Ad

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

`சுஷாந்த் கொலைக்கு இதுதான் காரணம்...பாலிவுட்டில் போதைப் பழக்கம்!' - கங்கனா பகீர் தகவல்

பாலிவுட் நடிகர் சுஷாந்த சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு பல்வேறு திருப்புமுனைகளைச் சந்தித்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து இவ்வழக்கை முழு வீச்சில் விசாரித்து வருகிறது சிபிஐ. இந்த வழக்கில் சிக்கியுள்ள சுஷாந்தின் தோழியும் நடிகையுமான ரியா சக்கரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்கள் வெளியானது தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் சிங்

பணப் பரிவர்த்தனை தொடர்பான விசாரணைக்காக அமலாக்கத்துறை ரியாவின் செல்போன்களை ஆராய்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது டெலீட் செய்யப்பட்ட சில உரையாடல்களையும் மீட்டெடுத்து ஆராய்ந்தது. அது தொடர்பான தகவல்களை சி.பி.ஐ-யிடமும், போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திடமும் பகிர்ந்துகொண்டது. காரணம், ரியாவின் உரையாடலில் பல விஷயங்கள் போதைப் பொருளுடன் தொடர்புடையவையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான செய்தியைக் கீழுள்ள லிங்கில் படிக்கலாம்.

Also Read: சுஷாந்த் வழக்கு: `4 சொட்டுகள் கலந்து குடிக்க வை!’ - ரியா வாட்ஸ்அப் உரையாடல் அம்பலப்படுத்திய சதி?

இந்நிலையில், சுஷாந்த் சிங் மரணம் குறித்து ஆரம்பத்திலிருந்தே பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வந்த பாலிவுட் நடிகை கங்கனா, தற்போது மேலும் சில அதிர்ச்சி தரும் கருத்துகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முதலாவதாகப் பதிவிட்ட ட்வீட்டில், ``போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் பாலிவுட்டுக்குள் நுழைந்தால் பல ஏ லிஸ்ட்டில் உள்ள பிரபலங்கள் ஜெயிலுக்குச் செல்வார்கள். அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்தால் பல அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் வெளிவரும். ஸ்வச் பாரத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி, பாலிவுட் என்றழைக்கப்படும் சாக்கடையைச் சுத்தம் செய்வார் என்று நம்புகிறேன்'' என்று பிரதமர் மோடியை டேக் செய்து பதிவிட்டிருந்தார் கங்கனா.

சுஷாந்த் வழக்கில் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்ய வாய்ப்புள்ளது என்ற செய்திகளை வந்ததை அடுத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்துக்கு உதவத் தயாராக உள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் கங்கனா. அந்த பதிவில்,

Also Read: `சுஷாந்த் செய்த ஒரே தவறு; நிராகரித்ததா பாலிவுட்?' -எதிர்ப்புகளுக்குப் பதிலடி கொடுத்த கங்கனா

மற்றொரு ட்விட்டர் பதிவில், ``நான் புகழ்பெற்ற நடிகையான பின் பாலிவுட்டில் நடக்கும் பெரிய பார்ட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தபோதுதான் இது எவ்வளவு மோசமான உலகம் என்பதும் போதைப் பொருள் மாஃபியா என்பதும் எனக்குத் தெரியவந்தது.'' என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், ``பாலிவுட்டில் பிரபலமான போதைப் பொருள் கொக்கெயின். இது கிட்டதட்ட எல்லா ஹவுஸ் பார்ட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்த போதைப் பொருள். ஆனால், வலிமைமிக்கவர்களின் வீட்டு பார்ட்டிகளுக்குச் செல்லும்போது இது இலவசமாகக் கிடைக்கின்றது. MDMA க்ரிஸ்டல்களாக (போதை மாத்திரைகள்) நீங்கள் பருக்கும் தண்ணீரில் இது கலக்கப்பட்டுவிடும். சில சமயங்களில் போதை மருந்து கலந்திருக்கும் விஷயம் உங்களுக்குச் சொல்லப்படாமலேயே இந்த தண்ணீர் உங்களுக்கு வழங்கப்படும்'' என்று அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் கங்கனா.

கங்கனா ரனாவத்

கங்கனாவின் இந்த ட்விட்டர் பதிவுகள் மீண்டும் பாலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு ஆரம்பித்த போது பாலிவுட்டில் `நெப்போட்டிஸம்' இருப்பதாகப் பேசியிருந்த கங்கனா, தற்போது ``பாலிவுட்டில் போதைப் பொருள்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது' என்று சொல்லி மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். இந்த வழக்கு முடிவு பெறுவதற்குள் பாலிவுட் குறித்து இன்னும் எத்தனை அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவரக் காத்திருக்கிறதோ தெரியவில்லை!



source https://www.vikatan.com/news/crime/kanganas-shocking-tweet-on-sushant-case-and-bollywood

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக