Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

புதுச்சேரி கடற்கரையில் குவிந்த மக்கள்; போலீஸ் தடியடி! - களையிழந்த புத்தாண்டுக் கொண்டாட்டம்

கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கடற்கரை, கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சுற்றுலா மாநிலமான புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் இருக்கிறதா... இல்லையா... என்ற குழப்பம் நிலவியது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் கொண்டாட்டம் இல்லை என்றார் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.

போலீஸ் தடியடி

அதேசமயம் கொண்டாட்டங்கள் உண்டு என்று தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் 2020 டிசம்பர் 31-ம் தேதி முதல் 2021 ஜனவரு 1-ம் தேதி மதியம் வரை ஒயிட் டவுன் பகுதிக்குள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதித்த காவல்துறையினர், கடற்கரை சாலை, முக்கிய வீதிகளை பேரிகார்டுகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

2020 டிசம்பர் 31-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வாருங்கள் என்று மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் அழைப்பு விடுத்தார். அடுத்த சில நிமிடங்களில், `புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வராதீர்கள், தீவிர கொரோனா பரவலின் ஒரு அங்கமாக ஆகிவிடாதீர்கள்’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டார் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.

காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

இந்த இருவேறு கருத்துகளாலும், குறிப்பிட்ட அளவிலான மக்கள் மட்டுமே கடற்கரை சாலையில் அனுமதிப்படுவார்கள் என்று காவல்துறையின் அறிவிப்பினாலும், மக்கள் வீடுகளில் முடங்கினர். அதனால், கடற்கரை சாலை வெறிச்சோடியது. கடற்கரை சாலையில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் நடமாட்டம் இருந்ததை ஊடகங்கள் மூலம் அறிந்தவர்கள் இரவு 10 மணிக்கு மேல் குடும்பத்துடன் கடற்கரையை நோக்கி படையெடுத்தனர்.

ஆனால், கடற்கரை சாலையில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மக்களை அனுமதித்துவிட்டதாகவும், இனி யாரையும் அனுமதிக்க முடியாது என்று கடற்கரை சாலையை பேரிகார்டுகள் மூலம் இழுத்து மூடியது காவல்துறை. ஆனாலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கேயே நின்று கொண்டு தங்களையும் அனுமதிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Also Read: புதுச்சேரி: `நாராயணசாமி Vs கிரண் பேடி; வாருங்கள்... வராதீர்கள்!’ - குழப்பும் `புத்தாண்டு அரசியல்’

ஒருகட்டத்தில் காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தத் தொடங்கியதால் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பல மீட்டர் தூரம் துரத்திச் சென்று தடியடி நடத்தியதால் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனால் புத்தாண்டு கொண்டாட வந்தவர்கள் சோகத்துடன் வீடுகளுக்குத் திரும்பினர்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/pondicherry-police-lathi-charged-on-people-gathered-in-seashore

உ.பி-யில் பஞ்சாயத்துத் தலைவரான பாகிஸ்தான் பெண்! - புகாரால் வெளியான அதிர்ச்சித் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில், 65 வயதான பாகிஸ்தானிய பெண் ஒருவர் கிராம பஞ்சாயத்தின் இடைக்காலத் தலைவராக இருந்து வந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான், கராச்சியைச் சேர்ந்த பானோ பேகம் (Bano Begum), கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின், உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்திலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். தன் உறவினர்களோடு அங்கு வசித்து வந்த பானோ பேகம், அதே ஊரைச் சேர்ந்த அக்தர் அலி (Akhtar Ali) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, நீண்ட கால விசாவில் ஈட்டா பகுதியிலேயே தங்கியிருந்த பானோ, பலமுறை இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்.

பானோ பேகம், இந்தியாவில் நீண்டகால விசா மூலம் தங்கியிருந்தநிலையில், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வாங்கியிருக்கிறார். அந்த ஆவணங்களைக் கொண்டு, கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், ஈட்டா மாவட்டத்திலுள்ள கௌடவ் (Guadau) கிராமப் பஞ்சாயத்து உறுப்பினராகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார் பானோ பேகம். கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஷெஹ்னாஸ் பேகம் (Shehnaz Begum) கடந்த ஜனவரி 9-ம் தேதி மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து கிராமக் குழுவின் பரிந்துரையின் பேரில் பானோ பேகம் அந்த கிராமப் பஞ்சாயத்தின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், அவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்திய கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவி வகிப்பது சட்டத்துக்கு புறம்பானது என்றும் சர்ச்சை வெடித்துள்ளது. பானோ பேகம், பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று அதே கிராமத்தில் வசிக்கும் குவைதன் கான் (Quwaidan Khan) என்பவர் அளித்த புகாரையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/pakistani-national-bano-begum-becomes-panchayat-head-in-ups-etah

கரூர்: `சாதியால் கணவரைப் பிரிச்சுட்டாங்க!’ - கண்ணீர்விட்ட கர்ப்பிணிப் பெண்

காதலித்துத் திருமணம் செய்தபிறகு, சாதிப் பிரச்னையால் தன்னை ஒதுக்கிவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்துள்ள தனது கணவரோடு தன்னை சேர்த்து வைக்குமாறு, இளம்பெண் ஒருவர் கண்ணீரோடு கோரிக்கை வைத்தார். பிரிந்து சென்ற தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, கர்ப்பிணிப் பெண்ணான அவர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அருந்ததி - வினோத்குமார் திருமணம்

திருப்பூர் மாவட்டம், அன்னூர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவரது மகள் அருந்ததி (வயது 22). பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். இளங்கலைப் பட்டதாரியான இவர்தான், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Also Read: சிறுகுன்றின் மேல் நிற்கும் வரலாற்று அதிசயம்... சுண்டக்கா பாறையை மீட்டெடுக்கக் கோரிக்கை!

கரூர் மாவட்டம், கடவூர் சுண்டுக்குழிப்பட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான வினோத்குமார் (வயது 26) என்பவர்தான் தனது கணவர் என்று புகார் மனுவில் தெரிவித்திருந்தார். வினோத்குமார் மேட்டுப்பாளையம் அன்னூரில் தங்கியிருந்து, வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது, அருந்ததிக்கும், வினோத்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்திருக்கிறார்கள்.

தாயுடன் அருந்ததி

மேலும் இதுகுறித்து, பேசிய அருந்ததி, ``வினோத்குமார் வேறுசாதியைச் சேர்ந்தவர் என்பதால், அவர்கள் வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று வினோத்குமார் சொன்னார். அதனால், எனது பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் அன்னூரில் உள்ள முருகன் கோயிலில் பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் கழித்து, நான் கருவுற்றேன்.

ஆனால், வினோத்குமாரின் பெற்றோர், `கீழ் சாதிப் பெண்ணை எப்படித் திருமணம் செய்யலாம்?' என்று அவரைப் பிரித்து அழைத்துக்கொண்டு கரூர் வந்துவிட்டனர். இதனால், அன்னூர், காவல் நிலையத்திலும், கரூர் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்திலும், எங்களைச் சேர்த்து வைக்கச் சொல்லி, புகார் மனு அளித்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. இதனிடையே, வினோத்குமாருக்கு அவர் சார்ந்துள்ள சமூகத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன், பெற்றோர் திருமணம் முடித்துவிட்டனர்.

வேறு பெண்ணை திருமணம் செய்த விநோத்குமார்

வினோத்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதைத் தடுக்க முற்பட்டபோது, உள்ளூரில் உள்ள ஊராட்சிமன்றத் தலைவர் தூண்டுதலின் பேரில், கரூர் சிந்தாமணிபட்டி காவல்நிலைய போலீஸார் தடுக்காமல், அன்னூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சொல்லி அலைக்கழித்தனர். இதனால், என் கணவரோடு என்னை சேர்த்து வைக்கச் சொல்லி, புகாரளிக்க இன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எனது தாயுடன் வந்தோம்" என்றார்.

இந்த நிலையில், 'கணவருடன் என்னைசேர்த்து வைக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறமாட்டேன்' என கூறி, அருந்ததி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடியாக சென்று புகார் அளிக்குமாறு வலியுறுத்தினர். அதனால், வேறுவழியின்றி அருந்ததி தனது தாயோடு சென்று, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்

பேட்டியளிக்கும் செல்வராணி

அருந்ததியை அழைத்து வந்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மனித உரிமை பிரிவின் மாநிலச் செயலாளர் செல்வராணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,``தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துவிட்டு, அதன்பிறகு சாதிப் பாகுபாடு காட்டி வினோத்குமார் அருந்ததியை விலக்கி வைத்தது கொடுமை. வினோத்குமாரின் பெற்றோர் ஆளும் கட்சி பிரமுகர்களுடன் சேர்ந்துகொண்டு, பாதிக்கப்பட்ட அருந்ததிக்கு நேரடியாக மிரட்டல் விடுத்து வருவதால், வேறுவழியின்றி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தோம். ஆனால், அவர்கள் கரூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கச் சொன்னதால், அங்கு சென்று மனுக்கொடுத்தோம். உரிய நடவடிக்கை வேண்டும். இல்லையென்றால், குடும்பத்தோடு போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும்" என்றார்.



source https://www.vikatan.com/news/controversy/woman-files-caste-discrimination-complaint-against-husbands-family-in-karur

`வேளாண் சட்டங்களை எதிர்ப்பதே சட்டவிரோதமா?' - எடப்பாடிக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள்

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இக்கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த பல வாரங்களாக நடத்தி வரும் தொடர் போராட்டம், உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகிறார்கள். இச்சட்டங்கள் தங்களின் சுய சார்பையும் உரிமைகளையும் பறித்து, பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிமையாக்கக்கூடியது எனத் தமிழக விவசாயிகளும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

விவசாயிகள்

ஆனால், தமிழக அரசோ, புதிய வேளாண் சட்டங்களைத் தீவிரமாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், இங்கு அமைதியான வழியில் விவசாயிகள் நடத்தக்கூடிய போராட்டங்களைக் காவல்துறை மூலம் கடுமையாக ஒடுக்குவதாக, ஆதங்க குரல்கள் ஒலிக்கின்றன. வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதகங்கள் குறித்து பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூட அனுமதி மறுக்கப்படுவதாக விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள். வேளாண் சட்டங்களை எதிர்ப்பது, சட்ட விரோதமா, ஏன் இத்தனை அடக்குமுறை என ஆதங்கத்தோடு கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கான விளைவுகளைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2021 சட்டமன்றத் தேர்தலில் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைப்பொருள் வணிகம் ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்த பண்ணைய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் தற்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்படுவதாகவும் இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், பொருளாதார ஆய்வாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனப் பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில்தான் இச்சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாட்டில் விவசாயிகள் நடத்தக்கூடிய பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி உள்ளிட்டவற்றை ஒடுக்க, தமிழக அரசு, காவல்துறையினர் மூலம் அடக்குமுறைகளை ஏவுவதாக ஆதங்க குரல்கள் வெடிக்கின்றன.

விவசாயிகள்

``தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை மற்றும் இதன் சுற்றுவட்டார கிராம விவசாயிகள், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் கண்டித்து, கடந்த 27-ம் தேதி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தார்கள்.

நம்மாழ்வார் பாசறையைச் சேர்ந்த விவசாயிகள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அமைதி வழியில் போராட்டம் நடத்துவதற்கு கூட, ஏகப்பட்ட கெடுபிடிகள்... சாமியான பந்தல் போடக்கூடாது, ஒலிப்பெருக்கி அமைக்கக் கூடாது, கூட்டம் அதிகமாகக் கூடக் கூடாது, காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணிக்குள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் எனக் கடும் அடக்குமுறை.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கலவரங்களை அடக்குவதற்காகக் கொண்டு வரப்படும் வஜிரா வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டது. காவல்துறையினரின் செயல்பாடுகள், அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் உளைச்சலை ஏற்படுத்தியது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் தஞ்சை திலகர் திடலில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தார்கள். பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிளம்பிய விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினரின் கடும் அடக்குமுறைகளையும் மீறி தஞ்சாவூரில் விவசாயிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்து சிலர் கூட்டம் நடத்துவது போல, இச்சட்டங்களை எதிர்த்து, கூட்டங்கள் நடத்த விவசாயிகளுக்கும் உரிமை உள்ளது. இது அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமை" என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்ப்பது சட்டவிரோதமா எனப் பலரும் கொந்தளிக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், ``விவசாயிகள் தங்களது கருத்தை சொல்லக் கூட உரிமை இல்லையா. தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் பக்கம் நிற்காமல், விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார். இவர் உண்மையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்தானா என சந்தேகமாக உள்ளது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிளம்பி வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியது சட்டவிரோதம்.

Edappadi Palanisamy

Also Read: `வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுக’ - கேரள சட்டசபையில் தீர்மானம்; பல்டியடித்த பா.ஜ.க எம்.எல்.ஏ

புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதகங்களை அமைதியான வழியில் பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் கொண்டு செல்ல முயல்கிறோம். ஆனால், காவல்துறையினரின் ஒடுக்குமுறையோ, விவசாயிகளை இன்னும் தீவிரமான போராட்டங்களை நோக்கி நகர்த்துகிறது. இதே நிலை தொடர்ந்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக விவசாயிகள் தக்க பதிலடி கொடுப்பார்கள். விவசாயிகளின் எதிர்ப்பை சம்பாதிப்பது அவருக்கு நல்லதல்ல. பக்கத்து மாநிலமான கேரளா அரசு, மூன்று வேளாண் சட்டங்களையும் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, ஆனால் தமிழக அரசோ, இச்சட்டங்களை ஆதரிப்பதோடு மட்டுமல்லாம், விவசாயிகளின் குரல்வளையை நெரிக்கிறது. சென்னையில் ஜனவரி 6-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.

விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொள்வதுதான் நல்ல ஆட்சியாளர்களுக்கு அழகு. இல்லாவிட்டால், இதன் விளைவுகள் கசப்பானதாக இருக்கும் என்பதே நிதர்சனம்.



source https://www.vikatan.com/news/agriculture/farmers-allege-tn-govt-suppressing-their-protest-against-farm-laws

இந்த 2020 மக்களுக்கு எப்படி இருந்தது? #VikatanPollResults

2020 முடிந்துவிட்டது. அது கிளப்பிய பிரச்னைகளில் 2021 எப்படி இருக்குமோ என்ற அச்சம் பலருக்கும் இப்போதே வந்துவிட்டது. எதிர்காலத்தைப் பற்றி பிறகு யோசிப்போம். கடந்த காலமான 2020 உங்களுக்கு எப்படி இருந்தது? ஸ்டார் ரேட்டிங்கில் மக்கள் அளித்த முடிவுகள் இதோ...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

2020 | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

2020 | Vikatan Poll

அனைத்து -களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

2020 | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

2020 | Vikatan Poll
2020 | Vikatan Poll
2020 | Vikatan Poll
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/vikatan-poll-regarding-star-rating-for-the-year-2020

KPY Trophy-ஐ பார்த்ததும் Emotional ஆகிட்டேன்! - Jeyachandran | Vadivel Balaji



source https://cinema.vikatan.com/tamil-cinema/jeyachandran-about-kpy-show-and-vadivel-balaji

விஜய்யுடன், விஜய் சேதுபதி ஏன் நடிக்கணும்? - Parthiban | Master | Tughlaq Durbar



source https://cinema.vikatan.com/tamil-cinema/parthiban-about-master-and-tughlaq-durbar

மண் மலர்களையும் ஏற்கும் அந்த மாலவனைத் தொழுது ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைப்போம்!

எல்லா நாள்களிலும் இறைவழிபாடு என்பது முக்கியம். அதற்கு ஆங்கிலப் புத்தாண்டு தினமும் விதிவிலக்கல்ல. பொதுவாகவே கொண்டாட்டங்கள் என்பவை நம்மை நாமே ஊக்குவித்துக்கொள்ளும் செயல்பாடு. அப்படிப்பட்ட செயல்பாட்டில் நாம் ஈடுபடுவதில் தவறில்லை. அதுவும் உலகமே ஒன்று திரண்டு கொண்டாடும் நாளில், மானுட சமுத்திரத்தில் நாமும் ஓர் அலையாக ஆர்ப்பரிப்பதில் பிழை ஏதும் இல்லை.

எந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்பதை விட எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதுதான் அந்தக் கொண்டாட்டங்களின் மீதான கசப்புணர்வை உருவாக்குகிறது. ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட ஆரம்பிக்கும் இளைஞர்கள் பலரும் ஒழுக்க விதிகளை மீறுகிறபோது அதன் மீது வீட்டுப் பெரியவர்களுக்கு உருவாகும் வருத்தமே கொண்டாட்டங்களுக்கு எதிராகவும் மாறுகிறது.

இறை வழிபாடு

கொரோனா காலகட்டத்தில் புத்தாண்டில் அல்ல, ஆண்டின் ஒவ்வொரு நாளுமே நாம் நம்முள் புத்துணர்வு கொண்டு கொண்டாட வேண்டியவை. ஆரோக்கியம் சார்ந்தும் ஆன்மிகம் சார்ந்தும் நமக்குள் பல கருத்துகளை உருவாக்கிக்கொண்டு அதன் படி நடக்க முயல வேண்டும்.

புத்தாண்டில் எதைச் செய்கிறோமோ இல்லையோ கட்டாயம் இறைவழிபாடு செய்ய வேண்டும். அதிலும் வேங்கடவனை மனதில் நினைத்து வழிபட்டால் எல்லா நாள்களுமே இனிய நாள்களாக மாறும். பொன்னை விட மண்ணை மதிப்பவன் வேங்கடவன்.

Also Read: கே.பி.வித்யாதரன் கணித்துள்ள 12 ராசிகளுக்குமான 2021 ஆங்கிலப்புத்தாண்டு பலன்கள் வீடியோ வடிவில்! #Video

பொன் மலர்கள் மண் மலர்களான அற்புதம்!

திருமலையின் மலைப்பாதையில் நாம் சந்திக்கும் ஒரு மண்டபம் குருவ மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த மண்டபம் குருவ நம்பி என்ற ஓர் ஏழைக் குயவனின் காரணமாக ஏற்பட்டதாகும். குருவ நம்பி, பெருமாளின் தீவிரமான பக்தன். ஆனால், கோயிலுக்குள் சென்று பெருமாளை வழிபட முடியாத காரணத்தால், வீட்டிலேயே பெருமாளின் மரச் சிற்பத்தைப் பூஜித்து வந்தான். அந்தப் பகுதியை ஆட்சிசெய்து வந்த மன்னர் தொண்டைமான் தினமும் பெருமாளுக்குத் தங்க மலர்களால் அர்ச்சனை செய்து வந்தார்.

அதேபோல் தானும் மலர்களால் அர்ச்சனை செய்ய விரும்பிய குருவ நம்பி, மண்ணால் ஆன மலர்களைக்கொண்டு பெருமாளுக்கு அர்ச்சனை செய்தான். குருவ நம்பியின் பக்தியின் பெருமையை உலகத்தவருக்கு உணர்த்த விரும்பிய பெருமாள், ஒருநாள் தனக்கு மன்னன் தொண்டைமான் அர்ச்சித்த தங்க மலர்களை மண்ணால் ஆன மலர்களாக மாற்றினார். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.

அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள், ‘குருவ நம்பியின் பக்தியை உலகத்தவருக்கு உணர்த்தவே நாம் அப்படி தங்க மலர்களை மண்ணால் ஆன மலர்களாக மாற்றினோம்’ என்று கூறினார். குருவ நம்பி பெருமாளை வழிபட்ட இடம்தான் குருவ மண்டபம்.

திருமலை வேங்கடவன்

பொன்னையல்ல மனதையே விரும்பும் இறைவன்

குருவநம்பி மண் மலர்கள் கொண்டு துதித்தார். அந்த வேங்கடவனோ அதைப் பொன்னினும் மேலாகப் போற்றினார். எனவே நாம் எங்கிருந்து இறைவனை வணங்குகிறோம் என்பதோ எதைக்கொண்டு துதிக்கிறோம் என்பதோ முக்கியமல்ல. எப்படி வணங்குகிறோம் என்பதுதான் முக்கியம். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் அந்த வேங்கடவன் இந்தப் புத்தாண்டில் நாள்தோறும் அந்த ஏழுமலையானை வணங்கி மகிழ்வோம்.

சென்ற ஆண்டில் ஆலய வழிபாடுகள் மிகவும் அருகின. அந்த நிலை மாறி அனைவரும் ஆரோக்கியமும் ஆனந்தமும் பெற்ற வாழ்வைப் பெற அந்த வேங்கடவன் நமக்கு அருள் செய்யட்டும்.

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!



source https://www.vikatan.com/spiritual/functions/start-this-new-year-by-praying-to-tirupathi-perumal

கொரானா காலத்தில் மக்களுக்கு சேவை செய்த முன்களப் பணியாளர்கள்! #REWIND2020

முன்களப் பணியாளர்கள்

கோவை: கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்

முன்களப் பணியாளர்கள்

நாகர்கோவில்: தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பான சீருடை.

முன்களப் பணியாளர்கள்

நீலகிரி: கொரானா காலத்தில் சுத்தம் செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்

முன்களப் பணியாளர்கள்

ஈரோடு: வீடுவீடாகச் சென்று காய்ச்சல், இருமல் உள்ளதா என பரிசோதனை செய்யும் செவிலியர்.

முன்களப் பணியாளர்கள்

மதுரை: கொரானா பரிசோதனை செய்யும் மருத்துவர் மற்றும் பரிசோதனை செய்துகொள்ளும் மூதாட்டி.

முன்களப் பணியாளர்கள்

ராமேஸ்வரம் கடல் பகுதியைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள

முன்களப் பணியாளர்கள்

திருச்சி: கிருமி நாசினி தெளிப்பதற்குத் தயாராகும் தூய்மைப் பணியாளர்கள்

முன்களப் பணியாளர்கள்

தஞ்சாவூர்: பெரிய கோயிலில் கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்

முன்களப் பணியாளர்கள்

மயிலாடுதுறை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைp பணியாளர்கள்.

முன்களப் பணியாளர்கள்

சேலம்: ஓய்வு நேரத்தில் செல்போனில் குடும்பத்தாருடன் பேசும் முன்களப் பணியாளர்



source https://www.vikatan.com/ampstories/news/album/covid-19-front-line-warriors-photo-album

`பாகிஸ்தானிடமிருந்து சியாச்சினை மீட்ட ஹீரோ!’- கர்னல் நரேந்திரக் குமார் மறைவுக்கு ராணுவம் அஞ்சலி

இந்திய ராணுவத்தின் முன்னாள் கர்னலும் சிறந்த மலையேற்றப் பயிற்சியாளருமான கர்னல் நரேந்திர குமார் வயது மூப்பின் காரணமாக நேற்று (31.12.2020) டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 87.

கர்னல் நரேந்திர குமார் கடந்த 1933-ம் ஆண்டு ராவல்பிண்டியில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தார். மலையேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த இவர், கடந்த 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட `ஆபரேஷன் மேக்தூத்’-தில் முக்கியப் பங்காற்றினார். பாகிஸ்தான் பிடியில் இருந்த சியாச்சின் மலைச் சிகரத்தை மீட்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒப்புதலோடு முன்னெடுக்கப்பட்டதுதான் ஆபரேஷன் மேக்தூத்.

கர்னல் நரேந்திர குமார்

அதில். தன்னை உளவாளி போல் செயல்படுத்திக்கொண்டு பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தி இறுதியில் சியாச்சின் பகுதிகளைப் பாகிஸ்தான் பிடியிலிருந்து மீட்டெடுத்தார். இதனால் இவரை `சியாச்சின் ஹீரோ’ என்று எல்லோரும் அழைத்தனர்.

Also Read: 6 நாட்களுக்கு பின் சியாச்சின் பனிச்சரிவில் ராணுவ வீரர் உயிருடன் மீட்பு! (வீடியோ)

பின்னர் 1965-ம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை கணக்கிடும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினரோடு சேர்ந்து பணியாற்றினார். அதேபோல் ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள பிளாங்க் சிகரம் உள்ளிட்ட பல்வேறு சிகரங்களில் ஏறி சாதனை புரிந்துள்ளார். மேலும் உத்தரகாண்டிலுள்ள நந்தா தேவி மலையின் சிகரத்தை தொட்ட முதல் இந்தியர் இவரே. அதுமட்டுமல்லாது, கடந்த 1978-ம் ஆண்டு 45வது வயதில் கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தில் ஏறினார். ராணுவத்தில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட பலத்த காயத்தினால் தனது நான்கு கால்விரல்களை இழந்த கர்னல் நரேந்திர குமார், அந்த வலியைப் பொருட்படுத்தாமல் பல்வேறு மலைச் சிகரங்களில் ஏறி சாதனை புரிந்துள்ளார். கர்னல் நரேந்திர குமார், இந்திய ராணுவத்தின் பல்வேறு சிறப்புப் படைப்பிரிவுகளில் பணியாற்றியிருக்கிறார்.

கர்னல் நரேந்திர குமார்

நரேந்திர குமார், இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, அர்ஜுனா விருது, ராணுவத்தின் உயரிய விருதான மெக் கிரிகோர் பதக்கம் (McGregor medal) உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். மேலும், தனது சிறப்பான பணிக்காக நாட்டின் தலைவர்கள் பலரிடம் பாராட்டு பெற்றுள்ளார். இவரது சேவையை பாராட்டி இந்திய அஞ்சல்துறை அலுவலகம் கடந்த 1965-ம் ஆண்டு இவருக்கு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு கௌரவித்தது.

வேகமான செயல்பாடுகளுக்காக `காளை’ என்ற புனைப்பெயரில் தனது படைப்பிரிவினரால் அழைக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்துவந்த கர்னல் நரேந்திர குமார், நேற்று டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இவரது இழப்பிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/death/colonel-narendra-kumar-passed-away

"ஆமாம், எங்களுக்கு கல்யாணம்!"- ஜோடி சேரும் `பூவே பூச்சூடவா’ மதன் - ரேஷ்மா

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ தொடரில் நடித்து வரும் ரேஷ்மா - மதன் இருவரும் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.

2021-ம் வருடம் பிறந்த அந்த நள்ளிரவு நிமிடத்தில் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்து சீரியல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கும் மதனிடம் வாழ்த்துகள் சொல்லி பேசினேன்.

மதன் - ரேஷ்மா

‘’பொதுவா எல்லாரும் புத்தாண்டு தீர்மானம் எடுத்துப்பாங்க. ‘எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்’கிறதுதான் ஒவ்வொருத்தருடைய வேண்டுகோளா இருக்கும். அதேபோலத்தான் நானும் மகிழ்ச்சியான ஒரு செய்தியைச் சொல்லி என்னுடைய ரசிகர்கள் ப்ளஸ் ரேஷ்மாவுடைய ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் தரலாம்னு நினைச்சேன். அதனாலதான் கொஞ்சம் வெயிட் பண்ணாலும் பரவால்லனு காத்திருந்து சரியா புத்தாண்டு பிறந்த அந்த நிமிடத்துல எங்க கல்யாணச் செய்தியை அறிவிச்சிருக்கோம்’’ என்கிறார் மதன்.

மதன்-ரேஷ்மா ஜோடியின் இந்தக் காதல் திருமணத்துக்கு இரண்டு பேரின் வீட்டிலும் பெரியவர்கள் சம்மதமும் கிடைத்து விட்டது. வரும் மே மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

வாழ்த்துகள் மதன் - ரேஷ்மா!



source https://cinema.vikatan.com/television/poove-poochuduva-serial-fame-madhan-reshma-to-get-married

2020 Rewind: இந்திய ஆட்டோமொபைல் துறையின் சரிவும், எழுச்சியும்!

ஒட்டுமொத்த உலகைப் போலவே, இந்திய ஆட்டோமொபைல் துறையும் கொரோனாவால் ஆட்டம் கண்டுவிட்டது. . லாக்டெளன் 1.0-ல் மக்கள் தமது வீடுகளிலேயே அடைபட்டுக் கிடக்கவேண்டிய சூழல் இருந்ததால், வாகன விற்பனை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மொத்தமாக சரிந்தது. வருட இறுதியில் வரக்கூடிய பண்டிகைகள், எதிர்பார்த்தபடியே வாகன விற்பனையைச் சரிவிலிருந்து மீட்டுவிட்டன. 2021-க்காக நம்பிக்கையோடு கார்த்திருக்கும் ஆட்டோமொபைல் உலகம் 2020-ல் என்னென்ன சவால்களை எதிர்கொண்டது?! 2020 Rewind...

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் வருகை!

ஏற்கெனவே நம் நாட்டில் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகின என்றாலும், அவை பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. இவற்றின் விலை குறைவு என்றாலும், ஒட்டுமொத்தத் தரம் மிகவும் சுமாராக இருந்தது. ஆனால் இந்தப் போக்கை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, உள்நாட்டு உற்பத்தியாளர்களான பஜாஜ் (சேட்டக்) மற்றும் டிவிஎஸ் (ஐ-க்யூப்), எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் தமது தயாரிப்புகளை இந்த ஆண்டு களமிறக்கினார்கள். இவை இரண்டும் தற்போது பெங்களூரில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன என்றாலும், இது ஒரு நல்ல தொடக்கமாகவே தெரிகிறது. மற்றபடி ஏற்கெனவே இந்தப் பிரிவில் தனக்கான இடத்தைப் பெற்றிருந்த ஏத்தர் நிறுவனம், 450X எனும் மேம்பட்ட மாடலை அறிமுகப்படுத்தியது. இதன் விலை அதிகம் என்றாலும், டிசைன், தொழில்நுட்பம், பர்ஃபாமன்ஸ், தரம் ஆகியவற்றில் இது சொல்லி அடித்தது.

Auto Expo 2020

களையிழந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020

இந்தியா தவிர்த்து இதர உலக நாடுகளில், கொரோனா தனது கிளைகளை வேறூன்றிக் கொண்டிருந்த சமயம் அது. அந்த நேரத்தில் முன்பு திட்டமிட்டபடியே, டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020 பிப்ரவரியில் நடைபெற்றது. இதில் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஃபோக்ஸ்வாகன் - ஸ்கோடா குழுமம் பங்கேற்றதால், மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ஹோண்டா, டொயோட்டா, பிஎம்டபிள்யூ, ஆடி, ஃபியட் க்ரைஸ்லர் குழுமம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்த ஆட்டோமொபைல் திருவிழாவில் கலந்துகொள்ளாதது பெரிய ஏமாற்றமே. அதனை ஈடுகட்டும் விதமாக, Great Wall Motors & Haima எனும் இரு புதிய சீன நிறுவனங்கள், தமது தயாரிப்புகளை நம் நாட்டு மக்களுக்குக் காட்சிப்படுத்தினார்கள். ஆனால், இந்தியா - சீன நாடுகளுக்கு இடையே எல்லையில் நிகழும் பிரச்னையால், Great Wall Motors இந்தியாவுக்கு வருவதே கேள்விக்குறியாகி உள்ளது. இத்தனைக்கும் அந்த நிறுவனம், 7,600 கோடியை நம் நாட்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தது. மஹாராஷ்டிராவின் தாலேகானவில் அமைந்திருக்கும் ஜெனரல் மோட்டார்ஸின் தொழிற்சாலையையும் இந்நிறுவனம் கைப்பற்றிவிட்டது. ஆனால், அடுத்து என்ன நடக்கும் என்பது மர்மமாகவே இருக்கிறது.

Automobile Industry

வாகன உற்பத்தி மற்றும் விற்பனை சரிவு!

இந்தியாவின் GDP-யில் கணிசமான இடத்தைப் பெற்ற ஆட்டோமொபைல் துறை, வேகமாக இயங்கிக்கொண்டிருந்த தனது சக்கரங்களை, அப்படியே நிறுத்தவேண்டிய கட்டாயம் கொரோனாவால் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பின் உச்சமாக, ஏப்ரல் 2020 மாதத்தில் நாடெங்கும் விற்பனையான புதிய வாகனங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம். தமது வர்த்தக்கத்தில் ஏற்பட்ட நெருக்கடியிலும், அவர்கள் கொரோனா நிதிக்கு அதிகளவில் பண உதவிகளைச் செய்தார்கள். மேலும் சோர்ந்து போய்விடாமல் மாற்றி யோசித்ததன் விளைவையும் பார்க்கமுடிந்தது. அதன்படி பலதரப்பட்ட வாகன உற்பத்தியாளர்கள், தமது ஆலைகளில் வாகனங்களுக்குப் பதிலாக, சூழ்நிலையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, வென்டிலேட்டர்களையும் PPE கிட்களையும் தயாரித்தது, உண்மையிலேயே வரவேற்கத்தக்க அம்சம்.

BS-6 விதிகள் அறிமுகம்!

குறுகிய 4 வருட காலத்திலேயே, வாகன உற்பத்தியாளர்கள் தமது தயாரிப்புகளில் பொருத்தப்பட்ட இன்ஜின்களை, BS-6 விதிகளுக்கேற்ப மேம்படுத்தி விட்டனர். இதனால் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு குறைந்தது ஒருபுறம் என்றால், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தால், டீசல் கார்களின் விலை அதிரடியாக மறுபுறத்தில் உயர்ந்தன. எனவே மாருதி சுஸூகி, ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா, ரெனோ, நிஸான் போன்ற சில நிறுவனங்கள், தமது புதிய கார்களில் டீசல் இன்ஜின் வழங்குவதையே நிறுத்திவிட்டார்கள். இதன் விளைவாக, டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் அந்த இடத்தை ஆக்ரமித்துவிட்டன. இதே BS-6 விதிகள் காரணமாக, டூ-வீலர்களின் விலை 10-15% வரை விலை உயர்வைப் பெற்றன. அவற்றின் இன்ஜினில் பயன்படுத்தப்படும் கார்புரேட்டருக்கு மாற்றாக, ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் அமலுக்கு வந்தது.

BS6

உதயமான புதிய கூட்டணிகள்!

அப்போ வரும், இப்போ வரும் என பைக் ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்பட்ட பஜாஜ் - ட்ரையம்ப் கூட்டணி, ஒருவழியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 200 முதல் 700சிசி வரையிலான பைக்குகளைத் தயாரிப்பதே இதன் முக்கிய நோக்கம். மேலும் இந்தக் கூட்டணியின் முதல் தயாரிப்பு, சுமார் 2 லட்ச ரூபாய்க்கு வரும் என்பதுதான் ஹைலைட். பின்னாளில் ட்ரையம்ப் பைக்குகளை நாடெங்கும் விநியோகிக்கும் பணியையும் பஜாஜ் செய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திராவைச் சேர்ந்த க்ளாஸிக் லெஜண்ட்ஸ் நிறுவனம், BSA மோட்டார் சைக்கிள்களை இங்கிலாந்தில் அசெம்பிள் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள். இதில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் தயாரிப்புகள் அடக்கம். இவை நம் நாட்டுக்கு வருவது சந்தேகமே.

பிரிட்டனைச் சேர்ந்த நார்ட்டன் நிறுவனத்தை, டிவிஎஸ் வாங்கியது பெருமைமிகு தருணம். இந்தக் கூட்டணி இந்தியாவில் என்ன நிகழ்த்தப்போகிறார்கள் என்பது குறித்தத் தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனந்த அதிர்ச்சியாக, நெதர்லாந்தைச் சேர்ந்த EV Startup நிறுவனமான Etergo-வை ஓலா வாங்கிவிட்டது! இதன் வெளிப்பாடாக 2,400 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் டூ-வீலர்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை, சென்னையில் கட்டமைக்க உள்ளார்கள். டாக்ஸிகளை இயக்கும் ஓலா, எலெக்ட்ரிக் டூ-வீலர் துறையில் பலத்த அதிர்வலைகளை இப்போதே ஏற்படுத்திவிட்டது என்பதே நிதர்சனம்.

பஜாஜ் - கேடிஎம், டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ வரிசையில், ஹீரோ - ஹார்லி டேவிட்சன் கூட்டணி புதிதாகப் பிறந்திருக்கிறது. லாக்டவுன் காலத்தில் குறைவான விற்பனை காரணமாக, இந்தியாவிலிருந்து அந்த அமெரிக்க நிறுவனம் வெளியேறப் போவதாகச் செய்திகள் வந்தது தெரிந்ததே. முதற்கட்டமாக, ஹார்லி டேவிட்சனின் விற்பனை & சர்வீஸ் பிரிவைக் கையில் எடுத்துக்கொள்ளவிருக்கிறது ஹீரோ. பிறகு ஹரியானாவில் அமைந்திருக்கும் ஹார்லி டேவிட்சனின் தொழிற்சாலையில், இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து, நம் நாட்டுக்கு ஏற்றபடியான Mid Capacity பைக்குகளைத் தயாரிக்கும் திட்டத்தில் உள்ளார்கள். எனவே திட்டமிட்டபடி, ஹார்லி டேவிட்சனின் புதிய தயாரிப்புகள், நம் ஊர்ச்சாலைகளில் டயர் பதிக்கும் நாள், வெகுதொலைவில் இல்லை.

Ola Electric & Etergo

2021... எல்லாம் சரியாகிவிடுமா?

'ஆடி போய் ஆவனி வந்தால் டாப்பா வருவான்' எனச் சொல்வதுபோல, வருடம் மாறும்போது எல்லாம் உடனடியாகச் சரியாகிவிடும் என எண்ணுவது ஒரு நப்பாசைதான். கொரோனாதான் இன்னும் மனிதனைக் கட்டுப்படுத்துகிறதே தவிர, கொரோனா இன்னும் மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதற்கான தடுப்பூசிகள் புழக்கத்துக்கு வந்துவிட்ட அதே நேரத்தில், புதிய வடிவில் கொரோனா பிரிட்டனில் இருந்து பரவத் தொடங்கியிருப்பது நெருடல். எனவே இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சம் சீரடைந்துவிட்டாலும், நிலைமையில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவைப்படவே செய்கிறது. 2021-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 75-க்கும் அதிகமான புதிய கார்கள், இந்தியச் சாலைகளில் டயர் பதிக்கவிருக்கின்றன. என்னதான் நிகழ்காலம் சிக்கலாகத் தெரிந்தாலும், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.



source https://www.vikatan.com/automobile/motor/automobile-industry-india-2020-rewind

2020-ல் ஓடிடி-யில் கவனம் ஈர்த்த டாப் 16 இந்திய திரைப்படங்கள்! #Rewind2020

கொரோனா தொற்று காரணமாக லாக்டௌனில் திரையரங்குகள் மூடப்பட மக்களின் பொழுதுபோக்குக்கும், திரைத்துறைக்கும் ஆபத்பாந்தவனாக வந்தன ஓடிடி தளங்கள். தியேட்டரில் ரிலீஸாகாமல் படங்கள் நேரடியாக மக்களின் தொடுதிரைகளை வந்தடைந்தன. பல்வேறு சிக்கல்களால் முடங்கிக் கிடந்த சிறுபட்ஜெட் படங்களும் ஓடிடி-யில் வெளியாகி மக்களைச் சென்றடைந்தன. அப்படி இந்த வருடம் ஓடிடி-யில் வெளியாகி கவனம் ஈர்த்த படங்களின் பட்டியல் இது...
அந்தகாரம்

பகலில் நூலகத்தில் பணிபுரிகிறார் விழித்திறன் சவால்கொண்ட வினோத். நகரத்தின் மற்றொரு இடுக்கில் ஒருவித குற்றவுணர்ச்சியோடே காலத்தைக் கடத்தும் கிரிக்கெட் பயிற்சியாளராக அர்ஜுன் தாஸ். இன்னொருபக்கம் ஒரு அசம்பாவிதத்தில் குடும்பத்தை இழந்து தனிமையில் வாடும் மனநல மருத்துவர் குமார் நடராஜன். வெளிப்பார்வைக்கு சற்றும் தொடர்பில்லாத இந்த மூவரையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மெல்லிய சரடு பிணைக்கிறது. அதனால் ஏற்படும் திக்திக் தருணங்களை இருட்டின் அதிகாரத்தோடு சொல்லிச் செல்கிறார் அறிமுக இயக்குநர் விக்னாராஜன். சிக்கலான கதைசொல்லல், அதற்குள் ஒளிந்திருக்கும் ட்விஸ்டுகள், ஒவ்வொன்றையும் காரணத்தோடு அவிழ்க்கும் திரைக்கதை என முதல் படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்தார் விக்னாராஜன். அந்தகாரம் இந்த ஆண்டு மிஸ் செய்யக்கூடாத த்ரில்லர்.

க பெ ரணசிங்கம்

வளர்ச்சி அரசியலின் பேரால் உறிஞ்சப்படும் தண்ணீருக்காக உரிமை தாகத்துடன் போராடும் போராளி ரணசிங்கம், குடும்பத்தைக் காப்பாற்ற துபாய்க்கு வேலைக்குச் செல்கிறார். திடீரென ஒருநாள் கலவரத்தில் அவர் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட, தன் கணவரின் சடலத்தைப் பெற துருப்பிடித்த அரசு இயந்திரங்களுடன் ‘ம/பெ அரியாநாச்சி’ நடத்தும் போராட்டம்தான் கதை. வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்பவர்களின் குடும்பம் அனுபவிக்கும் துயரங்களை ராமநாதபுரத்து வெயில் வாசனையுடனும் அரசியல் அடர்த்தியுடனும் முதல் படத்தில் பதிவுசெய்து கவனம் ஈர்த்திருந்தார் பெ.விருமாண்டி. சில குறைகள் இருந்தாலும் இதுவரை தமிழ் சினிமா பேசாத கதைக்களத்தைத் துணிச்சலுடன் பேசியதற்காக ‘க/பெ ரணசிங்க’த்துடன் கைகுலுக்கலாம்!

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதை என்றாலும் புனைவிற்கான சுதந்திரத்தையும் ஒரேயடியாக எடுத்துக் கொள்ளாமல் தோல்விக்கு மேல் தோல்வி என முடிந்தவரை ஹீரோயிச திரைக்கதையைத் தவிர்த்ததற்கு இயக்குநர் சுதாவைப் பாராட்டலாம். கடைசியில் வெற்றி யாருக்கு என முன்பே தெரிந்திருந்தாலும் அதை சுவாரஸ்யமாகச் சொன்னவிதத்தில் கவர்கிறார் இயக்குநர். விமானப் பயணம் என்ற ‘ஏ’ கிளாஸ் கருவில் சென்டிமென்ட், காதல், நட்பு என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து பி, சி சென்டருக்குமான படமாகவும் மாற்றியதில் வெற்றிபெற்றிருக்கிறது படக்குழு. அந்நியத்தன்மை எழாமல் இருக்க உதவின`உறியடி' விஜயகுமாரின் வசனங்கள். சின்னச் சின்னக் குறைகளைக் களைந்துவிட்டுப் பார்த்தால், கேப்டன் மாறனுக்கு மட்டுமல்ல, தளர்ந்தபோயிருந்த தமிழ் சினிமாவிற்கும் மிகத் தேவையான வெற்றி இந்த ‘சூரரைப் போற்று.’

ராத் அகேலி ஹை

செல்வாக்கு மிக்க குடும்பத்தில் நடக்கும் பெரிய மனிதரின் கொலையும், அதற்கான காரணங்களையும் முடிச்சுகளால் சுவாரஸ்யமாக்கியது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருந்த 'ராத் அகேலி ஹை' திரைப்படம். குற்றமும், காதலுமென இரு தளத்தில் பயணிக்கும் அடர்த்தியான த்ரில்லர் கதையை புரியும்படி தன் அறிமுக படத்திலேயே இயக்கியிருக்கிறார் ஹனி ட்ரிஹான். யார் கொலை செய்திருப்பார்கள் எனும் ̀அதே கண்கள்' டைப் கதைதான். இணையத்திரை த்ரில்லர்கள் எல்லாம் 100 நிமிடங்களுக்குள் இருக்கும் காலமிது. 150 நிமிடங்கள், அதில் மான்டேஜ் பாடல்கள் என 'கதை சொல்லு ராம்' நிலையில் நகர்ந்த திரைக்கதைதான் படத்தின் வில்லன். ஒரு ஸ்லோ பர்ன் த்ரில்லராக 'ராத் அகேலி ஹை'யை பார்க்கலாம்.

ஒரு பக்க கதை

சில ஆண்டுகள் தாமதம்தான் என்றாலும், ஃபிரெஷ்ஷாகவே இருந்தது பாலாஜி தரணிதரனின் `ஒரு பக்க கதை'. ஆணின் துணையில்லாமல் பிறக்கும் அதிசயக் குழந்தையைக் கடவுளாக்கி அபகரிக்க நினைக்கும் மதத்தின் தந்திரத்தை நகைச்சுவையுடனும் உணர்வு பூர்வமாகவும் சுட்டிக் காட்டியது இந்தத் திரைப்படம். சாதாரண மனிதர்கள், அசாதாரண நிகழ்வுகள், அதையொட்டிய நகைச்சுவை, சின்னச் சின்னக் குழப்பங்கள் ஆகியவற்றைத் தனக்கான டெம்ப்ளேட்டாக உருவாக்கியிருந்தார். ஆனால், அவரின் கிளிஷேவான நீண்ட நெடிய டிராலி ஷாட்கள், தொடர்ந்து ரிப்பீட்டாகும் காட்சிகள், அதீத க்ளோஸ்அப் போன்றவை இதிலும் விரவிக்கிடப்பது சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆன்மிக அரசியலைச் சாடியிருப்பதும் அதைப் பிரசாரமாக இல்லாமல் மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய சுவாரஸ்யமான படமாகத் தந்த வகையில் ஒரு பக்க கதை, பக்கா கதை!

Axone

டெல்லியில் வசிக்கும் புலம்பெயர்ந்த வட கிழக்கு மக்களின் ஒரு நாள் வாழ்க்கையைப் பேசியது 'அக்கியோன்'. தங்களின் தோழிக்காக, ஒருவித கடுமையான வாடை வரும் வட கிழக்கு உணவான அக்கியோனை சமைக்க வேண்டும். ஆனால், அதற்கு வரும் இடையூறுகளும், வட கிழக்கு மக்களை அர்பன் வாழ் டெல்லி மக்கள் பார்க்கும் பார்வையும்தான் கதை. நம்முடன் இருக்கும் மனிதர்களின் உணவுமுறைகளையும், மக்களையும் புரிந்துகொள்ளாமல் நாம் ஏளனம் செய்யும் போக்கைக் கண்டித்து எடுக்கப்பட்டு இருக்கும் 'அக்கியோன்' மிக முக்கிய முயற்சி.

தில் பெச்சாரா

2020-ல் சுஷாந்த் சிங்கின் தற்கொலை நாட்டையே உலுக்கிய ஒன்றாகிப்போனது. அவரின் தற்கொலைக்குப் பிறகு அவரின் கடைசி படமான 'தில் பெச்சாரா' ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக, அதுவும் அனைவரும் இலவசமாகப் பார்க்கும்படி வெளியானது. ஆங்கிலத்தில் வெளியான அமரக்காதல் கதையான 'The Fault In Our Stars' படத்தையும் அதன் மூலக்கதையான புத்தகத்தையும், பாலிவுட் தன் பாணியில் இங்கே ரீமேக் செய்திருக்கிறது. தைராய்டு கேன்சரால் ஆக்ஸிஜன் சிலிண்டருடனே சுற்றும் கிஸி பாசுவும், எலும்புப் புற்றுநோயால் ஒரு காலை இழந்த ரஜினி ரசிகன் மன்னி என்கிற இமானுவேல் ராஜ்குமார் ஜூனியரும் காதலில் விழுகிறார்கள். ஒரு முடிவற்ற பாடல் கிஸி பாஸுவைத் துரத்த, அந்த இசையமைப்பாளரைத் தேடிப் பிடிக்க மன்னி உதவுகிறான். கூடவே பார்வையை இழந்துவரும் மன்னியின் நண்பனுக்காக அவனும் கிஸியும் ஒரு குறும்படத்தில் நடிக்கிறார்கள். தவிர்க்க முடியாத மரணம் மன்னி - கிஸி வாழ்வை மட்டும் விட்டுவிடுமா என்ன? சுஷாந்த்தின் மரணத்தோடு பொருந்திப் போகிற பல காட்சிகளை உள்ளடக்கிய படமாக இது இருந்ததால் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் ஏகப்பட்ட உணர்வுகளை இது கிளறிவிட்டது எனலாம். அதேபோல் ரஹ்மானின் இசை பெரிய டிரெண்டு ஆகவில்லை என்றாலும், சில பாடல்கள் படத்துடன் பார்க்கையில் கலங்கச் செய்தன. என்னதான் அசல் படைப்புக்கு நிகராக இது அமையவில்லை என்றாலும் சுஷாந்த் என்ற ஒற்றை காரணி படத்துக்கு ஆகப்பெரும் பலம் சேர்த்தது. அந்த வகையில் சுஷாந்த்துக்கான இறுதி அஞ்சலியை, பாலிவுட் சுஷாந்தை வைத்தே கொடுத்தது நெகிழ்ச்சியானதொரு நிகழ்வு!

லூடோ

ஹைப்பர்லிங்க் சினிமாக்கள் இந்திய அளவிலேயே மிகவும் குறைவு. அதிலும் ஹிட் ஆவது வெகு சொற்பம்தான். இந்தப் பட்டியலின் லேட்டஸ்ட் என்ட்ரி அனுராக் பாசுவின் 'லூடோ'. கிட்டத்தட்ட நூறாண்டுகளாக சினிமாவில் பேசப்படும் அதே 'எது தர்மம் - எது அதர்மம்' வகை கதைதான். ஆனால் அதை லூடோ ஆட்டத்தைப் போல நான்கு கதைகள் வெவ்வேறு மூலைகளிலிருந்து தொடங்கி நடுநடுவே ஒன்றை மற்றொன்று கடந்து இறுதியாக சுபம் போட்டு முடிக்கிறார் அனுராக். அபிஷேக் பச்சன், ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, ஃபாத்திமா சனா ஷேக், சன்யா மல்ஹோத்ரா என நடிகர்கள் தேர்விலேயே பாதி கிணறு தாண்டிவிட்டார் இயக்குநர். மீதிக்கிணறு தாண்ட காமெடி நிறையவே கைகொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவும் அனுராக்கே செய்திருப்பதால் கலர்ஃபுல்லாய் மின்னுகின்றன காட்சிகள். சில க்ளிஷேக்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒரு ஜாலியான கமர்ஷியல் காமெடி படம் இந்த 'லூடோ'.

Welcome Home

'இதயம் பலவீனமானவர்கள் இந்தப் படத்தை பார்க்கவேண்டாம்' என்கிற டிஸ்க்ளையமரோடுதான் படத்தின் ட்ரெய்லரே வெளியிடப்பட்டது. 'ஏதாவது பப்ளிசிட்டி ஸ்டன்ட்டா இருக்கும்' என நினைத்தவர்களை 'இல்லை' என மாற்றி நினைக்க வைத்தது படத்தின் கதையும் படமாக்கப்பட்ட விதமும். மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக அந்த வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு எல்லாம் பயணப்படுகிறார்கள் இரு பள்ளி ஆசிரியைகள். வழியில் ஒரே ஒரு வீடு மட்டுமே உள்ள கிராமம் ஒன்றும் இருக்கிறது. அந்த வீட்டின் கதவை இவர்கள் தட்டும் சமயம் வெளியே அடைமழை பிடித்துக்கொள்கிறது. வீட்டுக்குள் போயே ஆகவேண்டும், ஆனால் கதவு திறப்பதாயில்லை என இவர்கள் பரிதவிக்கும் நேரம் மெதுவாக திறந்து வழிவிடுகிறது வாசல். அக்கதவுகளுக்கு பின்னால் இருக்கும் பயங்கரங்களே கதை. கேட்பதற்கு பேய்க்கதை போல இருந்தாலும் பேய்ப்படம் அல்ல. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நமக்கு திக்திக் தருணங்களை பரிசளித்துக்கொண்டே இருக்க, மற்றொருபக்கம் ஆசிரியைகளாக வரும் காஷ்மீரா இரானியும், ஸ்வர்தா திகலேயும் படத்தைத் தூக்கிச் சுமக்கிறார்கள். வன்முறைகள் நிறைந்த 18 பிளஸ் படம் இது. ஆனால் ஒரு சிறப்பான த்ரில்லர் அனுபவம்.

ஷகுந்தலா தேவி

பெங்களூரில் வறுமை சூழல் வாழ்க்கையில் பிறக்கும் சகுந்தலாதேவிக்கு, சிறு வயதிலேயே கணிதத்தின் மீதான ஆர்வம் வருகிறது. ஒரு ஷணத்தில் அவரால் எந்த சாதாரணமான கணக்குக்கும் பதில் சொல்ல முடிகிறது. ஷகுந்தலா தேவியை கணித மேதையென பலர் அறிந்திருந்திருப்பார்கள். அவரின் ஜோசிய நம்பிக்கைகளும், தன் பால் ஈர்ப்பாளர்கள் குறித்தான அவரின் புத்தமும் பலருக்கும் வெளியே தெரியாத விஷயங்கள். இந்திரா காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்ததைத் கூட பதிவு செய்யும் திரைப்படம், ஏனோ இவற்றை தொட்டும் தொடாமல் சென்றது சின்ன நெருடல். சகுந்தலா தேவியின் வாழ்க்கை சுவாரஸ்யங்களுக்காகவும், வித்யா பாலனின் அப்பழுக்கற்ற நடிப்புக்காகவும் பேசப்பட்டது ஷகுந்தலா தேவி!

கார்கோ

இறந்தபின்னர் கணக்குப் பார்த்து அடுத்த ஷிஃப்ட்டுக்கு ஆன்மாவை தயார் செய்யும் எமதர்மராஜா நிஜத்தில் இருந்தால் எப்படி இருக்கும். நெட்பிளிக்ஸில் வெளியான கார்கோ திரைப்படத்தின் ஒன்லைன் இதுதான். இறந்தவர்களின் உடல் கார்கோவில் வந்து இறங்க, அவர்களை கன்வின்ஸ் செய்து, மூளைச்சலவை செய்து, காயத்தை குணப்படுத்தி, அடுத்த பிறவிக்கு தயார் செய்யும் வேலை பிரஹஸ்தாவுடையது. பல ஆண்டுகளாக தனியாகவே வேலை பார்த்துப் பழகிய பிரஹஸ்தாவுக்கு புதிதாக ஒரு உதவியாளர் கிடைக்கிறார். அடுத்து என்ன என்பது மீதிக் கதை. கம்மியான பட்ஜெட்டில் இந்திய புராணங்களை சயின்ஸ் ஃபிக்‌ஷனுக்குள் நுழைத்து ஜாலியான திரைக்கதை மூலம் ஆச்சர்யப்படுத்தியிருந்தார் பெண் இயக்குநரான ஆரத்தி காதவ்.

சீரியஸ் மென்

இந்த உலகில் முன்னேற அனைவரும் ஏமாற்றுகிறார்கள் என்பதை நகைச்சுவைப் படமாக எடுத்திருந்தது 'சீரியஸ் மென்'. விண்வெளி ஆய்வாளர் அரவிந்த் ஆச்சார்யாவிடம் (நாசர்), உதவியாளராக வேலை பார்க்கிறார் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அய்யன் மணி (நவாஸூதீன் சித்திக்கி). நாசர், நவாஸுதீன் அளவுக்கு நடிப்பில் அசத்தியிருந்தான் சிறுவனான ஆக்‌ஷத் தாஸ். பத்திரிகையாளர் மனு ஜோசபின் நாவலை மையமாகக் கொண்ட படம் என்றாலும், ஜாதிய படிநிலைகள் பற்றிய புரிதல் போதாமையும், எல்லோரையும் ஒரே தட்டில் வைத்து விவாதம் செய்யும் விஷமத்தனமும் படம் முழுக்க விரவி இருந்தன. சர்ச்சைகள் இருந்தாலும், வாழ்க்கை போராட்டங்களின் தகிடுதத்தங்களைக் காட்டி சில இடங்களில் ரசிக்க வைத்தது சீரியஸ் மென்.

19-ம் நூற்றாண்டில் அப்போதைய பெங்கால் பிராந்தியத்தில் நடக்கும் கதை. திருமண உறவு என்றால் என்னவென்றே அறியாத 5 வயது புல்புல்லை வயதில் மூத்தவரான வசதிப்படைத்த ஒருவருக்குத் திருமணம் செய்துவைக்கின்றனர். மாப்பிள்ளையின் கடைசி தம்பி சத்யாவுக்குக் கிட்டத்தட்ட புல்புல்லின் வயது என்பதால் அவர்கள் இருவரும் நண்பர்களாக வளர்கின்றனர். இருவருக்கும் இடையே நெருக்கம் இருப்பதாய் உணரும் கணவன், தன் சகோதரன் சத்யாவை லண்டனுக்குப் படிக்க அனுப்பிவிடுகிறான். 20 வருடங்களுக்குப் பின் சொந்த ஊர் திரும்பும் அவன், இங்கே எல்லாம் தலைகீழாக மாறியிருப்பதை உணர்கிறான். ஊருக்குள் இரவானால் ஒரு விநோத சூனியக்காரி உலவுகிறாள். ஆண்களைக் குறிவைத்துக் கொல்கிறாள். யார் அவள், சூனியக்காரியா, மகா காளியா... விடைகளைத் தேடுகிறான் சத்யா. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இந்தப் படத்தைத் தயாரித்தது அனுஷ்கா ஷர்மா. புல்புல்லாக நடித்திருந்த திருப்தி டிமிட்ரி அட்டகாசமானதொரு நடிப்பை வழங்கியிருந்தார். 'விஸ்வரூபம்' வில்லன் ராகுல் போஸுக்கு இதில் டபுள் ரோல்! பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளைச் சாடும் இந்தப் படத்தில், முழுக்க முழுக்க ரத்த வண்ணத்தில் ஃபேன்டஸி இழையோடியது. நல்லதொரு திகில் படமாக இதை அணுகமுடியாது என்றாலும், கதைக்களம், சொன்ன மெசேஜ், நடிகர்களின் பங்களிப்பு, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்களுக்காகத் தாராளமாக ஸ்ட்ரீம் செய்யலாம்.

AK vs AK

40 வருடங்களாக பாலிவுட்டில் வலம்வரும் ஒரு பக்கா கமர்ஷியல் நடிகரும், சினிமா எனும் கலையைத் தன் வாழ்வாக நினைத்து, அதில் புதிய முயற்சிகளைத் தயங்காமல் செய்துவரும் ஒரு கிளாஸ் இயக்குநரும், நிஜ வாழ்வில் மோதிக்கொண்டால் எப்படி இருக்கும்? அனில் கபூரின் மகள் சோனம் கபூரை, அனுராக் காஷ்யப் கடத்திவிடுகிறார். விடிவதற்குள் மகள் இருக்கும் இடத்தை அனில் கண்டுபிடிக்க வேண்டும். ஆம், இதுதான் 'நிஜமான' ஒன்லைன். த்ரில், பரபரப்பு எல்லாம் தாண்டி, நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பாகப் படம் நகர்வது சுவாரஸ்யத்தைக் கூட்டியது. அனுராகுக்கும், அனில் கபூருக்கும் இருக்கும் தனிப்பட்ட பகை, பாலிவுட்டின் வாரிசு அரசியல், அனுராக் மீது தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனங்கள் என எல்லாவற்றையும் தன் வசனங்களால் சீண்டியிருக்கிறார் அனுராக் காஷ்யப். பலே சாரே! இப்படியொரு கதைக்கருவை உருவாக்கிய அவினாஷ் சம்பத்தும் அவருடன் இதற்குத் திரைக்கதை அமைத்து இயக்கவும் செய்த விக்ரமாதித்ய மோட்வானேவும் நிச்சயம் பாராட்டலாம். பிளாக் காமெடி வகையறாவான இந்தப் படம் ஒரு வித்தியாசமான, அதே சமயம் ஒரு பக்கா என்டர்டெயின்மென்ட் பேக்கேஜ்!

எல்லோரும் கொரோனா நாள்களில் முடங்கியிருந்த நேரத்தில் குறும்படம் எடுத்துக்கொண்டிருக்க, ஃபகத் பாசில் & குழு ஒரு முழு நீள த்ரில்லர் சினிமாவை எடுத்திருந்தார்கள். ஒரு த்ரில்லர், அதில் ஒரு சமூகப் பொறுப்புள்ள விஷயத்தை இணைத்தது என அட்டகாசமாக இதை எழுதி இயக்கி எடிட் செய்திருந்தார் மகேஷ் நாராயணன். ரோஷன் மேத்யூ காதலால் கசிந்துருகி மணமுடிக்கவிருக்கும் தர்ஷனா ராஜேந்திரன் சட்டெனக் காணாமல் யோய்விடுகிறார். இணைய வழியில்துப்புத் துலக்குவதில் கில்லாடியான ஃபகத் பாசில் அப்பெண்ணைக் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பது தான் 'C U SOON' படத்தின் கதை. கிரியேட்டிவிட்டிக்கு எந்த லாக்டெளனும் தடை விதிக்க முடியாது என்பதை அழுத்தமாய் நிரூபித்தது இந்த மலையாள சினிமா.

மிடில் கிளாஸ் மெலடீஸ்

மிடில் கிளாஸ் குடும்பங்களில் நிகழும் அன்றாடப் பிரச்னைகளைப் பற்றி ஜாலியாகப் பேசியது மிடில் கிளாஸ் மெலடீஸ். அப்படியே வசனங்களை மலையாளத்துக்கு மாற்றிவிட்டால் 'நமது அன்புடன் கிராமங்களிலிருந்து' ஒரு மலையாள சினிமா ரெடி. அந்த அளவுக்கு படம் இயல்பாக இருந்தது. மூட நம்பிக்கை எள்ளல்களைக்கூட எந்த சுளிப்பும் இல்லாமல் எளிதாக சொல்லியிருந்தார் இயக்குநர். 'சிங்கப் பெண்ணே' வர்ஷா பொல்லம்மாவைத் தவிர எல்லோருமே புது முகங்கள். விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த்துக்கு இது இரண்டாவது படம். கதையின் போக்கிலேயே வரும் செல்போன் கடைக் காதலி திவ்யாவும் அவ்வளவு அழகு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், மிடில் கிளாஸ் குடும்பங்களின் இயல்பான நகைச்சுவையைப் பேசிய விதத்தில் சிரிக்க வைத்தது இந்த தெலுங்கு சினிமா!



source https://cinema.vikatan.com/tamil-cinema/top-films-released-in-ott-2020-rewind2020