Ad

புதன், 31 மார்ச், 2021

ஜாஷ் ஹேசில்வுட் விலகல்... சென்னை சூப்பர் கிங்ஸ் புதிதாக யாரை வாங்கலாம்? #IPL

2021 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியிருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ஜாஷ் ஹேசில்வுட். தொடர்ந்து பயோபபிள்களில் இருந்து வருவதால் ஓய்வு எடுப்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கிறார் அவர். ஒரு முக்கியமான வீரரை இழந்திருக்கும் சூப்பர் கிங்ஸ் அவருக்குப் பதில் யாரை அணியில் சேர்க்கலாம்… அலசுவோம்.

கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சூப்பர் கிங்ஸால் அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் ஹேசில்வுட். மொத்தம் 3 போட்டிகளில் மட்டுமே ஆடியவர், 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய வீரர்களுடன் அவரும் இந்தியாவுக்கு வந்து ஐபிஎல் அணியோடு இணைவதாக இருந்தது. அப்படியிருக்கையில் இந்த முடிவை அறிவித்திருக்கிறார் அவர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து குவாரன்டீன், பயோ பபிள் என்று இருந்துவருவதால், ஓய்வு வேண்டுமென்று கூறியிருக்கிறார் அவர். 2 மாதங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தோடு ஓய்வெடுக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் இறுதிப் போட்டியிலும் கவனம் செலுத்த விரும்புகிறார் அவர்.

சரி, ஹேசில்வுட் விலகியிருக்கும் நிலையில் சென்னை அணி யாரை வாங்கலாம்?

கடந்த ஆண்டு ஏலத்தில் இடம்பெற்றபோது, ஹேசில்வுட்டின் அடிப்படை விலை 2 கோடி ரூபாயாக இருந்ததால் சென்னை அணி யாரை வேண்டுமேனாலும் அவருக்குப் பதில் ஒப்பந்தம் செய்யலாம். ஆனால், அவர் இந்த ஆண்டுக்கான ஏலத்துக்கு ஒப்பந்தம் செய்தவராக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.

Josh Hazlewood

சென்னை அணியைப் பொறுத்தவரை ஒரு வேகப்பந்துவீச்சாளரைத்தான் வாங்கவேண்டும் என்பதில்லை. அவர்களால் எல்லா காம்பினேஷன்களிலும் இந்திய வீரர்களை களமிறக்க முடியும் என்பதால், வெளிநாட்டு வீரர்களையும் அதற்கு ஏற்றதுபோல் வாங்கலாம். ஏற்கெனவே பிராவோ, சாம் கரண், எங்கிடி என 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால், தாஹிருக்கு பேக் அப் வீரர் வாங்கலாம். இல்லை டுப்ளெஸ்ஸிக்கு பேக் அப் ஆக ஒரு ஓப்பனரைக்கூட வாங்கலாம். இப்படி நிறைய ஆப்ஷன்கள் இருப்பதால், ஒவ்வொரு பொசிஷனிலும் இருக்கும் சில வீரர்களைப் பற்றிப் பார்த்துவிடுவோம்.

வேகப்பந்துவீச்சாளர்கள் - பெரண்டார்ஃப் / வில்லியான்

ஹேசில்வுட்டுக்குப் பதில் ஒரு வேகப்பந்துவீச்சாளரையே வாங்கவேண்டுமெனில், சென்னைக்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கிறது. ஐபிஎல் அனுபவம் கொண்ட பல பௌலர்கள் இந்த ஏலத்தில் விலை போகவில்லை. ஷெல்டன் காட்ரல், பில்லி ஸ்டேன்லேக், ஜேசன் பெரண்டார்ஃப், ஹார்ட்டஸ் விலியான், இசுரு உடானா, ஷான் அபாட், ஒஷேன் தாமஸ், ஸ்காட் குகுலீன் என ஒரு பெரும் படையே இருக்கிறது. ரீஸ் டாப்ளி, ஜெரால்ட் கோட்ஸி போன்று ஐபிஎல் அனுபவம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதில் யார் சூப்பர் கிங்ஸுக்கு நல்ல ஆப்ஷனாக இருப்பார்கள் என்று பார்த்தால் - பெரண்டார்ஃப், ஸ்டேன்லேக் இருவரையும் சொல்லலாம்.

Jason Behrendorff

ஜேசன் பெரண்டார்ஃப் ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியிருக்கிறார். ஹேசில்வுட்டை (6 அடி 5 அங்குலம்) போல் இவரும் உயரமான (6 அடி 4 அங்குலம்) வீரர். பௌன்சர்கள் வீசுவதில் கில்லாடி. இந்தியாவில் டி20 போட்டிகள் விளையாடிய அனுபவம் ஓரளவு கொண்டவர். இந்த பிக்பேஷ் சீசனில் 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இவர் நல்ல ஆப்ஷனாக இருப்பார். ஒருவேளை இவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்று கருதினால், ஸ்டான்லேக் நல்ல ஆப்ஷன். அதேசமயம், கடந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இப்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்கு ஆடிய ஹார்டஸ் விலியான், இந்த ஆண்டு சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் பௌலராக இருக்கிறார். அதனால், அவரையேகூட சென்னை ஒப்பந்தம் செய்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

ஸ்பின்னர்கள் - ஆதில் ரஷீத் / கிறிஸ் கிரீன்

பியூஷ் சாவ்லாவைக் கழட்டிவிட்டுருப்பதால் இந்த சீசன் தாஹிர் எப்படியும் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பராசக்தி எக்ஸ்பிரஸிடம் முந்தைய வேகம் இல்லையெனில், அவருக்குப் பதில் ஒரு நல்ல லெக் ஸ்பின் ஆப்ஷனாக ஆதில் ரஷீத் இருப்பார். இந்திய அணிக்கெதிரான ஒருநாள், டி20 தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்டார். கோலியை பல போட்டிகளில் தடுமாறவைத்தார். பவர்ப்ளேவிலும் பந்துவீசக்கூடியவர் என்பது கூடுதல் பலம்.

Adil Rashid

லெக் ஸ்பின் ஆப்ஷன் வேண்டாம், ஆஃப் ஸ்பின்னருக்குப் போகலாம் என்று நினைத்தால் கிறிஸ் கிரீனை வாங்கலாம். ஆஃப் ஸ்பின்னர் வேண்டும் என்பதற்காகத்தான் மொயின் அலியை போட்டி போட்டு வாங்கினார்கள். கிரீன் அவருக்கு பேக் அப் வீரராக இருப்பார். அவரைப் போல் பேட்டிங் செய்யக்கூடியவர் இல்லைதான். ஆனால், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் வரை பேட்டிங் செய்வார்கள் என்பதால், அவர்கள் அளவுக்கு இவரும் பேட்டிங் செய்யக்கூடியவர் என்பதாலும், கிரீன் நல்ல ஆப்ஷனாக இருப்பார்.

ஓப்பனர்கள் - அலெக்ஸ் ஹேல்ஸ் / ஈவின் லூயிஸ்

கடந்த சீசனில் சிறப்பாகச் செயல்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் ஒரு ஓப்பனர் ஸ்லாட்டை தனதாக்கிவிடுவார். அவரோடு டுப்ளெஸ்ஸி ஆடுவாரா, நல்ல ஃபார்மில் இருக்கும் உத்தப்பா ஆடுவாரா என்று கேள்வி இருக்கிறது. ஒருவேளை ஃபாஃப் தான் முதல் சாய்ஸ் ஓப்பனர் என்றால், அவருக்கு ஒரு பேக் அப் வைத்துக்கொள்வது நல்லது. ஃபின்ச், குப்தில் என நிறைய வீரர்கள் இருந்தாலும், அந்த இடத்துக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் நல்ல ஆப்ஷனாக இருப்பார். ஜேசன் ராயை வாங்கியிருக்கலாம். ஆனால், சன்ரைசர்ஸ் முந்திக்கொண்டுவிட்டது. இந்த பிக்பேஷ் சீசனில் 161.6 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 543 ரன்கள் குவித்திருக்கும் ஹேல்ஸ் நிச்சயம் நல்ல பேக் அப் வீரராக இருப்பார். ஒருவேளை ஃபாஃபை ஓவர்டேக் செய்து இவரேகூட ஓப்பனிங் இறங்கலாம்.

Alex Hales

ருத்துராஜ், ஜெகதீசன், உத்தப்பா, ஃபாஃப் என எல்லோரும் வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பதால், ஈவின் லூயிஸ் ஒரு நல்ல மாற்றாக இருப்பார். டுவைன் ஸ்மித், டுவைன் பிராவோ என மும்பை இந்தியன்ஸில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சென்னையின் சூப்பர் ஸ்டார்களாக விளங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் லூயிஸையும் நம்பலாம். இலங்கைக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த அரைசதம், சதம் என்று அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார் லூயிஸ்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் - மார்னஸ் லாபுஷேன் / டெவான் கான்வே

ரெய்னா, ராயுடு, தோனி என பல வீரர்கள் இருப்பதால் மிடில் ஆர்டரில் பெரிய தேவை இருக்காது. ஆனால், சில சமயங்களில் சிஎஸ்கே என்ன பிளானில் வீரர்களை வாங்குகிறது, வைத்திருக்கிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. உதாரணம் - மிட்செல் சேன்ட்னர்! அதனால், இந்த ஏரியாவிலும் இரண்டு நல்ல ஆப்ஷன்களைப் பார்ப்போம். அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு வீரர்களையும் ஓப்பனர்களாகக்கூட இறக்கிவிடலாம்.

Marnus Labuschagne

முதல் வீரர் - குட்டி ஸ்டீவ் ஸ்மித் லாபுஷேன். டெஸ்ட் மட்டுமல்லாது, அனைத்து ஃபார்மேட்களிலும் தன் திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். இந்த பிக்பேஷ் சீசனில் 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி பந்துவீச்சிலும் அசத்தினார். அதனால், ஆல்ரவுண்டர் ஸ்லாட்டையும் இவரால் நிரப்ப முடியும். அடுத்தது, இப்போது முரட்டு ஃபார்மில் இருக்கும் டெவான் கான்வே. நியூசிலாந்தைச் சேர்ந்த இந்த இடதுகை பேட்ஸ்மேன் கடந்த ஆண்டு சென்னை மிஸ் செய்த முரட்டு ஹிட்டர் வகையறா. மொயின் அலி செட் ஆகவில்லையெனில், மிடில் ஆர்டரில் ஹிட்டராக இவரைப் பயன்படுத்தலாம்.



source https://sports.vikatan.com/ipl/who-could-replace-josh-hazlewood-in-csk-squad

கோவை: பாஜக-வினர் கல்வீச்சு நடத்திய கடையில் செருப்பு வாங்கி ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்!

