Ad

புதன், 30 செப்டம்பர், 2020

``கஞ்சா கடத்தலில் கல்லூரி மாணவர்கள்"... அதிகரிக்கும் போதைப்பழக்கம்! - என்ன நடக்கிறது தமிழகத்தில்?

  • சென்னை, விருகம்பாக்கம் தனியார் விடுதியில் 18 கிலோ கஞ்சாவுடன் கல்லூரி மாணவர்கள் உட்பட 12 பேர் கைது.

  • வேலூரை அடுத்த காட்பாடியில் இயங்கிவரும் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் 12 கிலோ கஞ்சாவுடன் கைது.

  •  சென்னை, மயிலாப்பூரில் உயர்ரக கஞ்சா விற்பனை செய்த ராயப்பேட்டையைச்  சேர்ந்த  சபாசக்தி (26), மயிலாப்பூரைச் சேர்ந்த யாசர் ஹனிபா (21) என்ற சட்டக்கல்லூரி  மாணவன் இருவரும் மூன்றரை கிலோ `நெதர்லாந்து பட்’  எனப்படும் முதல் ரக கஞ்சாவுடன் கைது.  

  • சென்னை, மண்ணடிப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் எட்டு கிலோ கஞ்சாவைப் பதுக்கிவைத்துச் சென்ற யூசுப் மற்றும் முஸ்தபா என்ற கல்லூரி மாணவர் இருவரும் கைது.

  • சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர் உளட்பட ஏழு பேரை காவல்துறை கைதுசெய்து, அவர்களிடமிருந்து  23 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.  

  • காஞ்சிபுரம் அருகிலுள்ள கோவிந்தவாடி அகரம் பேருந்து நிறுத்தம் அருகே சக மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்திய ஆந்திரப்பிரதேசம், நெல்லூரைச் சேர்ந்த பிரவீன் (21), காக்கிநாடாவைச் சேர்ந்த சாய்ராம் (21) இரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைது.

  • மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வனிதா (32)  ஆன்லைன் உணவு டெலிவரி செய்வதுபோலக் கஞ்சா விற்பனை செய்தவர். மூன்று கிலோ கஞ்சாவுடன் கைது.

கஞ்சா வழக்கில் கைதானவர்கள்

மேலே கூறப்பட்டிருப்பவை, கொரோனா ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற சம்பவங்களில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே. இன்னும் சொல்லப்படாத சம்பவங்கள் ஆயிரமாயிரம். இந்தச் சம்பவங்கள் இல்லாமல், கஞ்சா விற்பனைத் தகராறில் நடந்த கொலைச் சம்பவங்களும், கஞ்சா போதையில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களும் ஏராளம்.

கஞ்சா

உதாரணமாக, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 802 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் தொடர்புடைய 132 நபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக காவல்துறை எவ்வளவு கெடுபிடியாக இருந்தாலும். தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.

தமிழகத்துக்கு எங்கிருந்து வருகிறது கஞ்சா?

பெரும்பாலும், தமிழகத்துக்கு அண்டை மாநிலம் ஆந்திராவிலிருந்துதான் கஞ்சா கொண்டுவரப்படுகிறது. ஆந்திராவிலிருந்து கோயம்பேடு வரும் காய்கறி லாரிகளிலும், சொகுசு கார்களிலும், ஆந்திரா எல்லைகளிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்துக்கு பைக்குகளிலும் கஞ்சா கொண்டுவரப்படுகிறது. பின்னர் இங்கிருந்து தமிழகத்தின் மற்ற இடங்களுக்குச் சின்ன சின்னப் பொட்டலங்களாக மாற்றப்பட்டுக் கைமாற்றப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

பெரும்பாலும், ஆந்திராவிலிருந்து வருவது இந்திய வகை கஞ்சாதான். இதன் விலை 100 கிராம் 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் `நெதர்லாந்து பட்’ எனப்படும் முதல் தர கஞ்சா வகை, 100 கிராம் 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது.

குறிவைக்கப்படும் மாணவர்கள்!

மாணவர்களிடம் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட காலம் போய், மாணவர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்துவது தற்போது அதிகரித்திருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை விசாரித்தால், பல திடுக்கிடும் தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஆடம்பரச் செலவு செய்ய ஆசைப்படும் நடுத்தரவர்க்க மாணவர்களைத்தான் இந்தக் கும்பல் குறிவைக்கிறது. அந்த மாணவர்களைப் பணத்தாசை காட்டி, மூளைச்சலவை செய்து தங்கள் கூட்டத்தில் சேர்த்துவிடுகின்றனர்.

கஞ்சா பிசினஸ் செய்த இன்ஜினீயர்கள்

இதற்குக் காரண்மும் உண்டு. மாணவர்கள் மூலம் மற்ற மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது எளிதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மாணவர்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினால், காவல்துறையினருக்குப் பெரிதாகச் சந்தேகமும் ஏற்படுவதில்லை. மற்றவர்களைவிட, மாணவர்களுக்குச் சம்பளத்தைக் குறைவாகக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்கள். இது போன்ற பல்வேறு காரணங்களால் கஞ்சா வியாபார கும்பல்கள் மாணவர்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்திவருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் கஞ்சா வியாபாரம்!

தற்போது, தமிழகத்தில் பல பெருநகரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகிவருவது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர்,  திருச்சி, நெல்லை ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாணவர்களிடையே கஞ்சா பயன்பாடு நாளுக்கு நாள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ``மாணவர்களைப் பொறுத்தவரை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் இந்தப் பழக்கம் தொற்றிக்கொள்கிறது. அப்படியே இந்தத் தொடர் சங்கிலி நீண்டுகொண்டே செல்கிறது. எதிர்காலத் தலைமுறையினர் இப்படி போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கஞ்சா

இந்த ஊரடங்கு காலத்தில் வேலையிழந்து, வருமானமின்றி தவித்துக்கொண்டிருந்த பலரும் கஞ்சா விற்பனை கும்பலிடம் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் பணத்தாசை காட்டி இந்தக் கும்பல் தன் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறது. வருமானமில்லாத அவர்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு, இந்தத் தொழிலில் இறங்கிவிடுகிறார்கள். முன்பெல்லாம், பல இடங்களில் அலைந்து, தேடிப்போய் வாங்க வேண்டிய நிலையிலிருந்த கஞ்சா, ஒரு போன் செய்தாலே வீட்டுக்கு வந்து டெலிவெரி செய்யும் அளவுக்கு மாறியிருக்கிறது. இதற்காக, தனியாக வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில் ஒரு பெரும் நெட்வொர்க் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஓரிடத்திலிருந்து சரக்கு தேவைப்படும் இடம் குறித்த விவரங்கள் அனைத்தும் இந்தக் குழுவில் பேசப்படுகின்றன.

Also Read: இன்ஜினீயரிங் கல்லூரி... ஐடி கம்பெனி... கஞ்சா நெட்வொர்க்... பாதை மாற்றிய போதைப் பயணம்!

தமிழகக் காவல்துறை தொடர்ந்து எவ்வளவோ முயன்றும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்துவருகிறது. தற்போது காவல்துறையினர் கைப்பற்றுவதெல்லாம் சிறிய அளவு கஞ்சா மட்டுமே; கைப்பற்றுவதைவிட பல மடங்கு விற்பனை செய்யப்படுகிறது என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். தமிழகத்துக்கு கஞ்சா பிற மாநிலங்களிலிருந்து வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த அல்அமீனுடன் தொடர்பிலிருந்தவர்களும் தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா செடி

பல ஆண்டுகளாகக் கஞ்சா பழக்கத்திலிருந்து மீண்டுவர, நூற்றுக்கணக்கான நபர்களுக்குச் சிகிச்சை அளித்துவரும் மனநல மருத்துவர் எம்.சுரேஷ்குமாரிடம் பேசினோம். ``கடந்த வருடம் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் மூன்று கோடி நபர்கள் கஞ்சா பயன்படுத்துகிறார்கள். இதில், அதிகப்படியான நபர்கள் இளைஞர்கள் என்பது தெரியவருகிறது. கஞ்சா பழக்கம் அதிகரிக்க முக்கிய காரணம், மற்ற போதைப்பொருட்களை விட கஞ்சாவானது குறைந்த விலையில் மிக எளிதில் கிடைக்கிறது. கஞ்சா அதிகம் பயன்படுத்தப்பட இதுவே முக்கியக் காரணம். மற்றொரு காரணம், கஞ்சா தடைசெய்யப்பட்ட போதைப்பொருள். அதைப் பயன்படுத்தினால் குற்றம் என்பதே பல மாணவர்களுக்குத் தெரிவது இல்லை. மாணவர்கள் ஒரு செயலை செய்கிறார்கள் என்றால், அது பரவலாக இருக்கும் பழக்கவழக்கமாகத்தான் இருக்கும். ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அந்தப் பழக்கம் தொற்றிக்கொள்ளும்.

Also Read: சிவகங்கை: காரில் இருந்த 15 பெட்டிகள்! - இரவு ரோந்தில் சிக்கிய 34 கிலோ கஞ்சா

`கஞ்சா அடிப்பதில் என்ன இருக்கிறது. நான் எல்லாம் அடிக்கிறேன்தான். இது ஒரு விஷயமா?' என்று எண்ணிவதால்தான் எளிதில் ஒருவர் மூலம் மற்றவருக்கு கஞ்சா பழக்கம் பரவுகிறது. அதுமட்டுமில்லாது, `கஞ்சாவில் என்ன இருக்கிறது என்று முயற்சி செய்து பார்க்கலாமே' என்று முயற்சி செய்வது. தற்போதைய நிலையில் புகைப் பழக்கம், குடிப்பழக்கத்தை முயற்சி செய்து பார்க்கலாம் என்பது போலக் கஞ்சாவைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்ற அறிய விரும்பும் ஆர்வம் மாணவர்கள், கஞ்சா பயன்படுத்தக் காரணமாக அமைகிறது. உண்மையில் நாம் கல்லூரி மாணவர்கள் பலரிடம் ரகசியமாகக் கேட்டுப் பார்த்தால் பலர் பயன்படுத்துவது தெரியவரும். சிறுவயதில் கஞ்சா பயன்படுத்த ஆரம்பிக்கும் மாணவர்கள், அந்த பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். பல மாணவர்கள் இப்படி ஒரு பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது அவர்களின் பெற்றோருக்குக்கூடத் தெரியாது.

மனநல மருத்துவர் எம்.சுரேஷ்குமார்

பெற்றோர்கள் தங்கள் குழந்தை என்ன செய்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். கஞ்சா பயன்படுத்துபவர்களைக் குற்றம் செய்தவர்கள் போல பார்க்கக்கூடாது. அவர்களுக்கு இருப்பது ஒரு மூளை சார்ந்த நோய் என்றுதான் பார்க்க வேண்டும். கஞ்சாவினால் அடிமையாகும் நபர்களுக்கு மருத்துவம் சார்ந்த சிகிச்சை மட்டுமல்லாது, மனநலம் சார்ந்த சிகிச்சை, குடும்பத்தின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து வெளியில் கொண்டுவர முடியும். இதைவிடுத்து அவர்களை நீங்கள் குற்றவாளியாக நீங்கள் பார்க்க நினைத்தால், செய்யும் தவறை மறைமுகமாகச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதனால், அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது, அவர்களின் குடும்பமும் பாதிக்கப்படும், இந்த சமுதாயமும் பாதிக்கப்படும். எனவே, இதுபோன்ற பழக்கங்களிலிருப்பவரைச் சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச்சென்று சரிசெய்யவேண்டும். கஞ்சா பழக்கம் என்பது சரிசெய்யக் கூடியதுதான்" என்று கூறினார்.

Also Read: ஆந்திரா டு திண்டுக்கல்... 300 கிலோ கஞ்சா..! - அதிரடிகாட்டிய தனிப்பிரிவு போலீஸார்

நாட்டின் ஏதோ ஒரு முலையில் உட்கார்ந்துகொண்டு ஒரு கொள்ளைக் கூட்டம் பணம் சம்பாதிக்க. நாட்டின் நாளைய எதிர்காலமான மாணவர்களை போதைப்பழக்கத்துக்கு அடிமையாக்கி, இப்படி நாச வேலையில் ஈடுபடுத்துவதை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின், எதிர்பார்ப்பாக இருக்கிறது.

செய்துமுடிக்குமா காவல்துறை..?



source https://www.vikatan.com/news/crime/story-about-increasing-cannabis-smuggling-by-college-students

சென்னை: `இந்தளவுக்கு சம்பாதிக்க முடியாது!' - போலி கால்சென்டர் மன்னன் சிக்கிய பின்னணி

கோவை, கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், குறைந்த வட்டியில் ஃபைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கித் தருகிறோம் என பெண் ஒருவர், என்னுடைய செல்போன் நம்பருக்குப் பேசினார். அவரைத் தொடர்ந்து 2 ஆண்கள் செல்போனில் என்னிடம் பேசினர். 8 லட்சம் ரூபாய் கடனுக்கு 13,59,500 ரூபாய் சேவைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் 5 தவணைகளாக அந்தப் பணத்தைச் செலுத்தினேன். ஆனால், கடன் பெற்றுத் தராமல் என்னை ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டால் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தகவல் வருகிறது. எனவே, என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

போலி கால் சென்டர் வழக்கில் கைதானவர்கள்

இந்தப் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சரவணக்குமார் ஆலோசனையின் பேரில் உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் சென்னை அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் போலி கால் சென்டர் நடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் தலைமையிலான கூட்டாளிகள்தான் புகார் கொடுத்த செல்வராஜ் உள்பட சிலரை ஏமாற்றியது தெரியவந்தது.

