Ad

திங்கள், 31 ஜனவரி, 2022

’புனிதக்குருதி’ என்றழைப்போம்! #MyVikatan

'பெண்கள அடிமை மாதிரி நடத்துறத மொத நிறுத்துங்கடா... புனிதக்குருதிங்கற பேருலாம் அப்புறம் வைச்சுக்கலாம்...' - சிலருடைய கடுப்பான மைண்ட் வாய்ஸை உணர முடிகிறது. இருந்தாலும் புனிதக்குருதி குறித்து சில கருத்துகளை பதிவு செய்கிறேன்.

ஆனந்த விகடனில் வெளியான எழுத்தாளர் நரனின் "வாரணாசி" சிறுகதையை படிக்க நேர்ந்தது. அந்தச் சிறுகதையின் முடிவில் "நான் மாதவிலக்கு அடைந்துள்ளேன்... ஆதலால் கடவுள் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடக் கூடாது... தீட்டு ஆகிவிடும்..." என பெண் ஒருவர் சொல்ல, அவருக்குத் துணையாக இருக்கும் நட்ராஜ் என்ற கதாபாத்திரம் "அந்தக் கடவுளும் மாதவிடாய் ரத்தத்தில் இருந்துதான் உருவாகி இருக்க கூடும்... ஒன்றும் தீட்டில்லை..." என்று சொல்வார். இந்த வார்த்தைகளை படித்ததும் எழுத்தாளர் நரன் மீது பெரும் மதிப்பு உண்டானது. எவ்வளவு உண்மையான மனிதநேயமுள்ள வரிகள் இவை. மாதவிடாய் ரத்தத்தை "தீட்டு" என கருதும் அனைவரிடமும் இந்தச் சிறுகதையை பற்றி பேச வேண்டும் போல் இருந்தது.

அதேபோல பெரியாரின் தீவிர பற்றாளரான "மூடர்கூடம்" திரைப்பட இயக்குனர் நவீன் ஒரு பேட்டியில், "தீட்டு என்பது ரொம்ப அபத்தமான ஒரு வார்த்தை... மாதவிடாய் சுழற்சி என்பது ரொம்ப முக்கியமான ஒன்று. அந்த இயற்கை நிகழ்வு நடக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் பிறந்திருக்கவே மாட்டோம்... அப்படி இருக்கையில் அதை எதோ ரொம்ப அசிங்கமான ஒன்றாக நினைப்பது முட்டாள்தனம்" என்று கூறியிருந்தார். நரன், நவீன் இருவருடைய கருத்துகளையும் நினைக்கும்போது மாதவிடாய் ரத்தத்தை "புனிதக்குருதி" என்று அழைப்பது சரியான விஷயம்தான் என தோன்றுகிறது.

வாரணாசி

சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் வெளியான "ஆண்பால் பெண்பால் அன்பால்" என்ற பாலின சமத்துவ கட்டுரை தொடரில் இயக்குனர் வசந்தபாலன் எழுதிய கட்டுரையில் பெண்களின் மாதவிடாய் பிரச்னை குறித்து பேசப்பட்டிருக்கும். அதில் வசந்தபாலன் தனது இளம்வயதில் மாதவிடாய் குறித்து போதிய புரிதல் இல்லாததை எழுதியிருந்தார். அதை படிக்கும்போது "சிவப்பு மஞ்சள் பச்சை" திரைப்படக் காட்சியும், "அணிலாடும் முன்றில்" குறும்படக் காட்சியும் நினைவுக்கு வந்தது.

இயக்குனர் சசியின் "சிவப்பு மஞ்சள் பச்சை" என்கிற திரைப்படத்தில் ஜீவியின் அக்காவாக நடித்த சிறுமி வயதுக்கு வந்துவிடுவாள். அப்போது சிறுவயது ஜீவியாக நடித்த சிறுவன் "அக்காவுக்கு என்ன ஆச்சு?" எனக் கேட்க, அத்தையாக வரும் நக்கலைட்ஸ் தனம் அம்மாள் "அத எப்படிடா சொல்வேன்... அவ இனிமே மாசம் மாசம் அனுபவிக்க போகும் துன்பத்த என்னானு சொல்வேன்..." என்று பதில் கூறி வருந்துவார்.

இயக்குனர் ஜெய்லட்சுமி என்பவர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக எடுத்த "அணிலாடும் முன்றில்" என்ற குறும்படத்தில் வடஇந்தியர்கள் வசிக்கும் வீட்டிற்கு வீட்டு வேலைக்காக ஒரு சிறுமி செல்வாள். சரியாக அந்த தினத்தில் அந்த வீட்டில் கிருஷ்ணர் பூஜை நடக்கும். அப்போது பாத்ரூம் கழுவ போகும் சிறுமி அந்த இடத்திலயே வயதுக்கு வந்துவிடுவாள். அந்த சிறுமியின் ரத்தம் வீட்டு தரையில் பட்டுவிடும். உடனே அந்த வீட்டில் உள்ள பெண்கள் "பூஜை நடக்கும் நேரத்தில் இந்த வீடு அசுத்தமாகிவிட்டது" என்பார்கள். அந்தச் சிறுமியை குற்றவாளியை போல பார்ப்பார்கள். இது இயல்பான ஒன்று என அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நிஜ சமூகமும் இப்படித்தான் இருக்கிறது.

நான் சிறுவயதில் டியூசன் சென்ற வீட்டில் டியூசன் அக்கா மாதவிடாய் அடைந்துவிட்டால் அவரின் குடும்பத்தினர் அவரை தனிமைப்படுத்திவிடுவார்கள். ஏன் அவரை தனிமைப்படுத்தினீர்கள் எனக் கேட்டால் "வீட்டுக்கு தூரமாயிட்டா... அவள தொட்டா தீட்டு ஆயிடும்... அதான்..." என்பார்கள். இப்போதும் அதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. தீட்டு என்ற வார்த்தைக்குள் எதோ அறிவியல் காரணங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

mensus

அம்மாவும் மனைவியும் மாதவிடாய் அடைவதை பெரிதாக கண்டுகொள்ளாத நமக்கு மகளின் மாதவிடாய் நேரத்தில் மனம் கலங்கவே செய்கிறது. பெண்களுக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்... பெண்ணாக பிறந்தவர்கள் ரொம்பவே பாவம்... என்று வருத்தம் ஏற்படுகிறது. இன்னும் சிலர் நாப்கினை பேப்பரில் சுருட்டி மறைத்து வைத்துதான் வாங்கி செல்கிறார்கள். அதேபோல இந்தக் காலத்திலும் பெண்கள் சிலர் கிழிந்த பாவாடை துணியைதான் உபயோகின்றனர். பொன்.விமலா எழுதிய ’மரமல்லி’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள "தீட்டு" என்கிற சிறுகதையை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

ஒரு பெண் மாதவிடாய் அடைந்தால் "ஐய ச்சீ..." என்று நினைப்பதை, இனிமேலாவது தவிர்ப்போம்.



source https://www.vikatan.com/news/healthy/society-thoughts-mensus

`ரொம்ப சூடு அண்ணா!' - அரசு மருத்துவமனையில் முதியவரை ஊழியர் தாக்கும் வீடியோ; உண்மை என்ன?

ஏழை எளிய மக்களின் நோய்களுக்கான தீர்விடம் அரசு மருத்துவமனைகள்தாம். அதனால்தான் வானுயரக் கட்டடங்கள், அதிநவீன தொழில்நுட்பங்கள் என தனியார் மருத்துவமனைகள் பெருகினாலும் 70% மக்கள் செல்லுமிடம் அரசு மருத்துவமனைகளாகவே இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ ஒன்று அண்மையில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்தது. அந்தப் பதிவில் மருத்துவமனை ஊழியர் ஒருவர், வயதான நோயாளியைக் குளிக்க வைக்கும்போது தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அந்த வீடியோவைப் பதிவிட்ட இளைஞரிடம் பேசினோம். தன் சுயவிவரங்களை வெளியிட அவர் விரும்பவில்லை. ``சில நாளைக்கு முன்னாடி நெஞ்சுவலிக்காக எங்க தாத்தாவை அந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருந்தோம். என்னோட தாத்தாவோட படுக்கை பாத்ரூம் பக்கத்துல இருந்துச்சு. தீடீர்னு அங்க இருந்து ஒரு அலறல் குரல் கேட்டுச்சு. என்னன்னு பாப்போம்னு போனேன். ஒரு வயசானவரை வீல்சேர்ல இருந்து இறக்கி பாத்ரூம் தரையில உக்கார வெச்சிருந்தாரு ஒரு ஊழியர். அந்த வயசானவர் மேல வெந்நீரை அப்படியே ஊத்திக் குளிக்க வெச்சாரு.

சூடு தாங்காம அந்த வயசானவர் `அண்ணா ரொம்ப சூடு... சூடு அண்ணா'னு அலறினாரு. நானும் அந்த ஊழியர்கிட்ட `ஏன் அண்ணா! பச்சத் தண்ணீ வருதுல்ல. அதையும் சேர்த்து ஊத்துங்க'னு சொன்னேன். அதுக்கு அவர் எனக்கு பதில் சொல்லாம தொடர்ந்து அதேபோல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டே இருந்தாரு. எங்க தாத்தாவைப் பாக்க டாக்டர் வர்ற நேரம்கிறதால அங்க இருந்து வந்துட்டேன்.

Old man

டாக்டர் வந்துட்டுப் போனதுக்கு அப்புறம் மறுபடியும் அங்க போனேன். அப்ப அந்த நோயாளியை அடிக்கிற சத்தம் எனக்குக் கேட்டது. மறுபடி ஒரு அறைக்குள்ள கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்கேயும் போய் அடிச்சாங்க. ஆனா, அங்க என்னால போக முடியல.

குளிக்க வைக்கும்போது நடந்த சம்பவத்தை மட்டும் வீடியோ எடுத்தேன். அந்தச் சம்பவம் என் மனசை ரொம்ப பாதிச்சிருச்சு. அவரைப் போல வயசானவருதான் எங்க தாத்தாவும்.

அவரை நாங்க எப்படிப் பார்த்துக்கிறோம், அதே சமயம் இன்னொரு தாத்தா இப்படிக் கஷ்டப்படுறாறேன்னு மனசே தாங்கல. இதை யாருகிட்ட சொல்றதுன்னு தெரியல. அதனாலதான் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டேன். இதை மாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது" என்றார் வேதனையுடன்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசெல்வம்

இந்நிகழ்வு குறித்து கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசெல்வத்திடம் கேட்டோம்:

``அந்த வீடியோ பார்த்தபோது, எனக்கே வருத்தமாதான் இருந்துச்சு. நடந்தது வேற, ஆனா அந்த வீடியோல வேற மாதிரி கம்யூனிகேட் ஆயிடுச்சு. அந்த நோயாளி மூணு மாசாமா இங்க இருக்காரு.

கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர். நமாஸ் பண்ணணும், அதனால குளிக்கணும்னு கேட்டிருந்தார். அதனால வீல்சேர்ல வெச்சு நம்ம ஊழியர் கூட்டிட்டுப் போயிருந்தாரு. அந்த நோயாளி திடீர் திடீர்னு சத்தம் போடுவாரு. தண்ணீ மேல பட்டாலே பயங்கரமா சத்தம் போடுவார். அந்த நோயாளிக்கு காதும் கேட்காது. அதனாலதான் அந்த ஊழியர் சத்தமாப் பேசியிருக்காரு. அதை வீடியோல பார்க்கும்போது கடுமையா பேசுற மாதிரி இருக்குது.

Old age couple (Representational image)

Also Read: 11 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்; மிரண்டு போன அதிகாரிகள்; பீகாரில் அதிர்ச்சி!

நோயாளியை அடித்தார் என்ற தகவல் எல்லாம் முற்றிலும் பொய். நோயாளிகளை யாரும் அடிக்க மாட்டோம். அந்த ஊழியர்தான் இவரைப் பார்த்துக்கிறாரு. ரொம்ப பணிவான ஊழியர். இவரை மட்டுமல்ல ஆதரவில்லாத இன்னும் இரண்டு நோயாளிகளையும் இவர்தான் கவனிக்கிறாரு. நானே பலமுறை அந்த ஊழியரோட சேவையைப் பாராட்டியிருக்கேன். அதுபோல கடினமா நடந்துக்கிற ஊழியர்களை நாங்க வேலையில வெச்சிருக்க மாட்டோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/karur-gh-staff-allegedly-beaten-old-patient-in-a-video-what-hospital-says

நடிகர் திலீப் ஒப்படைத்த 6 மொபைல் போன்கள்... அந்த `மேடம்' யார்?! - போலீஸ் தீவிர விசாரணை

கேரள நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து, அதை வீடியோவாக பதிவு செய்த வழக்கில் நடிகர் திலீப் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் தன்னை கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்க திலீப் சதித்திட்டம் தீட்டியதாக, அவரின் முன்னாள் நண்பரும், சினிமா இயக்குநருமான பாலசந்திரகுமார் வெளிப்படுத்தினார். மேலும் நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோவை திலீப் பார்த்ததாகவும், நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய பல்சர் சுனியை ஏற்கனவே திலீபிற்கு தெரியும் எனவும், அதை வெளியே சொன்னால் அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்பதால் யாரிடமும் சொல்ல வேண்டாம் என திலீப் கேட்டுக்கொண்டதாகவும் இயக்குநர் பாலசந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து விசாரணை அதிகாரிகளை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக திலீப் மீது கிரைம் பிரான்ச் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என முன் ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை விசரித்த நீதிமன்றம், முன் ஜாமீன் கொடுத்ததுடன், கிரைம் பிரான்ச் போலீஸார் மூன்று நாள் விசாரிக்கவும் அனுமதி கொடுத்தது. மூன்று நாட்களாக 33 மணி நேரம் திலீபிடம் விசாரணை நடைபெற்றது.

பாலியல் தொல்லை

இந்த நிலையில் திலீப் உள்ளிட்டவர்களின் போன் விசாரணைக்கு வேண்டும் என கிரைம் பிரான்ச் போலீஸார் நீதிமன்றத்தில் கேட்டிருந்தனர். அதே சமயம் தனது முன்னாள் மனைவி (நடிகை மஞ்சுவாரியர்) குறித்த சில ஆவணங்கள் மொபைல் போனில் இருப்பதாகவும், போலீஸுக்கு கீழ் உள்ள கிரைம் பிரான்ச் போன்ற ஏஜென்சிகளிடம் போன் பரிசோதனைக்கு விடக்கூடாது. மொபைல் போனில் போலீஸார் கிரிமினல் வேலைகள் செய்யக்கூடும் எனவும் திலீப் கூறியிருந்தார். அவரது வாதங்களை மறுத்த நீதிமன்றம் மொபைல் போன்களை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

Also Read: தீவிரமாகும் நடிகை பாலியல் வழக்கு; அதிகாரிகளுக்கு எதிராக சதித்திட்டம்! - விசாரணைக்கு ஆஜரான திலீப்!

இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் ரெஜிஸ்டார் ஜெனரல் அலுவலகத்தில் நேற்று ஆறு மொபைல் போன்களை ஒப்படைத்தார் திலீப். அதில் திலீபுக்கு சொந்தமானது மூன்று மொபைல் போன்கள். திலீபின் சகோதரர் அனூபின் இரண்டு போன்கள், திலீபின் உறவினரான அப்பு என்ற கிருஷ்ணபிரசாத்தின் ஒரு போன் ஆகிய ஆறு போன்கள் ஒப்படைக்கப்பட்டன. அதே சமயம் ஏழு போன்களை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் நடிகர் திலீப் ஒரு ஐபோனை ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், நீதிமன்றம் கூறும் அந்த ஐபோனை தான் உபயோகிக்கவில்லை என திலீப் கூறிவருகிறார்.

நடிகர் திலீப்

இது ஒருபுறம் இருக்க திலீப் அதிகாரிகளுக்கு எதிராக சதி செய்ய ஆலோசனை நடத்திய சமயத்தில் "`மேடம்' அனுபவிக்க வேண்டிய தண்டனையை நான் அனுபவிக்கிறேன்" என கூறியதாக பாலசந்திரகுமார் போலீஸிடம் தெரிவித்தார். அந்த மேடம் யார் என்ற விவதம் கடுமையாக எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோவை திலீபிற்கு கொடுத்த அந்த வி.ஐ.பி யார் என்ற கேள்விக்கும் கிரைம் பிரான்ச் போலீஸ் விடை தேடி வருகிறது. இதற்காக திலீபை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் போலீஸார் கேட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/actor-dileep-gave-his-six-phones-police-investigating-for-the-madam

ஆழமான பாசமும் அதன் தாக்கமும்! #MyVikatan

காதலை மட்டுமே மையக் கருத்தாகக் கொண்டு திரைப்படங்கள் பெருகி வந்தாலும், நடுநடுவே பாசத்தைக் கருவாகக் கொண்ட திரைப்படங்களும் வெள்ளித் திரையை அலங்கரித்தன. அண்ணன்- தம்பி, அண்ணா- தங்கை,அப்பா-மகள்,அன்னை-மகன் என்று பாசத்தை அடித்தளமாகக் கொண்டு பல படங்கள் வெளி வந்தாலும், ஒரு சில படங்களே மக்களின் மனத்தில் எந்நாளும் குடியிருந்து கோலோச்சும் தன்மை பெற்றன. அந்த விதத்தில் ஒரு சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

பாசம் என்றவுடனேயே நம் உள்ளத்தின் உள்ளே ஓடுவது ‘பாசமலர்’ சினிமாதானே! 60 ஆண்டுகளைக் கடந்தும் (ரிலீஸ் மே 1961) நம் அடி மனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதென்றால் அதன் வீச்சினை விளக்கிடவும் வேண்டுமோ? சிறு வயதிலேயே தாயும் இறந்து விட,தங்கையையே உலகமாக நினைத்து வாழும் அண்ணன், தங்கைக்காக தன் வாழ்வையே தியாகம் செய்வதுதான் கதை.இது வழக்கமான கதைதானே…இதில் என்ன புதுமை இருக்கிறது என்கிறீர்களா? இதோடு நிறுத்தியிருந்தால் அது வழக்கமான கதையாகவே போயிருக்கும்.தன்னுடைய மகளைக் காப்பாற்றும் முயற்சியிலேயே தன் பாச அண்ணன் பார்வையை இழந்துள்ளார் என்று அறிந்த அந்தத் தங்கை,அண்ணன் இறக்கும்போது,அவரின் கையைப் பிடித்தபடி தானும் இறக்கிறாளே… அங்கேதான் பீம்சிங்கும் கொட்டாரக்காராவும் சிவாஜியும் சாவித்திரியும் சரித்திரம் படைக்கிறார்கள்; நம் மனதுக்குள் புகுந்து,கண்களில் நீரை வரவழைக்கிறார்கள்; பச்சென்று நினைவுகளில் ஒட்டிக் கொள்கிறார்கள்; மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி,பசுமை மாறாமல் வலம் வருகிறார்கள்.