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரத்துக்காக கோவை வந்திருந்தார். புலியகுளம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கி பொதுக்கூட்டம் நடைபெற்ற ராஜவீதி தேர்முட்டி பகுதிக்கு செல்வதுதான் பா.ஜ.க-வினரின் திட்டம். ஆனால், அந்தப் பேரணிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து விதிமுறைகளை மீறி நடந்த அந்தப் பேரணியின் போது வெறுக்கத்தக்க கோஷங்களை எழுப்பியதாகவும், அங்கிருந்து கடைகளை மூட சொல்லி தகராறு செய்து கல்வீச்சில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பேரணி

Also Read: பைக் பேரணி, வெறுக்கத்தக்க கோஷம், கல்வீச்சு - யோகி ஆதித்யநாத் கோவை வருகை ரிப்போர்ட்!

இதுகுறித்து, வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாம்தமிழர் கட்சி மற்றும் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர்.

கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று வணிகர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அதேபோல, மக்கள் நீதி மய்யம் தலைவரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஆதித்யநாத் வருகையின்போது பா.ஜ.க செய்த அடாவடிகள் கண்டனத்திற்குரியவை.

கமல்ஹாசன்

கோவையில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து மக்களை நேசிக்கக் கூடிய ஒரு தலைமை உருவாக வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்துவது இதற்காகத்தான். ‘கலவர ஸ்பெஷலிஸ்டுகளை’ ஒற்றுமையால் முறியடிப்போம்“ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, கல்வீச்சு சம்பவம் நடந்த வி.எம் காலணியகம் செருப்புக் கடைக்கு கமல் நேரில் சென்றார். திடீரென்று அந்தக் கடைக்குள் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் கமல் என்ட்ரி கொடுத்ததால், அங்கு சற்று கூட்டம் கூடியது. கமல் அங்கு செருப்பு வாங்கிவிட்டு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

கமல்

அப்போது பேசிய கமல் ``இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள்” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kamalhaasan-vists-shop-where-bjp-cadres-thrown-stones-in-coimbatore

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது... "தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை" - ஜவடேகர்

சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை ஒவ்வொரு ஆண்டும் யார் பெறப்போகிறார் என்ற ஆர்வம் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் இருக்கு. இந்த முறை 51வது தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு அறிவித்து கெளரவித்திருக்கிறது மத்திய அரசு.

சினிமா துறையில் சாதித்தற்காக கொடுக்கப்படும் விருதுதான், தாதாசாகேப் பால்கே விருது. இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் நினைவாக, இந்திய அரசு 1969-ம் ஆண்டிலிருந்து அவர் பெயரில் விருதினை வழங்கி வருகிறது. இதனை முதலில் பெற்றவர், இந்தி நடிகை தேவிகா ராணி. சமீபத்தில் 2018-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுத்து கெளரவித்தது இந்திய அரசு.

ரஜினிகாந்த்

இதுவரை தமிழில் இருந்து நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் இந்த உயரிய விருதினை பெற்றிருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து, தற்போது, நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றிருக்கிறார். ஏற்கெனவே, மத்திய அரசுடைய பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை ரஜினிகாந்த் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. விருதை அறிவித்துவிட்டு பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "தமிழக தேர்தலுக்கும் ரஜினிக்கு விருது அறிவித்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று சொல்லியிருக்கிறார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/rajinikanth-honoured-with-dada-saheb-phalke-award

IPL 2021: அவேஷ் கான்... ரபாடா + நார்கியா கூட்டணியின் புதிய பார்ட்னர்?

ககிஸோ ரபாடா - எய்ன்ரிச் நார்கியா... இந்தத் தென்னாப்பிரிக்க இணைதான் கடந்த ஐபிஎல் தொடரின் மிகவும் ஆபத்தான வேகப்பந்துவீச்சு கூட்டணி. இருவரும் இணைந்து 2020 ஐபிஎல் தொடரில் மட்டும் 52 விக்கெட்டுகள் சாய்த்தார்கள். பவர்ப்ளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என எங்கு பந்துவீசினாலும் விக்கெட் வேட்டை நடத்தினார்கள். ஒவ்வொரு பேட்டிங் யூனிட்டுக்கும் கிலி ஏற்படுத்திய அந்தக் கூட்டணியில் இணையத் தயாராக இருக்கிறார் இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான்!

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சையது முஷ்தாக் அலி டி20 தொடரில், ஐந்தே போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் அவேஷ் கான். கோவா அணிக்கெதிரான முதல் போட்டியில் 1 விக்கெட் எடுத்து தொடரை தொடங்கியவர், ராஜஸ்தான் அணிக்கெதிராக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடுத்த போட்டி விதர்பாவுக்கு எதிராக! வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது மத்திய பிரதேசம். அந்த சிறிய இலக்கையும் அட்டகாசமாக டிஃபண்ட் செய்தது எம்.பி. அதற்குக் காரணம் அவேஷ்! 4 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Avesh Khan

முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஈஷ்வர் பாண்டேவுடன் பவர்ப்ளேவில் இவர் அமைத்த கூட்டணி நன்றாக வேலை செய்தது. ஈஷ்வர் பாண்டே சிக்கனமாகப் பந்துவீச, தன் வேகத்தால் விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவேஷ். அட்டகாசமான ஃபார்ம் தொடர, சர்வீசஸ் அணிக்கெதிராகவும் 3 விக்கெட்டுக்ள் எடுத்தார். சௌராஷ்டிராவுக்கு எதிராக மட்டும் இவரால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. 48 ரன்களை வாரி வழங்கி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. இருந்தாலும் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி, அந்தத் தொடரின் மூன்றாவது டாப் விக்கெட் டேக்கரானார்.

அவரது அட்டகாசமான செயல்பாட்டின் பலனாக, இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு நெட் பௌலராக அவரை அழைத்தது இந்திய அணி நிர்வாகம். தேர்வாளர்களின் பார்வை பட்டிருப்பது அவர் நம்பிக்கையை நிச்சயம் அதிகரித்திருக்கும். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பேக் அப் வீரராகவே இருந்துவிட்ட அவேஷ், இம்முறை டெல்லியின் வேகப்பந்துவீச்சை மேலும் பலப்படுத்தக் காத்திருக்கிறார்.

2020 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கியக் காரணமாக இருந்தது அவர்களின் வேகப்பந்துவீச்சாளர்கள். ரபாடா, நார்கியா இருவரும் ஒவ்வொரு அணியின் பேட்ஸ்மேன்களையும் பந்தாடினர். இஷாந்த் ஷர்மா பவர்ப்ளேவின் பெரும்பகுதி ஓவர்களைப் பார்த்துக்கொண்டதால் இவர்கள் மிடில் ஓவர்களிலும் டெத் ஓவர்களிலும் ருத்ரதாண்டவம் ஆடினார்கள். இஷாந்த் காயத்தால் விலகியதால், அவர் இடத்தை நிரப்புவதில் அந்த அணிக்குப் பிரச்னை ஏற்பட்டது. மோஹித் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோரால் எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. அவேஷ் கானுக்கு ஒரேயொரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதிலும் விக்கெட் எடுக்காமல் 42 ரன்கள் கொடுத்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Also Read: அஷ்வின், ரஹானேவிடம் இல்லாத ஒன்று... டெல்லியின் கேப்டனாக ரிஷப் பன்ட் தேர்வுசெய்யப்பட்டது ஏன்?!

இந்த முறை அவரது சிறப்பான டொமஸ்டிக் செயல்பாட்டுகளுக்குப் பிறகு, வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அவரால் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்த முடியும். இஷாந்த் சிக்கனமாக பந்துவீசி நெருக்கடியை ஏற்படுத்த, அதை நார்கியா, ரபாடா பயன்படுத்திக்கொண்டனர். அவேஷ் அப்படி பந்துவீசமாட்டார் என்றாலும் இவரும் ஒரு பக்கம் விக்கெட் எடுப்பார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் அட்டாக்கிங் அணுகுமுறை இவருக்கு அந்த வாய்ப்பை வழங்கலாம்!

Avesh Khan played for RCB in IPL 2017

24 வயதான அவேஷ் கான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். 2016 அண்டர் 19 உலகக் கோப்பையில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணியில் விளையாடியவர். 2017 ஐபிஎல் ஏலத்தின்போது ஆர்சிபி அணி இவரை வாங்கியது. ஆனால், அந்த சீசனின் கடைசி போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி இவரை வாங்கியது. இதுவரை 9 ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருக்கும் அவேஷ் கான், 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.



source https://sports.vikatan.com/ipl/avesh-khan-could-add-value-to-the-delhi-capitals-pace-unit

கொங்கு மண்டலத்தில் அதிமுக- வின் நிலை என்ன? ஜூனியர் விகடன் சர்வே முடிவுகள்



source https://www.vikatan.com/government-and-politics/politics/junior-vikatan-survey-results-kongu-constituencies-tn-election-2021

எல்லாம் தேர்தலுக்காகவா... வட்டி குறைப்பு அறிவிப்பை திடீரென வாபஸ் வாங்கிய மத்திய அரசு!

தபால் நிலையத் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசு குறைத்திருப்பதால் தற்சமயம் பெரும்பாலான சேமிப்பு திட்டங்களுக்கு குறைவான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் சுற்றறிக்கை நேற்று இரவு வழங்கிய நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அந்த முடிவை நிதியமைச்சகம் திரும்பப்பெறுவாத அறிவித்துள்ளது. இத்தகவலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அறிவித்துள்ளார்.