Also Read: `பெண்ணின் காந்தக் குரல்; கால் சென்டர் ஹைடெக் மோசடி!' - வி.சி.க பிரமுகரால் சிக்கிய பென்ஸ் சரவணன்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகம் முழுவதும் போலி கால் சென்டர்களைக் கோபி கிருஷ்ணன் நடத்தி பலரை ஏமாற்றி பணத்தைப் பறித்தார். பின்னர், அவரின் கூட்டாளிகளை போலீஸார் கைது செய்தவுடன் இலங்கைக்குத் தப்பி ஓடிவிட்டார். தீவிர தேடுதல் வேட்டையால் கோபிகிருஷ்ணனை போலீஸார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டமும் பதிவு செய்யப்பட்டது. சிறையிலிருந்து வெளியில் வந்த கோபி என்கிற கோபி கிருஷ்ணனும் அவரின் கூட்டாளிகளான வளர்மதி ஆகிய இருவரும் சேர்ந்து மீண்டும் திருமுல்லைவாயல் பகுதியில் பலரை வேலைக்கு அமர்த்தி கால் சென்டர் நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து கோபிகிருஷ்ணன், வளர்மதி அவரின் கணவர் அந்தோணி, விஜயகுமார், பௌத்தரசன், அரவிந்த், ரிஷித், கார்த்திக், விஜய், சாம்சுந்தர், ஜியோ வில்சன், லோகநாதன் ஆகிய 12 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வளர்மதி

இதுகுறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``சென்னையில் போலி கால்சென்டர்களை நடத்தி பலரை ஏமாற்றிய வழக்கில் சென்னை ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த கோபிகிருஷ்ணனை சில ஆண்டுகளுக்கு முன் கைது செய்தோம். சிறையிலிருந்து வெளியில் வந்த அவர், மீண்டும் தன்னுடைய கூட்டாளியான வளர்மதியுடன் சேர்ந்து திருமுல்லைவாயலில் போலி கால் சென்டரை நடத்தி பலரிடம் பணத்தை ஏமாற்றியுள்ளார். அதுகுறித்த புகாரின் பேரில் கோபிகிருஷ்ணன் உள்பட அவரின் கூட்டாளிகள் 12 பேரைக் கைது செய்துள்ளோம்.

கோபிகிருஷ்ணனின் கூட்டாளிகளான அ.தி.மு.கவைச் சேர்ந்த பென்ஸ் சரவணன், வி.சி.க பிரமுகர் செல்வா என்கிற செல்வக்குமார் ஆகியோரை ஏற்கெனவே கைது செய்துள்ளோம். கடந்தமுறை கோபிகிருஷ்ணனிடமிருந்து விலை உயர்ந்த சொகுசுக் கார்களையும் ஏடிஎம் கார்டுகள், டெபிட் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். ஆனால், இந்தத் தடவை கால் சென்டர் தொடங்கிய சில மாதங்களிலேயே அவர் சிக்கிக் கொண்டார். இருப்பினும் அவர் எத்தனை பேரை ஏமாற்றினார் என்று விசாரித்துவருகிறோம்'' என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``போலி கால் சென்டர்களின் மாஸ்டர் மைண்ட் கோபிகிருஷ்ணன். சிறையிலிருந்து வெளியில் வந்த கோபிகிருஷ்ணனுக்கு பணத்தேவை ஏற்பட்டுள்ளது. வேறு தொழில் செய்தால் இந்தளவுக்குச் சம்பாதிக்க முடியாது என்பதால் மீண்டும் போலி கால் சென்டரைத் தொடங்கியுள்ளார். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கோபிகிருஷ்ணனின் கூட்டாளிகள் போலி கால் சென்டர்கள் நடத்தி வந்தனர். அவர்களையும் கைது செய்துள்ளோம்.

போலி கால் சென்டர் நடந்த பென்ஸ் கிளப்

எனவே, பொதுமக்கள் லோன் தேவை என்றால் வங்கிகளுக்கு நேரில் செல்லுங்கள். கால் சென்டரிலிருந்தோ, குறிப்பிட்ட நிதி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி போன் மூலமாகவே குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறுபவர்களை நம்பி, பணத்தை ஏமாற வேண்டாம். மேலும், ஓ.டி.பி எண்கள், வங்கி ஆவணங்கள், அடையாள அட்டைகளை அறிமுகம் இல்லாதவர்களுக்கு வாட்ஸ்அப்பிலோ, இ-மெயிலோ அனுப்ப வேண்டாம்" என்றார்.

``கொரோனா காலக்கட்டத்தில் எனக்கு பணம் தேவைப்பட்டது. அதனால்தான் போலி கால் சென்டரைத் தொடங்கினேன்'' என்று கூறியுள்ளார் கோபிகிருஷ்ணண்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் போல....



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-fake-call-center-master-mind

"ஜெயிக்காமலேயே பொறுப்புக்கு வந்துடணும்னு மனோபாலா நினைக்கிறார்!" - டிவி சங்க சர்ச்சை

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவிவர்மா மீது, துணைத்தலைவர் மனோபாலா, செயலாளர் ரிஷி உள்ளிட்ட சக நிர்வாகிகள் நேற்று ஊழல் புகார் கூறியிருந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் சென்னை விருகம்பாகத்திலுள்ள சங்க அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவி வருகிறது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவே, "பொதுக்குழுவுக்கு மட்டுமே என்னை நீக்கும் அதிகாரமுண்டு; மற்றபடி யாரும் நீக்க முடியாது" என ரவி வர்மாவிடமிருந்து உறுப்பினர்கள் பலருக்கும் வாட்ஸ்அப் தகவல் பறந்துள்ளது.

ரவி வர்மாவிடம் பேசினோம்.

ரவி வர்மா

"மனோபலா சீனியர். அவர்மீது மிகுந்த மரியாதை வச்சிருக்கேன். ஆனா அவர் எங்க பக்கமும் பேசிக்கிட்டு, அந்தப் பக்கமும் பேசிட்டிருக்கார். கடைசியா நடந்த அவசரப் பொதுக்குழுவுல எல்லாப் பிரச்னையையும் வருகிற டிசம்பர் மாசம் நடக்க இருக்கிற பொதுக்குழுவுல பேசிக்கலாம். அப்ப பொதுக்குழு என்ன சொல்லுதோ, அதுப்படி நடக்கலாம்னு முடிவெடுத்தப்ப அவரும் இருந்தார். அன்னைக்குச் சரின்னு தலையாட்டிட்டு, இப்ப எல்லாரையும் தப்பா வழிநடத்திட்டு வர்றார்.

எல்லா சங்கத்துலயும் பொறுப்புல இருக்கணும்னு அவருக்கு ஆசை இருக்கலாம். அதுக்கு தேர்தல்ல நின்னு ஜெயிச்சு வரணும். இந்த மாதிரி தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தைக் கலைச்சு குறுக்கு வழியில வரணும்னு நினைக்கக் கூடாது.

கடந்த தேர்தல்ல நான்கு அணியாப் போட்டியிட்டோம். அதுல ரிஷி, போஸ் வெங்கட் அணியில் போட்டியிட்டவர். ஆனாகூட அவரை செயற்குழு பொறுப்புச் செயலாளரா தேர்ந்தெடுத்தப்ப நான் ஏத்துக்கிட்டேன். எல்லாரையும் அரவணைச்சுப் போகணும்னுதான் நான் விரும்பறேன். ஆனா ரிஷி வந்தவுடனேயே தன்னுடைய அதிகாரம் பத்தித் தெரியாம, நான் சங்கத்துல இருந்து நீக்கி வச்சிருந்த சில உறுப்பினர்களை என் சம்மதமில்லாம மறுபடியும் சேர்த்திருக்கார். பொருளாளர் ஜெயந்த் சங்கத்துக்குச் செலுத்த வேண்டிய பணம் சில லட்சங்கள் இருக்கு. வர்ற பொதுக்குழுவுக்கு, முன்னாடி அந்தப் பணத்தைக் கட்டணும். என்னை நீக்கிட்டா அந்தப் பணம் பத்தி யாரும் கேக்க மாட்டாங்கன்னு நினைக்கிறார். அதனாலதான் மனோபாலா பக்கம் அவர் நிற்கிறார்.

மனோபாலா

மனோபாலா, ரிஷி, ஜெயந்த்... இப்படி ஒரு ஏழு பேர் சேர்ந்துகிட்டு டிவி சங்கமே உடைஞ்ச மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்றாங்க. ஆனா சங்க நிர்வாகிகள்ல பெரும்பாலானோர் எனக்கு ஆதரவாத்தான் இருக்காங்க'' என்கிறார் ரவிவர்மா.

ரவி வர்மா அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தே நீக்கப் பட்டுவிட்டதால், அவர் சங்க அலுவலகத்துக்கு வரக்கூடாது என்பது மனோபாலா உள்ளிட்டவர்களின் கோரிக்கை.

Also Read: பணமோசடி... பொங்கிய மனோபாலா... உடைந்தது டிவி நடிகர் சங்கம்!

ஆனால், 'நான் டிவி சங்க அலுவகம் செல்வதை யாராலும் தடுக்க முடியாது' என்றபடி நேற்று காலையிலேயே சங்க அலுவலகம் வந்துவிட்டார் ரவி வர்மா. இருதரப்புப் பஞ்சாயத்திலும் சிக்க விரும்பாத சங்க மேலாளர் விடுமுறையில் சென்று விட்டார். ரவி வர்மாவை சங்கத்துக்குள் நுழையவிடாமல் தடுக்க நினைத்த மனோபாலா அணியைச் சேர்ந்த சில நடிகர், நடிகைகளும் சங்க அலுவலகம் முன் திரள, அங்கு கைகலப்பு நிகழும் அறிகுறி தென்பட்டதால் விவகாரம் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றது. காவலர்கள் சிலர் ரோந்து வந்து நிலைமையைக் கண்காணித்து, அப்போதைக்குப் பதற்றத்தைத் தணித்துள்ளனர்.

ரிஷியிடம் பேசினோம்.

ரிஷி

"நாங்க எடுத்த எல்லா நடவடிக்கைகளுமே சட்டத்துக்கு உட்பட்டவைதான். ரவி வர்மாதான் ரௌடியிசம் பண்ணிட்டு இருக்கார். ஒரேயொரு பெண் ஊழியர் தனியா இருக்கிற சங்க அலுவலகத்துக்குள் ஒரு கும்பலோடு போய் உட்காந்திருக்கார். செயலாளரான என்னுடைய அறைச் சாவியையும் பொருளாளர் அறையின் சாவியையும் வாங்கி வச்சுகிட்டார். இப்பவும் நாங்க சட்டப்படியே அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கலாம்னு இருக்கோம்" என்றார் ரிஷி.



source https://cinema.vikatan.com/television/the-background-details-of-the-issues-in-the-tv-actors-union

காரில் கழற்றப்பட்ட தேசியக் கொடி; வரிசைகட்டும் ஆதரவாளர்கள் - பரபரப்பான ஓ.பி.எஸ் வீடு!

அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் வெடித்த `யார் முதல்வர் வேட்பாளர்?’ பிரச்னைக்குப் பிறகு கட்சி மீண்டும் இரண்டு பிரிவுகளாக பிரிய ஆரம்பித்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் சந்திப்பதும், எடப்பாடி பழனிசாமியை அவரது ஆதரவு அமைச்சர்கள் சந்திப்பதுமாகக் காட்சிகள் நகர்கின்றன. வரும் அக்டோபர் 7-ம் தேதி அ.தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டியளித்திருந்த சூழலில், தன் இருப்பை விட்டுத்தரும் ஐடியாவில் பன்னீர் இல்லை என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

ஓ.பன்னீர்செல்வம்

நேற்று செப்டம்பர் 29-ம் தேதி காலை முதலே சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பொதிகை இல்லம் பரபரப்பாகக் காணப்பட்டது. பன்னீரின் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் அடுத்தடுத்து வந்தனர். சிறிது நேரத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமும் பொதிகை இல்லத்துக்கு வந்தார். வீட்டின் முதல் மாடியிலுள்ள வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்களை இறுக்கமான முகத்துடன் பன்னீர் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து பன்னீரின் ஆதரவாளர்களிடம் பேசினோம்.

Also Read: ``முடிந்தது டீல்..? - அ.தி.மு.க செயற்குழுவில் நடந்தது என்ன?"

``கனத்த மௌனத்துடன் அமர்ந்திருந்தவர்களை பன்னீரின் குரல்தான் கலைத்தது. `அவர் இப்படிப் பேசுவார்னு நான் நினைச்சுப் பார்க்கலைங்க’ என்று எங்கோ வெறித்துப் பார்த்தபடி எடப்பாடி குறித்து பன்னீர் பேச ஆரம்பித்தார். `சட்டமன்றத்துல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது, இந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்டுட்டோம். நாங்க எல்லாம் துரோகிகள்ங்கிற மாதிரி பேசுறாரு. நான் மட்டும் தர்மயுத்தத்தை கைவிட்டுட்டு கட்சியில இணைஞ்சிருக்கலைன்னா இந்த ஆட்சி இருந்திருக்குமா இல்லை, இவர்தான் முதல்வரா நீடிச்சிருப்பாரா... கட்சி சின்னாபின்னமா போய்விடக் கூடாதுங்குற ஒரே காரணத்துக்காகத்தான் மறுபடியும் அவர்கூட கைகோத்தேன். ஆனால், எனக்கே துரோகிப் பட்டம் சூட்டுறாங்க’ என்று வருத்தப்பட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அவரை ஆசுவாசப்படுத்திய வைத்திலிங்கம், `முதல்வர் வேட்பாளரைப் பற்றிப் பேச வேண்டிய நேரம் இது கிடையாது. வேணும்னே பிரச்னையை உருவாக்குறாங்க’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும், அதை ஆமோதித்த கே.பி.முனுசாமி, `இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தபோது என்ன பேசப்பட்டது... இரண்டரை வருஷத்துக்கு எடப்பாடி முதலமைச்சர்; மீதி ஆண்டுகளுக்கு பன்னீர்செல்வம் முதலமைச்சர்னுதானே பேசப்பட்டது... அதை மதிச்சாங்களா? 2021 சட்டமன்றத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் பன்னீர்தான்னு அப்போதே தீர்மானிக்கப்பட்டது. இதையெல்லாம் வகையாக மறந்துட்டாங்க. வழிகாட்டுதல்குழு போடுவோம்னு தீர்மானம் பண்ணி, மூணு வருஷமாச்சு. ஒவ்வொரு கூட்டத்துலயும் இது சம்பந்தமா பேசிப் பேசி நான் டயர்டு ஆனதுதான் மிச்சம். கட்சியோட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்தான். ஆனா, இவரால ஒரு மாவட்டச் செயலாளரைத் தன் விருப்பப்படி நியமிக்க முடியுமா... எல்லாமே தங்கமணி, வேலுமணி தீர்மானிப்பதாகத்தானே இருக்குது. இனிமேலும் இவங்களை நம்பிக்கிட்டு இருக்குறதுக்கு நாம முட்டாள் இல்லை’ என்று தன் பங்குக்கு ஆவேசத்தைக் கொப்பளித்தார் முனுசாமி.

Also Read: டார்க்கெட் சசிகலா... எடப்பாடி எடுக்கும் ஆணைய அஸ்திரம்!

வாட்டமாக இருந்த பன்னீரின் முகத்தில் கோப ரேகைகள் படர்ந்தன. தன் உதவியாளரை அழைத்த பன்னீர், அவர் காதில் ஏதோ கிசுகிசுக்க... சற்று நேரத்தில் பன்னீர் காரிலிருந்த தேசியக்கொடி கழற்றப்பட்டு, அ.தி.மு.க கொடி ஏற்றப்பட்டது. இதனால் ஆதரவாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு, `துணை முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யப்போகிறார்’ என்கிற தகவல் தீயாகப் பரவியது. கட்சி அலுவல்ரீதியாக பன்னீர் பயணமாகும்போது அவர் காரில் அ.தி.மு.க கொடி ஏற்றப்படும். ஆகவே,`அ.தி.மு.க அலுவலகத்துக்குச் செல்கிறோமா அல்லது ஜெயலலிதா சமாதிக்கா?’ என விவரம் புரியாமல் பாதுகாப்பு அதிகாரிகள் தவித்து நின்றனர். வெளிச் சலசலப்பு எதையும் அறியாததுபோல, பன்னீரின் வீட்டுக்குள் கூட்டம் தொடர்ந்துகொண்டுதானிருந்தது.

கே.பி.முனுசாமி

`செயற்குழு உறுப்பினர்கள் 200 பேரோட ஆதரவு இருக்குறதா எடப்பாடி சொல்றாரே... தொண்டர்கள் யார் பக்கம்னு கேட்டு இருக்கணும்ல’ என்று மனோஜ் பாண்டியன் பேசியதை பன்னீர் ஆமோதித்தார். `இதைப் புரிஞ்சுக்குற நிலைமையில எடப்பாடி இல்லை. எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்குனு அவர் நினைச்சுக்கிட்டு இருக்கார். நான் நினைச்சிருந்தா, தர்மயுத்தம் காலத்துலேயே ஒரேயடியா கட்சியை உடைச்சு தனியா பிரிஞ்சு போயிருக்க முடியும். புரட்சித்தலைவரும் அம்மாவும் கட்டிக்காத்த இந்தக் கட்சிக்கு என்னால களங்கம் வந்துடக் கூடாதுனுதான் அப்படிச் செய்யலை. இன்னைக்கும் தொண்டர்கள் யார் பக்கம்னு அவருக்குத் தெரியும். நான் மட்டும் இல்லைனா, இது வெறும் கொங்கு கட்சியாத்தான் அடையாளம் ஆகியிருக்கும். இப்போ இரட்டைத் தலைமையில கட்சி ஒழுங்காப் போகுது. முதல்வர் வேட்பாளர் யார்னு முடிவெடுக்க வேண்டிய நேரம் இது கிடையாது. தேர்தலைச் சந்திச்ச பிறகு முடிவெடுக்கலாம்’ என்று விடாப்படியாக நின்றார் பன்னீர்.

Also Read: முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தைத் தவிர்த்த ஓ.பி.எஸ்! - ஆதரவாளர்களுடன் ஆலோசனை

`இப்ப என்னண்ணே செய்யலாம்?’ என மனோஜ் பாண்டியன் கேட்டதற்கு, `அமைதியா இருப்போம்’ என்று ஒற்றைவரியில் பதிலளித்துவிட்டு அமைதியானார் பன்னீர். அதற்கு மேல் எதுவும் பேசாமல் கூட்டம் கலைந்தது. எடப்பாடியின் மூவ்க்கு ஏற்றாற்போல தன்னுடைய பதிலடியை வைத்துக்கொள்வது என்று தீர்மானித்திருக்கிறார் பன்னீர். இந்த முட்டல் மோதல் தொடரும் எனத் தெரிகிறது” என்றனர்.

பன்னீர்செல்வம்

பன்னீர் காரிலிருந்து கழற்றப்பட்ட தேசியக்கொடி, மதியம் 12 மணியளவில் மீண்டும் ஏற்றப்பட்டது. இன்று தேனி கிளம்புவதற்கு அவர் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காகத்தான் தேசியக்கொடியைக் கழற்றிவிட்டு, கட்சிக்கொடியை காரில் ஏற்றச் சொன்னதாகவும் பன்னீர் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. கடைசி நேரத்தில் பயணத்தை பன்னீர் ரத்து செய்ததால், காரில் மீண்டும் தேசியக்கொடி ஏற்றப்பட்டதாம். இதற்கிடையே பொதிகை இல்லத்துக்கு திடீரென வந்த முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் எம்.எல்.ஏ-வுமான மணிகண்டன், பன்னீரைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். அப்போது, அவருக்கு மணிகண்டன் தார்மிக ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னர், பன்னீரை நேற்று இரவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்துப் பேசினார். அடுத்தடுத்து முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்கள் பன்னீரைச் சந்தித்துப் பேசிவருவது கொங்கு ஏரியாவில் கலக்கத்தை உருவாக்கியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-power-tussle-reached-next-level-as-ops-meets-supporters

32 மாவட்டங்களில் தொடங்கப்படும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்! #NowAtVikatan

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

ரேஷன் கடை முன் பெண்கள்

தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள 32 மாவட்டங்களில் இந்தத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் இதைத் தொடங்கி வைக்கிறார்.

Also Read: கரூர்: `கிடைத்தது ரேஷன் கார்டு... வாழ்நாளுக்கும் மறக்க மாட்டேன்!' - நெகிழும் மாரியப்பன்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,821 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 63,12,584-ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனா பரிசோதனை

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,179 மரணங்கள் கொரோனா பாதிப்பால் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 98,708-ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 52,73,201பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/01-10-2020-just-in-updates

அன்லாக் 5.0: `அக்டோபர் 15; தியேட்டர்கள் திறக்க அனுமதி!' - மத்திய அரசின் புதிய தளர்வுகள் என்னென்ன?

கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கும் நோக்கில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, அக்டோபர் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அளிக்கும்.

லாக்டௌன்

பள்ளிகள், பயிற்சி நிறுவனங்களைத் திறப்பது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு முடிவெடுத்துக்கொள்ளலாம். பள்ளிக்கு மாணவர்கள் வரும் விவகாரத்தில் பெற்றோர்களின் ஒப்புதல் அவசியம்.

Also Read: `பள்ளிகள் திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு!’ - அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

கட்டுப்பாட்டு பகுதிகளில் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையிலான போக்குவரத்தைத் தடை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மத்திய அரசை ஆலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கு விதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காக்கள் அக்டோபர் 15-க்குப் பிறகு திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

லாக்டௌன்

வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கக் கூடிய நீச்சல்குளங்களை அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு திறந்துகொள்ளலாம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் வழங்கும். மாநிலத்துக்குள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு இ-பாஸ், இ-பெர்மிட் போன்றவை தேவையில்லை.



source https://www.vikatan.com/news/india/home-ministry-releases-unlock-50-guidelines

தலித் வன்கொடுமை சம்பவங்களில் சாதியைக் குறிப்பிடுவது ஏன் அவசியமாகிறது?

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த 19 வயது தலித் பெண்ணுக்காக நீதி கேட்டு குரல் எழுப்பும்போது, இன்னொரு பக்கத்திலிருந்து, ``ஏன் அவரது சாதியைக் குறிப்பிடுகிறீர்கள்? இது பெண்களுக்கு எதிரான வன்முறை" என்று பொதுமைப்படச் சொல்லச் சொல்கிறார்கள், சமூக வலைதள மனித உரிமை போராளிகள்.

ஏன் அந்த 19 வயது இளம்பெண்ணின் சாதியைக் குறிப்பிட வேண்டியது முக்கியமாகிறது? ஏன் அதை பெண்களுக்கு எதிரான வன்முறையாகப் பொதுமைப்படுத்த முடியாது? ஏன் நிர்பயாகளும் நந்தினிகளும் ஒன்று கிடையாது?

உ.பி பெண்

உங்களுக்கு மதுராவைத் தெரியுமா? பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மதுரா, 1972-ம் ஆண்டு இரண்டு காவல்துறையினரால் காவல்நிலையத்திலேயே வன்கொடுமை செய்யப்பட்டாள். அதுவும், மதுராவை விசாரணைக்கென்று இருக்கச் சொல்லிவிட்டு, அவளின் சகோதரனை காவல் நிலையத்தைவிட்டு வெளியேற்றி கதவைப் பூட்டினார்கள். இந்த வழக்கில் 1979-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பளித்த இந்திய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியது தெரியுமா?

``அந்தப் பெண் இதற்கு முன்பே பாலியல் உறவு கொண்டிருந்ததால், இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் காவலர்கள் பாலியல் உறவு கொண்டிருக்க முடியும்" என்று கூறி குற்றவாளிகளை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம். நீதிபதி கோஷல் கொடுத்த இன்னும் பல விளக்கங்களை எழுதவே கைகள் நடுங்குகின்றன. ஆனால், இவ்வளவு கொச்சையான தீர்ப்பு கொடுத்த சில நாள்களுக்கு முன்பு அதே உச்ச நீதிமன்றம், ``பெண்களை காவல்நிலையத்திற்கு அழைக்கக்கூடாது" என்று கடுமையாக எச்சரித்திருந்தது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நீதி கேட்கும் பயணம், இப்படியான நீதிமன்ற வன்முறைகளில்தான் முடிகிறது.

இதுபோன்ற ஒரு நாட்டில், பாதிக்கப்பட்ட தலித் பெண்ணுக்குக் குரல் கொடுக்காமல், ``தலித் என்று ஏன் குறிப்பிடுகிறீர்கள்?" என்ற கேள்வியை மட்டும் கேட்க வந்துவிடுகிறார்கள் பலர். இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் (இது பதிவு செய்யப்பட்ட வன்முறைகளின் எண்ணிக்கை மட்டுமே). என்றாலும், தலித்துகளுக்கு எதிரான வன்முறை அவர்களது கூட்டு மனசாட்சியை எப்போதும் உலுக்காது.

நிர்பயா பாலியல் வன்முறை செய்யப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபோது நீதி கேட்டுப் போராடியவர்கள், 19 வயது தலித் பெண்ணுக்கு நீதி கேட்க ட்வீட் செய்வதற்கே அந்தப் பெண் சாகவேண்டியிருக்கிறது. மிருகத்தனமான முறையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் பெண்ணுக்கு, சிறப்பு விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி சிகிச்சை அளிக்காதுதான் இந்திய அரசு.

An Indian activist shouts slogans as she is detained by police during a protest in New Delhi, India

பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட நிர்பயாக்களின் உடல்களை, அவர்களின் குடும்பத்தினரை பூட்டி வைத்துவிட்டு அதிகாலை 2 மணிக்குக் காவல்துறையால் எரிக்க முடியாது; அவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது, `இவ நடிக்கிறா’ என்று காவல்துறை சொல்லாது. ஆனால், இவையெல்லாம் உத்தரப்பிரதேச தலித் பெண்ணுக்கும், அவர் உடலுக்கும் நடந்திருக்கின்றன.

இத்தனை கொடூரமான வன்முறை, அதிகாரபூர்வ குழந்தை வயதைக் கடந்து ஒரு வருடமே ஆன ஒரு இளம்பெண்ணின் மீது நிகழ்த்தப்பட்டிருந்தும், ``பாலியல் வன்கொடுமை நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை" என்று காவல்துறை சொல்லும் அலட்சியத்துக்கு, அவர் ஒரு தலித் என்ற காரணமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது.

நிர்பயாக்களின் வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை செய்தி லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படும். ஜிஷாக்களின் வழக்குகளைப் பற்றி, நந்தினிகளின் வழக்குகளைப் பற்றி பெட்டிச் செய்திகூட போடமாட்டார்கள். நந்தினியும், ஜிஷாவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்ததாலேயே, சட்டத்தின் மீது பயமில்லாமல் உயர்சாதியினரால் கொல்லப்படுவார்கள். அவர்களின் பெயர்கள்கூட ஒரு வாரத்திற்குப் பின் மக்களுக்கு நினைவிருக்காது. நிர்பயாக்களின் பெயர்கள் எப்போதும் நினைவிருக்கும்.

உத்தரப்பிரதேசத்தில் கொல்லப்பட்ட பெண், ஆறு மாதங்களுக்கு முன்பாகவே, தற்போது அவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளால் மிரட்டப்பட்டிருக்கிறார். அவர்கள் வாழும் கிராமத்தில் மிகக் கொடூரமான முறையில் தீண்டாமை வெளிப்படையாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. பள்ளிகளில் தலித் மாணவர்கள் டாய்லெட்டுகளை சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். தலித் மக்கள் பணம் கொடுத்தால், அந்தப் பணம் தண்ணீர் தெளித்து வாங்கப்படுகிறது. இவை எல்லாம் அந்த கிராமத்தில் பின்பற்றப்படும், இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு கிராமங்களில் பின்பற்றப்படும் பல்வேறு வகையிலான தீண்டாமையின் ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையையோ, நந்தினிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையையோ பெண்களுக்கு எதிராக ஆண்களால் நடத்தப்படும் வன்முறை எனப் பொதுவாகக் கடந்துவிட முடியாது. இந்தியாவில் தலித்துகள், பழங்குடி மக்கள் மீது உயர்சாதியினரால் நடத்தப்படும் வன்முறை, திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட வன்முறை. இதில் அரசுக்கும் நீதித்துறைக்கும் பெரும் பங்கிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட, தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையின் அடிப்படைக் காரணம், அவர்கள் பிறந்த சாதி. உயர்சாதியினரால் நிரப்பப்பட்ட நீதித்துறையும், காவல் நிலையமும், மனுநீதியால் ஆளப்படும் இந்திய கூட்டுமனசாட்சியும், ``இவை என்றும் என் பக்கம்தான் நிற்கும்" என்பதோடு இணைந்த சாதியத் திமிருக்கு ஊக்கம் கொடுத்து, தலித்துகள் மீதான வன்முறையை சாத்தியப்படுத்துகிறது. எனவே, இதற்கான அடிப்படை சாதி.

வன்கொடுமை

Also Read: காவல் நிலையங்களே பெண்களுக்கு பாதுகாப்பானதில்லையா... திருப்பூர் சம்பவம் சொல்வது என்ன?

இதுபோன்ற ஒரு சமூகச் சூழலில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை, தலித் என்று குறிப்பிடுவதில் இந்த திடீர் மனித உரிமை போராளிகளுக்கு ஏன் கோவம் வரவேண்டும்? ``ஏன் தலித் என்று சாதியை வைத்துப் பிரித்துப் பேசுகிறீர்கள்?" என்று, இன்று கம்ப்யூட்டருக்குள் மறைந்துகொண்டு தலித்துகள் மீதான வன்முறையைப் பற்றி பலர் கேள்வி கேட்கும்போது, அவர்கள் அனுபவிக்கும் சாதிய சலுகையும் சேர்ந்தே கேள்விக்குள்ளாகிறது. அது பயத்தை ஏற்படுத்தி அவர்களை அமைதியற்றவர்களாக்குகிறது. அந்த பயம்தான் #DalitLivesMatter என்று ட்விட்டரில் பேசினால், #AllLivesMatter என்று ஹேஷ்டேக் போடவைக்கிறது. சாதிக்கு எதிரான கேள்வி அவர்களது சாதிய சலுகையை கேள்விக்குள்ளாக்குகிறது. அவர்கள், தங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ சாதியவாதிகளாக இருக்கிறார்கள்.

நாம் அவர்களுக்கு பதில் சொல்லத்தேவையில்லை. கொல்லப்பட்ட தலித் இளம்பெண்ணுக்காகவும், இந்தியா முழுவதும் தலித்துகள் மீது அதிகரித்திருக்கும் வன்முறைக்கு எதிராகவும் குரல் கொடுப்போம்.



source https://www.vikatan.com/social-affairs/women/why-it-is-necessary-to-mention-caste-while-speaks-about-violence-against-dalit

தீமைகள் அழித்து நலமருளும் நவதுர்கா ஹோமம்... சக்தி விகடன் நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்வது எப்படி?

கடந்த ஏழு மாதங்களாக மக்கள் மனம்தோறும் விதவிதமான அச்சங்கள், சகல காரியங்களிலும் அவநம்பிக்கைகள். செய்து வந்த தொழில் முடங்கியுள்ளதே, பார்த்து வந்த வேலை போய்விட்டதே, இருக்கும் வேலை எப்போது போகுமோ, வாங்கிய கடனிலிருந்து மீள முடியுமா, கொடுத்த கடனை மீட்க முடியுமா... அப்பப்பா எத்தனை கவலைகள்... எத்தனை கலக்கங்கள்!

எல்லாவற்றுக்குமே ஒரு தீர்வு உண்டு என்று நம்பிக்கை அளிப்பதே ஆன்மிகத்தின் பயன். அந்த வகையில் சகல அச்சங்களையும் தீர்த்து சௌபாக்கியம் அளிப்பவள் லோகமாதாவான துர்கை மட்டுமே. அன்னையே நமக்கு அபயம் அளிப்பவள். அவளைச் சரணடைந்தவருக்கு ஏது துயர்... நவராத்திரி நாள்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துர்கை வடிவம் கொண்டு துயர் அழித்து நலமளித்த தேவி, இனி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நலமே அருள்வாள். நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் நீடித்த ஆரோக்கியமும் அருள்வாள் என்பது சத்தியம்.

துர்கை

சைல புத்ரி, ப்ரம்ம சாரிணீ, சந்த்ர கண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனீ, காலராத்ரி, மஹாகௌரி, ஸித்திதாத்ரி என நவதுர்கைகள் தோன்றி அசுர சக்திகளை வென்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன. அதுபோலவே வனதுர்கா, சூலினி துர்கா, ஷாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வால துர்கா, ஜாத வேதோ துர்கா, லவண துர்கா, தீப துர்கா, அஸீரி துர்கா என ஒன்பது துர்கைகள் தோன்றி லோக மக்களைக் காத்தனர் என்றும் கூறுவதுண்டு.

ஒருமுறை ஆதி சங்கர பகவத் பாதர் 'ஆப்தி கிம் கரணீயம்’ (ஆபத்து காலத்தில் என்ன செய்ய வேண்டும்) எனும் கேள்வியைக் கேட்டு, அதற்குரிய பதிலையும் தந்தார்.

'ஸ்மரணீயம் சரணயுகளம் அம்பாயா:’ அதாவது, அம்பாளின் பாத கமலங்களை நினை என்று விடையளிக்கிறார். எனவே உங்களின் சகல துக்கங்களையும் நீக்க, சந்தோஷ வாழ்வைப் பெற ஆன்மிக ஆன்றோர்கள் வழி காட்டியுள்ளார்கள் அதுவே, நவதுர்கா ஹோமம்.

ஹோமம்
இந்த நவதுர்கா ஹோமத்தில் ஒவ்வொரு துர்கைக்கும் ஒரு கலசம் வைத்து, ஶ்ரீதுர்காசூக்தம் ஜபம் மற்றும் ஹோமம் செய்யப்பட்டு, பூர்ணாஹுதி நடைபெறும். பின்னர் கலசங்கள் பிரதட்சிணமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும்.

இந்த நவதுர்கா ஹோமத்தில் பங்கேற்று சங்கல்பம் செய்துகொள்வதன் மூலம் எதிரிகளின் தொல்லை, கடன் பிரச்னை, பெருந்தொற்றுப் பிணிகள் போன்றவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்கின்றன சாஸ்திரங்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு மிகவும் சிலாக்கியமான ஹோமம் நவதுர்கா ஹோமம். இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்தவர் வீட்டில் வறுமை அண்டாது. அச்சம், கவலை, அவநம்பிக்கைகள் சூழவே சூழாது என்பது உண்மை. உங்களின் வாட்டி வதைக்கும் எந்தத் துன்பத்துக்கும் இந்த ஹோமம் நிச்சயம் ஒரு தீர்வை அளிக்கும். அம்பிகையை நம்புங்கள், ஆதரவுகள் பெருகும். வளங்கள் சேரும்.

நவராத்திரியின் 9 நாள்களும்... நல்லவர்களைக் காப்பாற்ற தீயவர்களான ரக்த பீஜன், தூம்ரலோசனன், சும்பன், நிசும்பன் போன்றோரை அழித்த எல்லாம் வல்ல மகிஷாசுர மர்த்தனியின் பாதம் பணியுங்கள், ஆன்ம பலத்தைப் பெறுங்கள்!

நலமருளும் நவராத்திரி விழாவை ஒட்டி உங்கள் சக்தி விகடனும் பெரிய வெளிக்காடு அருள்மிகு வெக்காளி அம்மன் சித்தர் பீடமும் இணைந்து நடத்தும் நவதுர்கா ஹோமம், செங்கல்பட்டு மாவட்டம் பெரியவெளிக்காடு கிராமம் அருள்மிகு வெக்காளி அம்மன் ஆலயத்தில் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் வாசகர்களும் பங்கேற்று சங்கல்பிக்கலாம்.

நவதுர்கா ஹோமம்

வாசகர்களின் கனிவான கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.301/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்), பெரியவெளிக்காடு அருள்மிகு வெக்காளி அம்மன் சந்நிதியில் விசேஷமாய்ப் பூஜிக்கப்பட்ட - அம்மன் டாலருடன் கூடிய காப்பு ரட்சை ஆகியவை ஒரு வார காலத்துக்குள் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில்... வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் (19.10.20 திங்கள் அன்று) வீடியோ வடிவில் சக்தி விகடன் யூடியூப் சேனல் மற்றும் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

இந்த நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/functions/navadurga-homam-event-to-be-conducted-by-sakthi-vikatan

மோடி விராட் கோலியிடம் குறிப்பிட்ட `யோ-யோ டெஸ்ட்' என்பது என்ன... யாரெல்லாம் செய்யலாம்?

பிரதமர் மோடி சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் ஃபிட்னஸ் குறித்து வீடியோ காலில் உரையாடினார். `ஃபிட் இந்தியா' இயக்கம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதைக் கொண்டாடும் விதமாக இந்த உரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

virat kohli - modi

இதில் கலந்துகொண்ட விராட், ``ஃபிட்னஸ்ஸில் கவனம் செலுத்தத் தொடங்கிய பிறகுதான் என் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டது. கிரிக்கெட்டுக்கான வலைப்பயிற்சியைவிட, உடற்பயிற்சிதான் முக்கியம். அதைத் தவறவிட்டால் போட்டியில் ஏமாற்றம்தான் கிடைக்கும். வெறும் திறமையை மட்டும் நம்பியிருக்கக் கூடாது. ஃபிட்னஸ்ஸுக்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்" என்று கூறினார்.

அப்போது விராட்டிடம், ``யோ-யோ டெஸ்ட் என்றால் என்ன? நீங்கள் அதைச் செய்துள்ளீர்களா?" என்று பிரதமர் கேட்டதற்கு, ``கிரிக்கெட்டில் அணிகளைத் தேர்வு செய்யும்போது இந்த யோ- யோ டெஸ்ட் நடத்தப்படும். இது ஓட்டம் உள்ளிட்ட கடின பயிற்சிகளை உள்ளடக்கியது. நான் எப்போதும் இந்த டெஸ்ட்டில் முதல் ஆளாக வருவேன். இதில் தேறவில்லை என்றால் அணியில் இடம்பிடிக்க முடியாது" என்று கூறினார்.

பிரதமர் மோடி - விராட் கோலி இடையேயான உரையாடலில் குறிப்பிடப்படும் `யோ-யோ டெஸ்ட்' கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளில், ஆட்களுக்கான அணித்தேர்வில் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கிய பரிசோதனை. விளையாட்டு வீரரின் `ஃபிட்னஸ்' அளவை பரிசோதிக்க இந்த டெஸ்ட் செய்யப்படுகிறது.

