Ad

திங்கள், 31 மே, 2021

ஒவ்வொரு தனிமனிதரும் இனி தொழில் முனைவோரே

சொந்தமா முதலீடு செஞ்சு தொழில் செய்யறது ரிஸ்க்கா இருக்கும்னு நினைச்சு, இப்ப இருக்குற டெலிவரி கம்பெனிகள், இல்ல ஆன்லைன்ல பொருள் விக்கிற கம்பெனி, எம்.எல்.எம் எதிலாவது சேர்ந்து சம்பாதிக்கலாம்னு நினைச்சா, காலைல இருந்து நைட் வரைக்கும் வண்டி ஓட்டியே இடுப்பு ஒடியுது. சரி, எதாவது ஆன்லைன் கம்பெனில சேல்ஸ் பார்ட்னர்ன்னு ரெஜிஸ்டர் பண்ணிட்டு எதையாவது சேல் பண்ணலாம்னா பொருள் குவாலிட்டி இல்ல, எக்ஸ்சேஞ்ஜ், ரீஃபண்டுனு ஏகப்பட்ட பிரச்னை. எம்.எல்.எம், இன்சூரன்ஸ் கேக்கவே வேண்டாம்.

இது எல்லாத்துலயும் ஒரு விஷயம் கவனிச்சு பார்த்தீங்கன்னா, இந்த எல்லா கம்பெனியும், அதில் இணையும் நபர்களின் மூலமாத்தான் சம்பாதிக்கிறாங்க. அதுல ஒரு பங்கை அவங்களுக்கு கொடுத்துட்டு மீதிய அவங்க சர்விஸ் சார்ஜா எடுத்துகிறாங்க. இன்னொரு விஷயம் என்னென்னா, அந்த நபரின் திறமை என்னவா இருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு நாள் முழுக்க இட்லி, தோசை பொட்டலத்தை கொண்டுபோய் குடுத்துட்டு வர வேண்டியதா இருக்கு. ஆனா அந்த வேலையைக் கொடுத்ததன் மூலமா, இத்தனை லட்சம் இளைஞர்களுக்கு நாங்க வேலை வாய்ப்பு கொடுத்துருக்கோம்னு அந்த நிறுவனங்கள் சொல்லுது!! நீங்க வேணும்னா, ஏதாவது ரோட்டுல ஓடிக்கிட்டு இருக்க ஃபுட் டெலிவரி பையன பிடிச்சு, அவங்களுக்கு பிடிச்சா இந்த வேலைய செய்யறாங்கனு கேளுங்க, 90% சொல்லுவாங்க "வேற வழி இல்ல சார், பண்ணுறோம்".

ஏன் வேற வழி இல்ல!? அதுக்கு அப்புறம் வருவோம். அதுக்கு முன்ன, அப்படியே இந்த பேஜை மினிமைஸ் பண்ணிட்டு கூகிள்ல தட்டுங்க. வேலை இல்லை, வறுமைன்னு ஒரு நாளைக்கு சராசரியா அறுபது இளைஞர்கள் இந்தியால தற்கொலை பண்ணிக்கிறாங்க! இந்த அறுபது பேருக்கும் எந்த ஒரு திறமையும் இல்லைனு நினைக்கிறீங்களா? உங்க பதில் "அதெப்படி, ஏதாவது ஒரு திறமை இருக்கும்ல" . "அப்டினா அவங்ககிட்ட இருக்குற திறமைக்கு சமுதாயத்திலே தேவையே இல்லையா? அதுவும் கிடையாது, தேவை எங்கயாவது கண்டிப்பா இருக்கும்ங்கிறதுதான் உண்மை. அப்போ பிரச்னை வேலை இல்லா திண்டாட்டம் இல்லை, வேலை எங்க இருக்குனு தெரியாத திண்டாட்டம்!!

தொழில் முனைவோர்னு ஆரம்பிச்சீங்க, இப்போ வேலை இல்லா திண்டாட்டத்தைப் பத்தி பேசுறீங்கனு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. தொழில்ன்றது தனி கம்ப சூத்திரமெல்லாம் இல்லைங்க. உங்ககிட்ட உபரியா இருக்குற பொருளையோ, இல்ல உங்க திறமையயோ தேவைப்படுறவங்களுக்கு கொடுத்து அதுக்கு மாற்றா பணமாக பெறுவது. இந்த வரையரைல என்ன சவால்னா, என்னோட திறமை யாருக்கு தேவைப்படுது? மார்க்கெட்டிங் பாஷைல யாரு என்னோட கஸ்டமர்?, அவங்க எங்க இருக்காங்க?, நான் எந்த வகைல அவங்கள ரீச் பண்ண முடியும்? என்னோட தொழிலுக்கு சொந்த வெப்சைட் அவசியமா?

இந்த எல்லா கேள்விக்கும் ஒரே பதில் தருது www.slowr.com அப்படிங்கற இந்திய ஸ்டார்ட் அப்!!. உங்களோட திறமை என்னவா இருந்தாலும் சரி. அது பாட்டோ இல்ல பரதமோ, படிக்க சொல்லி கொடுக்குறதோ இல்ல பறக்க சொல்லி கொடுக்குறதோ, சமையலோ இல்ல சாஃப்ட்வேரோ, நடிப்பு, மருத்துவம், விளையாட்டு, ஹோம் சர்விஸ், பண்டிதம், ஜோசியம், இன்னபிற எதுவாக இருந்தாலும், எல்லாமே ஃபிரீலான்சிங் பண்ணலாம், ஃபிரீலான்ஸிங் பண்ணும் ஒவ்வொருவரும் ஒரு தொழில் முனைவோரே.

மேலே பார்த்தது சேவை வகை. பொருள்கள் வகையிலேயும் தனிநபர் வருமானத்திற்கு இந்த ஆப் வழி செய்கிறது! உங்ககிட்ட பயனில்லாம, இல்ல எப்பவாவது பயன்படுத்துற பொருட்கள், அது காலி அறையோ, கார் பார்க்கிங் இடமோ, கார், பைக் இல்ல சைக்கிளோ, புத்தகம், கம்ப்யூட்டர், பண்ணை கருவிகள், எக்சர்சைஸ் எக்யுப்மென்ட்ஸ், இசைக் கருவிகள், இஞ்சினியரிங் டூல்ஸ் இப்படி எதுவா இருந்தாலும் சரி, அது உங்ககிட்டதான் சும்மா இருக்கு, அதே பொருளை நீங்க வசிக்கிற அதே நகரத்துல யாராவது சில நாட்களுக்கு தேவைன்னு தேடிட்டு இருப்பாங்க, அந்தப் பொருளையும் நீங்க அந்த ஆப்பின் மூலமா வாடகைக்குக் கொடுக்கலாம்.

மொத்தத்துல, நீங்க உங்களுக்கு பிடிச்ச வேலைய, பிடிச்ச நேரத்துல செஞ்சு சம்பாதிக்க முடியும், கூடவே உங்களுடைய பொருள்களும் உங்களுக்கு வருமானம் ஈட்டித் தரப்போகுது!!!

இந்த ஒரு வருஷ பேண்டமிக் சமயத்துல, 90% தொழில்கள் பாதிக்கப்பட்டது, இதே சமயத்துல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள், ஆன்லைன் விற்பனை, சோசியல் மீடியா, கேம்ஸ், வீடியோ சாட், ஆன்லைன் கல்வி என பல தொழில்கள் நல்ல வளர்ச்சி அடைஞ்சது, ஆனா பொதுவாக ரிசஷன் எனப்படும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் பொழுது அனைத்து வகையான ஆன்லைன் தளங்களுக்கும் விற்பனையில் மந்தம் வரலாம், ஆனால் இந்த slowr.com மூலம் ரிசஷன் சமயங்களில் இன்னும் வளர்ச்சி பெறலாம்! யோசிச்சு பாருங்க, ஃபேக்டரில லேஆஃப் கொடுத்த ஒருத்தருக்கு தன்னுடைய தனித்திறமை எதுவோ அதன் மூலம் தற்காலிக வருமானம் ஈட்டும் வாய்ப்பை உருவாக்கி தரும் பட்சத்தில்!!

இதுல, இந்தத் தளம் சிறப்பா செஞ்சுருக்குற ஒரு விஷயம், தன்னை தற்காலிக பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு உண்டான ஒரு ஆன்லைன் விளம்பர தளம் என்ற மட்டில் நிறுத்திக் கொண்டது. அதாவது நமக்கு ஒரு கார் வாடகைக்கு தேவைன்னா, அந்த கார் மாடல், போட்டோ, எந்த ஊரை சேர்ந்தது, என்ன வாடகை, வண்டியின் இன்னபிற சங்கதிகள், வண்டி ஓனரின் மொபைல் நம்பர் போன்ற விஷயங்களை இந்த தளத்தில பாக்கலாம், மத்தபடி வாடகை பேசுறது, பேமென்ட் பண்றது எல்லாமே அந்த வண்டி ஓனரோட தான். அதுல இந்த ஸ்டார்ட் அப் மூக்கை நுழைப்பதில்லை! அதிலும் மேலாக இந்த தளத்தை இலவசமாக பயன்படுத்தும் வசதியை தந்து இதன் மூலம் நீங்கள் தொழில் தொடங்க மனம் மட்டும் போதும் பணம்(முதலீடு) தேவை இல்லை என அடித்து சொல்வது... மேலும் தன்னுடைய தனித்தகுதியாக இந்த ஆப் கருதுவது, "பொருளோ இல்லை சேவையோ, அது மணிக்கணக்கில் அல்லது நாட்கணக்கில் என்றால் மட்டுமே வாடகைக்கு கொடுக்க முடியும். நீங்க உங்க வீட்டை மாத வாடகைக்குதான் தருவீங்கன்னா உங்க விளம்பரம் ஏற்றுக்கொள்ளப்படாது, நீங்க மாத சம்பளத்துக்கு வேலை தேடுபவர்னா உங்கள் விளம்பரமும் பதிவேற்றப்படாது. இதன் மூலம், முழுக்க முழுக்க தற்காலிக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமே ஆன ஒரே தளம் என்ற பெயரை அடைய நினைப்பது தெரிகிறது.

அந்த வகையில் ஆட்டோ, கார், கனரக வாடகை வாகன உரிமையாளர்கள், சர்விஸ் அப்பார்ட்மெண்ட் நடத்துவோர், கம்ப்யூட்டர், கேமரா வாடகை நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள் வாடகை, மேடை நிகழ்ச்சிகள் சார்ந்த பொருட்களின் வாடகை நிறுவனங்கள் இந்த வெப்சைடில் இணையும் பட்சத்தில் தங்கள் தொழிலுக்கு ஒரு டிஜிட்டல் இணைய பக்கம் இலவசமாக கிடைப்பதோடு, கமிஷன் என்ற பெயரில் வருமானத்தில் எந்த இழப்பும் கிடையாது. மேலும் முழுநேர ஃபிரீலான்சிங் பண்ணும் நபர்களின் எண்ணிக்கையும் தோராயமாக இந்தியாவில் மட்டும் ஏழு கோடி பேர், இவர்களுக்கென்று ஒரு தனி தளம் இதுவரை உலகில் கிடையாது. அந்த இடத்தை நிரப்ப நினைப்பதையும் அறிய முடிகிறது. இதையே தன்னுடைய டேக் லைனிலும் இந்த ஸ்டார்ட் அப் "Rent Anything, Hire Anybody - Temporarily" என உறுதிப்படுத்துகிறது.

மேலும் இந்த லாக்டௌன் சமயத்திலும், சேவை தருபவரும், சேவை பெறுபவரும் சந்தித்துக்கொள்ள அவசியமில்லாத சாஃப்ட்வேர் சார்ந்த வேலைகள், ஆன்லைன் கோச்சிங், அனைத்து வகையான கன்சல்டிங், யோகா, ஜும்பா, இன்ன பிற ஆன்லைன் சேவைகள் செய்பவர்கள் இந்த ஆப்பில் ஒரு விளம்பரம் (Ad) போஸ்ட் செய்வதன் மூலம் அவர்களை இந்த நிமிடம் தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்கு சேவைகளைத் தர முடியும். போரடிக்கும் லாக்டௌன் பிரச்சனையும் இல்லை, வருமானத்துக்கும் ஒரு வழி!

ஸ்லோயர்னு இந்த தளத்துக்கு ப்ராண்ட் நேம் கொடுத்த இந்த நிறுவனர்கள், இதை "ஸ்லோயர் ரெவின்யுனுதான்" தன்னுடைய டிவி, ஃஎப்.எம் விளம்பரங்களில் சொல்றாங்க. அதாவது ஒருவர் அவருடைய ஃப்ரி டயத்துல தனக்குப் பிடிச்ச வேலையை செய்வதன் மூலமாவும், தன்னிடம் உள்ள பொருள்கள் மூலமாவும் கிடைக்கும் வருமானம் மெதுவாக, சீராக இருக்கும் என்பதையே ஸ்லோயர் ரெவின்யுனு பிராண்டிங் பண்றாங்க, மேலும் அவர்கள் சொல்வது என்னவென்றால், "இதன் மூலம் உங்கள் திறமையை உலகிற்குச் சொல்ல முடியும், உங்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும், உங்களால் வருமானம் ஈட்ட முடியும், உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்திக்கொள்ள முடியும், சமூகத்தில் உங்களுக்கான மரியாதையை நிலை நிறுத்திக்கொள்ள முடியும்!!

எந்த ஒரு தொழிலும், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், மக்களின் ஏதாவது ஒரு பிரச்சனையை சரி செய்ய முயற்சிக்கும் பொழுது, அந்த தொழிலுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் உண்டு. அதனால்தான் மக்களின் முக்கியமான வாழ்வாதார பிரச்சனைக்கு தீர்வு சொல்ல வந்திருக்கும் இந்த ஸ்டார்ட் அப்'க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.



source https://www.vikatan.com/news/miscellaneous/every-individual-is-an-entrepreneur

விழுப்புரம்: 'இடுகாட்டிற்கு பாதையில்லை..! நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவை கிராம மக்கள்.'

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது சிறுவை கிராமம். இந்த கிராமத்தில்தான் இடுகாட்டிற்கு இறந்தவரின் உடலை எடுத்து செல்வதற்கு பாதை இல்லாததினால், பிணம் போன்ற பொம்மையை சாலையிலேயே வைத்து எரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, அந்த ஊரைச் சேர்ந்த செல்வதுரை என்பவரிடம் பேசினோம். "எங்க ஊர்ல சுமார் 500 குடும்பம் இருக்கு. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக மொத்தமாக 3 இடுகாடுகள் உள்ளது. ஊரின் ஒரு பகுதியில், பட்டியல் சமூகத்தினர் உள்ளனர். இவர்களுக்கு அதில் ஒரு இடுகாடு உள்ளது. அதனால் எந்தவிதமான பிரச்னையும் இல்ல. 300 குடும்பங்களைக் கொண்ட மூன்று வெவ்வேறு மாற்று சமூகத்தினர், ஊரின் மற்றொரு பகுதியில் ஒன்றரக் கலந்து வசிக்கிறோம். இதில் ஓரிரு குடும்பங்களை மட்டுமே கொண்ட ஒரு சமூகத்தினருக்கு சாலை ஓரமாகவே ஒரு இடுகாடு தனியாக உள்ளது.

செல்வதுரை.

பெருவாரியான குடும்பங்களை கொண்ட மற்ற இரு சமூகத்தினருக்கும் சேர்த்து ஒரு இடுகாடு உள்ளது. இந்த இரு சமூக மக்களுக்கான இடுகாட்டுக்கு போறதுக்கு தான் தலைமுறை தலைமுறையா பாதையில்ல. ஓரிரு குடும்பங்களை மட்டுமே கொண்ட அந்த மாற்று சமூகத்தினருக்கு சாலை ஓரமாகவே இடுகாடு இருகிறதால, எங்களின் இன்னல்களை புரிஞ்சிக்காமல், எங்கள் இடுகாடுக்கு பாதை அமைக்க வழி விடமாட்டேங்கிறாங்க. ஊரின் சாலை முடிவுல இருந்து சுமார் 1 கி.மீ தொலைவுக்கு பட்டா நிலத்தில தான் இறந்தவங்க பிணத்தை தூக்கிக்கிட்டு நடந்து போகணும். பாதை ஏதும் இருக்காது. சின்னதா வரப்பும், வாய்க்காலும் மட்டும்தான் இருக்கும். வரப்புக்கு இரண்டு பக்கத்துலயும், நெல்லு மற்றும் சவுக்கு நடவு செய்திருப்பாங்க. வயலில் இறங்கி நடந்து போக முடியாது என்ற காரணத்தினால பல்லாக்கு போன்ற ஜோடிப்பு எல்லாம் இறந்தவர்களுக்கு செய்வது கிடையாது. 'கை பாடை'யில் தான் தோளில் சுமந்து கொண்டு போகணும். மழைக்காலம் என்றால் சேரும், சகதியுமாக இருக்கும். இடுகாட்டுக்கு முன்னாடி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஓடை ஒன்னு இருக்கு. அதுல மழைவெள்ளம் வந்துடுச்சுன்னா இன்னும் கஷ்டமா இருக்கும்.