கடந்த மூன்று காலாண்டுகளில் சிறிய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை மாற்றாமல் நிலையாக செயல்படுத்திய அரசாங்கம், தற்சமயம் அதாவது மார்ச் 31, 2021 தேதியிட்ட நிதி அமைச்சக சுற்றறிக்கையின்படி, சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2021 -2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் 50 -110 அடிப்படை புள்ளிகள் (100 அடிப்படை புள்ளிகள் / பிபிஎஸ் = 1%) இடையே பெருமளவில் குறைக்கப்பட்டும் என்று நேற்று அறிவித்திருந்தது.

PPF

அதிலும் மிக முக்கியமாக பிபிஎஃப் சேமிப்பின் வட்டி விகிதம் 7% க்கும் குறைவானது. இது 1974 ஆண்டிற்க்குப் பிறகு முதல் முறையாக அதாவது கடந்த 46 ஆண்டுகளின் வட்டி விகிதத்தை விட மிகவும் குறைக்கப்பட்ட நிலையில், அதற்கு பொதுமக்கள் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏப்ரல் 1, 2021 முதல், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) - முந்தைய 7.1 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதம் குறைவாகவும் , தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்எஸ்சி) - 6.8 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதம் குறைவாகவும், சுகன்யா சமிர்தி யோஜனா (எஸ்.எஸ்.ஒய்) - 6.9 சதவீதம், முந்தைய 7.6 சதவீதத்திலிருந்து குறைந்ததுள்ளது்.தபால் அலுவலக நேர வைப்பு விகிதங்கள் 0.40 ஆக 1.1% ஆகக் குறைக்கப்பட்டு 4.4- 5.3% வரம்பில் வட்டி விகிதங்கள் வழங்கப்படும் என்றும் நேற்றைய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

2020-21 ஏப்ரல்-ஜூன் காலாண்டில், சிறிய சேமிப்பு திட்டங்களின் விகிதங்களை அரசாங்கம் 70-140 பிபிஎஸ் குறைத்தது. (100 பிபிஎஸ் = 1 சதவீதம்).

சமீபத்திய நடவடிக்கை மூலமாக, நடப்பு நிதியாண்டில் சிறிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மொத்தம் 120-250 பிபிஎஸ் குறைக்கப்பட்டுள்ளன.

2020-21 நிதியாண்டின் நான்காம் காலாண்டிற்கான பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைப் கிழே தரப்பட்டுள்ளது.

10 ஆண்டு அரசு பத்திரங்கள் (ஜி-செக்) யில்டு வீழ்ச்சியடைந்ததால் காலாண்டில் இந்த விகிதங்கள் குறைக்கப்படுவதாக நேற்று தெரிவித்தனர். இதேபோன்ற முதிர்ச்சியடைந்த அரசாங்க பத்திரங்களின் விளைச்சலை விட வெவ்வேறு சிறிய சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் 25-100 பிபிஎஸ் அதிகமாக இருக்க வேண்டும் என்று ஷியாமலா கோபிநாத் குழு பரிந்துரைத்திருந்தது.

நேற்று வெளியான அறிவிப்பு

ரிசர்வ் வங்கி விகிதங்களில் தனது நிலையை படிப்படியாக குறைப்பதால், வங்கிகளும் எஃப்.டி வட்டி வீதக் குறைப்புகளில் கவனம் செல்லுத்த தொடங்கியுள்ளன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) செப்டம்பர் 2020 முதல் அதன் ஒரு வருட எஃப்.டி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கிறது.

தற்போது, ​​வங்கியின் ஒரு வருட எஃப்.டி வட்டி விகிதம் 4.90% ஆகும். கனரா வங்கி போன்ற சில வங்கிகள், இரண்டு வருடங்களுக்கும் மேலான நீண்ட கால எஃப்.டி.களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

இவ்வாறான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இதற்கு பொதுமக்களிடம் இருந்தும் எதிர்கட்சியினரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது . இந்நிலையில், இந்த முடிவைத் திரும்பப் பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சகத்தின் இந்த பின்வாங்கலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி, " இந்த திடீர் முடிவிற்கு காரணம் அதீத எண்ணம் கொண்ட பார்வையா அல்லது தேர்தலை எண்ணி மாற்றப்பட்ட முடிவா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த முடிவிற்கு கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், " மத்திய அரசின் இந்த வட்டி குறைப்பு முடிவு நடுத்தர நரகத்தின் மீது தொடுக்கப்பட்ட போர். தவறு செய்தால் அதை சொற்ப காரங்கள் கூறித் தட்டிக்கழிக்கக் கூடாது " என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



source https://www.vikatan.com/business/finance/govt-withdraws-order-of-interest-rate-cut-on-pf-and-small-savings-schemes

சென்னை மண்டலம்: திமுக vs அதிமுக - அதிக இடங்களை வெல்வது யார்? ஜூனியர் விகடன் சர்வே முடிவுகள்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/junior-vikatan-chennai-zone-survey-results-tn-elections-2021

விஜய் 65 படத்தில் பிக்பாஸ் கவின் என்ன செய்யப்போகிறார்?! #Vijay65

விஜய் நடிக்கும் அவரது 65-வது படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த #Vijay65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு வில்லனாக யாரை நடிக்கவைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தியா முழுக்க வில்லன் நடிகருக்கானத் தேர்வு நடைபெற்றுவருகிறது. மலையாள நடிகை அபர்ணா தாஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையே நேற்று நடைபெற்ற படத்தின் பூஜையில் பிக்பாஸ் சீசன் 3-யில் பங்கேற்றவரும், டிவி சீரியல் நடிகருமான கவின் கலந்துகொண்டார். இதனால் கவின் இப்படத்தில் என்னவாக நடிக்கப் போகிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவியது, படத்தில் கவினுக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.

கவின்
அபர்ணா தாஸ்

ஆனால், படக்குழுவில் விசாரித்தபோது வேறு தகவல்கள் கிடைத்தன. ''பிக்பாஸ் கவின் இயக்குநர் நெல்சனுக்கு நல்ல நண்பர். நெல்சன் தற்போது இயக்கிமுடித்திருக்கும் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்திலும் கவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். #Vijay65 படத்திலும் அவர் உதவி இயக்குநராகவேப் பணியாற்றயிருக்கிறார். இப்போதைக்கு அவர் படத்தில் நடிப்பதாக எந்தத் தகவலும் இல்லை'' என்றார்கள்.

விஜய் 65 படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் - மே - ஜூன் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. படத்தை 2022 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டம்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/what-is-the-role-of-bigboss-kavin-in-vijay-65

'சுல்தான்', 'கர்ணன்' படங்கள் திட்டமிட்டபடி ரிலீஸ்... திரையரங்களுக்கு எந்தத் தடையும் இல்லை!

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுவதால் லாக்டெளன் மீண்டும் போடப்படும் என்கிற பரபரப்பு நிலவியது. இதனால் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்த கார்த்தியின் 'சுல்தான்', ஏப்ரல் 9-ம் வெளியாகவிருந்த தனுஷின் 'கர்ணண்' படங்களின் ரிலீஸ் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.

கொரோனா பரவல் தொடர்ந்தாலும் தமிழ்நாட்டில் லாக்டெளனுக்கு வாய்ப்பில்லை என தமிழக அரசின் சார்பில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. நேற்று வெளியான அரசு அறிவிப்பில் தளர்வுகளுடன் கூடிய லாக்டெளன் ஏப்ரல் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கர்ணன்

இதில் திரையரங்குகள் வழக்கம்போல செயல்படும் என்றும், சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம் பின்பற்றப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்பதால் 'சுல்தான்', 'கர்ணன்' படங்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி, அறிவித்த தேதிகளில் வெளியாகின்றன.

'சுல்தான்', 'கர்ணன்' என இரண்டுபடங்களுமே சென்சார் பெற்றுவிட்டன. இரண்டுமே U/A சான்றிதழ் பெற்றிருக்கின்றன. 'சுல்தான்' படம் மூலம் தெலுங்கு, கன்னட சினிமாவில் பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதேப்போல் 'கர்ணன்' படம் மூலம் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தமிழ் சினிமாவுக்குள் நுழைகிறார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/sulthan-karnan-to-be-released-as-planned-in-theaters

`இன்னோர் ஊரடங்கிற்கு இந்த நாடு தாங்காது!' - இதையெல்லாம் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வார்களா?

கொரோனா நோய்த் தொற்றுக்கான இரண்டாவது அலை, இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வருகிறது. பிப்ரவரி மாத மத்தியில் மிகக் குறைந்த அளவாக ஒரு நாளைக்கு 12,000 நபர்கள் மட்டுமே சராசரியாக இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், ஒன்றரை மாத இடைவெளியில் அந்த எண்ணிக்கை 65,000-மாக உயர்ந்து இருக்கிறது. சென்ற மாதத்துடன் ஒப்பிட்டால் ஐந்தரை மடங்கு அதிகமான மக்கள் இந்த நோய்த் தொற்றால் தற்போது தினம்தோறும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்த நோய்த் தொற்று காரணமாகச் சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊரடங்கு திரும்பவும் கொண்டு வரப்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்களிடம் எழத் தொடங்கியுள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக இயங்குகின்றன.

Mukesh ambani

மத்திய அரசு இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு கொண்டு வரப்படாது என்று அறிவித்து வந்தாலும், மக்களிடம் அந்த அச்சம் தீர்ந்தபாடில்லை. ஊரடங்கு தொடர்பான பலவிதமான புரளிகள் எங்கும் பரவி வருகின்றன. ``கொரோனா நோய்த்தொற்றுடன்கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், ஊரடங்கு மீண்டும் வந்தால் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்" என்று மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் இன்னும் முழுமையாக மீண்டுவிடவில்லை. அதற்குள் மீண்டும் ஊரடங்கு வந்தால் என்ன செய்வது என்ற அச்சம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது.

இப்படி மக்கள் அச்சம் கொள்ளும் அளவுக்கு கடந்த ஊரடங்கு என்னென்ன பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்தது என்று பார்ப்போம்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு!

கடந்த ஆண்டில் உலக அளவில் மிக அதிக சதவிகித வளர்ச்சி பெற்ற நபராக கௌதம் அதானி மாறினார். கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 16.2 பில்லியன் டாலர் உயர்ந்து, 50 பில்லியன் டாலராக உள்ளது. கெளதம் அதானியின் வளர்ச்சி விகிதம் உலகின் முதல் பணக்காரர்களான எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெஸாசைவிட அதிக விகிதாச்சாரத்தில் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

அது போல, ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் தொடர்ந்து அதிகரித்ததால், அந்த நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரராக மாறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் சீனாவில் தண்ணீர் பாட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் நிறுவனர் சோங் ஷான்ஷன் (Zhong Shanshun) அவர்களைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதல் பணக்காரர் என்கிற பெருமையை அம்பானி மீண்டும் தக்கவைத்துள்ளார்.