யோ யோ டெஸ்ட் என்றால் என்ன, அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது... ஃபிட்னஸ் பயிற்சியாளரான கோகுல் சீனிவாசனிடம் பேசினோம்.

கோகுல் சீனிவாசன்

``டென்மார்க்கைச் சேர்ந்த உடலியல் நிபுணர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த யோ-யோ டெஸ்ட். ஆரம்பத்தில் இது கால்பந்து விளையாட்டு வீரர்களின் ஃபிட்னஸ் அளவை சோதிக்கவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஏனெனில், ஃபுட்பால், கிரிக்கெட் போன்ற எந்தவொரு விளையாட்டையும் திறம்பட விளையாடி வெற்றிபெற ஃபிட்னஸ் அவசியம். அதிலும் ஃபுட்பாலில் ஏறக்குறைய 90 நிமிடங்கள் இடைவெளியின்றி முழு ஆற்றலுடன் போட்டியில் ஈடுபட வேண்டியது வரும். அதற்கு ஈடுகொடுக்க ஃபுட்பால் அணியில் உள்ள வீரர்களுக்கு உடல்தகுதி முக்கியமானதாகக் கருதப்பட்டதால் அவர்களுக்குத்தான் ஆரம்பத்தில் யோ-யோ டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன் பிறகு, நாளடைவில் கிரிக்கெட் போட்டிக்கும் இந்த டெஸ்ட் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக, கிரிக்கெட்டில் டி-20 போட்டிகள் வந்த பிறகே, யோ-யோ டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. இன்டர்நேஷனல் கிரிக்கெட் அணி தேர்வின்போது யோ-யோ டெஸ்ட் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த டெஸ்ட்டில் தேறினால் மட்டுமே அந்த வீரர் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்.

football

யோ-யோ டெஸ்ட் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

யோ-யோ இன்டெர்மிட்டன்ட் ரெக்கவரி டெஸ்ட் (Yo-Yo Intermittent Recovery Test) என்பதே தற்போது கிரிக்கெட் அணித்தேர்வுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியது. 20 மீட்டர் நீளமுள்ள இடத்தைத் தேர்வுசெய்து, 20 மீட்டரின் தொடக்கத்தை ஆரம்ப புள்ளியாகவும், அதன் இறுதியை முடிவு புள்ளியாகவும் குறித்துக்கொள்வார்கள். யோ-யோ டெஸ்ட்டில் பங்குபெறும் வீரர் இந்த 20 மீட்டரின் ஆரம்ப மற்றும் முடிவு புள்ளிகளை ஓடிச்சென்று மாறி, மாறி தொட்டு வர வேண்டும். 40 விநாடிகளில் எத்தனை முறை அந்த இரண்டு புள்ளிகளையும் தொட்டு வர முடிகிறது என்பதைப் பொறுத்து அதில் கலந்துகொண்ட வீரருக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் லெவலில் அந்த வீரர் 8 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட வேண்டியது இருக்கும். அடுத்த லெவலில் 11.5 கிலோமீட்டராக வேகம் அதிகரிக்கப்படும். இதுபோல் மொத்தம் 23 லெவல்கள் உள்ளன. ஒவ்வொரு லெவலுக்கும் வீரரின் ஓடும் வேகம் அதிகரிக்கப்படும். இந்த 23 கட்டங்கள் ஒவ்வொன்றும் 40 நிமிடங்கள் நடைபெறும். ஒவ்வொரு கட்டத்துக்கும் இடையே அந்த வீரருக்கு 10 விநாடிகள் ஓய்வு வழங்கப்படும்.

Also Read: பரவும் கோவிட்-19 நோய்த்தொற்று... ஜிம்முக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

இந்த டெஸ்ட்டில் கலந்துகொள்ளும் வீரர் இதில் பெறக்கூடிய மதிப்பெண்களின் அடிப்படையில், அவர் இதில் வெற்றி பெற்றாரா அல்லது தோல்வியுற்றாரா என்பது நிர்ணயிக்கப்படும். சிலர் 23 லெவல்களையும் தாண்டிவிடுவார்கள். சிலர் 15, 16 லெவல்களிலேயே தங்களால் முடியவில்லை என்று நிறுத்திக்கொள்வார்கள். அது ஒவ்வொருவரின் ஃபிட்னஸ்ஸை பொறுத்தது. கிரிக்கெட்டில் ஆண், பெண் இரண்டு அணியினருக்கும் இந்த டெஸ்ட் மேற்கொள்ளப்படுகிறது.

cricket team

யோ-யோ டெஸ்ட்டில் கலந்துகொள்ளும் ஒரு வீரர் அதில் தேறாமல் போகும் பட்சத்தில் அவருக்கு மேலும் இரண்டு முறை வாய்ப்புகள் தரப்படும். அவற்றில் வெற்றிபெற்றுவிட்டால் அவர் அணியில் இடம்பிடித்துவிடலாம். அதிலும் வெற்றிபெறவில்லை என்றால் அவர் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார். யோ-யோ டெஸ்ட் எடுக்கப்படும் நான்கு நாள்களுக்கு முன்பிருந்தே அதற்காகத் தயாராக வேண்டும். மது அருந்தியிருக்கக் கூடாது. யோ-யோ டெஸ்ட் எடுக்கப்படும் நேரத்துக்கு முன் நான்கு மணி நேரம் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. நான்கு மணி நேரத்துக்கு முன்பே கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் நீர்ச்சத்தை இழக்காமல் (Dihydrate) இருக்க அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். யோ-யோ டெஸ்ட் டெஸ்ட்டுக்கு செல்வதற்கு முன்பு ரன்னிங், ஜாகிங் போன்ற எளிய உடற்பயிற்சிகளைச் செய்தாக வேண்டும்.

இந்த யோ-யோ டெஸ்ட்டை விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் தங்கள் ஃபிட்னஸ்ஸை சோதித்துப் பார்க்க விரும்பும் மற்றவர்களும் செய்துகொள்ளலாம். இந்தப் பரிசோதனையை எப்படிச் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலை ஃபிட்னஸ் பயிற்சியாளரிடமோ, உடலியல் நிபுணரிடமோ பெற்றுக்கொள்ளலாம்" என்றார் கோகுல் சீனிவாசன்.



source https://www.vikatan.com/health/fitness/fitness-trainer-explains-about-yo-yo-test-and-its-procedure

ஹலோ வாசகர்களே...

ஹலோ வாசகர்களே


source https://www.vikatan.com/news/announcements/hello-vikatan-readers-189

MOTOR VIKATAN : Free Online Workshop on Jobs in the field of Motor Sports

Free Registration Contact: 7338826999 / 9790990404 https://bit.ly/3c8eaK5

Free Registration Contact: 7338826999 / 9790990404 https://bit.ly/33FkmWf



source https://www.vikatan.com/news/gadget-launch-tech-events/motor-vikatan-jointly-presentsfree-online-workshop-on-job-prospects-in-it-industry

காக்கிகள் வியூகம்: ஆளும் கட்சியில் 'மூம்மூர்த்தி'கள்... எதிர்முகாமில் பெண் அதிகாரிகள் படை!

'மூம்மூர்த்தி'கள் ராஜ்ஜியம்... அபார்ட்மென்ட் வியூகம்

நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகிலிருக்கிறது அந்த அதிநவீன அபார்ட்மென்ட். உளவு பார்ப்பது தொடங்கி எதிர்முகாமின் ரகசியங்களைக் களவாடுவது வரை அத்தனையும் இங்கிருந்தே சுடச்சுட 'ஆர்டர்' செய்யப்படுகின்றன. முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி ஒருவர், சேலம் வாரிசு, தேர்தல் வியூக ஆலோசகர் ஒருவர் என மூம்மூர்த்திகள் சுற்றிச் சுழன்று, வரும் தேர்தலில் ஆளும் கட்சியைக் கரையேற்றும் வித்தைகளைச் செய்துவருகிறார்கள்.

பெங்களூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், மீடியா பிரமுகர்கள், அதிகாரிகள் என 230 பேரின் அலைபேசிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். அரசியலில் எதிரிகளை ரகசியமாகப் பின்தொடர்வது, பெண் தொடர்புகளை ஆராய்வது, சாதிரீதியான பலத்தை உடைப்பது, ஊழல் விவகாரங்களைத் தோண்டியெடுப்பது போன்ற பணிகளை மற்றொரு டீம் ஒன்று கச்சிதமாகச் செய்துவருகிறது. இன்னொரு பக்கம் கொங்கு அமைச்சருக்காகத் தகவல் திரட்டும் வேலைகளை, பெருநகர காக்கி அதிகாரி ஒருவர் பார்க்கிறார்.

'பென் டிரைவ்'-ல் பயணிக்கும் பெண் அதிகாரிகள் படை!

எதிர்முகாமைப் பொறுத்தவரை தனித்தனி சேனல்கள். ஸ்டாலினுக்கு ஒரு டீம், உதயநிதிக்கு ஒரு டீம், சபரீசனுக்கு ஒரு டீம். 20-20 மேட்ச் போல இவர்களுக்குள் நடக்கும் சேஸிங் காட்சிகள் அனல்பறக்கின்றன. காக்கித் துறையில் மூன்று பெண் உயரதிகாரிகள் இவர்களுக்காக 'ஸ்பை' வேலைகளைப் பார்க்கிறார்கள்.

'பென் டிரைவ்'களில் ரகசியமாகப் பயணிக்கின்றன ஆளும்கட்சியின் ஊழல் கோப்புகள். 'சகோதரர்' ஒருவரிடம் தொடர்பிலிருக்கிறார் மூன்றெழுத்து கேடர் அதிகாரி ஒருவர். 'போதும் போதும்' எனும் அளவுக்கு ஆளும்கட்சியின் ஊழல் தகவல்களைக் கொட்டுகிறார் கோதுமை தேசத்து அதிகாரி ஒருவர். சமீபத்தில் இவர் கசியவிட்ட விவகாரம் ஒன்றுதான், பிரதமர் அலுவலகம் வரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

- இன்னும் ஏழே மாதங்கள்தான்... தேர்தல் போருக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது தமிழக அரசியல் களம். 2021, மே மாத உச்சிவெயிலுக்கான சூடு இப்போதே ஏறத் தொடங்கிவிட்டது. கட்சிகளெல்லாம் கார்ப்பரேட் அரிதாரம் பூசிக்கொண்டு, அசைன்மென்ட் டிசைன்களை ஆராயத் தொடங்கிவிட்டன. கோட், சூட் அணிந்த வடக்கு 'வாலா'க்கள் சக்கர வியூகங்கள் வகுக்க... முன்னாள், இந்நாள் உளவுத்துறை அதிகாரிகள், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ்-கள், சீனியர் பத்திரிகையாளர்கள் எனப் பெரும் குழுவே அவர்கள் பின்னால் அணிவகுக்கிறது.

> மன்னார்குடி டு தென்சென்னை!

> ரஜினிக்கு ராஜசேகர்!

> காக்கிகளின் கண்ணசைவில் கரன்ஸி!

> நிறைவான சம்பளம்... தாராளமாகச் செலவு!

> "பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு!"

> ரெஸ்ட் எடுக்கும் கிங் மேக்கர் அலெக்ஸ்!

- இந்தக் காட்சிகள் அப்படியே ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக... படிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3n5cuWY> போருக்குத் தயாராகும் கட்சிகள்! - வியூகம் வகுக்கும் காக்கிகள் https://bit.ly/3n5cuWY

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/news/general-news/how-political-parties-operates-their-secret-wings-for-upcoming-tn-assembly-elections

`இளம்பெண் உடலை அதிகாலை 2.30 மணிக்குத் தகனம் செய்த போலீஸார்?'- உ.பி வன்கொடுமை வழக்கு சர்ச்சை

2012 நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் போன்ற கொடுமைக்கு ஆளான உத்திரப்பிரதேச பட்டியலின இளம்பெண் கடுமையான பாதிப்புகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எலும்பு முறிவு, பக்கவாதம், துண்டிக்கப்பட்ட நாக்கு என்று கொடூரமாகப் பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், பெண்ணின் பெற்றோர்களைத் தடுத்து, அவசர அவசரமாக அதிகாலை 2.30 மணியளவில் பெண்ணின் உடலை ஊருக்கு வெளியில் காவல்துறையினர் தகனம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றம் 2018-ம் ஆண்டைவிட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 87 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உத்திரப்பிரதேசம் மாநிலம் மேற்குப் பகுதியில் டெல்லிக்கு மிக அருகில் இருக்கும் சிறிய மாவட்டம் ஹாத்தரஸ். அந்த மாவட்டத்தின் சண்ட்பாவை கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 4 இளைஞர்கள் அந்த இளம்பெண்ணை தூக்கிச் சென்று அருகிலிருந்த வீட்டில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும், அவரைக் கடுமையாகத் தாக்கவும் செய்தனர்.