இதனால இடுகாட்டுக்கு போறதுக்கு பாதை வேண்டும் அப்படினு, பல வருஷமா கலெக்டர், சேர்மன், பி.டி.ஓ, எம்.எல்.ஏ என பலர் கிட்டயும் மனு கொடுத்திருந்தோம். ஆனா, பலன் இல்லாம இருந்துட்டு வந்துச்சு. கிராமசபை கூட்டத்தில் பாதை வேண்டும் என தீர்மானம் போட்டாலும் கிடப்பிலேயே தான் கிடைக்கும். அதனாலும் எந்தப் பயனும் இல்லை. ஊராட்சி மன்ற தேர்தலில் 'ஒருவர் ஜெயிச்சுட்டா... மற்றொருவர் வழி விட மாட்டேன்' அப்படி ஒருவருக்கொருவர் சொன்னபடியா காலம் போய்கிட்டு இருந்துச்சு. கடந்த 19ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிச்சி துரைசாமி(46) என்ற நபர் இறந்துட்டாரு. 'கை பாடை' கட்டி தான் தூக்கிட்டு போகணும் என்ற நிலை இருந்ததினால, எங்க ஊர்க்காரங்க சிலபேரை கூப்பிட்டோம். கொரோனா வைரஸ் பாதித்து இறந்தவர் என்ற காரணத்தினால, யாரும் பயந்துகிட்டு கிட்ட வரல. வெளியூரைச் சேர்ந்த அவங்க உறவுக்கார பிள்ளைங்க சிலரோட உதவியால, அந்த உடலைக் கஷ்டப்பட்டு எடுத்துக்கிட்டு போய் எரிச்சிட்டோம். அப்போதான் ஊர்க்காரங்க எல்லாம் இணைந்து 'இடுகாடுக்கு பாதை வேணும்' அப்படின்னு தீவிரம் காட்ட ஆரம்பிச்சாங்க.

மாதிரி உடலை எரிக்க கூடியிருந்த கிராம மக்கள்.

Also Read: தி.மலை: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பம்? ; மூதாட்டி இறுதிச்சடங்கில் அவலம்! - நடந்தது என்ன?

இடுகாட்டுக்கு போக பாதை அமைக்க வேண்டுமென்றால், 19 பட்டா நிலத்துக்காரங்க வழி விடணும். எனவே, 'எங்களுக்கு அதிகமாக இடம் வேண்டாம். அனைவருக்கும் பொதுவாக, வரப்புக்கு வலப்புறமாக உள்ளவர் 5 அடி, இடப்புறமாக உள்ளவர் 5 அடி என மொத்தம் 10 அடி கொடுத்தால் போதும்" எனப் பேசினோம். நம்ம ஊருக்காக தானே என்ற காரணத்தினால, 16 பேர் ஒத்துக்கிட்டாங்க. ஏன்...! குறைந்த அளவு (தோராயமாக 20 சென்ட்) நிலம் வச்சிருக்கிற கணவனை இழந்த ஒரு அம்மா கூட ஒத்துக்கிட்டாங்க. ஆனா, தனலட்சுமி, தண்டபாணி, சுப்பிரமணியன் என்ற மூன்று நபர்கள் மட்டும் மறுப்பு தெரிவிச்சாங்க. ஓரிரு குடும்பங்களை கொண்ட மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் அவர்கள்.

அதே சமயம், இந்த மூவருடைய நிலம் தான் பாதை அமைப்பதற்கு தொடக்கமே. அவங்க நிலத்தை தாண்டிதான் அனுமதி கொடுத்த 16 பேருடைய நிலமும் இருக்கு. 'இடுகாட்டிலிருந்து பாதை அமைச்சிகிட்டு வாங்க. யாரும் எதிர்ப்பு தெரிவிக்கலனா நானும் வழிவிடுறேன். இல்லனா... விடமாட்டேன்' அப்படின்னு ஒரு கண்டிஷன் போட்டாரு தண்டபாணி என்பவர்.

சுப்பிரமணியன் என்பவருடைய அப்பா, 'என் நிலத்தின் வழியே இடுகாட்டுக்கு பாதை அமைத்துக்கொள்ளலாம்'. அப்படின்னு 2008-ம் ஆண்டு 'ஸ்டாம்ப் பேப்பர்'ல கையெழுத்து போட்டு கொடுத்திருக்காரு. ஆனா, இப்போ சுப்பிரமணியன் என்பவர் வழி விடமாட்டேன்னு மறுக்கிறார். பாதை அமைக்கிற முயற்சியில ஈடுபட்டபோது, இந்த மூணு பேரும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க.

'எங்களுக்கு, இடுகாட்டிற்குச் செல்ல பாதை வேண்டும். இல்லையென்றால் சாலையிலேயே தான் இனிமேல் பிணங்களை எரிப்போம்' என கூறி பிணம் போன்ற ஒரு பொம்மையை தயார் செய்து நேற்று சாலையில் வைத்து எரித்தோம்.

சுப்ரமணியன் அப்பா எழுதி கொடுத்ததின் நகல்.

அரசு அதிகாரிகள் மேற்கொண்டு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே... அடுத்தக்கட்ட முடிவை எடுப்போம். கடந்த பிப்ரவரி மாதம், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி காணை பகுதியில நடந்துச்சு. 'சுடுகாட்டிற்கு பாதை வேண்டு'மென அன்று மனு கொடுத்திருந்தோம். சமீபத்தில கொஞ்ச நாளுக்கு முன்னாடி, அந்த புகார் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு செயலாக்கத்தில் இருப்பதாக குறுஞ்செய்தி மட்டும் வந்திருந்தது. ஆனால் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லாமல் தான் உள்ளது. இந்நிலையில்தான் தனலட்சுமி, சுப்பிரமணியன் என்ற இருவரும் மயிலம் காவல் நிலையத்தில், நேற்று 'ஊர்மக்கள், தங்கள் நிலத்தில் அனுமதியின்றி பாதை அமைக்கிறதாக' புகார் கொடுத்திருக்காங்க போல. இடுகாட்டிற்கு இறந்தவரின் உடலை எடுத்து செல்வதற்கு பாதை தானே கேட்கிறோம்..." என்றார் ஏக்கமாக.

Also Read: சுடுகாட்டுக்கு பாதையில்லை; தடையை அகற்றி பிணத்தை தூக்கிச் சென்ற பெண்கள் - முதல்வர் தொகுதியில் அவலம்

அதனைத் தொடர்ந்து, மயிலம் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் அசாருதீன் என்பவரைத் தொடர்புகொண்டு பேசினோம். "ஊர்க்காரர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இடுகாட்டிற்கு பாதை அமைப்பதற்காக தங்களது நிலத்தைக் கொடுத்திருக்கிறார்கள். பாதை அமைப்பதற்குத் தொடக்கத்திலேயே இந்த மூன்று நபர்களுடைய நிலம்தான் இருக்கிறது. இவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு, பாதைபோன்று மண் அணைக்கும்போது, 'எங்களிடம் சரியாக கேட்கவில்லை' என கூறி இந்த மூன்று நபர்களும் புகார் அளிக்க வந்தனர். புகாரின்படி சி.எஸ்.ஆர் (CSR) போட்டுக்கொடுத்து இருக்கிறோம். இரு தரப்பையும் அழைத்துப் பேச உள்ளோம்" என்றார்.அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் விமலா என்பவரிடம் பேசினோம். "இதில் அரசு நிலங்கள் என்பது இல்லை. அனைத்தும் பட்டா நிலங்கள்தான். ஊர் மக்களே இணைந்து இடுகாட்டுக்கு பாதை அமைப்பதற்கு தங்களது நிலங்களை கொடுத்து வருகின்றனர். மூன்று நபர்கள் மட்டும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதனாலேயே நேற்று அந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அது தொடர்பான தகவலை சமர்பிக்கவே இன்று வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளேன்" என்றார். வானூர் வட்டாட்சியர், கொரோனா தொற்று காரணமாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், தற்போதைய பொறுப்பு வட்டாட்சியரிடம் பேசினோம். "சிறுவை கிராமத்தில், 300 குடும்பங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர்களுக்கு அக்காலத்திலேயே தனியாக அரசு நிலத்தில் பாதை இன்றி இடுகாடு அமைந்துவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பட்டா நிலத்தின் வழியேதான் சென்று வந்துள்ளனர். கொரோனா சூழல் நிலவுவதால் இறந்தவரின் உடல்களை தூக்கி செல்ல முடியாது என்று, பொதுமக்களாகவே இணைந்து அவர்களுடைய நிலத்திலேயே 10 அடி பாதையை அமைப்பதற்கு முயற்சி செய்து வந்துள்ளனர்.

ஊர் மக்கள் எரிப்பதற்கு தயாராக வைத்திருந்த மாதிரி பிணம்.

இதற்கு ஒரு நபர் மட்டும் 'எங்களுக்கு நிலம் கொடுக்க விருப்பமில்லை. எங்கள் நிலத்தில் பாதை அமைக்க கூடாது' என ஆட்சியேபனை தெரிவித்துள்ளார். அவரிடம் பேசியபோது, "அவங்க என்னை மிரட்டுறாங்க. என்னிடம் சுமூகமாக பேசியிருந்தால் கொடுத்துவிடுவேன். ஆனால் திட்டுறாங்க" என கூறினார். சுமூகமான முடிவு எட்டப்பட வேண்டும் என்பதற்காக வரும் புதன்கிழமையன்று இரு தரப்பையும் அழைத்துப் பேசலாம் என உள்ளோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/villagers-involved-in-the-protest-as-there-is-no-way-to-the-cemetery

கரூர்: `டி.என்.பி.எல் ஆலையில் 200 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்!' - திறந்து வைத்தார் முதல்வர்

கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய கூடத்தில் 152 ஆக்ஸிஜன் படுக்கையில் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் செந்தில் பாலாஜி

Also Read: நாமக்கல்: "அலட்சியமாக போன் இணைப்பைத் துண்டித்தார்" -ஆணையரைக் குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர்!