பாச மலர்

ராஜூ(ராஜசேகரன்)வும் ராதாவும் சிறுவயது முதற்கொண்டே தங்கள் வருமானத்தைத் தாங்களே ஈட்டி வரும் வேளையில்,ராஜூ வேலை செய்யும் தொழிற்சாலை,தொழிலாளர் பிரச்னை காரணமாக மூடப்பட,அவன் அதிர்ச்சியடைய,அப்பொழுது தான் பொம்மை செய்து விற்று சேர்த்த ரூ 1000/ ஐக் கொடுத்துச் சொந்தமாகவே தொழில் தொடங்க உற்சாகமளிக்கிறாள்,உற்ற தங்கையான ராதா.அவனும் சொந்தமாகத் தொழில் தொடங்கிப் பம்பரமாக உழைக்க,விரைவிலேயே சிறந்த முன்னேற்றம் காண்கிறார்கள்.ராஜூவின் நண்பன் ஆனந்த் (ஜெமினி கணேசன்) ராதாவைக் காதலிக்க,முதலில் மறுத்தாலும்,தங்கையும் காதலிப்பதையறிந்து திருமண ஏற்பாடுகள் செய்கிறான் ராஜூ. திருமணத்திற்குப் பிறகு ஆனந்த் குடும்பமே ராஜூவின் வீட்டில் குடியேற,ஆனந்த்தின் அத்தையும் அவர் மகனும் சொத்தில் பங்கு கேட்க,ராஜூவின் டாக்டர் மனைவி எதிர் வழக்காட,ராதாவின் சிரமத்தைத் தீர்க்கும் பொருட்டு ராஜா கேசை வாபஸ் வாங்கிக் கொண்டு,நீண்ட காலத்திற்கு யாத்திரை சென்று விட்டுத் தீபாவளிக்கு ஊர் திரும்ப,ராதாவைப் பார்ப்பதற்கு ஆனந்த்தின் அத்தை மறுப்பு தெரிவிக்க,திரும்பும்போது வெடி விபத்திலிருந்து ஒரு சிறுமியைத் தன் தங்கை மகள் என்று தெரியாமலேயே அவன் காப்பாற்ற,அதில் ராஜூ பார்வை பறிபோக, அவனைக் காணத் தங்கை ராதா வர,தங்கை முகத்தைக் காண முடியாத ஏக்கத்தில் இறக்கும் அவனின் கையைப் பிடித்தபடி ராதாவும் இறக்கிறாள்.

‘தங்கை உயிர் எண்ணித் தன்னுயிரை வைத்திருந்தான்

அண்ணன் வளர்த்த உயிர் அவனுடனே சென்றதம்மா!’

‘மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்-

அண்ணன் வாழ வைப்பான் என்றே அமைதி கொண்டாள்’

திருமண வீடுகளில் இன்றைக்கும் ஒலிப்பது...

‘வாராய் என் தோழி வாராயோ! மணமேடை காண வாராயோ!

எல்லோர் வாய்களிலும் ஹம்மிங் ஆவது.

‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

வளரும் விழி வண்ணமே வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே…

நதியில் விளையாடிக் கொடியில்

தலை சீவி நடந்த இளந்தென்றலே…’

தென்றலுக்கு இப்படி ஒரு வரையறையை இது வரை நம் கண்ணதாசனைப்போல எந்தக் கவிஞனும் கொடுத்ததில்லை என்பது தனிச் சிறப்பு.பாடல்கள் இப்படி என்றால்…காட்சிகளும் வசனமும்!

ஒட்டுப் போட்ட பழைய கோட்டுடன் தங்கையைத் தேடி வரும் ராஜூவைப் பிச்சைக்காரன் என்றெண்ணி, சோறு கொண்டு வரும் ஆனந்த்தின் அத்தையுங்கூட நம் மனத்தில் நிற்கத்தான் செய்கிறார். காந்தி நினைவு வரும் போதெல்லாம் கோட்சே நினைவும் வரத்தானே செய்யும்-அதைப்போல.’ஆனந்தா! என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன். அதில ஆனந்தக் கண்ணீரை மட்டும்தான் பார்க்கணும்!’என்ற சிவாஜியின் வசனத்தை மனதிற்குள் முணுமுணுத்தபடிதான் பல்லாயிரக்கணக்கான தமிழக அண்ணன்மார்கள் தங்கள் சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.தான் காப்பாற்றிய தன் தங்கையின் பெண்ணின் பெயரைக் கேட்க,அச்சிறுமி ‘சாந்தி’ என்க,’ எனக்கு வாழ்க்கையில் கிடைக்காததை உன் அம்மா உனக்குப் பெயராக வைத்திருக்கிறாள்’ என்பதில்தான் எத்தனை அர்த்தங்கள்! எவ்வளவு வேதனைகள்! ’கை வீசம்மா கை வீசு…கடைக்குப் போகலாம் கை வீசு…மிட்டாய் வாங்கலாம் கை வீசு…’சிவாஜியின் குரலுக்குத்தான் எவ்வளவு வீரியம்!

கிராமங்களில் கூட பாசத்துடன் இருக்கும் அண்ணனைப்பார்த்து ‘ம்... பெரிய பாசமலர் அண்ணன்தான் போ!’ என்று சொல்லுமளவுக்குப் பாசமலர் கிராமத்து மக்களிடையேயும் பிரபலமானதே அதன் வெற்றிக்குச் சான்று.

1962-ம் ஆண்டில் இரண்டாவது சிறந்த தேசிய திரைப்படமாகப் ‘பாச மலர்’ விருது வாங்கியது. இன்றளவும் பார்த்தவர்கள் இதயத்திலெல்லாம் ஒட்டிக் கொண்டுள்ளது. நடித்தவர்களில் பெரும்பாலோர் நம்மை விட்டுச் சென்றுவிட்ட பிறகும்கூட பாசமலரின் வாசம் வீசிக் கொண்டேதான் இருக்கிறது. நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி அது நடந்து கொண்டேதான் இருக்கும். தென்றலும் தமிழும் உள்ளவரை பாசமலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

அதே தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக வந்த மற்றொரு படம் ‘ராஜபார்ட் ரங்கதுரை(1973). நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் விதமாக எடுக்கப்பட்ட அப்படத்தில்,பிரசவத்தின்போது தன் தங்கை (ஜெயா) இறந்து விட, ஜோக்கர் வேடத்தில் ‘ஜின் ஜினுக்கான் சின்னக்கிளி’ என்று சிவாஜி போடும் ஆட்டத்தில், கவலை, வருத்தம், அழுகை, வேதனை, சோகம், கடமை அத்தனையும் மிளிர்வதைக் கண்டு, கலங்காத உள்ளங்களே இல்லை எனலாம். கண்ணதாசன், டி.எம்.எஸ்., சிவாஜி கூட்டணி சேர்ந்தால், காலத்தை வெல்லும் கலைப் பொக்கிஷங்கள் உருவாகும். அப்படித் தோன்றியதுதான் இந்தப் பாடலும் படமும்.

ராஜபார்ட் ரங்கதுரை

இது போன்ற படங்கள் வெற்றி பெற்றதற்கு நிறைய காரணங்கள் உண்டு.அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, நமது பெண்களுக்கு இப்போதுள்ளது போல் கல்வி கற்கும் வாய்ப்புகளோ,சுயமாகச் சம்பாதிக்கும் சந்தர்ப்பங்களோ மிகக் குறைவு.கல்யாணமான பெண்களுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையும் கிடையாது.தன் வீட்டில் தங்கை இருந்தால்,அத் தங்கைக்குத் திருமணம் செய்து வைத்த பிறகே அண்ணன்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள்.அதோடு மட்டுமல்ல.மணமான பெண்களுக்கு,தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் பிறந்த வீட்டுச் சீதனமாக, வரிசை கொடுக்கும் வழக்கம் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. எனவேதான் தாய் மாமன் உறவு முக்கியம் பெற்றது. தாய் மாமன்கள் சகோதரிகள் குடும்பத்திற்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள்.

’மயிருக்கு மிஞ்சின கறுப்பும் இல்லை! மச்சானுக்கு மிஞ்சின உறவும் இல்லை!’ என்ற பழமொழியே வழக்கத்தில் இருந்து வந்தது. தன்னுடைய அனைத்துச் சொத்துக்களும் போனாலும் பரவாயில்லை, தன் தங்கை சந்தோஷமாக வாழ வேண்டுமென்ற எண்ணம் கொண்ட சிவாஜியைப் பல அண்ணன்களும் விரும்பியேற்றார்கள்.அதே போல அண்ணனுக்காகத் தான் சம்பாதித்த ரூ 1000-ஐக் கொடுப்பதும் அந்தக் காலகட்டத்தில் சாதாரணமானதல்ல. ஒரு பெண்ணால் அவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதே சற்று ஆச்சரியமானதுதான். நல்ல திரைப்படங்களை வாழ்க்கைப் பாடமாக ஏற்போம். சகோதரத்துவம் தழைத்தோங்க வகை செய்வோம். சகோதரிகளைக் கண்கலங்காமல் பாதுகாப்போம்.