இதில், மயக்கமடைந்த அப்பெண்ணை சாலை ஓரம் போட்டு விட்டு சென்றனர். சில மணி நேரத்தில், கிராமவாசிகளின் கண்களில் பட்ட அந்த பெண், ஹாத்தரஸின் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார். ஹாத்தரஸின் சண்ட்பா கிராமத்தில் பல்வேறு சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இதில் தாக்கூர் சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்ற புகார் நீண்டநாள்களாகவே இருந்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். முதலில், அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் அது கொலை முயற்சியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் மேல் சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

க்ரைம்

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ``பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கை மற்றும் இரு கால்களும் செயலிழந்து விட்டன. நாக்கு துண்டிக்கப்பட்டதாலும், கழுத்து நெரிக்கப்பட்டதாலும் அவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை" என்றனர்.

இதையடுத்து, டெல்லியிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹத்ராஸ் கிராமத்திற்கு, அந்த பெண்ணின் உடல் நேற்று இரவே ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்பட்டது. இரவோடு இரவாக அந்த பெண் சடலத்துக்கு எரியூட்ட வேண்டும் என்று காவல்துறை வற்புறுத்தியதற்கு, அந்த பெண்ணின் குடும்பத்தார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Also Read: உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?

இந்து முறைப்படி, தகனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அப்பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையினரின் காலில் விழுந்து கெஞ்சிய போதும், ஆம்புலன்ஸை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்தும் இருக்கிறார்கள். ஆனால், அதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி இல்லை என்று கறார் காட்டியிருக்கிறார்கள். இதனிடையே, இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஊருக்கு வெளியே அந்த இளம்பெண்ணின் உடல் அவசர அவசரமாக எரித்துள்ளனர் காவல்துறையினர்.

பெற்றோர்கள், மீடியா அனுமதியின்றி ஏன் அவசரமாக அப்பெண்ணின் உடல் எரிக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த, ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் லக்ஸ்கர், ``பெண்ணின் குடும்பத்தினர் அனுமதியின்றி இறுதி சடங்கு நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை. இரவில் இறுதிச் சடங்குகளை நடத்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் ஒப்புதல் அளித்தனர். இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பெண்ணின் உடலை ஏற்றி வந்த வாகனம், அவரது கிராமத்தில் நள்ளிரவு 12:45 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகுதான், தகனம் நடைபெற்றது'' என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவசர அவசரமாக இளம்பெண்ணின் உடலைத் தகனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ``இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில உள்துறை செயலர் தலைமை வகிப்பார். ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கையை இந்தக்குழு அளிக்கும். வழக்கு விசாரணையை விரைவு நீதிமன்றத்தில் நடக்கும்'' எனக் கூறினார்.

``இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்" என்றும் யோகி ஆதித்யநாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில்,``பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், மாநில அரசு செய்து தர வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலமாக உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்,``இந்த சம்பவம் கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக தூக்கில் போட வேண்டும்'' என காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டர் பதிவில், ``வெறிச்செயலால் பாதிக்கப்பட்டு, உயிருக்காக போராடிய இளம்பெண் உயிரிழந்து விட்டார். உத்திரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகி விட்டது. பெண்கள் பாதுகாப்பில் ஒற்றுமை கிடையாது. குற்றவாளிகள் பகிரங்கமாக குற்றச் செயல்களை செய்கின்றனர். இளம்பெண் சாவுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கேள, நீங்கள்தான் உத்திரப்பிரதேச பெண்களின் பாதுகாப்புக்கு பொறுப்பு’' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறுகையில், ``பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, உ.பி போலீஸாரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆணையம் செய்யும்” என்றார்.

உ.பி-யில் உன்னாவ் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, இந்த இளம்பெண்ணின் மரணத்தால் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/up-gang-rape-victim-cremated-without-familys-consent-alleges-activist

`ஆஞ்சநேயர் துணை நிற்பார்!' - எடப்பாடி பழனிசாமியின் ஒருமாத விரதம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இம்மாதத்தில் மாமிசம் உண்ணாமல் விரதமிருப்பது இந்துக்களின் நம்பிக்கை. பெருமாளின் தீவிர பக்தரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் எதிரிகளை துவம்சம் செய்வதற்காக ஆஞ்சநேயர் விரதத்தை ஆரம்பித்திருக்கிறாராம்.

திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி குடும்பம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய எடப்பாடி ஆதரவாளர்கள், ``ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு விரதம் இருப்பது எடப்பாடி பழனிசாமியின் வழக்கம். மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது திருப்பதி சென்று குடும்பத்துடன் பெருமாளை தரிசித்துவிட்டு வருவார். `யார் முதல்வர் வேட்பாளர்?’ என கட்சிக்குள் எழுந்துள்ள சூறாவளி அவரது அரசியல் வாழ்க்கையை சுழற்றியடிக்கிறது.

டெல்லியுடனான உறவிலும் சுமூகமான உறவுநிலை ஏற்படவில்லை. இந்த பிரச்னைகளில் இருந்து விடுபடவும், தன் எதிரிகளை துவம்சம் செய்யவும் ஆஞ்சநேயர் விரதத்தை ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. இதற்காக அவர் வீட்டிலேயே சிறிய அளவில் ஆஞ்சநேயர் சிலையை பூஜை அறையில் வைத்து பூஜிக்கின்றனர். `புரட்டாசி மாதத்தில் ஆஞ்சநேயர் விரதத்தை கடைபிடித்தால், மலைபோல நிற்கும் பிரச்னைகளும் பனிபோல விலகிவிடும்' என்று எடப்பாடி நம்புகிறார். ஒரு மாதத்திற்கு இந்த விரதத்தைக் கடைபிடிக்கவுள்ளார். அவர் நம்பிக்கை பலன் தருமா என்பது வரும் வாரங்களில் தெரிந்துவிடும்” என்றனர்.

Also Read: காரில் கழற்றப்பட்ட தேசியக் கொடி; வரிசைகட்டும் ஆதரவாளர்கள் - பரபரப்பான ஓ.பி.எஸ் வீடு!

வழக்கமாக எடப்பாடி பயணிக்கும் காரில் ஜெயலலிதாவின் புகைப்படம் மட்டுமே `டேஷ்போர்ட்’-ல் வைக்கப்பட்டிருக்கும். புரட்டாசி மாதம் ஆரம்பித்ததில் இருந்து புதிதாக ஆஞ்சநேயர் சிலை ஒன்றும் எடப்பாடியின் காரில் வைக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி காரில் ஆஞ்சநேயர்

தினமும் காவி நிற செம்பருத்தி, ரோஜா மலர்களால் ஆஞ்சநேயர் சிலை அலங்கரிக்கப்படுகிறது. காரில் ஏறி உட்கார்ந்தவுடன் ஆஞ்சநேயரையும் ஜெயலலிதாவையும் வணங்கிவிட்டுத்தான் வண்டியை எடுக்கச் சொல்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. `யார் துணையும் இல்லாமல் சென்றாலும் ஆஞ்சநேயர் துணை நிற்பார்’ என்கிறாராம். இப்படித்தான் செப்டம்பர் 28-ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்திற்கும் ஆஞ்சநேயர் சிலையோடு எடப்பாடி அ.தி.மு.க தலைமையகத்திற்கு வந்திருந்தார். எடப்பாடியின் முதல்வர் நாற்காலி ஆசையை ஆஞ்சநேயர் நிறைவேற்றித் தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: ``முடிந்தது டீல்..? - அ.தி.மு.க செயற்குழுவில் நடந்தது என்ன?"



source https://www.vikatan.com/news/politics/edappadi-palanisamy-begins-one-month-fasting-for-lord-hanuman-blessings

IPL 2020: தோனி டு கோலி... கேன் வில்லியம்சனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள்!

8 அணிகளுமே வெற்றிக்கணக்கதைத் தொடங்கிவிட்டநிலையில் ஐபிஎல் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. எல்லா அணிகளுமே சமபலத்துடன் மோதுவதால் இந்த ஆண்டு நெட் ரன்ரேட்தான் ப்ளே ஆஃப்க்குள் நுழைவதற்கு மிக முக்கிய காரணியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் இந்திய கேப்டன் தோனி தலைமையேற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பாயிட்ன்ஸ் டேபிளில் கடைசி இடத்தில் இருக்கிறது.
CSK | சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் அட்டவணையில் கடைசி இடத்தில் இருந்து முதலிடத்துக்கு வருவது சென்னைக்கு வழக்கமான விளையாட்டுதான் என்றாலும் இந்தமுறை அந்த விளையாட்டு அவ்வளவு எளிமையாக இருக்காது. சரியான பேட்ஸ்மேன்கள் சென்னை அணியில் இல்லை என்பதோடு, பெளலிங் காம்பினேஷனும் இன்னும் செட் ஆகவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் தோனியே இன்னும் ஃபினிஷர் ரோலில் ஃபிட் ஆகவில்லை. அதேபோல் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, மொத்தமாகவே 18 ரன்கள்தான் அடித்திருக்கிறார். மும்பைக்கு எதிராக சூப்பர் ஓவரில் அடித்த பவுண்டரிதான் கோலியின் முதல் பவுண்டரி. கோலி அவுட் ஆஃப் ஃபார்ம். அதேபோல் ரோஹித் ஷர்மாவும் பந்துகளைச் சந்திக்க சிரமப்படுகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 80 ரன்கள் அடித்திருந்தாலுமே ரோஹித்தின் வழக்கமான இன்னிங்ஸாக அது இல்லை. சென்னை, பெங்களூருவுக்கு எதிரானப் போட்டிகளில் ரோஹித்தின் ஆட்டம் எடுபடவில்லை.

இந்தியாவின் டாப் 3 வீரர்கள் அவுட் ஆஃப் ஃபார்மில் இருப்பதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது கொரோனா காரணமாக பல மாதங்களாக விளையாடவோ, பயிற்சியோ செய்யவில்லை என்பதுதான். 'இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகள் இந்த கொரோனா சூழலில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடின. கரீபியின் லீகில் பல நாட்டு வீரர்கள் ஆடி பயிற்சிபெற்றார்கள். அதுபோல் இந்திய வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை' என்கிற கருத்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், கேன் வில்லியம்சனும் இந்திய வீரர்களைப்போலவே நீண்ட நாள் பிரேக்கில் இருந்தவர். அவர் எந்த சர்வதேசபோட்டியிலும், கரீபியன் லீகிலும் விளையாடவில்லை. ஆனால், அவரால் மட்டும் எப்படி முதல் போட்டியிலேயே ஃபார்முக்கு வரமுடிகிறது?!

Kane Williamson, VVS Laxman

1. ப்ரஷரைக் கையாள்வது எப்படி?!

பெங்களூரு, பஞ்சாப், டெல்லி என மூன்று அணிகளுக்கு எதிராக இப்போது ஐதராபாத் விளையாடி முடித்திருக்கிறது. இதில் பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கு எதிரானப் போட்டிகளில் கேன் வில்லியம்சன் ஐதராபாத்துக்காக விளையாடவில்லை. ஐதராபாத்தும் தோல்வியடைந்தது. டெல்லிக்கு எதிராக ஆடும் ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்தார் கேன். இவரை ரிஸ்க் எடுத்துதான் ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டுவந்தார் கேப்டன் வார்னர். ஏனென்றால் வில்லியம்சன் இடத்தில் முகமது நபிதான் விளையாடியிருக்கவேண்டும். அதிக இடது கை பேட்ஸ்மேன்களைக்கொண்ட டெல்லி அணிக்கு எதிராக விளையாடும்போது முகமது நபி போன்ற ஆஃப் ஸ்பின்னர் அவசியம். ஆனால், நபி மேல் நம்பிக்கை இருந்தாலும் கேன் மிடில் ஆர்டருக்கு மிகவும் அவசியம் என்பதால் ரிஸ்க் எடுத்தார் வார்னர். இப்போது கேன் வில்லியம்சனுக்கு கூடுதல் ப்ரஷர். தனக்காக நபியின் நீக்கம் சரியானதுதான் என்பதை அவர் நிரூபித்தேயாக வேண்டும் என்கிற சூழலில்தான் அவர் நேற்று டெல்லிக்கு எதிராக களமிறங்கினார். பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் சேர்த்து நபி பங்களிப்பதற்கும் மேல் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்து தான் பங்களிக்கவேண்டிய ப்ரஷர் சூழல். ஆனால், சவாலை ஈஸியாக சமாளித்தார் கேன் வில்லியம்சன். தலைக்குள் எதையும் ஏற்றிக்கொள்ளாமல் எப்போதும்போல் தான் ஆடும் கிளாஸிக்கல் இன்னிங்ஸ் ஆடினார்.

2. ஒரே ஒரு டாட் பால்!

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் 12வது ஓவரில் களத்துக்கு வந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 11.2 ஓவர்களில் 92 ரன்கள். வார்னர், மணிஷ் பாண்டே அவுட் ஆகிவிட பேர்ஸ்டோ அடிக்கவும் முடியாமல், அவுட் ஆகவும் முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்போது கேனின் கையில் ஆங்கர் மற்றும் ஃபினிஷர் என இரண்டு ரோல்களுமே இருந்தன. 26 பந்துகளைச் சந்தித்து 41 ரன்கள் அடித்து கடைசி ஓவரில், அதுவும் அவர்கள் திட்டமிட்ட ஸ்கோரான 160 ரன்களைத் தொட்டதும்தான் அவுட் ஆனார் கேன் வில்லியம்சன். இந்த இன்னிங்ஸில் 5 பவுண்டரிகள் அடக்கம். கேனின் இன்னிங்ஸில் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் கவனிக்க வேண்டியது அவர் விளையாடிய டாட் பால்ஸ். நேற்றைய இன்னிங்ஸில் கேன் வில்லியம்சன் ரன் அடிக்காமல் விட்டது ஒரே ஒரு பந்துதான். மற்றபடி தான் சந்தித்த 25 பந்துகளிலும் ரன் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்திக்கொண்டேயிருந்தார்.