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரூர் புகளூரில் இயங்கி வரும் டி.என்.பி.எல் ஆலையில், ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முயற்சியை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தார். இந்த நிலையில், இன்று அந்த கொரோனா சிறப்பு மையத்தை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மு வடநேரே மற்றும் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ, மாணிக்கம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொரோனா சிறப்பு மையத்தில் 152 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளும், 48 ஆக்ஸிஜன் அல்லாத படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்

நாளொன்றுக்கு, 200 நோயாளிகளுக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக 6 மருத்துவர்கள் தலைமையில் ஒரு செவிலியர் கண்காணிப்பாளர், 10 செவிலியர்கள், 4 சுகாதாரத் துறை பணியாளர்கள், 4 தூய்மைப் பணியாளர்கள், ஒரு மருந்தாளர், மற்றும் 3 தரவு உள்ளீட்டாளர்கள் என சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தங்குதடையின்றி வழங்குவதற்கு சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 7 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 உருளைகள் தயார் நிலையில் பயன்படுத்த வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் உள்ள சிறப்புகள் குறித்து பேசிய டி.என்.பி.எல் அதிகாரிகள்,

"தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் 200 படுக்கைகளுடன் இந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அனுமதிக்கப்படும் நோயாளிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவர்களால் முதலில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களின் பரிந்துரைப்படி மட்டுமே இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். எந்த ஒரு நோயாளியும் நேரடியாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். இம்மையத்தில் அனுமதிக்கப்படும் நோயளிகளுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தால் ஆக்ஸிஜன் தங்குதடையின்றி வழங்கப்பட இருக்கிறது.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்

தவிர, நோயாளிகளின் பயன்பாட்டிற்காக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், சக்கர நாற்காலி மற்றும் இதர உபகரணங்கள் பயன்பாட்டிற்கு உள்ளன. நோயாளிகளுக்கு மூன்று வேளையும், நோயின் தன்மைக்கு ஏற்ப சுகாதாரமான மற்றும் தரமான முறையில் உணவு வழங்கப்பட இருக்கிறது. 24 மணி நேரமும் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இங்கு ஜெனரேட்டர் வசதியும் மற்றும் குடிநீர் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு, சித்த மருத்துவர்களால் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்படும். அதேபோல், நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை தேவை ஏற்படும் நிலையில், உடனடியாக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு, நான்கு 108 அவசரகால ஊர்திகள் பயன்பாட்டிற்கு உள்ளன" என்றார்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/mkstalin-open-corona-special-treatment-ward-in-karur-tnpl

மேடம் ஷகிலா - 20 : கே.பாலசந்தர் சினிமா தொடங்கி நவீன இலக்கியம் வரை… பாலியல் விழிப்புணர்வு ஏன் இல்லை?

’நூல்வேலி’ என்றொரு தமிழ்த் திரைப்படம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1979-ம் ஆண்டு வெளிவந்தது. பக்கத்து வீட்டு பதினாறு வயது சிறுமியிடம் கதாநாயகனும், நாயகியும் தங்கள் மகளைப் போல நினைத்து பழகுவார்கள். ஒருநாள் ஆடை மாற்றும்பொழுது அச்சிறுமியை கதாநாயகன் எதேச்சையாக பார்த்து அவளோடு உறவுகொள்ள அணுகுவான். அவளும் மறுப்பேதும் சொல்லாமல் அதை ஏற்றுக்கொள்வாள். இந்த சம்பவத்தை கதாநாயகியும், அவர்களது 10 வயது குழந்தையும் பார்த்து விடுவார்கள்.

மகளைப் போல வளர்க்கும் சிறுமியை எப்படி பாலியல் ரீதியாக அணுக முடியும் என்கிற கேள்வி சமூகத்தில் இன்றும் இருக்கின்றது. அவ்விடத்தில் தன்மீது அன்பு செலுத்தியவராக அல்லாமல் வேறு யாராக இருந்திருந்தாலும் அந்தச் சிறுமி அவரை எதிர்த்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதை #Grooming என்பார்கள்.

நாயகி அந்த சிறு பெண்ணிற்கு நடந்தது தற்செயலான விபத்து என்று சொல்லி அவளுக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வாள். ‘’அது விபத்தாகவே இருந்தாலும் இனி நான் ’அவரை’ நினைத்துக்கொண்டே வாழ்வேன்’’ என்று அப்பெண் பிடிவாதமாக இருப்பாள். கதாநாயகியின் சகோதரன் இந்த உண்மைகள் தெரிந்து அந்த சிறுமியை திருமணம் செய்துகொண்டு அவளது குழந்தையை ஏற்றுக்கொள்வதாக சொல்வான். 'ஆஹா... புரட்சி!' என்று மகிழ்ந்து பார்க்க ஆரம்பித்த மறுகணம் அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது. வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்வது கதாநாயகனுக்கு செய்யும் துரோகம் என்று அவள் அதை மறுத்துவிடுவாள். அதாவது அவளின் கற்பை அவனிடம் இழந்துவிட்டதால் இனி அவன்தான் மனதளவில் கணவன் என்று பொருளாம்.

நூல்வேலி

மகளைப்போல நினைத்து பழகிய சிறுமியை பாதிப்புக்குள்ளாக்கிய ஆண் எந்த தண்டனையும் இல்லாமல் தப்பித்துகொள்வான். ஆனால் 18 வயது நிரம்பாத சிறுமி அந்த ஆணை நினைத்துக்கொண்டே தனியாக குழந்தையுடன் வாழ்வதாக படம் முடியும்.

தமிழ் சினிமாவும், இலக்கியமும் சிறுமிகள் மீது காதல் கொள்வது சரி என்று நியாயப்படுத்தும் விதத்தில் பல கதைகளை உருவாக்கியுள்ளது. மட்டுமல்ல, சாதி ரீதியாகவும் பெண்களை உடைமையாக பார்ப்பது சரியென்று #MalePatriarchyஐ ஆதரிக்கும், துணைபோகும் படங்களை இன்றுவரை தமிழ் திரைஉலகம் எவ்வித கூச்சமும் இல்லாமல் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளிடத்தில் இணக்கமாக இருந்து சிறிது சிறிதாக அன்பின் பெயரால் அவர்களை பாலியல் செயல்களுக்கு உள்ளாக்குவது Child Grooming / Sexual Grooming எனப்படும். தன்னிடம் பிரியமாக இருக்கும் ஒருவர் திடீரென்று தவறாக தொடும்போது குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்பட்டாலும் அது தவறு என்று உடனடியாகப் புரியாது. பக்கத்து வீட்டினர், உறவினர், பள்ளி மற்றும் டியூஷன் ஆசிரியர்களால் பெரும்பாலான குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்படுவது இப்படித்தான்.

ஒரு 14-15 வயது சிறுமிக்கு 40-45 வயது ஆணின்மீது காதல் ஏற்படுகிறது. “எனக்கு தந்தை இல்லை.. தந்தையை போல கணவன் வேண்டும்”, “வாய் முத்தம் வயது அறியுமா” என்று அவரை பார்த்து பாடுகிறாள். இது ’நாட்படு தேறல்’ எனும் தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து எழுதி கடந்த வாரம் வெளியாகி இருக்கும் ”என் காதலா” எனும் பாடல் வரிகள்.

Parenting

‘’இது ஒரு வித்தியாசமான பாட்டு. ஆமாம்! வயது வித்தியாசமான பாட்டு. வயதில் மூத்தவரை இளம்பெண் காதலிக்கும் காமம் கடந்த பாட்டு. காதலுக்குக் கண்ணில்லை; சிலநேரங்களில் வயது வேறுபாடும் இல்லை’’ என்று இந்தபாடலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் வைரமுத்து.

பதின் வயது சிறுமிக்கு ஒருவரின் மேல் ஏற்படும் சாதாரண அன்பு அல்லது இரக்கத்தை காதல் என்று வரையறுப்பது #Pedophile ஆண்களின் கீழ்த்தரமான பாலியல் எண்ணத்தை புனிதமாக Validate செய்வது. இந்த தலைமுறையை சேர்ந்தவர்களான பாடலின் இயக்குநர் விஜய் மற்றும் இதை ட்விட்டரில் பெருமையாக பகிர்ந்திருந்த மதன் கார்க்கி இருவருக்கும்கூட இது புரியவில்லை என்பது உண்மையில் அயர்ச்சியாக இருக்கிறது.

ஆண் - பெண் பாலின பாகுபாடு இல்லாமல் பழகுவது, பெண்களை சமமாக பாவிக்கும் பழக்கம் முதலியவை சிறுவயதில் இருந்து பள்ளியில் போதிக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசுகிறோம். ஆனால், நமது கல்வி நிறுவனங்களில் இப்போது ஆசிரியர்களாலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது.

சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அப்பள்ளியில் பாலியல் குற்றங்கள் பற்றிய புகார்களை விசாரிக்கும் குழுவின் தலைவராக இருந்தார் என்கிற விஷயம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியர் ராஜகோபாலனைத் தொடர்ந்து அப்பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ், சென்னையை சேர்ந்த தடகள பயிற்சியாளர் நாகராஜனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் ஆசிரியர் ஆனந்த் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குழந்தைகள் மீது பாலியல் இச்சை கொள்பவர்களை Pedophile என்று அழைப்பார்கள். வீட்டில், பொதுவெளியில், பள்ளி, கல்லூரி என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் பாலியல் குற்றத்திற்கு ஆளானவர்கள் தைரியமாக வெளியே சொல்லி சட்டரீதியாக நீதி கேட்கும் காலத்தை நோக்கி மீச்சிறு அடியை எடுத்து வைத்திருக்கிறோம்.

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக 2017-ல் உலகம் முழுவதும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் சமுக வலைதள எழுச்சியான #MeToo இயக்கத்தை சொல்லலாம். #MeToo எனும் சொற்றொடர் 2006-ம் ஆண்டு Tarana Burke எனும் அமெரிக்க கருப்பின பெண்ணால் சமூக வலைதளத்தில் பாலியல் குற்றத்திற்கு எதிராக முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. 2017-ல் அமெரிக்க நடிகை Alyssa Milanov #MeToo Hashtag-ஐ பயன்படுத்திய பிறகு அது உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு இயக்கமாக உருவானது.

இன்னொரு முக்கிய காரணம் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய போக்சோ சட்டம்-2012 வந்த பிறகு புகார் அளிக்க பலரும் முன்வருகின்றனர்.

ஒவ்வொரு முறை பாலியல் குற்றங்கள் பற்றிய வழக்குகள் பதியப்படும் போதும் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு தொடர்பான விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், இன்னும் கூட தைரியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நிகழும் பாலியல் குற்றங்கள் பற்றி பொது வெளியில் சொல்லவும், புகாரளிக்கவும் இரண்டு முக்கிய காரணங்களால் அச்சம் கொள்கின்றனர

Parenting

கற்பு, ஒழுக்கம் என சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் போலி பெண்ணடிமை கோட்பாடுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சுமத்தும் சமூகம் ஒருபக்கம். இரண்டு வயது பெண் குழந்தைக்கு கூட கற்பு உண்டு என்று நம்பிக் கொண்டிருப்பதும், அதனால் பாதிப்பை வெளியில் சொல்லத் தயங்குவதாலும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை அதிகரிக்கின்றன. மற்றொன்று குற்றவாளிகள் சமூகத்தில் பணபலம் மற்றும் ஆள்பலம் பொருந்தியவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை எதிர்க்க துணிவின்றி பாதிக்கப்பட்டவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான குற்றம்கூட ஒரு மாணவி இன்னொரு முன்னாள் மாணவியிடம் தனிப்பட்ட செய்தியில் சொல்லி இன்ஸ்டாகிராம் மூலமாக வெளிவந்ததுதான். அது சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிறகுதான் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் சித்தப்பா, மாமா அல்லது அக்கம்பக்கத்து வீட்டினருடன் பழகும்போது அப்பாவைப் போல அவர்கள் நடந்து கொள்வார்கள் என்று நினைத்துக் கொள்கிறோம். அவ்வாறே பிள்ளைகளிடத்திலும் நம்பிக்கை ஏற்படுத்துகிறோம். பெரியவர்களை மதிக்க வேண்டும், அவர்கள் சொல்படி நடக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறோம். புதியவர்கள் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சும் போது அவர்களிடம் செல்ல மறுக்கும் குழந்தைகளை நம் வீட்டு பெரியவர்கள், ”நம்ம மாமா, சித்தப்பாதான் கூப்பிடறாங்க... போ” என சொல்வதைப் பார்க்கலாம். அது மிகவும் தவறான அணுகுமுறை. மற்றவர்களிடம் செல்ல விரும்பாத குழந்தைகளை வலுக்கட்டாயமாக யாரிடமும் போகச் சொல்லி பழக்கக் கூடாது. உறவினர்களின் மனம் வருத்தப்படும் என்பதைவிட பிள்ளைகளுக்கு பாதுகாப்பு குறித்து சரியான புரிதலை ஏற்படுத்துவது அவசியம்.

எல்லோரையும் சந்தேகப்பட முடியுமா என்கிற கேள்வி எழலாம். ஆனால், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டபின் அது அவர்கள் வாழ்நாள் முழுவதும் மன உளைச்சலாய், பயமாய் பின் தொடர்ந்து அவர்கள் எதிர்காலத்தை சீரழிக்கும்.

சொந்த தந்தையே மகளிடத்தில் பாலியல் வன்புணர்வு செய்யும் கொடுமைகள் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. இச்சமயத்தில் ‘தந்தையைபோல, சகோதரனை போல’ என்கிற பதங்களை குழந்தைகளிடத்தில் பயன்படுத்தி யாருடனும் பழக அனுமதிப்பது ஆபத்தை உண்டு செய்யலாம். எல்லோரிடத்திலும் அன்பாக இருக்க குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல தன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தற்காப்பு கலைகளை கற்றுத் தருவதும் அவசியம்.

இன்று பாதுக்காப்பாக குழந்தைகள் வளர்ப்பதிலும், பாலியல் ஆபத்துகள் குறித்து குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக புரிய வைப்பதிலும் பல சிக்கல்கள் நிறைந்து இருக்கின்றன. பெற்றோர்கள் உண்மையில் அச்சத்தில் இருக்கின்றனர். தற்போது வந்திருக்கும் ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பிள்ளைகளின் பள்ளிக் கல்வியையும் அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரி டீன் ஏஜ் பெண்களுக்கு தங்கள் கல்வி பாதிக்கப்படும் என்கிற பயமும், தங்கள்மீதே குற்றம் சுமத்தப்படும் என்கிற அச்சமும் இருக்கின்றன. மாணவிகள் செய்யும் சிறு தவறுகளை பெரிதுபடுத்தி பெற்றோர்களிடத்தில் புகார் சொல்வதாக மிரட்டி ஆசிரியர்கள் பாலியல் சீண்டல்கள் செய்ததாக மாணவிகள் கூறியிருக்கின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனநலத்தைவிட அவர்களின் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அது மதிப்பெண்களை வைத்து மிரட்டி மாணவர்களிடத்தில் பாலியல் அத்துமீறல்கள் செய்யும் ஆசிரியர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அதையும் மீறி சொல்லும்போது பெற்றோர்கள் மானம், கௌரவம் என்று காரணம் காட்டி சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகாரளிப்பதில்லை. இதையெல்லாம் கடந்துதான் இப்போது பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Parenting

பொதுவாக பாலியல் குற்றங்கள் நிகழும்போது குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவரின் சாதி, மதம் முதலியவற்றின் அடிப்படையில்தான் இங்கு Social Media Campaign முதல் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கை வரை வெளிவருகின்றன. அதையும் மீறி எழும் ஒட்டுமொத்த சமூகத்தின் கோபம், எழுச்சி ஆளும் அரசுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குகிறது. ஆனால், இதை மடைமாற்றும் விதமாக குற்றவாளிகளுக்கும், அவர்கள் சார்ந்திருக்கும் சாதி மற்றும் நிறுவனங்களுக்கும் ஆதரவாக சிலர், குறிப்பாக பெண்கள் செயல்படுகிறார்கள். ஓரிரு நாட்களில் சம்பந்தபட்ட முக்கிய பிரச்னையை Expiry ஆகச் செய்கின்றனர். Pied Piper-ன் பின்னால் செல்லும் எலிகள் போல பலரும் அவர்களை ‘Follow’ செய்கிறார்கள்.

#PSBB பள்ளி விஷயத்தில் மதுவந்தியும் அவரது தந்தை YG மகேந்திராவும் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவியரின் நலனைவிட பள்ளிக்கும், அதன் நிறுவனரின் பெயருக்கும் களங்கம் வரக்கூடாது என்பதிலேயே குறியாக இருப்பது வியப்பளிக்கிறது. பல மாணவிகளால் பாலியல் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையின் விசாரணையில் இருக்கும் ஒருவருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி போன்ற பிரபலங்கள் பேசுவதால், மேற்கொண்டு புகார் அளிக்க வரும் மக்களுக்கு அச்சமும், தயக்கமும் ஏற்படும். இவை ஒருபுறம் என்றால், மறுபக்கம் Social Media Intellectuals(!) பள்ளி கட்டடம் கட்ட நிலம் கொடுத்த அரசியல் கட்சி எது என்கிற ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். இறுதியாக மொத்த பிரச்னைகளுக்கும் அடிப்படையான குழந்தைகள் நலன், கல்வி மற்றும் எதிர்காலம் மீதான அக்கறை காணாமல் போய்விட்டது.

