Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

`எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம்; ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா?' - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 68-வது பிறந்தநாளை அக்கட்சித் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த், தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடினார்.

விஜயகாந்த்

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ``கொரோனா சூழலால் விஜயகாந்த், இந்தமுறை யாரையும் சந்திக்கவில்லை. அவரது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். அடுத்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக இருக்கும். அப்போது அவர் உங்கள் அனைவரையும் சந்திப்பார். தேர்தலுக்கு இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது. இப்போ வரைக்கும் கூட்டணியில்தான் இருக்கும். எந்தக் கட்சியுடன் கூட்டணி அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பதைக் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். ஆனால், தொண்டர்களின் விருப்பம் தே.மு.தி.க தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே.

Also Read: மதுரை: `விஜயகாந்த் பிறந்தநாள் பேனரை அகற்றிய அ.தி.மு.க-வினர்?’ - கொதிக்கும் தே.மு.தி.க

தேசியக் கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம்; ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா? முதல்முறையாக அறிவாலயத்தில் தேசியக் கொடி ஏற்றியிருக்கிறார்கள். அவர் உள்பட அவருடன் இருந்த யாரும் கொடிக்கு மரியாதை செலுத்தவில்லை.

எஸ்.வி.சேகர் - ஸ்டாலின்

அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது கூடத் தெரியவில்லை என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். தேசியக் கொடிக்கு உரிய மரியாதை செலுத்தாமல் ஸ்டாலின் செல்வது சரியா? இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

Also Read: "உடல்நலம் தேறியாச்சு மக்களே!"- உற்சாகத்தில் விஜயகாந்த் #Vijayakanth

அ.தி.மு.க-வில் நடைபெற்று வரும் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த விவாதம் தொடர்பான கேள்விக்கு, அது அந்தக் கட்சியின் உள்கட்சி விவகாரம், நாட்டுக்கான பிரச்னை கிடையாது. எனவே, அதுபற்றி கருத்துத் தெரிவிப்பது சரியாக இருக்காது என்று பிரேமலதா பதிலளித்தார்.

கொரோனா விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரேமலதா, ``எங்களைப் பொறுத்தவரை தமிழக அரசு சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது தமிழகத்துக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்னையில்லை.

பிரேமலதா விஜயகாந்த்

உலகம் முழுவதும் யாரும் எதிர்பார்க்காமல், பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது கொரோனா வைரஸ். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாகவே எடுத்து வருகிறது. இதுவரைக்கும் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது நல்லதுதான். இப்போ பாருங்க, இ-பாஸ் தளர்வு அறிவிச்சதும் சென்னையை நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுக்கத் தொடங்கின. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைத்தால் தமிழகத்தை விட்டு கொரோனாவை விரைவில் விரட்டலாம்'' என்றார்.



source https://www.vikatan.com/news/politics/premalatha-vijayakanth-speaks-about-various-issues-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக