Ad

புதன், 31 மே, 2023

`இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா?’ - என்ன பிரச்னை?!

சிசிடிவி கேமராக்கள் இல்லை, பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் குறைபாடு போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலுள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படுகிறது என்று சமீபத்தில் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி

சென்னையிலுள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சியிலுள்ள அரசு கி.ஆ.பெ.விசுவநாதன் மருத்துவக் கல்லூரி, தருமபுரியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெறுவதாக, இந்த மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் சமீபத்தில் கடிதம் எழுதியது.

உள்கட்டமைப்புக் குறைபாடுகளைக் காரணம் காட்டி, மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்வதால், அந்த மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், புதிதாகச் சேரவிருக்கும் மாணவர்களும், நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள் என்று அரசியல் கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டன.

மா.சுப்பிரமணியன்

“சிறு சிறு குறைபாடுகளுக்காக மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்வது ஏற்புடையதல்ல. நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, அரசியல் ஆதாயத்துக்காக இதைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைக் குறைசொல்லும் விதமாக இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது” என்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.

இந்த நிலையில், ‘போதுமான அடிப்படை வசதிகள் இல்லை... விதிமுறைகளைப் பின்பற்றவில்லை’ என்ற காரணங்களுக்காக சுமார் 150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படவிருக்கிறது என்கிற மற்றோர் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

“குஜராத், அஸ்ஸாம், புதுச்சேரி, தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்ககிலுள்ள மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவக் கவுன்சில கண்காணிப்பில் இருக்கின்றன. ஏற்கெனவே, 40 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்திருக்கின்றன. அந்தக் கல்லூரிகளில், விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன... முழுமையான அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றன என்பதைக் காண்பிக்க வேண்டும்” என்று சுகாதாரத்துறை வட்டாரம் கூறியிருக்கிறது.

மன்சுக் மாண்டவியா

விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றாலோ, போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லையென்றாலோ, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரித்திருந்தார். அதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் ஆய்வு நடத்தியது.

அப்போது, பல மருத்துவக் கல்லூரிகளில் சி.சி.டிவி கேமராக்கள் இல்லை... சி.சி.டிவி கேமராக்கள் இருந்தாலும், அவை சரிவர இயங்குவதில்லை... பயோமெட்ரிக் சரிவர செயல்படுவதில்லை... பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டில் பணியாளர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்படவில்லை போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டன. பல மருத்துவக் கல்லூரிகளில் பணியிடங்கள் காலியாக இருந்தன. இவை ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தைத் திரும்பப்பெற முடிவுசெய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை வட்டாரம் கூறியிருக்கிறது.

150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டால், அது பல சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக, தற்போது அங்கு படித்துவரும் ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள்.

மத்திய அரசு தரப்பில், மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறித்து கேள்விகள் எழுகிறது. அதனை சரி செய்தால் தான் தரமான மருத்துவ மருத்துவ கல்வியை உறுதி செய்ய முடியும் என்கிறார்கள்.

இது குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் நாம் பேசியபோது, “சிறு சிறு குறைபாடுகளுக்காக மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தையே ரத்துசெய்வது மிகவும் தவறானது, கடும் கண்டனத்துக்குரியது” என்றார்.

கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி

மேலும் அவர், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை. அங்கு பேராசிரியர்கள் உட்பட யாரும் கிடையாது. ஒரு செங்கல் மட்டுமே இருக்கிறது. ஆனால், மாணவர்கள் சேர்க்கை நடத்தி, ராமநாதபுரத்தில் ஒரு வாடகைக் கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்? கட்டடமே கட்டாமல் மத்திய அரசு மருத்துவக் கல்லூரியை நடத்தலாம்... ஆனால், 1938-ம் ஆண்டு கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியில் சிசிடிவி இல்லை என்று சொல்லி அங்கீகாரத்தை ரத்து செய்வதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது” என்று ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறினார்.!



source https://www.vikatan.com/government-and-politics/politics/are-150-medical-colleges-losing-recognition-in-india

TNEA 2023 Engineering Courses | வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் இன்ஜினீயரிங் பிரிவுகள் எவை?- ஒர் அலசல்

வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் இன்ஜினீயரிங் கோர்ஸ்கள், எந்தத் துறையில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது, வளர்ந்து வரும் துறைகள் குறித்து மனிதவள மேம்பாட்டு நிபுணர் திரு சுஜித்குமாருடன் கல்வியாளர் திரு. ரமேஷ் பிரபா மேற்கொண்ட கலந்துரையாடல் இங்கே.

கடந்த பல ஆண்டுகளாகவே இன்ஜினீயரிங் ஒரு கிண்டல் அடிக்கக்கூடிய ஒரு பொருளாகவே இருந்துவருகிறது. திரைப்படங்களில் கேலி செய்யப்படுவது தாண்டி, கேவலப்படுத்தக்கூடிய வசனங்கள், மீம்ஸ் பலவற்றைப் பார்க்கிறோம். இதுகுறித்து ரமேஷ் பிரபா சுஜித்குமாரிடம் கேட்டபோது, "மருத்துவத் துறையில் உள்ளவரையோ, ஆசிரியரையோ தவறாகப் பேச முடியாது.

நிபுணர் திரு சுஜித்குமார்- கல்வியாளர் திரு. ரமேஷ் பிரபா

வழக்கறிஞர் ஒருவரைத் தவறாகப் பேசவேண்டும் என்று நினைத்தாலே அடிப்பார்கள். ஆனால் இன்ஜினீயரிங் படிப்பவர்களே அதைக் கலாய்த்துக்கொண்டு, கேலி செய்து கொண்டு இருக்கிறார்கள். பொறியியல் தொழில் வல்லுநர்கள் தானாகவே முன்வந்து அதைப் பாதுகாக்கவில்லை என்றால் இவ்வாறு நடந்துகொண்டுதான் இருக்கும். 

மற்றொரு வகையில் கூறினால், எங்கே பார்த்தாலும் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற பிம்பம் உருவாகியுள்ளது. சரி, அவ்வாறு கூறுவது உண்மையென்றால் வேறு எந்தத் துறையில் படித்தால் வேலை கிடைக்கும்? புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தால் பொறியியல் படிப்பில்தான் வேலை வாய்ப்பு விகிதம் அதிகமாக உள்ளது. பொறியியல் என்பது விருப்பமுள்ள துறையாக இருந்துவந்ததைத் தாண்டி, மிகவும் சுலபமாகக் கிடைக்கும் ஒன்றாக மாறிவிட்டதால்தான் இந்த மாதிரியான கேலி, கிண்டலுக்கு உள்ளாகிறது. நல்ல கல்லூரியில் நன்கு படித்தால் இதுபோன்று வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள துறை வேறு எதுவும் இல்லை.

Engineering Courses

எடுத்துக்காட்டாக ஒரு மீமை எடுத்தோம் என்றால், ஒரு பக்கம் பரோட்டா மாஸ்டருக்கு 18,000 சம்பளம், சாப்ட்வேர் இன்ஜினீயருக்கு 7,000 சம்பளம் என்று போட்டிருக்கும். ஒரு நல்ல பரோட்டா மாஸ்டராக இருந்தால் 18,000 என்ன, ஒரு லட்சம் வரைகூட சம்பாதிக்க முடியும். சாதாரண சமையல்காரராக இருந்தால் அது கிடைக்காது. தற்போது பார்த்தோம் என்றால், தொடக்க நிலையில் உள்ள சம்பளத்தையும் இதையும் ஒப்பிடுவார்கள்.

இன்று ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பராமரிப்பு வேலை செய்யும் ஒருவரின் சம்பளம், பதினெட்டாயிரம். தொடக்க நிலையில் உள்ள சாப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பளம் 20,000. ஆனால் ஒரு ஐந்தாறு வருடங்கள் கழித்து இவரது சம்பளம் அறுபதாயிரம், எழுபதாயிரம் என்றாகும். ஆனால் பராமரிப்பு வேலை செய்பவரின் சம்பளம் 20,000 என்ற நிலையிலே இருக்கும். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். திறன்களை வளர்த்துக்கொள்ள பொறியியல் படிப்பு போன்று வேறு எங்கும் முடியாது. 

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்தோம் என்றால் கம்ப்யூட்டர், ஐ.டி., இ.சி.இ., மெக்கானிக்கல், சிவில் போன்ற சிலவற்றை மட்டுமே பார்க்க முடியும். அதன் பிறகு ஏரோநாட்டிக்கல், பெட்ரோ கெமிக்கல் போன்ற துறைகள் வலுப்பெற்று வந்தன. இன்றைய காலகட்டத்தில் பார்த்தோம் என்றால் artificial intelligence and data science எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் போன்ற கணினி அறிவியலுக்குத் தொடர்புள்ள பிரிவுகள் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவை உள்ளன.

work place ( Representational Image)

இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், பொருளாதாரப் பின்னடைவு உள்ள நிலையிலும்கூட ஐ.டி. நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வேலைக்கு எடுக்கின்றன. இந்த மாதிரி ஒரு நிலை உள்ள காரணத்தால் கல்லூரிகளும் அதற்கு ஏற்ப துறைகளைக் கொண்டுவருகின்றன. "படித்து வரும்போது மாணவர்கள் எந்த மாதிரியாக தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்?" என்று கேட்டபோது, "கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் பரவலின் காரணமாக Mooc என்று சொல்லக்கூடிய இணைய வழி கல்வி பெரிதும் வளர்ந்துவிட்டது. சில இடங்களில் கல்லூரிகள் அற்பமாகிவருகின்றன.

Engineering

ஏதோ ஒரு குக்கிராமத்தில் உள்ள கல்லூரியில் ஆசிரியர் சரியில்லை என்று கூற முடியாது. அனைத்துப் படிப்புகளும் ஆன்லைனில், கல்லூரியில் கிடைப்பதைவிடக் குறைந்த செலவில் கிடைக்கின்றன. Coursera, Khan academy, udemy, உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் படிப்புகளை நமக்கு வழங்குகின்றன. ஒழுங்காகப் படிக்க முடியவில்லை என்றால் ஆசிரியர் சரியில்லை என்று காரணம் காட்டாமல், இந்த மாதிரி ஆன்லைன் கோர்ஸ்களில் படியுங்கள். எந்தத் துறையில் படிக்கிறோமோ, அதன் ஆழம் வரை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அதையும் தாண்டி, ஒன்றிரண்டு சான்றிதழ்ப் படிப்புகள் படிப்பது அதிக அளவில் உதவியாக இருக்கும். கணினி அறிவியல் படிப்பிற்கு Cloud, AWS போன்றவற்றைப் படிக்கலாம்" என்று சுஜித்குமார் கூறினார்.

"ஐம்பதுக்கும் மேற்பட்ட துறைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்தாலும் 'CSE (கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்)-ஐத் தாண்டி உலகத்தில் வேறு எதுவும் வேண்டாம், அதற்காக எவ்வளவு செலவு பண்ணவும் தயார்' என்று நிற்கின்றனர். இதுகுறித்து உங்கள் பார்வை என்ன?" என்று ரமேஷ் பிரபா கேட்டபோது, ”கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த எண்ணம் உச்சக்கட்டத்தில் உள்ளது. படித்தால் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்தான் படிப்பேன் என்ற நிலையில் உள்ளனர். கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், துறை என்பது இரண்டாவது. நான் சொல்வது என்னவென்றால், ஐ.டி. துறையில் வேலை வேண்டும் என்று விரும்பி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. என்று படிக்கிறீர்கள்; அதே கல்லூரியில் ECE, EEE கிடைத்தால்கூட கண்ணை மூடிக்கொண்டு எடுத்துவிடுங்கள்.

Students |Representational Image

கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. படித்தவர்களுக்கு அதைத் தாண்டி வெளியே வேறு எந்தத் துறையிலும் வேலை வேண்டும் என்று வர முடியாது. மற்ற துறை படித்தவர்களுக்கு அந்தப் பிரச்னை இல்லை. அந்தந்தத் துறை சார்ந்த வேலைகளுக்கும் போகலாம் ஐ.டி. வேலைக்கும் போகலாம். நிறைய பேர் யோசிப்பது என்னவென்றால், கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்தால் வேலை கிடைத்துவிடும், இந்தக் கல்லூரியில் படித்தால்‌ வேலை கிடைத்து விடும். இரண்டுமே உண்மை இல்லை.‌

கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு இந்தத் துறை இல்லை என்றால் இதற்கு அடுத்தபடியாக உள்ளது எது என்று பார்க்க வேண்டும். சிலர் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் அல்லது சிவில் இன்ஜினீயரிங் என்று விருப்பங்களில் போடுவார்கள். இரண்டும் ஒவ்வொரு மூலையில் உள்ளவை. மாணவர்களிடம் இது சம்பந்தமான புரிதல் மிகவும் குறைவாக உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இல்லை என்றால் ஐ.டி., அது இல்லை என்றால் ECE, EEE என்று வரவேண்டும்.

தற்போது இருக்கக்கூடிய விமர்சனம் என்னவென்றால், ’500-க்கும் நெருக்கமான பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தேவையா?’ என்பது. நாம் தமிழ்நாட்டிற்கான பொறியாளர்களை மட்டும் உருவாக்கவில்லை; இந்தியாவிற்கான, உலகிற்கான பொறியாளர்களை உருவாக்குகிறோம். பொறியாளர்கள் சிக்கலைத் தீர்ப்பவர்கள், அவர்களை வேலைவாய்ப்பு வைத்துக் குறைத்து மதிப்பிடக் கூடாது. Gross enrollment ratio என்று சொல்லக்கூடிய மொத்தப் பதிவு விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகம் (52%). அனைவரும் பொறியியல் படிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று, திரு. சுஜித்குமார் கூறுகிறார்.