சிறுவயதில் பாலியல் சீண்டல்கள் நிகழ்ந்தபோது, புகார் அளிக்க தயங்கியதற்கு அழகு சார்ந்த தாழ்வுணர்வும் ஒரு காரணமாக இருந்ததாக #MeToo – 2017-ன் போது நிறையப்பேர் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் பாலியல் குற்றங்கள் குறித்து பொதுவெளியில் வைக்கும் புகார்களின் நம்பகத்தன்மை முதலில் அப்பெண்களின் அழகை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

இதை குறிப்பிட்டு எழுத்தாளர் தமயந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி எழுதியுள்ளார். ‘’தங்களுக்கு எதிராக பாலியியல் வன்மம் நிகழும் போது துணிந்து போரிடும் பெண்களைப் பார்க்க மனதில் நிம்மதி வருகிறது. ‘சாதாரணமா தொட்டிருப்பார் - இவளுக்கு எப்பவுமே தான் பெரிய அழகுன்னு நெனப்பு ... அதான்’ என்று அலட்சிய புறந்தள்ளல்களுக்கு ஆளான எங்கள் தலைமுறை மாய்ந்து விட்டதில் பெருமகிழ்ச்சி.’’

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகும்போது அவர்கள் தைரியமாக முன்வந்து காவல்துறையில் புகார் அளிக்க உதவும் வகையில் புகார் கொடுப்பவரின் தகவல்களை வெளியில் சொல்லப்பட மாட்டாது என தற்போது தமிழ்நாடு அரசு உறுதி அளித்திருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி புகார் அளிக்க முன்வர வேண்டும்.

இதுபோன்ற குற்றம் நிகழும்போது குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை நோக்கி நகர்வதை பற்றி மட்டுமே நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஏற்றாற்போல் அரசாங்கமும் போக்சோ சட்டம் -2012ஐ ஏற்படுத்தி உள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில் தண்டனை சட்டங்களை தவிர ஒரு சமூகமாக நாமும், அரசாங்கமும் பாலின சமத்துவம் பற்றிய புரிதல் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்த என்னென்ன வழிமுறைகளை உருவாக்கி இருக்கிறோம்?

குழந்தைகள் மீதான இச்சை, குழந்தை திருமணம், பெண்களை உடைமையாக நடத்துவது, பெண்களை மையப்படுத்திய தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது வரை எல்லாவற்றையும் இங்கே ’சகஜம்’ ஆக்கி வைத்திருக்கிறார்கள். அது தவறு என்று ஆண்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் பெண்களுக்கும் புரியவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின்குறிப்பு : இங்கே குழந்தைகள் எனும் சொல் ஆண்-பெண்-திருநர் என அனைத்து பாலினரையும் உள்ளடக்கியது. பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே இந்தியாவில் அதிகம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்பு அறிக்கை சொல்கிறது.



source https://cinema.vikatan.com/tamil-cinema/tamil-cinema-to-literature-why-no-awareness-on-child-sexual-abuse

வாணக்காரர் பாய் பட்டாசு... தொள தொள தாத்தா சட்டை..! - தீபாவளி ஃப்ளாஷ்பேக் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

என்னுடைய பால்ய வயதுகளில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் என்பது மிக இனிமையான மறக்க முடியாத நினைவுகள். புது உடை, தீபாவளி பலகாரங்கள் மற்றும் பட்டாசு எனப் பல நினைவுகள் மறக்க முடியாதவை.

இரட்டை நகரம் போல இரட்டை கிராமம் என்று சொல்லலாம். இரு வேறு பஞ்சாயத்துகளைச் சேர்ந்த இரு கிராமங்கள் எந்த எல்லைக் கோடும் இல்லாமல் ஒரே ஊராகவே பார்ப்பவர்களுக்குத் தெரியும். அதுபோன்று எங்கள் கிராமத்தின் அடுத்து உள்ள பகுதிக்குக் காவேரிபாளையம் என்று பெயர். ஏன் அந்தப் பெயர் வந்தது என்ற பெயர்க் காரணம் எனக்குத் தெரியவில்லை. எங்கள் ஊரிலிருந்து காவிரி ஆறு நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதனால் இந்தப் பெயர் வந்ததா என்று தெரியவில்லை.

தாத்தா - Representational Image

காவேரிபாளையத்தில் சுமார் முப்பது இஸ்லாமியக் குடும்பங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் வாணக்காரர் குடும்பம். வாணக்காரர் வீடு என்று சொல்வார்கள். இரு சகோதரர்கள் இணைந்து குடும்பமாகப் பட்டாசு மற்றும் வாண வெடிகள் செய்யும் தொழில் செய்து வந்தார்கள் (இப்பொழுதும் அதில் ஒருவர் மட்டும் தீபாவளி சமயம் பட்டாசு விற்பனை செய்துவருகிறார்). சித்தாம்பூர் வாண வெடி என்பது அன்றைய காலகட்டத்தில் எங்கள் பகுதியில் மிகப் பிரபலம். பல ஊர்த் திருவிழாக்களுக்கு வாண வேடிக்கை நிகழ்வுக்கு இவர்கள் செல்வார்கள். பலமுறை போட்டி வாண வேடிக்கையில் பரிசுகளையும் வென்றிருக்கிறார்கள். அவருடைய மகன் புதுவிதமான வாண வெடிகளைச் செய்வதற்கு முயற்சி செய்துகொண்டே இருப்பார்.

தீபாவளிக் கொண்டாட்டங்களில் முதலாவதாக பட்டாசு.

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கையில் எங்கள் அப்பாவிடம் ஒரு இருபது அல்லது முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு வாணக்கார பாய் (இஸ்லாமிய சகோதரர்களைப் பொதுவாகக் குறிப்பிடும் வார்த்தை) வீட்டிற்கு நானும் என் அண்ணாவும் செல்வோம். எங்களைப் பார்த்ததும் அந்தப் பெரியவர் "வாய்யா மாப்ள..." என்று உரிமையுடன் அழைப்பார். எங்கள் ஊரிலுள்ள அனைத்து இஸ்லாமியக் குடும்பங்களும் பிற மதத்தினரை மாமன் மச்சான் முறை வைத்துதான் கூப்பிடுவார்கள். அதற்கான காரணம் எனக்குத் தெரியாது. ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சியும் ரமலான் அன்று பிரியாணியும் தவறாமல் கொடுத்தனுப்புவார்கள். ஊர்த் திருவிழாக்களின் போது கோவிலுக்கு வந்து அனைத்து விதமான கொண்டாட்டங்களிலும் பங்கெடுத்துக்கொள்வார்கள்.

Kids - Representational Image

"வெடி வாங்க வந்தோம்..." என்று நாங்கள் சொன்னவுடன் நாங்கள் கொண்டு செல்லும் பையில் பட்டாசுகளை நிரப்பிக் கொடுப்பார்கள். என்னுடைய அப்பாவும் அவரும் நண்பர்கள் என்ற காரணமா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. யானை வெடி, லட்சுமி வெடி, சட்டி கலசம் (மண் சட்டியில் மருந்தை நிரப்பிப் பூச்சட்டி) பென்சில் எனப் பலவிதமான பட்டாசுகளைப் பையில் போட்டு எங்களிடமிருந்து நாங்கள் வைத்திருக்கும் குறைவான தொகையைப் பெற்றுக்கொண்டு கொடுப்பார். இன்றைக்கு நினைத்துப் பார்க்கையில் நிச்சயமாக நாங்கள் கொடுத்த தொகைக்கு அவர்கள் கொடுத்த பட்டாசின் அளவு மிக அதிகம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுபோன்ற மனிதர்களை கிராமங்களில் பார்க்க முடியும். பணத்தைவிட பழகிய பழக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு திருவிழா சமயம் வெடி தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட ஒரு விபத்தினால் வாணக்கார பாயும் அவர் மனைவியும் இறந்து விட்டார்கள். எங்கள் ஊரிலுள்ள அனைவரும் வருந்திய துயரச் சம்பவம் அது.

அதுதவிர எங்களுடைய அப்பா எங்களுக்கு பிற பட்டாசுகளை (மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, கலசம், சாட்டை, சங்கு சக்கரம், பாம்பு மாத்திரை, பொட்டு வெடி எனப்படும் டாட் கேப், துப்பாக்கி, துப்பாக்கியில் போட ரோல் கேப், அணுகுண்டு, ராக்கெட் போன்றவை) முசிறியிலுள்ள சிந்தாமணி சிறப்பங்காடி பட்டாசுக் கடையில் நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய்க்கு (முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு இது மிகப் பெருந்தொகை) வாங்கி வருவார். வந்த பிறகு அதை நான்காகப் பிரித்து எங்களுக்குக் கொடுத்துவிடுவார். நாங்கள் அதைத் தனித்தனியாகப் பையில் போட்டு வைத்துக்கொள்வோம். பிறகு பகல் நேரங்களில் வெயிலடித்தால் செய்தித் தாளைக் கீழே பரப்பிக் காய வைப்போம் (அப்பொழுதான் அனைத்து வெடிகளும் நன்றாக வெடிக்கும்). இதெல்லாம் தீபாவளிக்கான முன்னேற்பாடுகள். பிறகு தீபாவளி நாளுக்காகக் காத்திருப்போம்.

Crackers - Representational Image

இரண்டாவதாக புதிய உடை.

அநேகமாக டெய்லரிடம் சென்று உடை தைத்து அணிந்த கடைசித் தலைமுறை நாங்களாகத்தான் இருப்போம்.