ஆனால், இதற்கு நேர்மாறாக உலக வங்கியின் தரவுகளை அடிப்படையாக வைத்து பியூ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில், இந்தியாவில் உள்ள மூன்றில் ஒரு நடுத்தர வயதினர் ஏழை வர்க்கத்தினராக மாறியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 150 ரூபாய்க்குக் குறைவான ஊதியம் ஈட்டும் நபர் ஏழை என்ற வரையறைக்குள் வருகிறார். 700 முதல் 1,500 ரூபாய் வரை ஊதியம் ஈட்டுபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் என்ற வரையறைக்குள் வருவர்.

இயங்காத விசைத்தறிக் கூடம்

மேலும், கொரோனா காலகட்டத்தில் ஏழை வர்க்கத்தினர் இந்தியாவில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக அந்த ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

700 முதல் 1,500 ரூபாய் ஊதியம் ஈட்டிவந்த சுமார் 3.2 கோடி நடுத்தர மக்கள் நாளொன்றுக்கு 150 ரூபாய்க்குக்கீழ் ஈட்டும் நிலைக்கு கொரோனா ஊரடங்கால் வந்திருப்பதாக அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணமாக வேலை இழப்பு, ஊரடங்குக்குப் பிறகும் நோய்த் தொற்றுக்கு முன்பான சூழல் திரும்பாமல் இருப்பது போன்றவை இருக்கின்றன.

இந்தியப் பணக்காரர்கள் உலக அளவில் முதலிடம் பிடிக்க, பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. மீண்டும் ஊரடங்கு ஏற்படுமானால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற காரணமும் மக்களின் அச்சத்துக்கு அடிப்படையாக உள்ளது.

தொழில்கள் பழைய நிலைக்குத் திரும்பவில்லை!

ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்டு ஓராண்டுக்குமேல் ஆகியும் பல தொழில்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு மற்றும் அது சார்ந்த தொழில்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலா சார்ந்த துறைகள், ஷாப்பிங் மால்கள், திருமணம் சார்ந்த தொழில்கள், ஹோட்டல்கள், அழகுக் கலை நிலையங்கள் போன்ற பல துறைகள் சார்ந்து வாழ்பவர்கள் இன்னும் இயல்புநிலைக்கு வராத சூழ்நிலையே நிலவுகிறது.

இந்தத் தொழில் சார்ந்து லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் கடந்த ஓராண்டில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் கடன்களை வாங்கி இன்னும் சற்றுக் காலத்தில் நிலைமை சீராகும் என்கின்ற நம்பிக்கையில் நாள்களைத் தள்ளிக்கொண்டு வருகின்றனர். மீண்டும் ஊரடங்கு கொண்டுவருவது அவர்களின் வாழ்வாதாரங்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதே உண்மை.

வீட்டிலிருந்து வேலை

வொர்க் ஃப்ரம் ஹோமின் மறுபக்கம்!

கொரோனா நோய்த் தொற்று காரணமாகத் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறை நிறுவனங்கள் தம் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்யுமாறு கூறியுள்ளன. அலுவலகத்தில் இருந்து வேலை செய்வதற்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும் இன்னும் பெரும்பாலான நிறுவனங்கள் தம் பணியாளர்களை முழுமையாக இன்னும் பணிக்கு அழைக்கவில்லை.

பொருளாதார சக்கரத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அதைச் சார்ந்த தொழில்களுக்கு என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பழைய மாமல்லபுரம் (ஓ.எம்.ஆர்) சாலை பக்கம் ஒரு ரவுண்டு வந்தால் பார்க்கலாம். அந்தப் பகுதிகளில் தங்கி இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி செய்பவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதால் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக பழைய மாமல்லபுரம் சாலை இருக்கிறது. பெரும்பாலான அப்பார்ட்மென்ட் வாசல்களில் வீடு வாடகைக்கு விடப்படும் என்கின்ற போர்டு தொங்குகிறது. அந்தப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கடந்த ஒரு வருட காலமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கடைகள் மூடப்படும் சூழ்நிலையும் நிலவுகிறது. அவர்கள் அனைவரும் அந்தப் பகுதியை விட்டுச் சென்ற மக்கள் திரும்ப வருவார்கள் என்கின்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். மீண்டும் ஊரடங்கு கொண்டுவந்தால் இன்னும் குறைந்தது ஓராண்டுக்கு அந்தப் பகுதி மீண்டுவராத சூழ்நிலையை ஏற்படுத்தும் என்கிற அச்சம் அங்கு தொழில் செய்யும் அனைவரிடமும் உள்ளது.

ஊரடங்கே வேண்டாம்!

ஊரடங்கு என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி போன்றதாக இருக்கிறது. ஊரடங்கு போடுவது நோய்த் தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் என்றாலும் மறுபக்கம், பல அப்பாவி மக்களின் பொருளாதார நிலையை அதலபாதாளத்துக்குத் தள்ளக்கூடியதாக இருக்கிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவிய கடந்தாண்டில் அந்த நோய் பற்றிய எந்த விதமான புரிதலும் எந்த நாட்டிலும் இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற தெளிவான வழிமுறைகள் நம்மிடம் உள்ளன.

கொரோனா தடுப்பூசி

மேலும், உலகில் அதிக தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக நமது நாடு உள்ளது. என்றாலும், இது வரை ஆறு கோடி மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி நமது நாட்டில் வழங்கப்பட்டுள்ளது. பல மேலைநாடுகளில் 30 - 50% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில் மிகக் குறைந்த வேகத்தில் நான்கு சதவிகிதத்துக்குக் குறைவாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அடுத்த நாட்டுக்கு உதவுவது முக்கியம் என்றாலும் நமது நாடு சிக்கலில் உள்ளபோது அரசின் முதல் நடவடிக்கை தமது மக்களைக் காப்பதாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. அரசும் பிற நாடுகளுக்குத் தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை இந்த மாதம் குறைத்துள்ளது.

ஊரடங்கு

மிக விரைவாக நமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இந்த நோய்த் தொற்றை எளிதாக கட்டுப்படுத்த முடியும். நமது நாட்டில் எடுக்கப்பட்ட செரோ சர்வேயின்படி, கணிசமான மக்களுக்கு இந்த நோய்த் தொற்று வந்துவிட்டது என்பதை நாம் அறிய முடிகிறது. அதனால் விரைவாகத் தடுப்பூசி செலுத்துவது இந்த நோயில் இருந்து மக்களைக் காப்பாற்றும்.

மக்களைக் காப்பாற்றுவதற்கு அரசு ஊரடங்குக்குப் பதிலாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் கோரிக்கையாக உள்ளது.



source https://www.vikatan.com/business/news/why-another-lockdown-to-control-pandemic-is-not-good-for-people-and-nation

``மோடி பிரசாரம் அதிமுக கூட்டணிக்கு பலவீனம்!” இந்து என்.ராம் கருத்து

இந்து குழுமத்தின் முன்னாள் தலைவரான என்.ராம் விகடன் யூடியூப் சேனலுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில், தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்கிறார். அந்த நேர்காணலிலிருந்து...

``தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியாகியிருக்கும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தி.மு.க அணி வெற்றிபெறும் என்று செல்கின்றன. நீங்களும், தி.மு.க தலைமையிலான அணிக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். தி.மு.க கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கிறீர்கள்?“

எடப்பாடி பழனிசாமி

``தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக் கணிப்பு விவாதத்தில் பங்கேற்றேன். அந்தக் கருத்துக்கணிப்பில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான அனைத்து அம்சங்களிலும் பத்து சதவிகிதத்துக்கு மேல் வித்தியாசம் இருந்தது. எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள், நம்பர் ஒன் தலைவர் யார் என எல்லா அம்சங்களிலும் இரு கூட்டணிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது.

அந்த கருத்துக்கணிப்பை விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால், இந்த 10 சதவிகித இடைவெளி என்பது 12 சதவிகிதம், 13 சதவிகிதத்துக்கு மேல்கூடப் போகலாம். அப்படிப் பார்த்தால், தி.மு.க அணிக்கு 160 - 170 சீட்களுக்கு மேல் கிடைக்கும். தி.மு.க-வைப் பொறுத்தவரையில், 200 சீட்களுக்கு மேல் எதிர்பார்க்கிறார்கள். நான் குறிப்பிட விரும்புவது, தி.மு.க-வுக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்பதுதான்.”

ஸ்டாலின்

“தி.மு.க-வுக்கு ஆதரவான அலை அடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?“

``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அலை இருக்காது என்று பலர் சொன்னார்கள். ஆனால், தி.மு.க ஆதரவு அலை அடித்தது. அது ஓர் அமைதியான அலையாக இருந்தது. இந்தத் தேர்தலில் அலை இருக்குமா என்பது தெரியவில்லை. ஒருவேளை, தி.மு.க-வுக்கு ஆதரவான அலை இருக்குமானால், அ.தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படும் மேற்கு மாவட்டங்களில்கூட, அ.தி.மு.க-வுக்கு பாதிப்பு ஏற்படும். அதற்கு, எத்தனை சதவிகிதம் பேர் வாக்களிக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். பொதுவாக, தமிழகத்தில் வாக்கு சதவிகிதம் அதிகமாகவே இருக்கும்.”

Also Read: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிரந்தரமானது; அதை நீக்க முடியாது! - ராமதாஸ்

``தி.மு.க-வுக்கு ஆதரவான இந்த சூழலுக்கு என்ன காரணம்? ஆட்சிக்கு எதிரான மனநிலை எந்தளவுக்கு இருக்கிறது?”

``ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பதைக் காட்டிலும், பாசிட்டிவான ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதாவது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க ஆதரவான மனநிலை மக்கள் மத்தியில் இருப்பதைக் கருத்துக்கணிப்புகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கட்சி, தலைமை ஆகிய இரு அம்சங்களிலும் ஒரு பாசிட்டிவ் ஆன மாற்றம் வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது.”