‘எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே’

இதுவும் பாசமலர்ப்பாடல்தான். அனைவரையும் வாழ வைப்போம்!

- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி


source https://cinema.vikatan.com/tamil-cinema/pasa-malar-rajapart-rangadurai

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஒட்டுக் கேட்பு விவகாரம்... `பெகாசஸ்' பிரச்னை இனி என்ன ஆகும்?!

இந்திய அரசியலில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஸ்வரூபமெடுத்த பெகாசஸ் விவகாரம், தற்போது மீண்டும் தேசிய அளவில் புயலைக் கிளப்பியிருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் பெகாசஸ் குறித்து வெளியான செய்தித் தொகுப்பைக் கொண்டு எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை வெளுத்துவாங்கி வருகின்றன. நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் இது குறித்த கேள்விகளை முன்வைக்கத் தயாராக இருக்கின்றன. பெகாசஸ் விவகாரம் இனி என்ன ஆகும்?

நியூயார்க் டைம்ஸ் செய்தி!

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், `நாட்டிலுள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உட்பட 160-க்கும் அதிகமானோரின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தி ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கிறது' என்று செய்தி வெளியிட்டது `தி வயர்'. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியான நியூயார்க் டைம்ஸ் செய்தியில், `2017-ம் ஆண்டு, பெகாசஸ் மென்பொருளை இந்தியா, இஸ்ரேலிடமிருந்து வாங்கியது' என்று கூறப்பட்டிருக்கிறது. ​மேலும், ``2017-ம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் சென்றபோது சுமார் 15,000 கோடி மதிப்பில் பெகாசஸ், பிற பாதுகாப்பு ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகுதான் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ இந்தியா வந்தார்'' என்று குறிப்பிட்டிருக்கிறது நியூயார்க் டைம்ஸ்.

மோடி - நெதன்யாஹூ

Also Read: `பெகாசஸ் மென்பொருளில் லேட்டஸ்ட் வெர்ஷன் கேட்கும் நேரம்!’ - ப. சிதம்பரம் கிண்டல்

அதோடு அந்தச் செய்தியில், ``2019-ம் ஆண்டு ஐ.நா பொருளாதார மற்றும் சமூக மன்றத்தில், பாலஸ்தீன மனித உரிமைக் கழகத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது'' என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அப்போதைய ஐ.நா-வின் இந்தியத் தூதர் சையது அக்பருதீன் மறுத்திருக்கிறார்.

மத்திய அரசின் பதில் என்ன?

பெகாசஸ் விவகாரம் கடந்த முறை எழுந்தபோது, ``பெகாசஸ் குறித்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. இந்தியாவில் குற்றவாளிகளை உளவுபார்க்க சட்டபூர்வமான நடைமுறைகள் மட்டுமே பின்பற்றப்படுகின்றன. தேசப்பாதுகாப்பு கருதி இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது'' என்று விளக்கமளித்திருந்தது மத்திய அரசு. தற்போது மீண்டும் இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்திருப்பதற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தற்போது நியூயார்க் டைம்ஸின் செய்தி வெளியானதை அடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் `மத்திய அரசு, பெகாசஸ் குறித்துப் பொய் சொல்லிவிட்டது' என்ற கருத்தை முன்வைக்கத் தொடங்கியிருக்கின்றன.

பெகாசஸ்

உச்ச நீதிமன்ற விசாரணைக்குழு!

ஏற்கெனவே, பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் குழு ஒன்றை அமைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். பெகாசஸ் டார்கெட் லிஸ்டில் இடம்பெற்றிருந்த சிலர், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுதாரர்களின் செல்போன்களை ஆராய்ந்த சைபர் செக்யூரிட்டி வல்லுநர்கள், பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக் குழுவிடம் தகவல்களைச் சமர்ப்பித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பெகாசஸ் உளவு மென்பொருளால் டார்கெட் செய்யப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த மனுதாரர்களில், எழு பேரின் ஐபோன்களை சைபர் செக்யூரிட்டி வல்லுநர்கள் ஆய்வு செய்ததாகவும், அதில் இரண்டு பேரின் செல்போன்களில் பெகாசஸ் ஊடுருவியிருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பெகாசஸ் பிரச்னை இனி என்ன ஆகும்?

பெகாசஸ் விவகாரத்தைக் கூர்ந்து கவனித்துவரும் சிலர், ``24 மணிநேரமும் ஒருவரைக் கண்காணிப்பதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை. அப்படிச் செய்யக்கூடியதற்கான மென்பொருள்தான் பெகாசஸ். இந்தியாவில், பெகாசஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தும், மத்திய அரசு தொடர்ந்து மௌனம் காப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சியினர் எனப் பலரின் செல்போன்கள் பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது ஆளும் பா.ஜ.க அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். உலக அரங்கில் பிரபலமடைந்திருக்கும் பிரதமர் மோடியின் இமேஜும் பெருமளவு சரிவைச் சந்திக்கும்.

மோடி

Also Read: 'Tek Fog' செயலி... அரசியல் எதிரிகளை அச்சமூட்டுகிறதா பா.ஜ.க?

நாட்டின் ஜனநாயகத்தையே அசைத்துப் பார்க்கும் இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் பெரிதாக்கினாலும், மக்களிடம் இது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. உச்ச நீதிமன்ற விசாரணைக்குழுவின் முழுமையான அறிக்கை வெளியான பிறகே, இந்த விவகாரம் இந்திய அரசியலில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவரும். பொறுத்திருந்து பார்க்கலாம்!'' என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-impact-of-pegasus-in-indian-politics

இந்த வார ராசிபலன்: பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 6 வரை! #VikatanPhotoCards

வார ராசி பலன்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


source https://www.vikatan.com/spiritual/astrology/weekly-astrological-predictions-for-the-period-of-february-1st-to-6th

இன்றைய ராசி பலன் | 01/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv



source https://www.vikatan.com/spiritual/astrology/01022022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

நடால் - கடல் நீ, கரையும் நீ, காதல் கூட நீ!

கிணற்றுக்கு அருகில் கிரிக்கெட்டோ கால்பந்தோ விளையாட பயப்படும் மனம், மகா சமுத்திரத்தின் மடியில் விளையாட அஞ்சுவதில்லை. எங்கு பந்தை விழுங்கிவிடுமோ என்று சந்தேகிப்பதில்லை. கடல் - அனுப்புவதையெல்லாம் உடனே திருப்பி அனுப்பிடும் என்ற நம்பிக்கையை எப்போதும் கொடுக்கிறது. நடால் போல்!

நடால் - ஒரு பேரதிசயம். அனைத்தையும் மறக்கச் செய்து தன்னை நோக்கி நம்மை இழுத்துக்கொண்டே இருக்கும் பெரும் காந்தம். கடல் போல்!

ஆஸ்திரேலிய ஓப்பன் ஃபைனல் ஐந்தாவது செட்டுக்குச் சென்றுவிட்டால் டேனி மெத்வதேவை வெல்வது கடினம் என்றார்கள். மெத்வதேவின் டிஃபன்ஸை, அவர் மனநிலையை உடைப்பது கடினம் என்றார்கள். முதல் இரண்டு செட்களையும் தோற்றபோது, கடந்த 15 ஆண்டுகளில் நடால் கம்பேக் கொடுக்கவில்லை என்றார்கள். தொலைக்காட்சியில் காட்டப்பட்ட Win Predictor, 90 சதவிகிதம் மெத்வதேவ் தான் ஜெயிப்பார் என்றது. முதல் செட்டை வென்ற 37 ஹார்ட் கோர்ட் (hard court) போட்டிகளிலும் அந்த ரஷ்ய வீரர் வென்றிருக்கிறார் என்றார்கள்.

Rafael Nadal

இந்த எண்களெல்லாம் கடற்கரை மணலில் எழுதி வைத்ததுபோல். நடால் எனும் பெருங்கடல் நேற்று எழுப்பிய பேரலையில், இவை மறைந்து போய்விட்டன! ஆனால், 21 என்ற எண்ணின் தடத்தை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறது அந்த அலை. வரலாற்றில் அழிக்க முடியாத சுவடாகவும் அது பதிந்திருக்கிறது.

நேற்று, மெத்வதேவ் அனுப்பிய ஒவ்வொரு பந்தும் திருப்பி அனுப்பப்பட்டது. எதிராளியைத் தவறு செய்ய வைக்கும் மெத்வதேவே தவறு செய்யும் வரை பந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன. அவரின் மிகப்பெரிய ஆயுதமான அந்த அதிவேக ஃபர்ஸ்ட் செர்வ்கள் பெரும்பாலும் திருப்பி அனுப்பப்பட்டன. அனைவரையும் குலைக்கும் அவரது பேக்ஹேண்ட் ஷாட்கள் திருப்பி அனுப்பப்பட்டன. கடைசியில் அதிகம் முயற்சி செய்யப்பட்ட டிராப்கள், வின்னர்களாக மாறும் என்று கருதப்பட்ட அவரது double handed backhand ஷாட்கள் எல்லாமே திருப்பி அனுப்பப்பட்டன. அதுவும் 5 மணி நேரம், 24 நிமிடங்கள் ஆனபோதும்!

