தை ஏற்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார்... அது ஒருபோதும் நடக்காது! ஏனெனில், அ.தி.மு.க-வினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்! ஜெயலலிதாவோடு உடனிருந்தவர் சசிகலா. 'ஜெயலலிதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது, இதற்கு யார் காரணம்...' என்ற கேள்விகளுக்கான விடையை எதிர்நோக்கி அ.தி.மு.க-வினரும் மக்களும் காத்திருக்கின்றனர். எனவேதான், அந்த உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக எங்கள் ஆட்சியின்போது விசாரணை கமிஷனை அமைத்தோம்!''

''அ.தி.மு.க குறிப்பிட்ட ஜாதியினருக்கான கட்சியாக சுருங்கிவிட்டது என்ற விமர்சனம் பரவலாக எழுந்துள்ளதே...?''

''அப்படியெல்லாம் திட்டமிட்ட ஒரு கோயபல்ஸ் பிரசாரம், பிம்பம், மாயை உருவாக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க மீது ஜாதி சாயம் பூசுவதற்காக தொடர்ந்து சிலர் பொய் சொல்லி வருகின்றனர். ஆனால், ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் அ.தி.மு.க. உதாரணமாக, நான் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவன். கடந்தகாலத்தில் எதிர்க்கட்சியினரது கேள்விகளுக்குப் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு எனக்கு அ.தி.மு.க-வில் சுதந்திரம் கொடுத்திருந்தார்கள்தானே.... நான் என்ன அவர்கள் சொல்வதுபோல் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவனா... சொல்லுங்கள்! கட்சியின் வழிகாட்டும் குழுவிலேயேகூட அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்களே!''

அஸ்பயர் சுவாமிநாதன்

''அ.தி.மு.க-விலிருந்து விலகிய அஸ்பயர் சுவாமிநாதன், 'அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலே, ஜாதிக்கட்சியாக மாறிவிட்டதைச் சொல்லும்' என்கிறாரே?''

''கட்சியைவிட்டு விலகியபிறகு, ஏதாவது ஒரு காரணம் சொல்லவேண்டுமே என்பதற்காக அவர் இப்படியொரு காரணத்தை சொல்லியிருக்கலாம். எனவே இதில் எந்த உண்மையும் கிடையாது.கட்சிக்காக விசுவாசத்தோடு உழைப்பவர்களை எந்தவகையிலும் யாராலும் புறந்தள்ள முடியாது. அவர்களுக்கான உரிய மரியாதை கொடுக்கப்பட்டே வருகிறது. அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு சமுதாயத்துக்கு மட்டுமே சலுகைகளைக் கொடுத்தது, அரசின் திட்டங்கள் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டுமே சென்று சேர்ந்தது என்றெல்லாம் எந்த ஒரு புகாரும் இதுநாள்வரையில் வந்தது கிடையாது. அப்படியொரு விஷயம் அ.தி.மு.க வில் நடக்கவும் நடக்காது!''

''கஷ்டப்பட்டு வளர்த்த அ.தி.மு.க-வை சாதி ரீதியாக சிதறிப்போக விடமாட்டேன் என சசிகலாவும் அண்மையில் வெளியிட்ட ஆடியோவில் கூறியிருக்கிறாரே...?''

''அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாதவர் சசிகலா. எனவே அவர் செய்ய விரும்பும் வேலையை, அ.ம.மு.க-வில் வேண்டுமானால் செய்யலாம்; அ.தி.மு.க-வில் செய்ய முடியாது.''

புகழேந்தி

''ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசிவந்த புகழேந்தி, கட்சியை விட்டே நீக்கப்படுகிறார் என்றால், கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்குகிறதா?''

''இல்லையில்லை... யார் கையும் ஓங்கவில்லை. ஒரு கூட்டணியில் இருந்துகொண்டே கூட்டணியை விமர்சிப்பதென்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அடுத்து, சொந்தக் கட்சியைப் பற்றி, அதன் தலைவர்களைப் பற்றி அல்லது அந்த கட்சியின் கொள்கை முடிவுகளைப் பற்றி நான் விமர்சனம் செய்வது கிடையாது. எந்தவொரு முடிவு என்றாலும் கட்சியை கலந்தாலோசித்து, அங்கே எடுக்கப்படுகிற முடிவுகளைத்தான் பொதுவெளியில் சொல்வேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க அழிந்துவிடும் என சிலர் நினைத்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. ஒற்றுமையாக செயல்பட்டு ஒவ்வொரு தடைகளையும் தகர்த்தெறிந்து வருகிறது அ.தி.மு.க. இது நிறைய பேர்களது கண்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இல்லாததும் பொல்லாததுமாக செய்தி கிளப்பிவிடுகிறார்கள். ஆனால், அ.தி.மு.க இன்னும் நூறாண்டுகளுக்கு நிலைக்கும்; தழைக்கும்!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/former-admk-minister-jayakumar-interview

காவிரி நீர் : கடைமடைப் பகுதியான பூம்புகாரை வந்தடைந்தது; மலர் தூவி வழிபட்டு வரவேற்ற மக்கள்!

காவிரி வங்கக் கடலோடு கலக்குமிடமான பூம்புகாரில், காவிரியின் கடைசி அணையான சட்ரஸ் பகுதிக்குக் கடந்த திங்கட்கிழமை (28.06.2021) காவிரி நீர் வந்தடைந்தது. காவிரி நீரை விவசாயிகளும் அதிகாரிகளும் மலர்தூவி வரவேற்றனர்.

காவிரி நீர்

கர்நாடக மாநிலம், குடகு மலையில் கிளம்பும் காவிரி, தமிழகத்தின் தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை எனப் பல மாவட்டங்களுக்கு விவசாயம் செழிக்க நீர்வளம் தந்து, இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் (காவிரிபூம்பட்டினம்) பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா  பாசனத்துக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையைத் திறந்துவைத்தார். இந்தத் தண்ணீர் பல மாவட்டங்களைக் கடந்து, கடந்த திங்கட்கிழமை அதிகாலை காவிரி கடலோடு கலக்குமிடமான பூம்புகார் பகுதியை வந்தடைந்தது.

இதையொட்டி சட்ரஸ் பகுதியில் அமைந்துள்ள காவிரியின் கடைசிக் கதவணையில் காவிரி நீருக்கு பால், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெட்சிணாமுர்த்தி, சீர்காழி ஒன்றிய கழகத் தலைவர் கமல ஜோதிதேவேந்திரன்,முன்னோடி விவசாயி தனமூர்த்தி உள்ளிட்ட பலர் மலர்தூவி காவிரி நீரை வரவேற்றனர்.

காவிரி

முதற்கட்டமாக  பல கிராம விவசாயிகளுக்கு நீர்பாசனம் அளிக்கும் சுமார் 800 ஏக்கர் பரப்பிலான பெருந்தோட்டம் மற்றும் சுமார் 700 ஏக்கர் பரப்பிலான திருவாலி ஏரிகளை நிரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடைமடைப் பகுதிக்கு இவ்வளவு விரைவாக காவிரி நீர் வந்தது, அந்தப் பகுதி மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/cauvery-river-water-arrived-at-poombukar-people-excited-and-worship-it