மோடி

``அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்திருக்கிறார். இது, அந்த அணியின் வெற்றிக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும்?”

“பிரதமர் மோடியின் பிரசாரம் இங்குள்ள பா.ஜ.க ஆதரவாளர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் தெம்பைக் கொடுக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பிரதமரின் பிரசாரம் அ.தி.மு.க கூட்டணிக்கு ஒரு பலவீனம். ஏனென்றால், பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்தது அ.தி.மு.க-வுக்கு மைனஸ். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தியது. அ.தி.மு.க தனியாகப் போயிருந்தால் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும். அவ்வளவு பெரிய தோல்வியை அ.தி.மு.க சந்தித்திருக்காது.” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/modi-campaign-will-weaken-admk-in-election-results-hindu-nram

திரும்பவும் வருது டிகுவான் 5 சீட்டர்!

மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன் டிகுவான். ஐந்து பேர் உட்காரக் கூடியதாக இருந்த டிகுவானில், சிற்சில மாற்றங்களைச் செய்து புதிய BS-6 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப அதை 7 சீட்டராக மாற்றி, `டிகுவான் ஆல் ஸ்பேஸ்' என்று புதிய பெயரையும் கொடுத்து அறிமுகப்படுத்தியது ஃபோக்ஸ்வாகன். இப்போது புதிய SUVW Strategyபடி, ஃபோக்ஸ்வாகன் மீண்டும் 5 சீட்டர் டிகுவானை அறிமுகப்படுத்த இருக்கிறது.

டிகுவானை வெளியே இருந்து வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்க ஃபோக்ஸ்வாகன் அனுமதித்தது. அப்போது தெளிவான விஷயம் என்னவென்றால், இந்த 5 சீட்டர் - பழைய 5 சீட்டர் கிடையாது. காரணம், இதை இயக்கப்போவது டீசல் இன்ஜின் இல்லை. பெட்ரோல் இன்ஜின். ஹூண்டாய் டூஸான் மற்றும் ஜீப் காம்ப்ஸ் ஆகியவற்றோடு போட்டி போட இருக்கும் இது, புனேவில் இருக்கும் தொழிற்சாலையில்தான் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. பெரும்பாலும் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் உதிரிபாகங்களைக் கொண்டு இது அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது என்பதால், இதன் விலை போட்டியாளர்களைச் சமாளிக்கக் கூடியதாக இருக்கும் என்று நம்பலாம். டைகூன் தயாரிக்கப்பட இருக்கும் அதே புதிய MQB ப்ளாட்ஃபார்மில்தான் இது தயாரிக்கப்பட இருக்கிறது.

இந்த ஃப்ளாட்ஃபார்மின் தனிச்சிறப்பு என்னவென்றால், எஸ்யூவி மட்டுமல்ல; ஹேட்ச்பேக், ஸ்போர்ட்ஸ் எஸ்யூவிக்களைக்கூட இதே ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கலாம். உலக அளவில் தயாராகும் ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப், ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் ஆடி Q3 ஆகிய கார்கள் எல்லாம்கூட இந்த ப்ளாட்ஃபார்மில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிதி ஆண்டுக்குள் நான்கு எஸ்யூவிக்களை அறிமுகப்படுத்துவது என்று, தான் எடுத்த சபதத்தை இந்த டிகுவான் அறிமுகத்தின் வாயிலாக ஃபோக்ஸ்வாகன் நிறைவேற்ற இருக்கிறது.

இப்போது விற்பனையில் இருக்கும் டிகுவான் ஆல் ஸ்பேஸுக்கும், புதிதாக அறிமுகமாக இருக்கும் 5 சீட்டர் டிகுவானுக்கும் என்ன ஒற்றுமை... என்ன வேற்றுமை?

Volkswagen Tiguan


ஒரே வரியில் சொன்னால், இது ஒரு ஃபேஸ்லிஃப்ட்தான். கிரில், பம்பர் டிசைன் மற்றும் LED ஹெட்லைட்ஸ் ஆகியவற்றின் டிசைன்களை மாற்றியிருக்கிறார்கள். திருப்பங்களில் வாகனத்தைச் செலுத்தும்போது, சாலையில் வெளிச்சம் விழும் வகையில் இதன் ஹெட்லைட்ஸ் திரும்பும் என்பது புதுமை. ஃபோக்ஸ்வாகனின் புதிய லோகோவை இதன் முகப்பில் வைத்திருக்கிறார்கள். இது 5 சீட்டர் என்பதால், இதன் பின்புறத்தையும் அதற்கு ஏற்ப மாற்றம் செய்திருக்கிறார்கள். 18 இன்ச் அலாய்வீலும், அதற்கு மேலே இருக்கும் வீல் ஆர்ச்சும் கம்பீரத்தைக் கூட்டுகின்றன. டெயில் லைட்டும் மாறியிருக்கிறது. பின் பக்கம் ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார் இருப்பதன் அடையாளத்தைப் பார்க்க முடிகிறது. லைட்டான நீள நிறம்தான் இதன் சிக்னேச்சர் கலராக இருக்கும்.

உள்ளலங்காரம்: இது எப்படி இருக்கும் என்பதை, மேலும் சில காலத்துக்கு சஸ்பென்ஸாக வைத்திருக்க ஃபோக்ஸ்வாகன் முடிவெடுத்திருக்கிறது. என்றாலும், அதைப் பற்றி ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது அது. பனோரமிக் சன்ரூஃப், 3 ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவற்றோடு, புதிய டிஜிட்டல் க்ளஸ்ட்டர் ஆகியவை ஆச்சரியமூட்டக் கூடியதாக இருக்கும். பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போல, இதிலும் சில நகாசு வேலைகளை ஃபோக்ஸ்வாகனிடமிருந்து நிச்சயம் எதிர்பாக்கலாம்.

இன்ஜின்: இதை இயக்கப் போவது 190 bhp சக்தி மற்றும் 32 kgm டார்க்கையும் கொடுக்கக்கூடிய 2.0 லிட்டர் TSI இன்ஜின். இது ஃப்ரன்ட் வீல் டிரைவ் வாகனமாக மட்டும்தான் இருக்கும். இதன் கையாளுமை, சஸ்பென்ஷன் போன்ற விஷயங்களைப் பொருத்துத்தான் இதன் எதிர்காலத்தை வாடிக்கையாளர்கள் முடிவு செய்வார்கள். ஆனாலும், வாடிக்கையாளர்களை இந்த முறை ஃபோக்ஸ்வாகன் அப்படியே விடப் போவதில்லை.

ஸ்ட்ரேட்டஜி: இந்தியா 2.0 திட்டத்தின்படி ஃபோக்ஸ்வாகன் பல புதிய முயற்சிகளை எடுத்திருப்பதாகச் சொல்கிறது. சர்வீஸ், உதிரிபாகங்களுக்கு ஆகும் செலவு எனத் துவங்கி, சர்வீஸ் விஷயத்தில் ஃபோக்ஸ்வாகன் வாடிக்கையாளர்கள் முழுமையாகத் திருப்திப்படுத்தவில்லை என்பதை அது நன்கு உணர்ந்து இருக்கிறது. அப்படி ஒரு கசப்பான அனுபவம் வாடிக்கையாளர்களுக்கு நேர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், அது சர்வீஸ் சென்டர்களில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறது. ஃபோக்ஸ்வாகன் ஷோரூமின் முகப்பில் துவங்கி உள்ளலங்காரம் வரை அனைத்தையும் மாற்ற அது முயற்சி எடுத்து வருகிறது.

இன்ஜின் ஆயில் விலை துவங்கி காரின் காஸ்ட் ஆஃப் ஓனர்ஷிப் வரை பலவற்றையும் குறைக்க முயற்சிகளை எடுத்திருப்பதாக ஃபோக்ஸ்வாகன் அதிகாரிகள் உறுதி கூறுகிறார்கள். 4EVER Cover என்ற பெயரில் நான்கு ஆண்டுக்கு வாரன்ட்டி மற்றும் ரோடு சைடு அசிஸ்டென்ஸ் ஆகியவைகூட இதில் அடக்கம்.

தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும், `இந்தியா 2.0’ என்ற அதன் திட்டம் வெற்றி பெறவும்... ஃபோக்ஸ்வாகன் நிச்சயம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். இதன் டெஸ்ட் டிரைவ் நடைபெறும்போது, விடை தெரியாமல் நாம் விட்டுச் செல்லும் கேள்விகளுக்கு விடை தேடுவோம்.திரும்பவும் வருது டிகுவான் 5 சீட்டர்!



source https://www.vikatan.com/automobile/car/volkswagen-tiguan-5-seater-is-coming-back

ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினம்?! புத்தம் புது காலை - 4 #6AMClub

வருடத்தில் பல நாட்கள் பல்வேறு சிறப்பு தினங்களாக கொண்டாடப்பட்டாலும் அவை எவற்றிற்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஏப்ரல்-1க்கு உண்டு.

அதாவது பெண்கள் தினத்தை பெண்களும், ஆண்கள் தினத்தை ஆண்களும், காதலர் தினத்தை காதலர்களும், குழந்தைகள் தினத்தை குழந்தைகளும் உரிமை கொண்டாடுவார்கள். ஆனால் இப்படி யாருமே உரிமை கொண்டாடாத ஒரு தினம் தான், இன்றைய முட்டாள்கள் தினம்.

ஏன் ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினம் என்று கொண்டாடுகிறோம் என்பதற்கு அனேக வரலாறுகள் இருந்தாலும், ஃபிரான்சில் தோன்றியதாகக் கூறப்படும் ஒரு வரலாறு மட்டும் அனைவரும் ஒப்புக்கொள்ளத் தக்கதாய் உள்ளது.

முட்டாள்கள் தினம்

அதாவது, 1562-ம் ஆண்டில் போப் கிரிகோரி புதிய காலண்டரை அறிமுகப்படுத்தி, அதுவரை ஆண்டின் துவக்க நாளாக இருந்த ஏப்ரல்-1யை மாற்றி, ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவிக்கிறார். ஆனாலும், இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்ந்து ஏப்ரல்-1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடி வந்தனர்.