35 வயது. 2 மாதங்களுக்கு முன்பு வரை விளையாடுவாரா என்பது உறுதியில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஐந்து மாதங்களில் ஒரேயொரு தொடரில்தான் விளையாடியிருந்தார். ஆனால், எதுவும் கரை தாண்டும் அக்கடலைத் தடுக்கவில்லை. டென்னிஸின் எதிர்காலம் என்று கருதப்படும் மெத்வதேவும் தடுக்கவில்லை. போட்டி முடிந்ததும், “நீங்கள் சோர்வடையவே இல்லையா” என்று நடாலிடம் கேட்டிருக்கிறார் மெத்வதேவ். கடலை நோக்கி வீசும் நானும் நீங்களும்தானே சோர்வடைகிறோம். அலைகள் ஓய்வதில்லையே, டேனி! ஆழ்கடல் உறங்குவதில்லையே. நடால் - அந்தக் கடல் போல்.

*****

Rafael Nadal

கடல் ஆழமானதுதான். அகலமானதுதான். ஆனால், எந்த அளவுக்கு அதன் எல்லைகள் பரந்து விரிந்து கிடக்கிறதோ, அந்த அளவுக்கு நம் எல்லையைச் சுறுக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. கால்கள் கரையைத் தொட்டவுடன், துப்பிய அலையை இழுப்பதுபோல் நம்மை இழுக்கத் தொடங்கிவிடும். அருகில் சென்று நின்றதும் கால்களை நனைத்து, நம்மை அப்படியே நிறுத்திவைக்கும். நனைத்துச் செல்லும் அலைகள், மனதுக்குள் இருந்ததையெல்லாம் அள்ளிச் செல்லும். பார்வை விரிந்து கடலைப் பார்க்கப் பார்க்க, நம் உலகமும் வாழ்க்கையும் சுருங்கத் தொடங்கும். நம் கண் முன் இருக்கும் காதலனையோ, காதலியையோ மட்டும்தான் புலன்கள் உணரும். இல்லையேல், பிரிந்து சென்ற அவர்களின் முகங்களை, சூரியக் கதிரின் பிரதிபலிப்பிலோ, சந்திரனின் பிம்பத்திலோ படம் பிடித்துக் காட்டும்.

கடற்கரையில் நிற்கும்போது கவனித்திருக்கிறீர்களா? அந்த அலைகளின் சத்தத்தை கேட்கத் தொடங்கிவிட்டால், வேறு எதுவும் கேட்காது. நாய்கள் குரைக்கும் சத்தமோ, காகம் கரையும் சத்தமோ கேட்காது. பக்கத்திலிருக்கும் காதல் ஜோடிகளின் முத்தச் சத்தமோ, காதலைத் தொலைத்தவரின் புலம்பல் சத்தமோ கேட்காது. அங்கு நம் மனதின் ஓசையும், அலையின் ஓசையும் தவிர்த்து எதுவும் இருக்காது.

கடல் - ஒவ்வொருவரின் உலகத்தையும் நான்கு அடிகளுக்குள் சுருக்கி, சவுண்ட் ப்ரூஃப் செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்ப அதிசயம். நடால் போல்.

ஆயிரம் ஆயிரம் வேலைகள் இருக்கும். தொலைக்காட்சியில் பார்ப்பதற்குக்கூட நிறைய இருக்கும். ஆனால், டென்னிஸ் களத்தில் நடால் ஆடுவதைப் பார்த்துவிட்டால், அவையெல்லாம் மறந்து போகும். கோர்ட்டின் மூலைக்குச் செல்லும் பந்தைப் பாய்ந்து அடித்து நம்மை அதற்குள் இழுப்பார். அசராமல் செல்லும் ரேலிகள் நம்மை அந்த சேனலிலேயே இருக்கவைக்கும். எந்த மூளைக்குச் சென்றாலும், அலைபோல் மீண்டும் பழைய இடத்துக்குச் செல்லும் கால்கள், மற்ற திட்டங்களையெல்லாம் மறக்கடிக்கும். ஒவ்வொரு ஷாட்டையும், ஒவ்வொரு நகர்வையும் கவனிக்கத் தொடங்கினால், நம் நாள் நடால் எனும் ஒற்றைப் புள்ளியில் சுருங்கத் தொடங்கும். அவர் மீதான காதலை மட்டுமே புலன்கள் உணரும். ஃபெடரர், ஜோகோவிச் ரசிகர்களாய் இருந்தாலும்கூட, பேஸ் லைனில் கடலென வழிந்தோடும் வியர்வையில் தெரியும் அவர் பிம்பத்தில் உங்கள் ஆச்சர்யம் பிரதிபலிக்கும்.

Nadal fans

அனைத்திற்கும் மேலாக, நடாலின் சத்தத்தை கேட்கத் தொடங்கிவிட்டால் வேறு எந்த ஓசையும் கேட்காது. ஒவ்வொரு ஷாட்டின்போதும் அவர் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓசை, உங்களை ஆட்கொண்டுவிடும். வீட்டில் ஒலிக்கும் ராஜாவின் இசையோ, ரஹ்மானின் குரலோ கேட்காது. அழைக்கும் அம்மாவின் குரலோ, அணைக்கும் அன்பர்களின் அழைப்போ கேட்காது. போர்க்களத்தின் மையப் பகுதியில் புரவிகளும் சேனைகளும் சூழ்ந்திருப்பதைப் போலத்தான் போட்டியின் சூழ்நிலை நம்மை வைத்திருக்கும். ஆனால், எந்தச் சத்தமும் கேட்காது. படபடத்து அடித்துக் கொள்ளும் இதயத்தின் ஓசையையும், நடாலின் சத்தத்தையும் தவிர எதுவும் கேட்காது.

என்ன, அலைகள் அமைதியைக் கொடுத்து நம்மை ஆட்சி செய்யும். நடால் கொஞ்சம் நேரெதிர். அமைதியைக் கெடுத்து, பயத்தைப் பரிசளித்து, தோல்வியின் விளிம்புக்கு அழைத்துச் சென்று… இத்தனை நடந்தாலும் மீண்டு வருவார் என்று நினைக்க வைப்பவர். வெற்றியின் கரங்களை இருக்கப் பற்றிக்கொள்ளச் சொல்லித் தந்தவர். அவர் நம்பிக்கை மூலம் ஆட்சி செய்பவர்.

*****

வெறும் போராட்ட குணத்துக்காக மட்டுமே நடாலைக் கொண்டாடுவதும் சரியில்லை. டெக்னிக்கலாக அவர் எந்த அளவுக்கு தன்னை மெருகேற்றிக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். டெக்னிக்கலாக, தன் எதிராளிகளை எப்படி உடைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதும் அவசியம்.

Rafael Nadal

நடால் அட்டாகிங் வீரரா, டிஃபன்ஸிவ் வீரரா? ஃபெடரர், பீட் சாம்ப்ரஸ் போல் அட்டாக் செய்துகொண்டே இருப்பவர் அல்ல; எதிராளி எப்படி ஆடுகிறார்கள் என்பதெல்லாம் இவர்களுக்குப் பிரச்னையில்லை. ஜோகோவிச், மெத்வதேவ் போல் டிஃபன்ஸிவாகவே ஆடிக்கொண்டிருப்பவரும் அல்ல; எதிராளி எப்படி ஆடினாலும் இவர்களுக்குப் பிரச்னையில்லை.

நடால், ஒரு டிக்டேட்டர். எதிராளி எப்படி ஆடுகிறார் என்பதைத் தீர்மானிப்பதே இவர்தான். அவர்களின் பிரச்னை என்ன என்பதைக் கண்டறிந்து, அதை நோக்கி அவர்களை இழுப்பார். இழுத்துக்கொண்டே இருப்பார். ஒட்டுமொத்தமாக உடைந்து கை, கால்கள் சோர்வடைந்து, நுரையீரல் காற்றைத் தள்ளப் போராடும் நேரம், அந்தப் புள்ளியை எடுத்துவிடுவார். நீந்த நினைத்து நுழைபவரை இழுத்து மூழ்கடிக்கும் கடல் போல!

நேற்று மெத்வதேவுக்கு நடந்ததும் அதுதான். ஆனால், அது கொடூரத்தின் உச்சம். மெத்வதேவ் பேக் ஹேண்டில் வல்லவர். அப்படியிருக்கும்போது அவரின் ஃபோர்ஹேண்ட் பக்கம்தான் நடால் அதிகம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. பேக் ஹேண்ட் பக்கமே அதிகம் அடித்தார். முதல் இரண்டு செட்களில் ஏதேதோ முயற்சித்தார். எதுவும் பலிக்கவில்லை. வெற்றியை நோக்கி நீந்தத் தொடங்கினார் டேனி மெத்வதேவ். ஆனால், மூன்றாவது செட்டில் சீற்றம் கொண்ட கடலிடம் சிக்கினார் அவர்.

இப்போதும் பேக்ஹேண்ட் பக்கமே ஒவ்வொரு பந்தும் வந்துகொண்டிருந்தது. மெத்வதேவ் அதைத் திருப்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு பந்தும் அதிக பலத்தோடும், அதீத துல்லியத்தோடும் வந்துகொண்டிருக்கிறது. சைட் லைன் நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறார் மெத்வதேவ். போதாக்குறைக்கு கணக்கில்லாமல் வந்துகொண்டிருக்கும் ‘Slice’ ஷாட்கள், எதிர்பார்த்து நிற்கும் இடத்தைவிட ஒரு அடி அதிகம் எடுத்துவைக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. மெத்வதேவ் ஒருபக்கமாக இழுக்கப்படுகிறார். பேக் ஹேண்ட் போல் பலம் கொண்டிராத அவரது ஃபோர்ஹேண்ட் பக்கம், அதிகம் expose ஆகிறது. அதுவரை எதிர்ப்புறம் அடித்து இழுத்தவர், இப்போது இந்தப் பக்கம் பந்தைச் செலுத்துகிறார். அதை எடுக்கப் பாயும் மெத்வதேவ், மொத்தமாக உடைந்து போனார். பந்தைத் திருப்பி அனுப்பினாலும், கை, கால்கள் சோர்வடைந்து, நுரையீரல் கதறும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அந்தக் கடலுக்குள் மூழ்கியும் போனார்.

Nadal with Medvedev

அந்தக் கடலைக் கடக்கவேண்டுமெனில் எதிர்நீச்சல் அடித்தாகவேண்டும். இந்தப் பிரபஞ்சத்தில் அதைச் செய்வதர்கள் மிகச் சொற்பம் தானே!

இரண்டு செட்கள் பின்தங்கியிருந்தவர், வெற்றி பெறவே வாய்ப்பில்லை என்று நினைத்தார்கள். ஆனால், உள்வாங்கும் கடல் பேராபத்தாகிற்றே. அது எழுப்பிய சுனாமி, அனைத்து சாதனைகளையும் அடித்துச் சென்றிருக்கிறது. மெத்வதேவையுமே அதிசயிக்கவைத்திருக்கிறது.

கடல் - நம் காதலுக்கு இடம் கொடுக்கிறது. அதை வளர்க்கிறது. காதலைத் தொலைத்தவர்களுக்கு அடைக்களம் தருகிறது. மீண்டெழும் நம்பிக்கையும் கொடுக்கிறது. எல்லோருக்கும் காதலாகவே மாறிப்போகிறது. ரஃபேல் நடால் பரேராவைப்போல்!



source https://sports.vikatan.com/tennis/rafael-nadal-wins-the-21st-grand-slam-title-by-defeating-danii-medvedev

Valimai படத்துல அஜித் சொன்ன விஷயம்! - அனுபவம் பகிரும் ஜி.எம்.சுந்தர்

`சார்பட்டா பரம்பரை', `மகாமுனி' உள்ளிட்ட படங்களில் நடித்த கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜி.எம்.சுந்தர். பல வருடங்களாக திரைத்துறையில் நடிகராக இருப்பவர். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் `வலிமை' படத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சினிமா அனுபவம் குறித்தும், வலிமை படம் குறித்தும் அவரிடம் பேசினோம்.

"வலிமை பட வாய்ப்பு எப்படி அமைஞ்சது?"

வலிமை படத்தில் ஜி.எம்.சுந்தர்

" `மகாமுனி' படத்துல நான் பண்ண போலீஸ் கதாபாத்திரம்தான் இதுக்குக் காரணம். `மகாமுனி' இயக்குநர் சாந்தக்குமார், `மௌனகுரு' படத்திற்கு பிறகு ஏனோ ரொம்ப நாள் எந்த படமும் இயக்கல. ஒரு நாள் ஃபோன் பண்ணி, ஒரு படம் பண்றேன், நீங்களும் நடிக்கணும். ஆஃபீஸ் வாங்கனு சொன்னார். அங்கே போய் கதை, அதுல என்னோட கதாபாத்திரம் எது-னு எல்லாம் பேசுனப்புறம் மேக் அப் டெஸ்ட். மேக் அப் டெஸ்ட்-க்கு அப்புறம் அவரு என்னிடம் நீங்க வேற கதாபாத்திரம் பண்ணுங்கனு சொன்னாரு. அது நான் மகாமுனி படத்துல பண்ண போலீஸ் கேரக்டர். ஏனோ அந்த கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு அவருக்குத் தோனிருக்கு. நானும் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிச்சேன். குறிப்பா, கிளைமாக்ஸில் ஒரு காட்சி வரும்.

சாந்தகுமாருடன் ஜி.எம்.சுந்தர்

ரொம்பவும் மோசமான கேரக்டரான போலீஸ் ஒரு ஜோக் சொல்வதுதான் அந்த சீன். இந்தக் காட்சியை இயக்குநர் எதுக்கு வெச்சுருப்பார்-னு யோசிச்சுட்டே நானும் பிராக்டீஸ் பண்ணேன். அந்தக் காட்சியை நல்லா பண்ணனும்னு திரும்பத் திரும்ப அதை உள்வாங்க முயற்சி பண்ணேன். கேரவனிலேயே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பிராக்டீஸ் பண்ணேன். அப்போதான் அந்த சீனோட முக்கியத்துவம் எனக்கு புரிஞ்சது. போலீஸ் கதாபாத்திரத்தின் எசன்ஸ் அந்தக் காட்சியில் வெளியாகும். நானும் அதை நல்லாவே பண்ணேன். சாந்தகுமாருக்கு தான் நன்றி சொல்லணும். மகாமுனி படம் பார்த்த ஹெச்.வினோத் என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் என் நம்பர் இல்லை. நலனிடம் நம்பர் வாங்கிதான் அழைத்தார். வலிமை-ல ஒரு கதாபாத்திரம் நீங்க பண்ணணும்னு கேட்டார். நானும் கண்டிப்பா சார், நான் பண்றேன்னு சொன்னேன். இப்படித்தான் வலிமை வாய்ப்பு எனக்கு வந்தது."

"திரைப்படத் துறையில இருக்கீங்க. அஜித் பத்தி நிறைய கேள்விப்பட்டிருப்பீங்க. முதல்முறையா அவரோட சேந்து ஒரு படம் பண்ணின அனுபவம் எப்படி இருந்தது? நீங்க கேளவிப்பட்டதுக்கும், நேர்ல பார்த்ததுக்கும் என்ன வித்தியாசம்?"

வலிமை படத்தில் அஜித்குமார்

"வித்தியாசம் அப்படின்னு எதும் சொல்ல முடியாது. கேள்விப்பட்டதைவிட அவரு ஸ்பெஷல். அஜித் ரொம்ப நல்லவர், ஜென்டில்மேன்னு கேள்விப்பட்டிருக்கோம். அதை நேரில் பார்க்கும், உணரும் வாய்ப்பு எனக்கு கெடச்சது. முதல்முறை அவர பாக்குறப்போ, “ஐ ஆம் ஹானர்டு டு வொர்க் வித் யூ சார்” -னு சொன்னேன். அவரும் “ஐ ஆம் ஆல்ஸோ ஹானர்டு டு வர்க் வித் யூ” -னு சொன்னாரு. நான் ஏதோ சின்ன நடிகர் நீங்களும், டைரக்டரும் வாய்ப்பு குடுத்ததுக்கு நன்றி சார் என்றேன். எனக்கும் ஒரு இயக்குநர் வாய்ப்பு கொடுத்ததால்தான் நானும் இந்த இடத்தில் இருக்கேனு சொன்னார். அவரைப் பத்தி நாம் கேள்விப்படுவதைவிட 100 மடங்கு சிறப்பு வாய்ந்தவர் அஜித்.

வலிமை பட மேக்கிங் வீடியோ ஒன்னு ரிலீஸ் பண்ணோம். அதுல காந்தி சொன்ன வாசகம் ஒன்னு வரும். “We may stumble and fall but shall rise again; it should be enough if we did not run away from the battle” - அஜித், ஹெச்.வினோத் இருவரையும் பத்தி தெரிஞ்சுக்க இந்த வாசகம் போதும். ரெண்டு பேருமே ஃபைட்டர்ஸ். அஜித்திற்கு உடலில் பல காயங்கள். சர்ஜரிக்குப் பிறகும் கூட அவரு அவ்ளோ உழைக்கிறார். பல கஷ்டங்களைக் கடந்து கம்பேக் கொடுத்திருக்கார். ரொம்ப இன்ஸ்பயரிங் ஆன மனிதர்."

"அஜித்துக்கும் - வினோத்துக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி பத்தி சொல்லுங்க?"

நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித்துடன் ஹெச்.வினோத்

"ரெண்டு பேருமே கிரேட் மைன்ட்ஸ். இருவருமே பல ஸட்ரகில்ஸ்-ஐ கடந்து வந்தவங்க. தெளிவான சிந்தனை உடையவர்கள். ஸாக்ரடீஸ் சொன்னதுபோல ஒரு இன்டென்ஷனோடு செயலில் இறங்குபவர்கள். டெடிகேஷனோட வொர்க் பண்ணுவாங்க."

"நிறைய இயக்குநர்கள் கிட்ட படம் பண்ணிருக்கீங்க. ஹெச்.வினோத்திடம் நீங்கள் கவனித்த தனித்துவமான விஷயம் என்ன?"