#Dhoni

3. ரோல் என்ன?!

ராஜஸ்தானுக்கு எதிராக சென்னை விளையாடிய போட்டியில் 7-வது பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார் தோனி. இவரின் வழக்கமான பேட்டிங் பொசிஷன் 5-வது இடம். அதேபோல் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஐபிஎல் போட்டிகளில் ஆடி அதிக ரன்கள் அடித்தார். அவரின் ஐபிஎல் சதம் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அடிக்கப்பட்டதுதான். ஆனால், தோனி - கோலி என இருவருக்குமே தாங்கள் ஃபார்மில் இருக்கிறோமா இல்லையா என்கிற கேள்வி இருப்பதால் தங்களுடைய பேட்டிங் பொசிஷனை இறக்கிக்கொண்டே வருகிறார்கள். பஞ்சாபுக்கு எதிரானப் போட்டியில் தன் இடத்தில் ஆஸ்திரேலியாவின் இளம் பேட்ஸ்மேன் பிலிப்பை எல்லாம் இறக்கிப் பின்வாங்கினார் கோலி. ஆனால், வில்லியம்சனுக்கு தன்னுடைய ஃபார்ம் குறித்தெல்லாம் கவலையில்லை. அணியில் தனக்கு என்ன ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதை எப்படி சரியாக முடிப்பது என்கிற தெளிவான கேம்பிளானோடு விளையாடுகிறார். தோனியும், கோலியும் கேப்டன்ஷிப் அவர்களுக்குக் கூடுதல் சுமை என்றால், 2018 ஐபிஎல்-ல் ஐதராபாத்தின் கேப்டனாக இருந்து இறுதிப்போட்டிவரை அழைத்துச்சென்றவர் வில்லியம்சன்தான். தான் டெலிவர் செய்யவேண்டிய கட்டம் வரும்போது அதை தான் செய்து முடிக்கவேண்டும் என்கிற தெளிவு கேனுக்கு இருப்பதால்தான் அவரால் தன் இயல்பான ஆட்டத்தை ஆடமுடிகிறது.

Also Read: எங்களுக்கு பவுண்டரி வேணாம் சாரே... ஓடி, ஓடியே ரன் சேர்த்த ஐதராபாத்... பம்மிய டெல்லி! #DCvSRH

4. ஃபினிஷர்ஸ்?!

ஆங்கர், ஃபினிஷர் என எந்த ரோலில் விளையாடினாலும் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் அவசியம். சென்னை வெர்சஸ் ராஜஸ்தான் போட்டியில் தோனி களத்துக்குள் வரும்போது 39 பந்துகளில் 103 ரன்கள் அடிக்கவேண்டும். ஆனால், தோனி சந்தித்த முதல் பந்தே டாட் பால். இன்னொரு முனையில் டுப்ளெஸ்ஸி நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கிறார் எனும்போது ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யாமல் அவருக்கும் சேர்த்து ப்ரஷரை ஏற்றினார் தோனி. டுப்ளெஸ்ஸி இருக்கும்வரை 3 பந்துகளை டாட் பாலாக்கினார். கோலியும் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் இதையேதான் செய்தார். ஏகப்பட்ட டாட் பால்ஸ். அதுவும் மும்பைக்கு எதிரான கடைசிப்போட்டியில் 11 பந்துகளில் 3 ரன்கள் அடித்திருந்தார் கோலி. ரோஹித் ஷர்மாவுக்கும் இதே கதைதான். பவுண்டரிகள் அடிப்பது எளிதாக இல்லாதபோது சிங்கிள், டபுள் என ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துகொண்டேயிருக்கவேண்டும் என்பது கிரிக்கெட்டின் பாலபாடம். இதை சரியாகச் செய்வதில்தான் கேன் வில்லியம்சனின் வெற்றியிருக்கிறது.

Virat Kohli | RCB

5. சிம்ப்பிள் அண்ட் கூல்!

ஏற்கெனவே சொன்னதுபோல பயங்கர ப்ரஷரான கட்டத்தில்தான் கேன் வில்லியம்சன் விளையாடவந்தார். அவர் அணிக்குள் தொடர தன்னுடைய இருப்பைக் காட்டியே ஆகவேண்டும். கிரிக்கெட்டின் ஃபேப் ஃபோர் என்று புகழப்படும் லிஸ்ட்டில் இருக்கும் கேனுக்கே இந்த நிலைமைதான். 'எனக்கே இந்த நிலையா' என்றெல்லாம் கேன் எந்த ப்ரஷரையும் எடுத்துக்கொள்ளவில்லை. 1 டவுன் பேட்ஸ்மேனாக இறங்காதபோதும் வருத்தப்படவில்லை. 2 டவுன் பேட்ஸ்மேனாக கூலாக வந்தார். ரன்ரேட்டை குறைத்துவிடாமல் கூட்டிக்கொண்டே போனார். தோனியும் கோலியும் தவறவிடும் இடம் இதுதான். இந்த ஐபிஎல்-லில் இவர்கள் இருவரும் இன்னும் தங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாடவில்லை.

இன்னும் 11 போட்டிகள் தோனி, கோலி, ரோஹித் தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கிறது. கேன் எப்படி சூழல்களை சமாளித்து சிறப்பாக ஆட வேண்டும் என்று சொல்லித்தர தயாராக இருக்கிறார்... கேன் வில்லியம்சனின் இன்னிங்ஸ்களைக் கொண்டாடத் தயாராக இருப்போம்!


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-5-lessons-to-learn-from-kane-williamson

`ரஷ்ய அதிபரின் கைப்பாவை... புத்திசாலி இல்லை!'- அனல்பறந்த ட்ரம்ப் - ஜோ பைடன் நேரடி விவாதம்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து 35 நாள்களுக்கு முன்னர் தொடங்கிய முதல் விவாதித்திலேயே தேர்தலுக்கான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் எதிர்பார்த்ததுபோல ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியின் வேட்பாளர் ட்ரம்ப் இருவருக்கும் இடையேயான விவாதம் காரசாரமாக அமைந்தது. கொரோனா காரணமாக இரு போட்டியாளர்களும் சம்பிராதயப்படி கைகுலுக்கி கொள்ளவில்லை. மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில் அதிகப்படியான பார்வையாளர்ளுக்கு விவாத இடத்திற்கு வர அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் மக்களின் எந்த ஆராவரமும் ஆர்பரிப்பும் இன்றியே கிளைவ்லேண்டில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதல் கேள்வியாக மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பாடர் கின்ஸ்பார்க்கு பதிலாக, ட்ர்ம்ப் ஏமி கானி பாரட்டை பரிந்துரைத்ததை நெறியாளர் ஃபாக்ஸ் நியூஸ் கிறிஸ் வாலெஸ் முன்வைத்தார். இதற்கு ட்ர்ம்ப், ``நாங்கள் தேர்தலில் வென்றோம். தேர்தலுக்கு பின் நிச்சயம் பாதிப்புகள் இருக்கும். எங்களிடம் செனட் மற்றும் வெள்ளை மாளிகை உள்ளது. மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிக்கான தனித்துவமான வேட்பாளரும் எங்களிடம் உள்ளார்'' என்றார். இதற்குப் பதிலளித்த வகையில் ஜோ பைடன் `தேர்தல் முடிந்து யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்' என்றார்.

டொனால்ட் ட்ரம்ப்

இந்த விவாதத்தின் முக்கிய பேசுபொருளாக அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அமைந்தது குறிப்பிடத்தக்கது. `இதையடுத்து சுகாதாரம் தேவைபடுபவர்களுக்கு அதிபர் ட்ரம்பால் எந்த பயனும் இல்லை. இங்கு அனைவருக்கும் ட்ரம்ப், எப்போதும் பொய் பேசுபவர் என்று தெரியும் என்றார்'. இதற்கு பதிலளிக்கும் வகையில், ட்ர்ம்ப் அவரது சுகாதாரத் திட்டங்களை விளக்க, இதைப்பற்றி எந்தவிதமான திட்டமும் இல்லாமல் ட்ர்ம்ப் பேசுகிறார் என்றார் ஜோ பைடன்.

Also Read: `கொரோனா உயிரிழப்புகளின் நேரடி எண்ணிக்கையை இந்தியா அளிப்பதில்லை!'- ட்ரம்ப் #NowAtVikatan

ஒரு கட்டத்தில் விவாதமானது இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட மோதலாக உருவெடுத்தது. ஜோ பைடன் பேசுகையில் ட்ரம்ப் அடிக்கடி குறுக்கீடு செய்யவே, அவரை வாயை மூடி இருக்குமாறு சாடினார் பைடன். அதே சமயம் இது அதிபருக்கான பண்பில்லை என்றும் கூறினார். பின்னர், ட்ரம்ப் வருமான வரி செலுத்தாமல் இருப்பதை பற்றி விவாதம் எழுந்தது. அதற்கு ட்ரம்ப் 2016-ம் ஆண்டு முதல் பல நூறு மில்லியன் டாலர்களுக்கும் மேல் வருமான வரி கட்டியுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான ஆதாரத்தை பற்றி நெறியாளர் கிரிஸ் வாலஸ் கேட்டபோது "நீங்கள் பார்ப்பீர்கள் "என்பது மட்டுமே ட்ரம்பின் பதிலாக அமைந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஜோ பைடன், ``அதிபர் ட்ரம்ப் வரி செலுத்துவது தொடர்பான சட்டங்களைத் தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்துகிறார். அவர் ஒரு பள்ளி ஆசிரியரை விட குறைந்த அளவிலான வரியே கட்டுகிறார்'' என்று குற்றஞ்சாட்டினார். இதற்கு ட்ரம்ப்,``எல்லா தொழிலதிபர்களும் அதையே செய்வார்கள், அவர்கள் முட்டாளாக இல்லாத வரை.. அதையே நானும் செய்தேன்'' என்றார்.

ஜோ பைடன்

இந்த விவாதத்தில் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புடினின் கைப்பாவை என்று நேடியாக விமர்சித்தார் ஜோ பைடன். ஆப்பிரிக்க - அமெரிக்கர்களை குறிப்பிட்டு பேசிய பைடன், ``ட்ரம்ப் ஆப்ரிக்க அமெரிக்கர்களின் பாதுகாவலரா?.. இந்த மனிதர் அவர்களுக்காக எதுவும் செய்யவில்லை. இதுவரை ஆயிரத்தில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர் எதுவும் செய்யாமல் இப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் அந்த எண்ணிக்கை 500-ல் ஒருவராக மாறும்'' என்றார். ஜோ பைடனைப் பார்த்து ட்ரம்ப், `நீங்கள் ஒன்றும் புத்திசாலி இல்லை' என்று விமர்சித்தார்.

இறுதியாக இந்த விவாதம் இருவரின் குடும்ப உறுப்பினர்களையும் விமர்சனம் செய்யும் அளவிற்கு நீண்டது. அக்டோபர் 15, அக்டோபர் 22 ஆகிய தேதிகளில் இருவருக்குமிடையிலான அடுத்த இரண்டு விவாதங்கள் நடைபெற உள்ளன.



source https://www.vikatan.com/government-and-politics/international/russian-presidents-puppet-joe-biden-criticizes-us-president-trump

காய்கறி, படர் கொடி, கீரைகள்... மேட்டுப்பாத்தி முறையில் சாகுபடி செய்வது எப்படி?

``மானாவாரி நிலமாக இருந்தாலும், இறவைப் பாசன நிலமாக இருந்தாலும் ஒரே பயிரை அதிக பரப்பளவில் சாகுபடி செய்வதைவிட, பல பயிர்களைக் கலந்து சாகுபடி செய்ய வேண்டும். அப்போதுதான் தொடர் மகசூல், கணிசமான வருமானம் உறுதியாகக் கிடைக்கும்'' என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவராமையா.

``ஒரு வருஷமா ஒரு ஏக்கர்ல மேட்டுப்பாத்தி முறையில காய்கறி, படர் கொடி, சின்ன வெங்காயம், கீரைகளைச் சாகுபடி செய்திட்டு இருக்கேன்" என்றவர், மேட்டுப்பாத்தி முறையில் சாகுபடி செய்வது குறித்து கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

சாகுபடிக்காகத் தேர்வு செய்த நிலத்தை 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். மண் நன்கு பொலபொலப்பாக இருப்பது அவசியம். பிறகு, 50 அடி நீளம், 3 அடி அகலம், 1.5 அடி உயரத்தில் பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும். பாத்திகளின் இடைவெளி 1.5 அடி.