ஜனவரி மாதம் 1-ம் தேதியைப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்கு, மற்றவர்கள் பரிசுக்கூடை போல் செய்து உள்ளே வெறும் காகிதம், குப்பை, குதிரைச்சாணம் போன்றவைகளை நிரப்பி, நம்பும்படியாக அனுப்பி அவர்களை முட்டாள்களாக்கி 'ஏப்ரல் ஃபூல்' என்று சீண்டியிருக்கிறார்கள். இத்தகைய கேலிச் சீண்டல்கள் ஃபிரான்ஸிலிருந்து இங்கிலாந்து, அமெரிக்காவுக்குப் போய், பிறகு உலகமெங்கும் பரவி ஏப்ரல்-1 என்பது முட்டாள்கள் தினக் கொண்டாட்டமாகவே மாறிப்போனதாம்.

முட்டாள்கள் தினம் தோன்றிய வரலாறு இவ்வாறிருக்க, முட்டாள் என்ற வார்த்தை தோன்றியதற்கு ஒரு புத்திசாலித்தனமான விளக்கம் காணப்படுகிறது.

முட்டாள் எனும் சொல் அறிவாளி என்ற சொல்லுக்கு எதிர்வார்த்தை என்றோ, அறிவற்றவர்கள் என்றோ பொருள் கிடையாது. அது ஒரு காரணப் பெயர்ச்சொல் என்று கூறும் தமிழறிஞர்கள், அதை இப்படி விளக்குகின்றனர்.

பண்டைய காலத்தில் கோயில்களில் சப்பரம் தூக்குவதற்கென்று சிலரும் அவர்களுக்கு உதவ சிலரும் நியமிக்கப்பட்டிருப்பார்கள். கோயில்களிலேயே தங்கி பணிபுரியும் இவர்களுக்கு உணவும், உடையும் அளித்து, வாழ வழிவகுத்து வந்தனர் கோயில்களின் அறங்காவலர்கள்.

நாட்பட நடைபெறும் திருவிழாக் காலங்களில், இவர்கள் சப்பரம் தூக்கிச் செல்லும்போது, பொதுமக்கள் இறைவனை தரிசனம் செய்யவேண்டி, இடையிடையே சப்பரம் சிறிது நிற்கும்.

April fools day

அச்சமயத்தில் சப்பரம் தூக்கிகள் தோளில் இருந்து இறங்கும் சப்பரத்தை, அவரின் உதவியாளர்கள் தங்கள் கையிலிருக்கும் முட்டுகளால் முட்டுக் கொடுத்து சப்பரத்தை நிலைநிறுத்துவார்கள்.

சப்பரத்திற்கு முட்டுக் கொடுப்பதை தவிர வேறு வேலை ஒன்றும் தெரியாத அவர்களை

'முட்டு ஆள்' என்று அழைக்க ஆரம்பித்து, பிற்பாடு வேறு எதுவும் யோசிக்கத் தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டிருப்பவர்களை "முட்டாள்கள்" என்று அழைப்பது வழக்கமாகிவிட்டதாம்.

ஆக... அறிவாளிக்கு எதிர்ச்சொல் முட்டாள் இல்லை. 'அறிவிலி' என்பதே சரி. எனவே ஏப்ரல்-1 முட்டாள்கள் தினம் அல்ல, அது அறிவிலிகள் தினமே!



source https://www.vikatan.com/oddities/international/history-of-april-fool-day

``எங்களைக் கண்காணிக்கிறார்கள் என்பது அச்சுறுத்தலாக உள்ளது!" - பொள்ளாச்சி தேர்தல் களத்தில் சபரிமாலா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்த சபரிமாலா நீட் தேர்வுக்கு எதிராகத் தனது ஆசிரியர் பணியைத் துறந்தார். பெண்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சபரிமாலா, `பெண் விடுதலை' என்ற பெயரில் கட்சியையும் தொடங்கினார். சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத்தாக்கலும் செய்தார்.

சபரிமாலா

Also Read: பொள்ளாச்சி ஜெயராமன் மகன், எஸ்.பி வேலுமணி ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு - என்ன நடக்கிறது கோவையில்?

ஆனால், அது நிராகரிக்கப்படவே தி.மு.க-வுக்கு ஆதரவாக இப்போது பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில், பிரசார களத்தில் தி.மு.க - அ.தி.மு.க இடையே ஏற்பட்ட மோதலில் சபரிமாலா மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனல் பறக்கும் பொள்ளாச்சி தேர்தல் களத்தில் இருக்கும் சபரிமாலாவிடம் பேசினோம்.

``பெண்களின் பாதுகாப்பு எந்தப் பகுதியில் மோசமாக ஆனதோ, கேள்விக்குறியாக்கப்பட்டதோ, அங்கு பெண்களின் குரல் வலிமையாக ஒலிக்க வேண்டுமென நினைத்தேன். அதற்காகத்தான் பொள்ளாச்சி வந்தேன். குறைந்தபட்சம் அனைத்து வீடுகளுக்கும் துண்டறிக்கைகளையாவது கொண்டு சேர்க்க வேண்டுமென நினைத்தேன். அதைப் பார்க்கும் போதாவது, தடுமாறிக் கொண்டிருக்கும் பெண்களைக் காப்பாற்றிவிட முடியும்.

சபரிமாலா

ஆனால், நான் வேட்புமனுத்தாக்கல் செய்ததில் இருந்தே எனக்காகக் கையெழுத்து போட்ட பெண்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. அவர்களின் கணவர்கள் மூலம் மிரட்டி அடித்தனர். என் கண் முன்னே மிரட்டினார்கள். ஒரு கட்டத்தில் அவர்களால் அதைத் தாங்க முடியவில்லை. அதன்பிறகு, அவர்கள் பின்வாங்கியதால் எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.

பொள்ளாச்சியில் இருந்து நான் முற்றிலும் வெளியேற்றப்படுவேன் என்று நினைத்தார்கள். இப்படியே சென்றுவிடக் கூடாது என நினைத்தேன். அப்போதுதான் தி.மு.க வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் குறித்து விசாரித்து தெரிந்துகொண்டேன். குஜராத் பூகம்பத்தின்போது மரத்தடியில் அறுவை சிகிச்சை செய்து 17 ராணுவ வீரர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். நிறைய சமூகப் பணிகளைச் செய்திருக்கிறார். அதன் பிறகுதான் தி.மு.க ஆதரவு என்ற முடிவை எடுத்தேன். தொடர்ந்து கிராம மக்களைச் சந்திக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் லட்சியம்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சி கிராமங்களிலும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்துதான் பேசி வருகிறேன். அதில் யாரின் பெயரையும் நான் பயன்படுத்தவில்லை. ஒக்கிலிபாளையம் பகுதியில் பிரசாரத்தில் இருந்தபோது, பெண் பிள்ளை பாதுகாப்பு குறித்த திட்டங்களைப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க நபர், `யாருடி சபரிமாலா..? உனக்கு இங்க என்ன வேலை? பாலியல் வழக்குல பொள்ளாச்சி ஜெயராமன்தான் சம்பந்தப்பட்டார்னா, இப்பவே நிரூபி' என்று என்னைத் தாக்க வந்தார்” என்றவர்,

``அப்போதுதான் அங்கு பெண்களுக்கு எதிரான அராஜகத்தை நேரடியாகப் பார்த்தேன். எப்படியாவது என்னுடைய பிரசாரத்தைத் தடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அடுத்த 10-வது நிமிடத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மற்றும் அ.தி.மு.க-வினர் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர். குடித்துவிட்டு பெண்களை சாதி ரீதியாகச் சொல்லி எல்லாம் வசைபாடினார்கள். தொடர்ந்து எங்களைக் கண்காணிக்கிறார்கள் என்பது அச்சுறுத்தலாகத்தான் இருந்தது.

சபரிமாலா பரப்புரை

உயிரைப் பணயம் வைத்துவிட்டோம் என்ற வைராக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறேன். கொலை முயற்சி செய்ததாக என் மீதும், தி.மு.க-வினர் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த 4 பேர் யாரென்று கூட எனக்குத் தெரியாது.

இங்கு நிறைய விஷயங்களை நேரில் பார்க்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் என்னிடம் பேசுகின்றனர். ஏமாற்றப்பட்ட பல பெண்கள் தற்கொலை செய்தும் உயிரை மாய்த்துள்ளனர். ஆனால், அந்த மரணங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. பல உயிர்களைக் காவு வாங்கிய பயங்கரம் இதன் பின்னால் இருக்கிறது. இவ்வளவு விஷயங்கள் நடந்தும் நடவடிக்கை எடுக்கப்படாததற்கு பின்னால் அதிகாரம்தான் இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

சபரிமாலா

இங்கிருக்கும் அ.தி.மு.க-வினரே, தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள் எனச் சொல்கிற நிலைதான் தற்போது நிலவுகிறது. மக்கள் எதையும் மறக்கவில்லை. இந்த மண்ணுக்கான பெருமையை மீட்க வேண்டும் என்கிற எழுச்சியை மக்களிடம் பார்க்க முடிகிறது” என்றார்.



source https://www.vikatan.com/news/election/sabarimala-speaks-about-challenges-she-face-during-campaigning-in-pollachi

மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 11: நரசிங்கம்பட்டி சித்திர சாவடியும், ஈமக்காடும், ஏமக்கோயிலும்!

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மேலூர் செல்லும் வழியில், மதுரையில் இருந்து 15 கி.மீ தொலைவில், அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் கிராமங்களுக்கு இடையே அழகுற அமைந்திருக்கும் கிராமம் நரசிங்கம்பட்டி. வனத்துறையால் பாதுகாக்கப்பட்டப் பகுதியான பெருமாள்மலையின் அடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாங்கான கிராமமிது. பழையூர் என்பது இக்கிராமத்தின் பழைய பெயர் என்று ஊர்மக்கள் சொல்கிறார்கள்.
ஈமக் காடு

மதுரையின் ஒவ்வொரு தெருவின் உள்ளேயும் ஒரு பழங்கதை காலங்காலமாய் நீண்டு, இன்றுவரை வந்து கொண்டே இருக்கும். கூட்டியோ, குறைத்தோ அந்தக் கதையின் நீட்சி காலச்சங்கிலியின் கண்ணியை அறுக்காமல் வந்துகொண்டே இருக்கும். அதனால்தான் மதுரையை 'வாழும் மூதூர்' என்று அழைப்பார்கள். பழம்பெரும் பாரம்பர்யம் மிக்க நகரங்களான ரோம், ஏதென்ஸ் போன்றவை காலத்தின் வேகத்தில் பூமிக்குள் புதையுண்டு, அடுத்த அடுக்கில் புத்துயிர் பெற்று எழுந்து நிற்கும். தொல்லியல் ஆய்வாளர்கள் அந்நகரங்களைத் தோண்டும்போது, அடுக்கடுக்காக நாகரிகங்களின் மிச்ச சொச்சங்களை எடுப்பார்கள். ஆனால், சுமார் 6000 ஆண்டுகளாக ஒரு நகரம் தன் கலாசாரம், வரலாறு, மொழி எனப் பலகூறுகளை இன்றுவரைத் தொடர்ச்சியாக எடுத்து வருவது பிரமிக்கத்தக்க விஷயமல்லவா! அந்த பிரமிப்பை நம்முள் கிளர்த்தும் நகரம், வாழும் மூதூரான மதுரை மாநகரே!