அன்றய காலகட்டத்தில் புதிய உடை என்பது வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே கிடைக்கும். ஒன்று தீபாவளி சமயம், மற்றொன்று பிறந்த நாளின் போது.

தீபாவளிப் புதுத்துணி உடுத்துவதற்காகக் கிட்டத்தட்ட ஒரு மாத கால இடைவெளியில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் உற்சாகமான மனநிலையிலேயே இருப்போம். இன்றுபோல அதை ஒரு பெரிய பிரபலமான துணிக்கடையிலோ அல்லது ஆயத்த ஆடைகளாகவோ (Ready Made) எடுப்பதற்கான பொருளாதாரம் கிடையாது. என்னுடைய பெற்றோர் அரசுப் பணியில் இருந்ததனால் அவர்களுக்கு கோ ஆப் டெக்ஸ் (CO-OP Tex) எனும் அரசு நிறுவனத்தில் பண்டிகைக்குத் தேவையான துணிகளை எடுத்துக்கொள்ளலாம். அதற்கான தொகையை மாதத் தவணையாகச் செலுத்திக்கொள்ளும் வசதி உண்டு. முசிறியில் உள்ள அந்தக் கடையிலேயே எங்கள் தீபாவளி உடைகள் எடுக்கப்படும். எனக்கும் என்னுடைய அண்ணாவிற்கும் ஒரே துணியில் மேல் சட்டை மற்றும் அரைக்கால் டவுசர் எடுப்பார்கள். என்னுடைய சகோதரிகளுக்கும் அதுபோலவே ஒரே துணியில் பாவாடை சட்டை எடுத்துத் தைப்பார்கள். கிட்டத்தட்ட பள்ளிச் சீருடை போன்று (Uniform) இருக்கும்.

டெய்லரிடம் அளவு கொடுப்பதற்காக எங்களையும் அழைத்துச் செல்வார்கள். அப்போது முசிறி கடை வீதியில் ஸ்டைலோ டெய்லர் (Stylo Tailor) என்ற கடையிலேயே எங்களுக்கு உடைகள் தைக்கப்படும். அழகாக அளவெல்லாம் எடுத்துவிட்டு கடைசியில் எனக்கும் என் அண்ணாவிற்கும் ஒரே அளவில் தைத்துவிடுவார். அதன் காரணத்தை இன்று யோசித்துப் பார்த்தால் தைப்பதற்கு முன் துணி வெட்டுவதற்கான நேரத்தை மிச்சப் படுத்துவதற்காக அவர் அவ்வாறு செய்திருப்பாரோ என்று தோன்றுகிறது. புதுத் துணி உடுத்தப் போகிறோம் என்ற ஆர்வத்தில் அளவெல்லாம் சரியாக இருக்கிறதா என்று எப்போதும் யோசித்ததில்லை. சற்றுப் பெரிதாக இருந்தாலும் சுருட்டி அரைஞாண்கயிறில் மாட்டி கீழே விழாதவாறு உடுத்திக்கொள்வோம். மேல் சட்டைக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை. என்ன ஒன்று, சற்று தொள தொளவென தாத்தா சட்டை போல இருக்கும். அதுவும் தீபாவளிக்குள் தைத்துக் கொடுத்துவிடுவார்களா என்ற பதற்றம் துணிகள் தைத்து நம் கைக்கு வரும் வரை இருக்கும். ஒரு வழியாக தீபாவளிக்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு உடைகள் எங்கள் கைக்கு வரும்.

Kids - Representational Image

மூன்றாவதாக தீபாவளிப் பலகாரங்கள்.

தீபாவளி தொடங்க பத்து நாள்கள் இருக்கும்போது எங்களுடைய அம்மா பலகாரம் தயாரிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்வார். முறுக்கு செய்ய மாவரைப்பது, அதிரசத்திற்கு மாவு இடிப்பது, பின் அதிரச மாவுடன் வெல்லப் பாகு கலந்து அதிரச மாவைக் கிளறி ஒன்றிரண்டு நாள்களுக்கு ஊற வைத்து பின்பு அதிரசம் மற்றும் முறுக்கு சுடுவார்கள். பூந்தி மற்றும் லட்டு செய்வார்கள். எங்களுக்குத் தேவையான தின்பண்டங்கள் அந்தப் பத்து நாள்களுக்கு திகட்டத் திகட்டக் கிடைக்கும்.

தீபாவளி அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு வடைக்குத் தேவையான கடலைப் பருப்பையும் உளுந்தம் பருப்பையும் ஊறவைத்து விட்டு உறங்கி அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து அப்பாவும் அம்மாவும் ஆட்டுரலில் (அப்பொழுது எங்கள் வீட்டில் மாவரைக்கும் இயந்திரங்கள் கிடையாது) வடைக்கு மாவு ஆட்டுவார்கள். அனைத்தையும் ரெடி செய்த பின் நான்கு மணி வாக்கில் பலகாரம் சுடத்தொடங்குவார்கள். அனைத்தும் தயாராகிக் கொண்டிருக்கும்போதே ஐந்து மணிக்கு எங்களை எழுப்பிவிடுவார். நாங்கள் பட்டாசு வெடிக்கத் தொடங்குவோம்.

தீபாவளி பலகாரங்கள் | Representational Image

ஆறு மணிக்கு பட்டாசு வெடித்து முடித்தவுடன் அனைத்தும் தயாராக இருக்கும். புதிய உடைகள், பலகாரம் மற்றும் நல்லெண்ணெய் சிகைக்காய் தூள் வைத்து சாமி கும்பிட்டு விட்டு அனைவருக்கும் எண்ணை தேய்த்து விடுவார்கள். பின்பு சிகைக்காய் தேய்த்துக் குளித்துவிட்டு, புத்தாடை எடுத்து அணிந்துகொண்டு இறைவனை வணங்கிவிட்டு ஏழு மணி வாக்கில் சாப்பிட அமர்வோம். சிறிது நேரம் கழித்து புத்தாடையுடன் வெடிகளை வெடிப்போம். ஒருவழியாக இரவு மீதமிருக்கும் மத்தாப்பு, பூக்கலசங்கள் போன்றவற்றை வெடித்து விட்டு, கொஞ்சம் பட்டாசுகளைக் கார்த்திகை தீபத்தன்று வெடிப்பதற்காக எடுத்து வைத்து விட்டு ரசம் சாதம் சாப்பிட்டு விட்டு உறங்கச் செல்வோம். அந்த வருட தீபாவளி நினைவுகளை மகிழ்ச்சியுடன் அசைபோட்ட படி அடுத்த வருட தீபாவளி பற்றிய எண்ணத்துடன் தூங்குவோம்.

இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு காத்திருந்து அனுபவிப்பதில் உள்ள நிறைவும் மகிழ்ச்சியும் (Satisfaction and Happiness) புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால், நான் மேற்சொன்ன எதற்காகவும் இன்று அவர்கள் காத்திருக்கத் தேவையில்லாத நிலை இருப்பதே அதற்கான காரணமாக இருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது.

- ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/village-man-shares-about-his-nostalgic-diwali-memories

கோவிட் 19: தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்களா ஆசிரியர்கள்? - உண்மை என்ன?

கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் பிரதானமானது தடுப்பூசி. பொது மக்களுக்குத் தடுப்பூசி போடுவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்திருக்கும் தமிழக அரசு, செய்தித்தாள் மற்றும் பால் விநியோகம் செய்பவர்கள், மருந்தகப் பணியாளர்கள், ஆட்டோ, டாக்ஸி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள் உள்ளாட்சித்துறை பணியாளர்கள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளித்துள்ளது.

கொரோனாவின் வேகம் அதிகரித்ததையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிக்காக வரிசையில் காத்திருக்கின்றனர் மக்கள். மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சூழலில், `பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் வலியுறுத்துவதாகவும் அது சரியான நடைமுறை இல்லை என்றும் சில ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி

`அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துரிதமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தை அதற்குரிய ஆவணங்களுடன் கல்வி மேலாண்மை தகவல் முகமை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள், போடாதவர்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகள் தொகுத்து பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.

முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி விவரங்களையும் தனியாகக் குறிப்பிட வேண்டும்’ என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து அது சர்ச்சையாகியிருக்கிறது.

``தடுப்பூசி கட்டாயம் என்று அரசு நிர்பந்திக்க முடியுமா? விருப்பமுள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம் என்பதுதானே சிறந்த முடிவாக இருக்க முடியும்?” என்று ஆசிரியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்

சங்கர்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர், ``அதிதீவிரமாகப் பரவி வரும் கொரோனாவை ஒழிப்பதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் ஒரே வழி என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அனைவரும் தங்களது சுய விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் அது தேவையில்லாத சிக்கல்களை உருவாக்காது.

ஆனால், அனைத்து ஆசிரியர்களும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், போடாதவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும் என்பதுதான் பதற்றத்தை உருவாக்குகிறது. ஏனெனில், சாதாரண காய்ச்சலுக்காகப் போட்டுக்கொள்ளும் ஊசிக்கே ஒவ்வாமை பிரச்னை உள்ள ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். அப்படியானவர்கள், `கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தங்களுக்கு ஏதாவது ஒவ்வாமை ஏற்படுமோ?' என அச்சமடைகின்றனர். பயம்தான் பெரிய நோய் என்பார்கள்.