"மிகத் தெளிவான சிந்தனை உடையவர். அதிகம் பேச மாட்டார். பத்து நிமிடம் அவரு பக்கத்துலயே இருந்தாலும் ரெண்டு வரிதான் நம்மிடம் பேசியிருப்பார். சதுரங்க வேட்டை வெளியானபோதே அவரிடம் போய் சான்ஸ் கேட்டேன். அப்போ எதுவும் கிடைக்கலை. இப்போ அவராவே கூப்பிட்டு வாய்ப்பு தந்தார். இந்த கதாபாத்திரத்துக்கு இவர் செட் ஆவார்-னு அவருக்குத் தோனணும்."

"வலிமை படத்தின்மீது என்ன எதிர்பார்ப்பு வெச்சுருக்கீங்க?"

"இந்த கேள்வி நீங்க ஃபேன்ஸ்கிட்டதான் கேக்கணும். அவங்கதான் நிறைய எதிர்பார்ப்பு வெச்சிருக்காங்க. இந்தப் படத்துல நிறைய பேரோட உழைப்பு இருக்கு. எல்லாரும் இந்தப் படத்தை பெரிதும் நம்பி இருக்கோம்."

ஜி.எம்.சுந்தர் - அஜித்

"நீங்களும் அஜித்தும் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது. அது பத்தி சொல்லுங்க?"

"பட ஷீட்டிங் முடிஞ்சு பேக்கப் பண்ற சமயம். இரவு 3 மணி இருக்கும். அவர் கேரவனுக்குப் போய் பேசினேன். உங்களோட நடிச்ச அனுபவம் நல்லா இருந்தது. நன்றி சார்னு சொல்லிட்டு இருந்தேன். அவர் ஒரு ஃபோட்டோ எடுக்கலாம் என்றார். அப்படி எடுத்ததுதான் அந்தப் புகைப்படம். ரெண்டு பேருமே டயர்டா தான் இருந்தோம், ஆனாலும் சிரிச்ச முகமா புகைப்படம் எடுக்க வந்தார்"

"மலையாளத்தில் `ஜன கன மன' படம் பண்ணி இருக்கீங்க. அது எப்படி வந்துருக்கு?"

ஜி.எம்.குமார்

"ப்ரித்விராஜ் சார் ஹீரோவா நடிச்சிருக்கார். படம் ஒரு சீக்வல் போல இருக்கும். ப்ரித்வி போர்ஷனுக்குப் பிறகு சூரஜ் போர்ஷன் வரும். இந்தப் படத்தோட இயக்குநர் சார்பட்டா பரம்பரை பாத்துட்டு என்னைக் கூப்பிட்டார். “ஜனகனமன” படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. பான்-இந்தியா லெவல்ல படம் பண்றாங்க. எனக்கு அதில் ஒரு ரோல் கிடைச்சதில் மகிழ்ச்சி. மலையாளத்தில் ஓப்பனிங்கே எனக்கு இந்தப் படம் அமைஞ்சது ரொம்ப சிறப்பான ஒரு விஷயமா பாக்கறேன்."

"ப்ரித்விராஜ் சாரோட நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?"

ப்ரித்விராஜ்

"நல்ல அனுபவமாக இருந்தது. சார்பட்டா பரம்பரை படம் அவர் பார்த்திருக்கிறார். என்னோட நடிப்பப் பாராட்டவும் செஞ்சார். சூரஜ் சாரும் என்னை வாழ்த்தினார்."

"2021-ல மூன்று படங்கள் பண்ணீங்க மூன்றுமே நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றன."

"ரொம்ப நன்றி. மண்டேலா ஆகட்டும், சார்பட்டா பரம்பரை ஆகட்டும் ஓடிடி-யில் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. ரைட்டர் இன்னும் திரையரங்குகள்-ல ஓடிட்டு இருக்கு. ஒரு நடிகனா எனக்கு நல்ல ரோல் கிடைச்சது, நானும் அதை சிறப்பா பண்ணேன் என்கிற திருப்தி போதும்."



source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-gm-sundar-interview-about-valimai-movie-and-his-career

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடக்கம்! #Live Updates

குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அடுத்தகட்ட கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்

கூட்டத்தின் முதல் நாளான இன்று நாடாளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அப்போது அவர் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள், எதிர்கால திட்டங்கள் பற்றிய விவரங்களை அறிவிப்பார். காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரை இடம்பெற உள்ளது. அதன் பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/news/parliament-budget-session-will-start-with-president-speech

வாழ்வில் இருளை ஒளியாக்கும் தை அமாவாசை வழிபாடு; இன்று மாலை அவசியம் இதைச் செய்யுங்க!

பொதுவாக அமாவாசை என்றாலே அது முன்னோர் வழிபாட்டுக்கான நாள் என்றுதான் பொருள். அதிலும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகியன மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதிலும் உத்தராயண புண்ணியகாலத்தில் வரும் தை அமாவாசை மிகவும் புண்ணியம் வாய்ந்தது என்கிறார்கள். எனவே இன்று ஏராளமானவர்கள் தங்களின் முன்னோரை வழிபடுவது வழக்கம். இன்று முன்னோரை வழிபட்ட பிறகுதான் தெய்வத்தையே வழிபட வேண்டும் என்பார்கள். அந்த அளவுக்கு இந்த வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது.

அவ்வாறு முன்னோரை வழிபட்ட பின்பு இந்தத் தை அமாவாசை நாளில் நாம் கட்டாயம் செய்ய வேண்டிய மற்றொரு வழிபாடு உண்டு. அது அபிராமி அம்மையை வழிபடுவது. பொதுவாக பௌர்ணமியே அம்பிகையை வழிபட மிகவும் உகந்த நாள். ஆனால் தை அமாவாசை அதைவிட உயர்ந்த தினம் என்கிறார்கள்.

அபிராமி அந்தாதி

பொதுவாக அமாவாசை என்பது சந்திரன் ஒளி இல்லாத நாள். சூரியன் சந்திரனைக் கடக்கும்போது சந்திரனின் ஒளி பூமியில் படுவதில்லை. ஜோதிட சாஸ்திரப்படி சந்திரனே மனோகாரகன். எனவே இந்த நாளில் மனம் அலைபாயும். அதிலும் ஜனன கால ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருக்கும் ராசிக்காரர்கள் இந்த நாளில் மிகவும் குழப்பம் அடைவார்கள். மனம் அமைதியாக இருந்தால்தான் வாழ்க்கை குறித்த பல முடிவுகளை எடுக்க முடியும். அப்படி முடிவெடிக்க முடியாமல் மனக் குழப்பத்தில் இருப்பவர்கள் முன்னோரை வழிபடுவதன் மூலம் மனக் குழப்பங்களிலிருந்து வெளிபட முடியும் என்பது நம்பிக்கை. முன்னோரை வழிபட்ட பின்பு இந்த நாளில் இறைவழிபாட்டில் மனம் கூடும்.

தை அமாவாசை அன்றுதான் அபிராமி பட்டருக்கு அன்னை காட்சி கொடுத்து அமாவாசையைப் பௌர்ணமியாக மாற்றினார். இந்த நிகழ்வில் பல்வேறு சூட்சுமங்கள் இருப்பதாகச் சொல்வார்கள்.

சோழநாட்டில் உள்ள சிவ தலங்களில் ஒன்று திருக்கடவூர். இங்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் அபிராமி பட்டர் என்னும் சுப்பிரமணியன்.

ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்த சரபோஜி மன்னர், திருக்கடவூருக்கு தரிசனம் செய்ய வந்தார். மன்னனைக் கண்டதும் மக்கள் வணங்கி வரவேற்றனர். ஆனால், மன்னர் வந்திருப்பதை அறியாத பட்டர், அவரை வணங்காமல், அன்னை அம்பிகையை தியானித்துக் கண்மூடிய யோக நிலையில் ஆழ்ந்து இருந்தார். இதைக் கண்டவர்கள் மன்னரிடம் பட்டரைக் குறித்து அவதூறு சொன்னார்கள். அதைச் சோதிக்க விரும்பிய மன்னர் அபிராமி பட்டரிடம் 'இன்று என்ன திதி?' என்று கேட்டார். மெய்மறந்த நிலையில் இருந்து மீளாத பட்டர், சற்றும் தாமதிக்காமல், "பௌர்ணமி” என்றார்.

'அப்படியென்றால் இன்று இரவு முழு நிலவு வருமா?' என்று மன்னர் கேட்க, "நிச்சயம் வருமே" என்றார்.

இதைக் கேட்ட மன்னர் கடும்கோபம்கொண்டு, “இன்று இரவு முழுநிலவு வராவிட்டால் உனக்கு மரண தண்டனை. இது அரசகட்டளை” என்று கூறிச் சென்றார்.

அபிராமி பட்டரின் வாழ்க்கையில் அதற்கு முன்பு அவரை எல்லோரும் பித்தன் என்றே அழைத்தார்கள். அவர் பக்தி இகழப்பட்டது. உரிய மரியாதை இல்லை. ஆனால் அவற்றை எல்லாம் அவர் பக்தியின் மூலமே கடந்தார். பக்தியின் உச்சத்தில் அம்பிகையையின் திருமுகத்தை தரிசனம் செய்துகொண்டிருந்தவருக்கு அன்னையின் முகம் பௌர்ணமி நிலவாகப் பிரகாசிக்க அன்றைய திதி என்ன என்று கேட்க அவர் பௌர்ணமி என்று சொல்லிவிட்டார். ஆனால் அது ஒரு சோதனை போல அவருக்கு அமைந்துவிட்டது.