பழையூர் நரசிங்கம்பட்டியானதும் ஒரு கதைதான்!

16-17ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் தொடக்கப்பகுதியில் சோழருக்கும் பாண்டியருக்குமான போர்கள் விட்டுவிட்டு நடந்து கொண்டிருந்தன. பொய்க்காத வையை பாய்ந்தோடி, செழுமையாக நின்ற பகுதிகளில் ஒன்று பழையூர் கிராமத்தை சுற்றிய பகுதி. சோழருக்கும் பாண்டியருக்குமான ஒரு போரில், பாண்டியர்கள் தோற்றுவிட, நரசிங்கத்தேவர் என்ற சோழத் தளபதிக்குப் பரிசாக அளிக்கப்பட்டது பழையூர் கிராமம். பின்னாட்களில் அவரது பெயரில் நரசிங்கம்பட்டி என்றானது என்று ஊரின் பெயர் வரலாற்றுக் கதையைச் சொன்னார் அவ்வூர் வழக்கறிஞர் ஒருவர். போரின் வரலாறு பற்றி வரலாற்று ஆய்வாளர்கள் தேடிச் சொல்லட்டும்.

ஈமக் காடு

சித்திரச்சாவடி:

நரசிங்கம்பட்டியில் ஊர் பொதுச் சாவடி ஒன்றும், சித்திர சாவடிப் பெருமாள் கோயிலும் உள்ளது. இந்தப் பொதுச் சாவடி ஊர் மக்களின் பஞ்சாயத்துகளைத் தீர்க்கவும், ஆண்கள் அமர்ந்து ஊர்ப்பொது விஷயங்களைப் பேசவுமாய் அமைந்த இடம். எல்லா ஊர்களிலும் இப்படி ஒரு சாவடியோ, ஆலமரமோ பார்த்திருப்போம்தானே! ஆனால், நான்கு கற்தூண்களும் கொஞ்சம் உயரமான திண்ணையும் மட்டும் வைத்துக் கட்டப்பட்ட சாதாரண சாவடிகளைப் போலல்லாது, இச்சாவடிக்குள் 17ம் நூற்றாண்டில் வரையப்பட்ட அழகிய இயற்கை காட்சிகள், ராமாயணக் காட்சிகள் மூலிகை வண்ண ஓவியங்களாக உள்ளன. காலமகள் தன் கைவண்ணத்தை இப்போது இந்த ஓவியங்களின் மேல் காட்டிக் கொண்டிருக்கிறாள். சாவடியின் மேற்கூரை பராமரிப்பின்றி சிதிலமடைந்து, உள்ளே உள்ள ஓவியங்களையும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிதைத்து வருகிறது. கலையழகு மிக்க ஒரு வரலாற்று பொக்கிஷம் ஒன்று காலவெள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் அடித்துச் செல்லப்படுகிறது என்று அவ்வூர் இளைஞர்கள் சிலர் வருத்தப்பட்டார்கள்.

பல லட்சங்களைச் செலவு செய்து, பராமரிக்க வேண்டிய இடமாய் இன்று இந்தப் பெரிய சாவடி என்கிற சித்திரசாவடி இருக்கிறது. பல பத்தாண்டுகளுக்குப் பின் பங்காளிகளுக்குள் ஏற்பட்ட முரண்களின், சின்னச் சாவடி ஒன்றும் ஊருக்குள் கட்டப்பட்டிருக்கிறது. அழகர்கோயில் தேரோட்டத்தில், முக்கியத்துவம் பெறுகிற நாடுகளில், வல்லாளப்பட்டி, தெற்குதெரு, பாளையப்பட்டு 'நாடுகளோடு' நரசிங்கம்பட்டியும் ஒன்று. இங்கு பெருமாள் கோயிலும், சித்திரசாவடியும், ராமயணக்காட்சிகளும் இருப்பதில் ஆச்சர்யமென்ன...

இந்த சித்திர சாவடி, வழக்கமான ஊர் பொதுச் சாவடிகளைப் போல், பெண்கள் நுழையக்கூடாத இடமாகவே இன்றும் இருக்கிறது. பெண்களின் தீட்டு என்கிற பார்வையில், சிறு பெண்குழந்தைகள் மட்டுமே இச்சாவடிக்குள் நுழைய அனுமதி உண்டு. வயது வந்த பெண்கள் இதற்குள் நுழையவோ, சித்திரங்களைப் பார்க்கவோ அனுமதியில்லை. நானும், புகைப்படங்கள் மூலமே இம்மூலிகை வண்ண ஓவியங்களைப் பார்த்துக் கொண்டேன்.

சித்திரச் சாவடி

ஈமக்காடும் ஏமக்கோவிலும்:

இறந்தவர்களை எரிக்கும் இடத்தை சுடுகாடு என்போம். புதைக்கும் இடத்தை இடுகாடு என்போம். இடுகாட்டை ஈமக்காடு என்றழைக்கும் முறையும் உள்ளது. இறந்தோரை முறையாக அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்ட ஈமக்காடு நரசிங்கம்பட்டி கிராமத்தினருகில், பெருமாள் மலை அடிவாரத்தில் அடர்ந்த புதர்க்காட்டுக்குள் இன்றும் காணக்கிடைக்கிறது. இந்த ஈமக்காடு சுமார் 5,000 ஆண்டுகள் பழைமையானது என்றும், முதுமக்கள் தாழியை பயன்படுத்துவதற்கும் முந்தைய நாகரிகம் என்றும் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். சப்பட்டையான நீளவடிவிலான நடுகற்கள் பலவற்றை இப்போதும் இங்கு பார்க்கலாம். அத்துடன், இறந்தவர்களைப் புதைத்த அடையாளமாக, கற்களை அடுக்கி வைத்திருப்பதையும் அங்கங்கே காணலாம்.

இக்கல்லறைகள் கி.மு 10,000 ஆண்டுமுதல் கி.மு 300ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனத் தொல்லியலாளர்கள் சொல்கின்றனர். இன்று வனத்துறை இங்கு காடுகளை வளர்க்கும் பணியில், பல நடுகற்களை, முதுமக்கள் தாழிகளை பொக்லைன் வைத்து, சேர்த்துக் குவித்தபடி, நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் வரலாறும், தொல்லியலும் தெரிந்தும் புரிந்தும் கொண்ட மக்கள் குழு இவ்விடத்தை பசுமையாக்குவதோடு, வரலாற்றையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கடத்த, வனத்துறையோடு கரம் சேர்த்தால் நல்லது என்பதே அவ்வூர் இளைஞர்களின் வேண்டுகோளாய் இருந்தது.

இவற்றையெல்லாம் விட, இன்னும் ஆச்சர்யமான நிகழ்வு என்னவெனில், இங்குள்ள ஏமக்கோவில் வழிபாடு. இங்கு பெரிய இச்சி மரத்தைச் சுற்றி பெரும் கற்குவியல்கள் குவிந்து கிடக்கின்றன. அந்த இடத்தை ஏமக்கோவில் என்று அழைக்கிறார்கள். இங்கு சாமி சிலை ஏதுமில்லை.

"இது நாம கும்பிடுற சாமி இல்லம்மா. ஊர்சனங்க அஞ்சி, வணங்குற சாமி” என்றார் அங்குள்ள பெரியவர். சிவராத்திரி அன்று மலையைச் சுற்றி வந்து, மலையில் இருந்து மூன்று கற்களை எடுத்துவந்து ஏமக்கோவிலில் வைப்பது அந்தக் கோயிலின் வழிபாட்டு முறை. பரம்பரை, பரம்பரையாக இந்த வழிபாடு நடைபெறுவதாகவும், முன்னோர்களை வணங்குவதற்காக இங்கு வருவதாகவும், அங்கு வணங்கும் மக்கள் சொல்கிறார்கள். இது மூத்தோர் வழிபாடு என்பதும், நம் முன்னோர்கள் புதைக்கப்பட்ட இடம் என்பதும் இந்த ஏமக்கோவில் வழிபாடும் நமக்குப் பல நூறாண்டுகளாகச் சொன்னபடி இருக்கின்றன.

சித்திரச் சாவடி
நரசிங்கம்பட்டி என்கிற சிறிய கிராமம், தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் மூதூர் மதுரை வரலாறு எனும் பெரும் ஆரத்தில், ஒரு சிறு கண்ணியே இது. இன்னும் இன்னும் ஏராளம் இச்சிற்றூரின் ஈமக்காட்டுக்குள் புதையுண்டு இருக்கக்கூடும். தோண்ட விருப்பமுள்ளவர்கள் அவசியம் ஒரு முறை நரசிங்கம்பட்டி ஈமக்காட்டையும், சித்திரச்சாவடியையும் எட்டிப்பார்த்து விட்டு போங்கள்!


source https://www.vikatan.com/spiritual/news/madurai-landmarks-the-history-of-yema-kovil-and-chithirai-chavadi

‘ஐ.பெரியசாமி பற்றி யாரும் பேசாத உண்மைகளை நான் பேசுவேன்!’ - ஆத்தூர் பாமக வேட்பாளர் திலகபாமா

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடுகிறார் தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி. ’ஆத்தூர் ஐ.பெரியசாமியின் கோட்டை.!’ என்று சொல்லும் அளவிற்கு, தொகுதி மக்களிடையே செல்வாக்கு மிக்க நபராக உள்ளார். இவரை எதிர்த்து பா.ம.க பொருளாளர் திலகபாமா போட்டியிடுகிறார். தொகுதி முழுக்கவே வலம் வரும் திலகபாமா, ‘பட்டிவீரன்பட்டி தான் நான் பொறந்த ஊரு. நான் வெளி ஊர் ஆள் இல்லை.!’ என மக்களிடையே பேசுவதும், சகஜமாக பழகுவதும், காய்கறி விற்பது, தப்பு அடித்து மக்களை உற்சாகப்படுத்துவதும் என தனது ஸ்டைலில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

திலகபாமா

குடகனாறு அணைப் பிரச்னை காரணமாக, கடந்த சில மாதங்களாகவே, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஐ.பொரியசாமிக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தினர். `ஐ.பெரியசாமி தான் தங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தடுத்து வைத்துள்ளார்!’ என்பது அந்த கிராம மக்களின் குற்றச்சாட்டாக இருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்த ஐ.பெரியசாமி, `தனக்கும் குடகனாறு பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றார். தற்போது, குடகனாறு பிரச்னையைக் கையில் எடுத்துள்ள திலகபாமா, ஐ.பெரியசாமிக்கு எதிராக பிரசாரம் செய்வது மட்டுமல்லாமல், ’குடகனாறு பிரச்னை குறித்து விவாதிக்கத் தயாரா?’ என சவால் விடுக்கிறார். இதனால் தி.மு.க-வினர் கொதிப்படைந்துள்ளனர்.

Also Read: `ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்!' - பா.ஜ.க-வைச் சாடும் ஐ.பெரியசாமி

சமீபத்தில் தொகுதிக்கு உட்பட்ட கூத்தம்பட்டி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட திலகபாமா, ஐ.பெரியசாமியை விமர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க-வினர், அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரசாரம் செய்ய விடாமல் தடுத்துள்ளனர். தி.மு.க-வினரைக் கண்டித்து பா.ம.க-வினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். காவல்துறை தலையிட்டு இருதரப்பையும் சமாதனம் செய்தனர்.

ஐ.பெரியசாமி

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றுள்ள கிராமங்களில், இதுபோன்ற நிகழ்வுகளை திலகபாமா சந்திக்கிறார் என்பது ஒருபுறம் இருந்தாலும், தன்னுடன் பிரசாரத்திற்கு வரும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், `ஐ.பெரியசாமி பத்தி பேசுனா, பிரசார வாண்டியில வர மாட்டேன்’ என கூறுகிறார்களாம். இது திலகபாமாவை அதிரச் செய்திருக்கிறது என்கின்றனர். சில இடங்களில், பிரசாரத்தை புறக்கணிப்பது போல, பிரசார வாகனத்தில் இருந்து அ.தி.மு.க நிர்வாகிகள் கீழிறங்கிச் சென்றனர்.

இது தொடர்பாக பா.ம.க வேட்பாளர் திலகபாமாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். ``நான் ஒரு இலக்கியவாதி. ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து தான் பேசுவேன். ஐ.பெரியசாமியை தனிமனித விமர்சனம் செய்யவில்லை. ஐ.பெரியசாமி, 5 முறை ஆத்தூர் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அவரால் தொகுதி எந்த வளர்ச்சியும் அடையவில்லை.

அதுமட்டுமல்லாமல், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு நடக்கும் என்று மக்களிடம் கூறுகிறேன். அதற்கு உதாரணமாக, சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமியர் ஒருவரின் இடத்தினை ஆக்கிரமித்தது தொடர்பாக, ஐ.பெரியசாமி மீதும், அவரது மகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது அப்போது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வந்தது மக்கள் அறிந்த விசயம். இதனை மக்களிடம் சொல்லக்கூடாதா. இதுவரை யாரும் பேசாத ஐ.பெரியசாமி பற்றிய உண்மைகளைதான் நான் பேசினேன். இதற்கு தான் தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என்றார்.

ஐ.பெரியசாமி பற்றி பேசினால், பிரசாரத்திற்கு வரமாட்டோம் என அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் கூறுவதாக தகவல் வருகிறதே என அவரிடம் கேட்டோம். ``அப்படியெல்லாம் இல்லை. தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியச் செயலாளர்களும், கிளைக்கழகச் செயலாளர்களும் என்னுடன் பிரசாரத்திற்கு வருகின்றனர். இது, தி.மு.க-வினர் பரப்பும் பொய்யான தகவல்.” என்றார்.

திலகபாமா

அவருக்கு மீண்டும் வாக்களிப்பதை விட, எனக்கு வாக்களியுங்கள் என்று தான் நான் மக்களிடம் கேட்கிறேன். இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள். குடகனாறு பிரச்னை, மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க நிர்வாகி ஒருவரே, குடகனாறு பிரச்னையில் ஐ.பெரியசாமிக்கு எதிராக இருக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/attur-pmk-candidatethilagabama-agains-i-periyasamy

"தேர்தலுக்காக மக்களின் டிஜிட்டல் தகவல்கள் திருடப்படுகின்றன!"- உங்கள் கருத்து?! #VikatanPoll

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் மக்களைச் சென்றடைய பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. எஸ்.எம்.எஸ், இமெயில், போன் கால்கள், சமூக வலைதளக் கணக்குகள் எனப் பல்வேறு வகைகளில் நம் தனிப்பட்ட தளங்களை விளம்பரங்கள் ஆக்கிரமிக்கின்றன.

தற்போது தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த பிரசாரங்கள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கட்சிகள் இத்தகைய விளம்பரங்களைச் செய்து வருகின்றனர். இதற்கு மூலதனமாக இருக்கும் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் (பர்சனல் டேட்டா) தவறான முறையில் எடுக்கப்பட்டு விற்கப்படுவதாகவும் அதைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமே உள்ளன. எங்கோ, யாருக்கோ, வியாபார ரீதியாகவோ, ஒரு வாடிக்கையாளராகவோ நாம் பகிர்ந்த நம் மொபைல் எண், இமெயில் உள்ளிட்ட தகவல்கள் இன்று தேர்தல் பிரசாரம் செய்யும் கட்சிகளிடம் எப்படிக் கிடைத்தன என்ற கேள்வியைப் பலரும் முன்வைக்கின்றனர்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/election/vikatan-poll-regarding-data-theft-of-voters-for-election-campaigns

PAN - Aadhaar Linking: இன்றே கடைசி நாள்... இணைந்துள்ளதா என்பதை எப்படி செக் செய்வது?

பான் கார்டினை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி இன்றுதான் என்பதால், இதுவரை இதைச் செய்யாதவர்கள் இன்று வேகவேகமாகச் செய்துவருகின்றனர். பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால், நாளை முதல் பான் கார்டு செயல்படாமல் போக வாய்ப்புண்டு.

தற்போதைய நிலையில் இந்தியாவில் 51 கோடி மக்களிடம் பான் கார்டு இருப்பதாகவும், அதில் 32 கோடி பேர் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பதாகவும் புள்ளி விவரம் சொல்கிறது. கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள், இதில் எத்தனை பேர் இணைத்தார்கள், எத்தனை பேர் இணைக்கவில்லை என்பது தெரியவில்லை. ஆனால், இணைக்காதவர்களின் பான் கார்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் செல்லாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டு, பான் கார்டு இணைப்பு

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாகக் கடந்த 2020-ம் ஆண்டில் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், வரி செலுத்துவது, கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்தது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக சொல்லப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் 2020 மார்ச் 31-ம் தேதி வரையிலும், பின்னர் ஜூன் 30-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வருமான வரிச் சட்டப்படி, பான் கார்டு இல்லாமல் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளையும், பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாது. அதாவது, மோட்டார் வாகனம் வாங்க/விற்க, வங்கியில் புதிய கணக்கு தொடங்க, கிரெடிட் கார்டு வாங்க, டீமேட் கணக்கு தொடங்க, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பில் தொகை ரூ.50,000-க்கு மேல் பணமாகச் (Cash Payment) செலுத்த, வங்கியில் ரூ.50,000-க்கு மேல் பணம் டெபாசிட் செய்ய மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.50,000-க்குமேல் முதலீடு செய்ய மற்றும் வருமான வரி தாக்கல் எனப் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் செய்ய முடியாது. அதனால் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனே இணைத்துவிடுங்கள்.

Also Read: மார்ச் 31 கடைசி... பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை எனில் அபராதம் விதிக்கப்படுமா? #PANAadhaar

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது?

Link aadhaar

ஆதாருடன் எண்ணை இணைக்க வருமான வரித் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பக்கத்துக்கு https://incometaxindiaefiling.gov.in/e-Filing/UserLogin/LoginHome.htmlincometaxindiaefiling.gov.in/e-Filing/UserLogin/LoginHome.html#innerlink செல்லவும். அங்கு இருக்கும் 'Link Aadhaar' பிரிவில் ஆதார் எண், பான் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை வழங்கி, அங்கு சொல்லப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களை ஃபாலோ செய்வதன் மூலம் எளிதாக இணைக்கலாம். உங்கள் ஆதாருடன் உங்கள் பான் கார்டு ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ‘Aadhaar Status' பிரிவில் தெரிந்துகொள்ளலாம். அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாகவும் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க முடியும். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN SPACE 12 digit Aadhaar Num SPACE 10 digit PAN Num என்ற முறையில் எஸ்.எம்.எஸ் அனுப்பி ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம்.

ஆனால் தற்போது இந்த இணையதளம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பணி செய்யவில்லை. இன்றுதான் கடைசி நாள் என்பதால் பலரும் இன்றுதான் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இணையதளம் முடங்கியுள்ளது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் திரும்ப இணையதளம் எப்போது சரிவர இயங்கும் எனத் தெரியாத நிலையில், பான் - ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் இன்னும் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



source https://www.vikatan.com/business/finance/pan-aadhaar-linking-how-can-you-check-your-pan-already-linked-or-not

`பாக்கியலட்சுமி' சீரியல் திவ்யா கணேஷ்... எக்ஸ்க்ளூசிவ் ஃபோட்டோஷூட் ஸ்டில்ஸ்!

divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh
divya ganesh


source https://cinema.vikatan.com/tamil-cinema/baakiyalakshmi-serial-actress-divya-ganesh-photoshoot-stills