Designing | Representational Image

"ஐ.டி. துறையைத் தாண்டி, ஆட்டோமொபைல், உற்பத்தி, பேங்கிங் போன்ற துறைகளும் வளர்ந்துவருகின்றன. தமிழ்நாடு ’ஆட்டோமொபைல் ஹப்’ என்று அழைக்கப்படுகிறது. ஐ.டி. துறை போன்று அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்காவிட்டாலும் மெக்கானிக்கல் படிக்கும் ஒருவர் நான் ஆட்டோமொபைல் துறையில் வேலை வேண்டும் என்று விரும்பினால், அதில் சிறந்து விளங்கினால் நிச்சயமாக வேலை கிடைக்கும்" என்று கூறுகிறார். 

’ஐ.டி., ஐ.டி. சார்ந்த துறைகளை எடுத்துக் கொண்டால் எந்த மாதிரியான கோர்ஸ்களைக் கற்றுக்கொள்ளலாம்’ என்று கேட்டபோது, ”சைபர் செக்யூரிட்டி, CLOUD, SAP, ORACLE, PYTHON போன்ற சர்ட்டிபிகேட்கள் வைத்துக்கொள்வது நல்லது. அதன் மூலம் சிறந்த துறையில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும்” என்றார். எந்தப் பொறியியல் துறையாக இருந்தாலும் கோடிங் படித்து வந்தால் மிகவும் உதவியாக இருக்கும். சிக்கலைத் தீர்க்கும் அறிவு மற்றும் தகுதித் தேர்வுக்கான அறிவு மிகவும் முக்கியமான ஒன்று.

Representational Image

வேலைவாய்ப்பு வேண்டும் என்பதை இரண்டாவதாக வைத்துக் கொள்ள வேண்டும், அதற்கான செயல்முறைதான் மிகவும் முக்கியமான ஒன்று. இதைச் சரியாகச் செய்து வந்தால் சிறந்து விளங்கலாம். உலக விமர்சனங்களுக்காகப் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாமா வேண்டாமா என்று நினைக்காமல், தனக்கு அதில் ஆர்வம், தகுதி உள்ளது என்று நினைத்தால் தேர்ந்தெடுக்கலாம்.

முக்கியமாக யாரிடம் அறிவுரை பெற வேண்டும் என்று தெளிவாக இருக்க வேண்டும். யாரோ சொல்கிறார் என்று தொழில் துறையின் மீதான ஆசையை விடுவது போன்ற கொடுமையான ஒன்று வேறெதுவும் இல்லை. " என்கிறார்.


source https://www.vikatan.com/education/higher-education/tnea-2023-opportunities-in-engineering-courses

கார்ட்டூன்

கார்ட்டூன்


source https://www.vikatan.com/government-and-politics/politics/cartoon-june-07-2023

இன்றைய ராசிபலன் 1.6.23 | Horoscope | Today Rasi Palan | வியாழக்கிழமை | June 1 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/01062023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

செவ்வாய், 30 மே, 2023

``குற்றம்சாட்டப்பட்டவர் மீதான விசாரணையில் முன்னேற்றம் இல்லை" - உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்

பாஜக எம்.பி-யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றக் கோரிக்கையுடன் சுமார் 30-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மல்யுத்த வீரர்கள் வழக்கு தொடுத்தனர்.

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டப் பிறகே பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட 2 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனாலும், அவர் கைது செய்யப்படாததை எதிர்த்து மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து 5 மாதங்களாக விசாரணை நடத்தப்படுவதாக மத்திய அரசு தரப்பு கூறிவருகிறது. இந்த நிலையில், மல்யுத்த வீரர்கள் கடந்த 28-ம் தேதி புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தபோது டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டு 7 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் இந்திய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துக்கொண்டு பெற்ற மெடல்களை கங்கை நதியில் வீசுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்து நேற்று அதற்கான போராட்டத்தை முன்னெடுத்தபோது பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் சூழ்ந்துக்கொண்டு மெடல்களை கங்கையில் வீசவேண்டாம் என அவர்களை தடுத்து 5 நாட்கள் பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதனால், அந்தப் போராட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

கைது செய்யப்படும்போது மல்யுத்த வீராங்கனை

இந்த நிலையில், உலக மல்யுத்தக் கூட்டமனைப்பு மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், "இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரின் பாலியல் தொல்லை தொடர்பான விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். இதனை உலக மல்யுத்த கூட்டமைப்பு கவனித்து வருகிறது. ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டிருந்தால் இந்த சூழலை தவிர்த்திருக்கலாம். மல்யுத்த வீரர், வீராங்கணைகள் பேரணி செல்ல முயன்றபோது கைது செய்தது மற்றும் ஒரு மாதமாக அவர்கள் போராடிய இடத்திலிருந்து வெளியேற்றியது பெரும் துயரளிக்கும் செய்தியாகும்.