பலரும் இன்றைய நாளில் வருத்தப்படும் ஒரு விஷயம், இறைவன் நம் வாழ்வில் அற்புதம் நிகழ்த்துவதே இல்லை என்பதே. ஆனால் நாம் அதைச் செய்ய இறைவனை அனுமதிப்பதில்லை என்பதுதான் உண்மை. இறைமீது பக்தி கொண்டவர்கள் சோதனைகள் வரும்போதுதான் அதிகமாக பக்தி செய்வார்கள். இறையைப் பற்றிக்கொள்வார்கள்.‘கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே’ என்று இருந்த திருநாவுக்கரசரின் வாழ்வில்தான் இறைவன் நிறைய அற்புதங்கள் செய்தார்.

அபிராமி அந்தாதி

அபிராமிப் பட்டரும் தியானம் கலைந்து எழுந்து நடந்தவற்றை அறிந்தாலும் அவர் மனம் பயப்படவில்லை. அன்று மாலை நெருப்புக்கு நேராக நின்றபோதும் அவர் அம்பிகையைத் துதித்து அந்தாதி பாடினார். அந்தப் பாடல்களில் அம்பிகை மனம் மகிழ்ந்து தன் தோடு ஒன்றைக் கழற்றி வானில் வீச அது பௌர்ணமியாகச் சுடர் விட்டது. அன்னை அந்த நாளில் பக்தனுக்காக இயற்கையையே மாற்றினாள். திருக்கடவூரில் இன்றும் அந்த விழா கொண்டாடப்படுகிறது.

இத்தகைய அற்புதம் நிகழ்ந்த நாளில் அபிராமி பட்டர் பாடியருளியதே அபிராமி அந்தாதி. எந்த அந்தாதியைப் பாடி அம்பிகையை பட்டர் வழிபட்டாரோ அந்த அந்தாதியை இன்றும் பாடுவது மிகவும் சிறந்தது. வாழ்வில் இன்பமும் துன்பமும் தொடர்ந்து வரும் என்பார்கள். அதற்கேற்ப அந்தாதிப் பாடல்களும் முடியும் சொல்லில் தொடங்கும் தன்மையுடையுன. வீட்டில் விளக்கேற்றி அம்பிகையை மனதில் நிறுத்திப் பாடினால் வாழ்வில் உள்ள துன்பங்கள் எல்லாம் விலகும் என்பார்கள்.

அபிராமி அந்தாதி

எனவே இன்று மாலை அனைவரும் தவறாமல் அம்பிகையின் படத்தை வைத்து வழிபாடு செய்வதும் ஆலயத்துக்குச் சென்று அம்பிகையை தரிசனம் செய்வதும் நம் இன்னல்களை எல்லாம் தீர்க்கும் என்பது நம்பிக்கை. கூடவே அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்தால் பலன்கள் கிடைக்கும்.

அபிராமி அந்தாதியிலேயே உலக நன்மைகள் பலவற்றையும் அருளும் பாடல்கள் உண்டு. குறைந்தபட்சம் அவற்றைப் பாடி இந்த நாளில் அம்பிகையைப் போற்றுவோம்.



source https://www.vikatan.com/spiritual/gods/glory-of-worship-abirami-ambigai-on-thai-amavasai-day

உலக நாடுகளின் பாராமுகம்: பஞ்சம், பட்டினியால் சிறுநீரகத்தை விற்று உணவு உண்ணும் ஆப்கானிஸ்தான் மக்கள்!

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதிலிருந்து, உலக நாடுகள் அந்நாட்டுக்கு வழங்கி வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்திக்கொண்டன. இதனால், ஏற்பட்ட பொருளாதாரச்சரிவு, உணவுத்தட்டுப்பாட்டால் மக்கள் வேலைவாய்ப்பிழந்து, வருமானமின்றி வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். கொடுமையின் உச்சகட்டமாக, தற்போது ஆப்கானிய மக்கள் தங்களின் உடல் உறுப்புகளையும், பெற்றக் குழந்தைகளையும் விற்று, உணவு உண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் தரையிறங்கிய ஆப்கானிஸ்தான் மக்கள்

உலக நாடுகளின் நிதி உதவிகள் நிறுத்தம்:

கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில், தாலிபன்கள் ஆப்கனிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். அதன்பின்னர் அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டுவந்த சர்வதேச நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. வெளிநாட்டு முதலீடுகள், வர்த்த உறவுகள், போக்குவரத்து என அனைத்து நடவடிக்கைகளும் துண்டிக்கப்பட்டன. தலைநகர் காபூலில் இருந்த அனைத்து பெரிய நிறுவனக்களும் நாட்டைவிட்டு வெளியேறின. அமெரிக்கா 9400 கோடி டாலர்கள் ரிசர்வ்வை வங்கியிலிருந்து நிறுத்தி வைத்துவிட்டது. உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்டவையும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை முற்றிலுமாக குறைத்துக்கொண்டன. இதனால் ஆப்கன் பொருளாதாரம் வரலாறு காணத அளவுக்கு வீழ்ந்தது.

பஞ்சத்தினால் ஏற்பட்ட பரிதாப நிலை:

இதனால், ஆப்கானிதானில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு பசி, பஞ்சம் தலைவிரித்தாடியது. சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து வருமானமின்றி தவித்தனர். பசிக்கொடுமையால் ஆப்கானிய மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை விற்கத்தொடங்கினர்.

ஆப்கானிஸ்தான் குழந்தைகள்

காபூலின் சம்மன் இ ஹசோரி பார்க் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திவந்த, ஃபிரிட்ஜ், டிவி, கட்டில், தரைவிரிப்புகள் என விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்களையெல்லாம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்தனர். அதன்மூலம் கிடைக்கும் சொற்ப பணத்தில் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பசியாற்றி வந்தனர். பின்னர், வீட்டுப்பொருட்களும் தீர்ந்துபோக, தங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளையே விற்கும் நிலைக்குச் சென்றனர்.

தாலிபன் கொடி

ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை:

ஆப்கானிஸ்தானில் வாழக்கூடிய 95 சதவிகித மக்களுக்கு போதுமான உணவு இல்லை என ஐ.நா. அறிக்கை வெளியிட்டது. சுமார் 2.30 கோடி மக்கள் பட்டினியில் சிக்கித்து வருவதாக பொருளாதார வல்லுனரான அப்துல் நசீர் ரிஷ்டியா உள்ளிட்டோர் கவலை தெரிவித்தனர்.

மேலும், குழந்தைகளின் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்புக்கான யூனிசெஃப்(UNICEF) அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதில், 50 லட்சம் ஆப்கானிய குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் சாவின் விளிம்பில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டது.

வீட்டுப்பொருட்கள், குழந்தைகள்... இப்போது உடல் உறுப்புகள்:

​ஆப்கானிய மக்கள் உணவுக்காக, உடைமைகளையும் பெற்றக்குழந்தைகளையும் விற்கும் கொடூரநிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலையில், வறுமையை தாக்குப்பிடிக்க, ஆப்கானிஸ்தானின் 5 வயது சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் சிறுநீரகத்தை விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் உணவு உண்டுவருவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், இது சம்மந்தமான புகைப்படங்கள், காணொளிகள் இணையத்தில் வெளியாகி உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன.

ஆப்கானிஸ்தான்

குறிப்பாக, ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாள்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். மேலும், ஒரு சிறுநீரகத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.70,000 வரை கிடைப்பதாகவும், அந்தப் பணத்தை வைத்து தற்காலிகமாக தங்களை சாவின் பிடியிலிருந்து தற்காத்துக்கொள்வதாகவும் அந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பசிகொடுமையில் கிட்னையை விற்கும் ஆப்கானிய மக்கள்

உலக நாடுகளுக்கு டேவிட் பஸ்லி வேண்டுகோள்:

இந்த நிலையில் ஐ.நா.வின் உலக உணவு திட்டத் தலைவர் டேவிட் பஸ்லி(David beasley), `ஆப்கானிஸ்தான் மக்கள் பலரும் வறுமை காரணமாக தங்களின் உடல் பாகங்களையும், குழந்தைகளையும் விற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே உலக நாடுகள் உடனடியாக ஆப்கன் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும்' எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய டேவிட் பஸ்லி, ``ஆப்கனில் தற்போது 4 கோடி மக்களில் 2.3 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால், ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் ஒருவேளை சொற்றுக்காக தங்களின் சிறுநீரகங்களை விற்று வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் 5 வயது, 10 வயது பெண் குழந்தைகளையும் விற்று வருகின்றார்கள். இதே நிலைத் தொடர்ந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் 97 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்லக்கூடிய அபாய நிலை ஏற்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

டேவிட் பஸ்லி (David beasley), ஐ.நா.வின் உலக உணவு திட்டத் தலைவர்

மேலும், உலக நாடுகள் இனியும் தாமதிக்காமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவிசெய்ய முன்வர வேண்டும் என ஐ.நா. சார்பில் மீண்டும் ஒருமுறை உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்!" என அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தான்

இந்த நிலையில், உலக நாடுகளுக்கு முன்னுதாரனமாக இந்திய அரசாங்கம், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 50,000 டன் கோதுமை, அத்தியாவசிய மருந்துப்பொருட்களை வழங்க முடிவுசெய்திருக்கிறது. மேலும், பல்வேறு நாடுகள் உதவ முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/afghan-people-forced-to-sell-their-kidney-for-survival