ஒவ்வொரு பாத்தியிலும் 50 கிலோ கன ஜீவாமிர்தத்தைப் பரவலாகத் தூவ வேண்டும். 2 அடி இடைவெளியில் காய்கறி நாற்றை நடவு செய்ய வேண்டும். காய்கறிகளுக்கு இடையில் அகலவாக்கில் மண்ணில் கோடிட்டு கீரை விதையைத் தூவ வேண்டும். 10 அடி இடைவெளியில் படர்கொடி விதைகளை (3 விதைகள்) ஊன்ற வேண்டும். பாத்தியின் இரண்டு ஓரங்களிலும் சின்ன வெங்காயம் ஊன்ற வேண்டும்.

மேட்டுப்பாத்தி

காய்கறி என்றால் கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை.

படர்கொடிகள் என்றால் புடலை, பீர்க்கன், பாகல், சுரை, வெள்ளரி.

கீரைகள் என்றால் பச்சைத்தண்டு, சிவப்புத்தண்டு, சிறுகீரை, அரைக்கீரை, பாலக் கீரை.

ஓரங்களில் முள்ளங்கி, சின்ன வெங்காயம், நிலக்கடலை (சுழற்சி முறையில்), இதில் ஒரு பாத்தியில் நடவு செய்யும் செடி, கொடி வகைகள் அடுத்த பாத்தியில் இடம்பெறாது. காய்கறி நாற்றுகள் 18 முதல் 25 நாள் வயதுடையதாக இருக்க வேண்டும்.

நாற்றுகளையும் விதைகளையும் பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்து நட வேண்டும். நடவு செய்தவுடன் பாசனம் செய்ய வேண்டும். பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வரலாம். மேட்டுப்பாத்தியைப் பொறுத்தவரையில் சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.

7-ம் நாளில் முதல் களை எடுக்க வேண்டும். 10 நாள்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் (6 பாத்திகளுக்கு 30 லிட்டர்) கலந்து விட வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 30 முதல் 35-ம் நாளில் கீரையை அறுவடை செய்துவிடலாம்.

பிறகு, கீரை அறுவடை செய்த இடத்தில் மண் அணைக்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு பாத்தியிலும் 10 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவ வேண்டும். 45-ம் நாளுக்கு மேல் காய்கறி, படர்கொடி ஆகியவற்றை அறுவடை செய்யலாம்.

- திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பனையங்குறிச்சியில் உள்ளது சிவராமையாவின் வயல்.

மேட்டுப்பாத்தி முறையில் அவர் லாபம் ஈட்டி வரும் அனுபவத்தை முழுமையாக பசுமை விகடன் இதழில் வாசிக்க கிளிக் செய்க - https://bit.ly/3jf3b4h

மாதம் ரூ. 37,500 தொடர் வருமானம் தரும் மேட்டுப்பாத்தி! https://bit.ly/3jf3b4h

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Pasumai Youtube Channel

இதுபோன்ற விவசாயம் தொடர்பான செய்திகள் மற்றும் பயனுள்ள வீடியோக்களைக் காண பசுமை விகடன் யூ-டியூப் சேனலுக்கு வாங்க. பசுமை விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய: bit.ly/pasumaiYoutube



source https://www.vikatan.com/news/agriculture/farmer-shares-tips-to-cultivation-in-raised-bed-farming

சோப் டிஸ்பென்ஸர் முதல் ஸ்மார்ட் வாட்ச் வரை... புது ஷாவ்மி கேட்ஜெட்ஸில் என்ன ஸ்பெஷல்?!

கம்மி விலை, தாறுமாறு ஸ்பெக்ஸ் என இந்தியாவில் மொபைல் நிறுவனமாக களமிறங்கிய ஷாவ்மி இன்று மொபைல் சந்தையைத் தாண்டி பல எலக்ட்ரானிக் பிரிவுகளிலும் கல்லா கட்டி வருகிறது. இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் முன்னணி நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஃபிட்னஸ் பேண்ட் பிரிவிலும் ஷாவ்மியே ஆதிக்கம் செலுத்திவருகிறது. இது இல்லாமலும் பல புதிய சாதனங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது அந்த நிறுவனம். அப்படி மொபைல் அல்லாத மற்ற சாதனங்களை 'Smarter Living' என்ற நிகழ்வில் ஒவ்வொரு வருடமும் ஷாவ்மி அறிமுகப்படுத்துவது வழக்கம். இந்த நிகழ்வு ஆன்லைனில் நடந்து முடிந்திருக்கிறது. இதில் அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்கள் என்ன, அவற்றின் விலை என்ன... விரிவாக இந்த கட்டுரையில் பார்ப்போம்...

Mi Watch Revolve

கடந்த ஜனவரி மாதம் சீனாவில் அறிமுகமான Mi Watch Color மாடலை ரீ-பிராண்ட் செய்திருக்கிறார்கள். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ரேம், 46 மில்லிமீட்டர் டயல் கொண்டுள்ளது இந்த வாட்ச். 1.39-இன்ச் AMOLED டச் டிஸ்ப்ளே (454 x 454) மேல் இருப்பது கொரில்லா கிளாஸ் 3, இதனால் அவ்வளவு எளிதில் இந்த வாட்ச் உடைய வாய்ப்பில்லை. இந்த டிஸ்ப்ளே பிரைட்னெஸ் 450 nits, இது கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன்களில் இருக்கும் டிஸ்ப்ளேக்களில் இருக்கும் பிரைட்னெஸ்.

வெளிவரும்போது 112 வாட்ச் ஃபேஸ்களுடன் வருகிறது Mi Watch Revolve. விரைவில் இது 1000-ஆக உயரும் எனத் தெரிவித்திருக்கிறது ஷாவ்மி. இரண்டு நிறங்களில் (Midnight Black and Chrome Silver) இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும். Leather, Astral Olive, Cosmic Dust Maroon, Neptune Blue, Space Black எனப் பல வகை ஸ்ட்ராப்களையும் இத்துடன் நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும்.

பொதுவாக பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச்கள் பெரும்பாலும் ஃபிட்னஸ் பேண்ட்டில் இருக்கும் வசதிகளைக் கொண்டவையாகவே இருக்கும். டிசைனில் மட்டும் பார்க்க வாட்ச் போல இருக்கும். இதனால் தனித்துத் தெரிய ஸ்மார்ட்வாட்ச்சுக்கென ஸ்பெஷலாக சில வசதிகளைச் சேர்த்திருக்கிறார்கள். அதில் முக்கியமானதாக ஷாவ்மி சொல்வது FIRSTBEAT motion algorithm. இந்த அல்காரிதம் இதயத்துடிப்பு, தூங்கும் நேரம், ஆற்றல் அளவு, ஸ்ட்ரெஸ் ஆகியவற்றைக் கண்காணித்து மொத்தமாக நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள், ஃபிட்டாக என்னென்ன முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என உங்களுக்குச் சொல்லும்.

Mi Watch Revolve | ஷாவ்மி

VO2 Max அளவும் இதில் எடுக்க முடியும். இது இருதய ஆரோக்கியம் எப்படி இருக்கிறது எனச் சொல்லும். இதுபோக சைக்கிளிங், யோகா உட்பட 10 ஸ்போர்ட்ஸ் மோடு ட்ராக்கிங்கும் இருக்கிறது. இது ஒவ்வொரு பயிற்சியிலும் எவ்வளவு கலோரிகளை ஏரிக்கிறீர்கள் எனத் துல்லியமாகக் கண்காணிக்குமாம். பில்ட்-இன் GPS/GLONASS இருப்பதால் மொபைல் இல்லாமல் தன்னிச்சையாக இதனால் லொகேஷன் ட்ராக்கிங் செய்ய முடியும். இது 50 மீட்டர் வரை வாட்டர் ரெசிஸ்டென்ட் என்பதால் நீச்சல் ட்ராக்கிங்கும் உண்டு.

சரி கடைசியாக முக்கிய விஷயத்துக்கு வருவோம். ஸ்மார்ட் வாட்ச்களில் பெரிய பஞ்சாயத்தாக இருப்பது பேட்டரிதான். பெரும்பாலான ஸ்மார்ட் வாட்ச்களில் ஒரு நாள் முழுவதும் கூட சார்ஜ் நிற்பதில்லை. ஆனால், Mi Watch Revolve சராசரி பயன்பாட்டில் 14 நாள்கள் வரை ஒரு சார்ஜில் தாக்குப்பிடிக்கும் என்கிறது ஷாவ்மி.

விலை- 10,999 ரூபாய்.

ஆனால், அறிமுக சலுகையாக தீபாவளி வரை இந்த வாட்ச்சை 9,999 ரூபாய்க்கு வாங்கலாம். அமேசான், mi.com மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் அக்டோபர் 1 முதல் இதை நீங்கள் ஆர்டர் செய்ய முடியும்.

முந்தைய மாடலான Mi band 4-க்கும் இதற்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்ன என்று விரிவாகத் தெரிந்துகொள்ளக் கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்.

Mi Band 5

Also Read: அறிமுகமானது புதிய `Mi Band 5' - புதிய வசதிகள் என்னென்ன?

சீனா மாடல் போல இதில் NFC கிடையாது. இந்த கொரோனா நேரத்தில் மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய வசதியான SpO2 சென்சார் இல்லாதது ஏமாற்றம். முதல்முறையாக மேக்னெட்டிக் சார்ஜர் கொடுத்திருக்கிறார்கள். இதனால் ஸ்ட்ராப்பிலிருந்து சாதனத்தைக் கழட்ட வேண்டிய தேவை இருக்காது.

விலை 2,499 ரூபாய்.

அமேசான், mi.com மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் அக்டோபர் 1 முதல் இதை நீங்கள் ஆர்டர் செய்ய முடியும்.

Mi Smart Speaker

'ஏற்கனவே இருக்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் செம ஸ்மார்ட்டாக இருக்கின்றன. ஆனால் ஆடியோ தரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. அந்த குறையைத் தீர்க்கும் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்' என இதை அறிமுகப்படுத்தியது ஷாவ்மி. 63.5 mm ஆடியோ டிரைவர், 12 W ஆடியோ அவுட்புட் என ஒரு அறையை முழுவதுமாக ஒலியால் நிரப்பக்கூடிய திறன் இந்த ஸ்பீக்கருக்கு இருக்கிறது. இரண்டு ஸ்பீக்கர்கள் வாங்கி இவற்றை டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களாக மாற்றலாம்.

கூகுள் ஹோம், அமேசான் எக்கோ மட்டும் இருந்துவந்த இந்த ஏரியாவில் ஷாவ்மியின் இந்த ஸ்பீக்கர் நல்ல ஒரு வரவுதான்.

விலை- 3,499 ரூபாய்.

ஃப்ளிப்கார்ட், mi.com மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் அக்டோபர் 1 முதல் இதை நீங்கள் ஆர்டர் செய்ய முடியும்.

Mi ஆட்டோமேட்டிக் சோப் டிஸ்பென்ஸர்

கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாத இந்த நேரத்தில் கைகழுவுவதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் மிகமுக்கிய ஆயுதம் அதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், ஹேண்ட்வாஷ் போட்டு கைகழுவுவதில் ஒரு சிக்கல் உண்டு. எப்படியும் கை கழுவுவதற்கு முன்பு ஹேண்ட்வாஷ் பாட்டிலை தொட்டுத்தான் ஆக வேண்டும். இந்தப் பிரச்னைக்கு தீர்வு தருகிறது Mi ஆட்டோமேட்டிக் சோப் டிஸ்பென்ஸர். இதன் இன்-பில்ட் Proximity infrared சென்ஸார் நீங்கள் உங்கள் கைகளை அதன் அருகில் கொண்டு போனாலே அதை கண்டறிந்து சோப் நுரையை வெளியேற்றும். அதுவும் கால் நொடியில்!

300 ml கொள்ளளவு கொண்டுள்ள இந்த சாதனம் நான்கு AA பேட்டரிகளில் இயங்குகிறது. இதை வாங்கும்போது இலவசமாக சோப் லிக்விடும் ஷாவ்மி தருகிறது.

விலை 999 ரூபாய்

இதை அக்டோபர் 15-ம் தேதி முதல் Mi.com தளத்தில் ஆர்டர் செய்யலாம். கூடுதல் சோப் லிக்விட் (3 Pack) 599 ரூபாய்க்கு கிடைக்கும்.

இது போக ஒரு வெள்ளை ஸ்மார்ட் பல்ப் 399 ரூபாய்க்கும் Mi Athleisure shoe என்ற ஸ்போர்ட்ஸ் ஷூவை 1,499 ரூபாய்க்கும் அறிமுகம் செய்தது ஷாவ்மி. இந்த நிகழ்வில் அமேசான், ஃப்ளிப்கார்ட்க்கு அடுத்தபடியாக இந்திய மக்கள் அதிகம் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் இ-காமர்ஸ் தளம் mi.com என்றும் தெரிவித்தது. இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் ஒருமுறை தங்களது டார்கெட் ஸ்மார்ட்போன் சந்தை மட்டுமல்ல என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது ஷாவ்மி.

இந்த புது ஷாவ்மி கேட்ஜெட்ஸில் உங்களை அதிகம் கவர்ந்தது எது? கருத்துகளை கமென்ட்களில் பதிவிடுங்கள்!



source https://www.vikatan.com/technology/gadgets/soap-dispenser-to-budget-smartwatch-new-range-of-mi-gadgets-are-here