இந்த செயல்களுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. குற்றம்சாட்டப்பட்ட மல்யுத்த சங்க தலைவர் மீதான விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம். உலக மல்யுத்த கூட்டமைப்பு மல்யுத்த வீரர்களுடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்தி அவர்களின் பிரச்னையை கேட்றிந்து பாதுகாப்பு பற்றியும் ஆலோசனை நடத்தும். மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். மேலும், ஒருங்கிணைந்த உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு (ஐஓஏ) மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளனம் ஆகியவற்றின் கமிட்டியிடமிருந்து அடுத்த பொது கூட்டமைப்பு தேர்வு குறித்து 45 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.

உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்

இதனை செய்ய தவறும் பட்சத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த சம்மேளத்தை இடைநீக்கம் செய்யும். மேலும் மல்யுத்த வீரர்களை ‛நியூட்ரல் பிளாக்' உடன் போட்டியில் பங்கேற்க வழிவகை ஏற்படுத்தப்படும்.இந்த விஷயத்தில் ஏற்கனவே உலக மல்யுத்த கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும், இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற இருந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இடம் மாற்றப்பட்டது என்பதையும் நினைவூட்டுகிறோம்'' என தெரிவித்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/world-wrestling-body-condemns-detention-of-wrestlers

Mahindra Bolero MAXX Pick-up City & HD: புதிய டெக்னாலஜி, புதிய வசதிகள், ஆனால் அதே விலையில்!

Mahindra's Exciting Launch: #Bolero #MAXXPickup #Trucks 'City' and 'HD' | New Engines, Technologies, and Features! Incredible Value at Unchanged Prices! Join Motor Vikatan as we take you through the exhilarating launch event of Mahindra's latest additions, the Bolero MAXX Pick-up trucks! Named 'City' and 'HD,' these powerful trucks come packed with brand-new engines, cutting-edge technologies, and a range of exciting features. In our exclusive video coverage, we provide you with a detailed summary of the remarkable enhancements that Mahindra has introduced in these new pickups. From enhanced performance to advanced features, this launch is set to redefine the segment. What's more, Mahindra has gone above and beyond by keeping the price tag unchanged, ensuring exceptional value for money. You won't believe the incredible upgrades that come at such an affordable price! Don't miss out on all the exciting details! Watch the full video on Motor Vikatan channel, and be sure to subscribe for more thrilling automotive content. Stay ahead of the curve with Mahindra's Bolero MAXX Pick-up trucks 'City' and 'HD.' Subscribe now!



source https://www.vikatan.com/automobile/car/mahindra-bolero-maxx-pick-up-city-and-hd-overview

Dhoni: "எங்க ஊரே தோனி ஃபேன்!"- 12 அடி நீள அலகு குத்தி தோனிக்குக் காவடி எடுத்த மன்னார்குடி இளைஞர்!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது. முன்னதாக, சென்னை அணி இறுதிப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேர்த்திக் கடன் வேண்டிக்கொண்டு அலகு குத்தி காவடி எடுத்த ருசிகர சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.
தோனி, ஜடேஜா

ஐபிஎல் தொடரில் 16வது சீசனுக்கான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டி மழையால் தடைப்பட, ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வுபெறுவார் எனத் தகவல் பரவிய நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என தோனியின் ரசிகர்கள் பெரிதும் விரும்பினர்.

இதனால் இறுதிப்போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடியது. பலரும் கேப்டன் தோனி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் பலவிதமான செயல்களில் ஈடுபட்டனர். இதையடுத்து ரிசர்வே டேயான நேற்று நடைபெற்ற போட்டியில் பரபரப்பான சேஸிங் மூலம் தோனி தலைமையிலான மஞ்சள் படை குஜராத் டைடன்ஸை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் ரசிகர்கள் விரும்பியது நிறைவேறியிருக்கிறது.

தோனி படத்துடன் அல்ங்கரிக்கப்பட்ட காவடி

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள தோனி ரசிகர்கள் இதனைத் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். "என் மீது பேரன்பைச் செலுத்தும் ரசிகர்களுக்கு நான் எதாவது செய்ய வேண்டும். இன்னொரு சீசன் ஆட முயற்சி செய்யவேண்டும்" என தோனி பதிலுக்கு உருகியிருக்கிறார்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த இளந்தமிழன் என்ற இளைஞர் தோனி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் வேண்டி விரதம் இருந்து 12 அடி நீள அலகு குத்தி காவடி எடுத்திருப்பது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

இது குறித்து இளந்தமிழனிடம் பேசினோம். "மன்னார்குடி அருகே உள்ள முதல்சேத்தி என்னோட சொந்த ஊர். பி.பி.ஏ படித்திருக்கும் நான் தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறேன். 2011ல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்றதிலிருந்தே எனக்கு தோனி மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் அவருடைய மேனரிஸம் என்னைக் கவர்ந்தது. தல தோனிக்காக ஒரு போட்டியைக் கூட மிஸ் பண்ணாம டி.வியில் பார்ப்பேன்.

ஜடேஜா, தோனி, ராயுடு | MI vs CSK

தோனி பெயரில் எங்க பகுதியில் போட்டிகள் நடத்துவோம். நான் மட்டுமல்ல எங்க ஊரே தோனி ஃபேன்தான். தற்போதைய ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வு பெற இருப்பதாகப் பேசப்பட்டது எனக்குள் வருத்தத்தை உண்டாக்கியது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அவர் ஓய்வு பெற்றுச் செல்லும் போதும் கையில் வெற்றிக் கோப்பை இருக்க வேண்டும் என விரும்பினேன். தோனி திறமை மீது அபாரமான நம்பிக்கை இருந்தாலும் எந்தத் தடையும் இல்லாமல் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்.

எங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு அலகு குத்தி காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டேன். இதற்காகக் காப்புக் கட்டிக்கொண்டு ஒரு வாரம் வரை விரதம் இருந்தேன். இறுதிப்போட்டி நாளான ஞாயிறன்று காவடியின் பின் பகுதியில் மெகா சைஸ் தோனி படத்தை வைத்து அலங்கரித்தேன். 'உன்னைச் சாய்க்கப் பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம்தான்' என்ற பாடல் வரி அடங்கிய பிளக்ஸை கையில் பிடித்துக்கொண்டேன்.

மன்னார்குடியில் தோனி படத்துடன் காவடி எடுத்த இளந்தமிழன்

தல தோனியை வணங்கி, வாயில் 12 அடி நீள அலகு குத்தி காவடி எடுத்து கோயிலுக்குச் சென்றேன். என்னுடன் பென்சோபின், ரட்சகன் என்ற இருவரும் அலகு குத்தாமல் காவடி மட்டும் எடுத்தனர். 'இதுக்கெல்லாம் அலகு குத்தி காவடி எடுப்பியா' எனச் சிலர் கமென்ட் செய்ய, 'என் கடவுள் தோனிக்கு இந்த பக்தனின் சிறிய காணிக்கை' என்று அவர்களை வாயடைத்தேன். எல்லாம் முடிந்து டி.வி முன் உட்கார்ந்தால் மழையில் ஆட்டம் தடைப்பட ஏமாற்றமாகி விட்டது.

இதனையடுத்து திங்கள் அன்று நடந்த ஆட்டத்தை எங்கள் ஊர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள், மாரியம்மன் கோயிலில் அமர்ந்துதான் பார்த்தோம். சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கின் போதும் மழை வந்தது. என்ன தடை வந்தாலும் 'கப்பு முக்கியம் தோனி' என மனசுக்குள்ள சொல்லியபடி வேண்டிக்கொண்டே இருந்தோம்.

இளந்தமிழன்

தோனி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டான போதும் மனம் தளரவில்லை. கடைசி இரண்டு பாலின் போதும் 'மாரியம்மா ஜெயிக்க வச்சிடு' என கோரஸாகக் கத்தினோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. வேண்டுதல் பலித்தது. ஜெயிச்சதுமே விண்ணைப் பிளக்க 'தோனி, தோனி...' என கோரஸாகக் கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்" என்றார்.



source https://www.vikatan.com/lifestyle/culture/this-hardcore-fan-from-mannarkudi-performed-rituals-for-his-idol-dhoni

`Engagement முடிஞ்சதும் என்னை கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டா; ஏன்னா?'Anthony Daasan & Rita Exclusive



source https://cinema.vikatan.com/when-engagement-was-over-she-said-wouldn-t-marry-me-anthony-dasan-rita-couple

சாத்தூர்: பிரிந்து, பின் இணைந்த கணவன், மனைவி... திருமணம் மீறிய உறவால் பெண் கழுத்தறுத்து கொலை!

சாத்தூர் அருகே திருமணம் மீறிய உறவால் பெண்ணை, கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸாரிடம் பேசுகையில், "விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரின் மனைவி மகேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது40). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்தநிலையில் மகேஸ்வரிக்கும், சங்கரநத்தம் பகுதியை சேர்ந்த பரமசிவம்(50) என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த முத்துப்பாண்டி, மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், திருமணம் மீறிய தொடர்பு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர்

இந்த விவகாரம் பெரிதாகவும், கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மகேஸ்வரியும், முத்துப்பாண்டியும் பிரிந்து வாழ்வதென முடிவெடுத்து சிலகாலம் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில் எதிர்கால நலன்கருதி கணவன், மனைவி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வதென முடிவெடுத்துள்ளனர். இதற்காக சமாதான பேச்சுவார்த்தை நடத்திய உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். கணவருடன் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து, தான் வசித்து வந்த வாடகை வீட்டை காலி செய்வதற்காக சென்றுள்ளார் மகேஸ்வரி. ஆனால் அதன்பின் அவர், கணவரின் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மகேஸ்வரி வசித்து வந்த வாடகை வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்த தகவல் ஏழாயிரம்பண்ணை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கபபட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மகேஸ்வரி உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்துகையில், மகேஸ்வரியுடன் திருமணம் மீறிய உறவில் இருந்த பரமசிவத்திற்கும், அவருக்கும் இடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் மகேஸ்வரி, கணவருடன் சமாதானமாகி செல்வதை அறிந்து, மகேஸ்வரி வசித்துவந்த வாடகைவீட்டுக்கு வந்த பரமசிவம், அவருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மகேஸ்வரியை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியது தெரியவந்தது. இதுதொடர்பாக கணவர் முத்துப்பாண்டியிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் நேரில் ஆய்வு செய்தார். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொலை சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பரமசிவத்தை தேடிவருகின்றனர்" என்றனர்.



source https://www.vikatan.com/crime/sattur-women-murdered-for-extra-affairs-issue

இன்றைய ராசிபலன் 31.5.23 | Horoscope | Today Rasi Palan | புதன்கிழமை | May 31 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/31052023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

திங்கள், 29 மே, 2023

மே 28 உலகப் பட்டினி தினம்: உணவுப் பற்றாக்குறைக்கு உண்மையான காரணம் என்ன?

மனிதன் உழைப்பதற்கு முக்கியமான காரணம் உணவு. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை. ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு உழைக்கும் தொழிலாளியும், தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு உறங்கும் தாய்மார்களும், காலையில் காசு இல்லாமல் 2 இட்லி மட்டும் அல்லது டீ குடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும் இங்கு ஏராளம்.

பசி

ஒரு வேளை உணவுக்காக யாசிக்கும் கைகளைத் தினமும் பேருந்து நிலையங்களில், கடற்கரைகளில், தெருக்களில் பார்க்கலாம். இவர்களுடைய நிலைக்கு அவர்களா காரணமாக இருக்க முடியும்? கண்டிப்பாக இல்லை.

இங்கு இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூக கட்டமைப்பு. வருடா வருடம் மே 28 அன்று உலகப் பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தியும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.  

மக்கள் உணவின்றி தவிப்பதற்கு போர், உள்நாட்டு நெருக்கடி, பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர், பெருந்தொற்று, உணவு பங்கீட்டில் குறைபாடு, சுரண்டல் போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன. போரும், சுரண்டலும், உணவுப் பங்கீட்டில் குறைபாடும் மனிதர்களால் ஏற்படக்கூடியது. 1943 - 1944  ஆண்டுகளில் உலக மக்களின் கவனத்தைப் பெற்ற பெங்கால் வறட்சியில் (Bengal Famine) லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். இதற்கு உணவுப் பற்றாக்குறையைக் காட்டிலும் முறையான உணவுப் பங்கீடு இல்லாததுதான் காரணம் என்று பொருளாதார வல்லுநர் அமர்த்தியா ஷென் தெரிவித்திருந்தார்.  

வறுமை

உலகில்  பட்டினியும் வறுமையும் நிறைந்திருக்க காரணம்   உணவும், பொருளாதாரமும் குறிப்பிட்ட மக்களிடம் குவிந்து கிடைப்பதே. பசியும் பட்டினியும் வளரும் நாடுகளிலே பெரும் பிரச்னையாக உள்ளது. 2022 ஆண்டில் உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் தற்போதைய ஆட்சியில் மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் பல இருந்தும் நடைமுறை சிக்கல்கள் ஏராளம். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக, பசியால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இருக்கின்றன. ஆனால், மக்களும் அதைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை; நிர்வாகமும் சரியாக இல்லை.

பெருந்தொற்று, பேரிடர் போன்ற காலங்களில் உணவு  பற்றாக்குறையை சமாளிப்பதற்கான முறையான மேலாண்மை திட்டம் அரசிடம் இல்லை. கொரனா காலங்களில் தொழில்கள்  முடங்கியபோது எண்ணற்ற மக்கள் உணவுக்கும் பாலுக்கும்கூட காசு இல்லாமல் தவித்தனர். ஆனால், இவர்களுக்கு அரசால்  என்ன செய்ய  முடிந்தது. சிறிய நிவாரணம் மட்டுமே கொடுக்க முடிந்தது.

வறுமை

அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை. அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம், பெரும்பணக்காரர்களிடம் தேக்கி வைக்கப்பட்ட பணத்தை எல்லாருக்குமானதாக  பங்கிட்டிருந்தாலே வறுமை ஒழிந்திருக்கும். இந்தியா பட்டினிக் குறியீட்டில் 107-வது இடத்தில் இருப்பதற்கு அரசியல்  முக்கியமான காரணமாக இருக்கலாம். வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்களின் அடிப்படை தேவைகளே கேள்விக்குறியாக இருப்பதைக் கையாள்வதற்கு தற்போதைய அரசு அரசியலை கையிலெடுக்கிறது.

மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், கல்வி ஆகியவை சமமாகக் கிடைக்கும் சமூகத்துக்காக செயல்படுவதே பட்டினி தினத்தில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும்.



source https://www.vikatan.com/government-and-politics/policy/may-28-world-hunger-day-what-is-the-real-cause-of-food-shortages

Doctor Vikatan: சத்தமாகப் பேசினாலோ, பலமாகச் சிரித்தாலோ வீஸிங் அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் தோழிக்கு வீஸிங் பாதிப்பு இருக்கிறது. அதனால் அவள் சத்தமாகப் பேசவோ, சிரிக்கவோ பயப்படுவாள் இனிப்பு சாப்பிடுவது, பலமாகச் சிரிப்பது, சத்தமாகப் பேசுவது போன்ற செயல்களால் ஆஸ்துமாவும் வீஸிங் பாதிப்பும் அதிகரிக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

உங்கள் கேள்விக்கான பதில், நீங்கள் சாப்பிடும் இனிப்பைப் பொறுத்தது. ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட இனிப்புகள் என்றால் அவை ஏற்படுத்தும் ஒவ்வாமையால் ஆஸ்துமா பாதிப்பு தீவிரமாகலாம். கடைகளில் வாங்கும் இனிப்புகளில் இதற்கான வாய்ப்பு அதிகம்.

உணவு அலர்ஜி என்றால் ஒவ்வொரு முறை அந்த உணவைச் சாப்பிடும்போதும் அடுத்த சில மணி நேரத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்த வேண்டும்.

அதாவது மீன் சாப்பிட்ட அடுத்த 4- 5 மணி நேரத்துக்குள் சளி பிடிப்பதோ, மூச்சு வாங்குவதோ இருக்கும். ஆனால் வேறு காரணத்தால் ஏற்பட்ட அலர்ஜியை உணவு ஒவ்வாமை என புரிந்துகொள்ளக்கூடாது.

உணவினால் உண்டாகும் ஒவ்வாமையைக் கண்டுபிடிக்க பல பரிசோதனைகள் உள்ளன. நீங்களாகவும் கண்டுபிடிக்கலாம். குறிப்பிட்ட ஓர் உணவை சாப்பிடும்போதெல்லாம் உடனடியாக மூச்சுத்திணறல், ஆஸ்துமா பாதிப்புகள் வந்தால் அந்த உணவைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.

ஆஸ்துமா

மற்றபடி சத்தமாகப் பேசுவது, பலமாகச் சிரிப்பது போன்ற செயல்கள் ஆஸ்துமா மற்றும் வீஸிங் அறிகுறிகளைத் தீவிரப்படுத்த வாய்ப்பில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-does-laughing-increase-wheezing

IPL 2023 Final: CSK அணி கோப்பையை வென்ற தருணங்கள்! |Photo Album



source https://sports.vikatan.com/cricket/ipl-2023-final-csk-trophy-winning-moments