அந்த பயத்துடன் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு வேறு ஏதாவதொரு காரணத்தால் பின்விளைவுகள் ஏற்பட்டால்கூட, `தடுப்பூசியினால்தான் பின்விளைவு ஏற்பட்டது’ என்று சொல்வதற்குக் கூட வாய்ப்புள்ளது. ஆகையால், கட்டாயப்படுத்தி தடுப்பூசி போட வைக்காமல் அவர்களின் முழு விருப்பத்துடன் போடச் செய்வதே சிறப்பானதாக இருக்கும்.

இதய நோய் உள்ளவர்கள், வலிப்பு நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், நீண்ட நாள்களுக்கு மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்கள் ஆயுர்வேத மருந்து எடுத்துக்கொள்பவர்களெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குப் பெரிதும் அஞ்சுகின்றனர்.

எனவே, `எந்தெந்த நோயாளிகள் அந்த ஊசியைப் போடக் கூடாது. யார் யாரெல்லாம் போடலாம்’ என்று தெளிவுபடுத்துவதுடன், `தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசியால் எந்தப் பிரச்னையும் வராது’ என்று அரசு உறுதியளித்தால் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயங்கும் சிலரும் நம்பிக்கையுடன் தடுப்பூசி எடுத்துக்கொள்வார்கள்.

கொரோனா தடுப்பூசி முகாம்

`ஆசிரியர்களாகிய நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று எங்கள் சங்கத்தின் சார்பாகச் சொல்லும்போது கூட, `நான் தொடர்ச்சியாக ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்கிறேன். நான் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா? எனக்கு ஒவ்வாமை இருக்கிறது நான் எப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்? என்று சிலர் கேட்கின்றனர். இன்னும் சிலரோ, சென்ற முறை முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது, `இந்த தடுப்பூசியை நான் மனமுவந்து சொந்த விருப்பத்தின் பேரில் போட்டுக்கொள்கிறேன்' என்று கையெழுத்து வாங்கிக்கொண்டனர்.

தடுப்பூசியால் ஏதேனும் பின்விளைவுகள் நேர்ந்தால், உங்களது சொந்த விருப்பத்தின் பேரில்தானே தடுப்பூசி எடுத்துக்கொண்டீர்கள்… எங்களுக்குத் தெரியாது என்று அரசு ஒதுங்கிக்கொள்ளுமோ என்று அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே இந்தக் குழப்பத்தையும் அச்சத்தையும் போக்கி அனைவரையும் அவரவர் முழு விருப்பத்தின் பேரில் கட்டாயப்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்வதுதான் சிறப்பானதாக இருக்கும்” என்றார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரிடம் கேட்டோம், ``எல்லோரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எந்த சுற்றிக்கையும் அனுப்பவில்லை. அதேசமயம் ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைத்துவிதமான அரசு ஊழியர்களும் பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் அரசு தெரிவிக்கிறது. பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தளவில் ஒவ்வொரு நாளும் எத்தனை ஆசிரியர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர் என்ற விவரங்கள்தான் சேகரிக்கப்படுகிறதே ஒழிய, யார் தடுப்பூசி போடவில்லை என்ற விவரங்களையெல்லாம் சேகரிக்கவில்லை. தடுப்பூசி விவகாரத்தில் எந்தக் குழப்பமும் வேண்டாம். யார் யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். யார் யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதனை ஆசிரியர்கள் பின்பற்றினால் போதுமானது. நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.” என்றார்



source https://www.vikatan.com/news/tamilnadu/is-it-true-that-tn-school-education-dept-forced-teachers-to-get-covid-19-vaccine

Covid Questions: ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது தடுப்பூசி போட்டால் ௭ன்னவாகும்?

Covid questions: ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது கோவிட் தடுப்பூசி போடக்கூடாதா? அப்படி போட்டால் ௭ன்னவாகும்?

- வசந்தி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அருணாசலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

``ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது தடுப்பூசி போடுவதைத் தவிர்ப்பதே சிறந்தது. ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் வழக்கமாக வரக்கூடிய மாரடைப்பு, ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம், தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், கைகால்களில் இயக்கமின்மை போன்றவை ஏற்பட்டால் அதற்குக் காரணமாகத் தடுப்பூசியின் மேல் பழியைப் போட்டுவிடுவார்கள். தவிர ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு தடுப்பூசி போட்டால்தான், பக்க விளைவுகள் வரும்போது அவற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து, அவற்றுக்குத் தடுப்பூசி காரணமா என்பதைப் பதிவு செய்ய முடியும்.

ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது ரத்தக் குழாய்கள் சுருங்கும். அந்த நிலை வாசோ கன்ஸ்ட்ரிக்ஷன் (Vasoconstriction) எனப்படும். அதிகம் கோபப்பட்டாலோ, கத்தினாலோ, அழுதாலோகூட ரத்தக்குழாய்கள் சுருங்கும். அப்படி அவை சுருங்குமிடத்தில் கொழுப்பு இருந்து அந்த இடத்தில் ரத்தம் உறைந்துதான் மாரடைப்போ, பக்கவாதமோ ஏற்படுகிறது.

Pressure Check

Also Read: Covid Questions: ஹார்ட் அட்டாக் வந்து ஸ்டென்ட் வைத்தவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?

மாரடைப்போ, பக்கவாதமோ ரத்த அழுத்தத்தால் வந்ததா, தடுப்பூசி போட்டுக்கொண்டதன் விளைவாக வந்ததா என்று தெரியாமல் பொத்தாம் பொதுவாகத் தடுப்பூசிதான் காரணம் என்று அதைத் தவிர்ப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இப்படித் தவறான பிரசாரங்களைத் தடுப்பதற்காகவும், தடுப்பூசிகளின் மேல் பழியைப் போடுவதைத் தவிர்ப்பதற்காகவும், தடுப்பூசி போடுவதால் பின்விளைவுகள் வராமலிருக்கவும்தான் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் போன்றவற்றுக்கான சோதனைகளை மேற்கொண்டு, அவை நார்மலாக இருக்கும் பட்சத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கிறோம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/news/healthy/can-people-with-high-bp-take-covid-19-vaccine

உலகை ஆளும் தரவுகள்: தரவு விஞ்ஞானி (Data Scientist) ஆவது எப்படி?

சில ஆண்டுகளுக்கு முன்புவரை +2-வுக்குப் பிறகான மேற்படிப்புகளுக்கு மாணவர்களின் முதன்மைத் தேர்வாக பொறியியலும், மருத்துவமும் இருந்தன. 2000-க்குப் பிறகான காலகட்டத்தில் இந்தியாவில் உற்பத்தித் துறையும், தகவல் தொழில்நுட்பத்துறையும் (ஐ.டி) வளர்ச்சியடையத் தொடங்கியிருந்த நிலையில் பொறியியல், கணினி அறிவியல் படிப்பில் சேர மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். காலப்போக்கில் இந்த நிலை மாறி கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர்களின் கவனம் குவிந்தது. அந்தக் கவனம் இன்றைக்கும் தொடர்கிறது என்றாலும், தொழில்நுட்ப மேம்பாடும், தொழில்நுட்பத்தை மையப்படுத்திய வாழ்க்கைமுறையின் வளர்ச்சியும் பொறியியலில் புதிய படிப்புகளை உருவாக்கியிருக்கின்றன. இது பொறியியல் மீதான மாணவர்களின் ஆர்வத்தை மீண்டும் துளிர்க்கச் செய்துள்ளது.

மிகச் சமீபத்திய காலம்வரை நாம் கற்பனைகூட செய்திருக்காத பொறியியல் படிப்புகள், பொறியியல் ஆர்வம் கொண்ட மாணவர்களின் முதன்மைத் தேர்வாக இன்றைக்கு உருவெடுத்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானது தரவு அறிவியல் (Data science).

தரவு அறிவியல் (Data Science) என்றால் என்ன?

தரவுகள் (Data) என்பவை பயனுள்ள குறிப்புகள் எனலாம். அவை எண்களாகவோ, வெப்பநிலை, ஒலி, ஒளி, அழுத்தம், உயரம் முதலான அளவீடுகளாகவோ, சொற்களாகவோ அல்லது பிற பயனுடைய குறிப்புகளாகவோ இருக்கலாம். எந்த ஒன்றைப் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும், அலச வேண்டும் என்றால் அடிப்படையாகத் தரப்பட வேண்டிய குறிப்புகளாக அல்லது செய்திகளாக இருப்பதால் இவை தரவுகள் எனப்படுகின்றன. இவ்வகைத் தரவுகளைக் கொண்டு முறைப்படி ஆய்வு செய்து புதிய முடிவுகள், கருத்துகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பெற முடியும்.

Data Science

உலகில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட தரவுகளில், 90 சதவிகிதம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன என்ற தகவல் உங்களைத் திகைக்கச் செய்யலாம். மனிதர்கள் நாளொன்றில் சுமார் 2.5 குவின்டில்லியன் பைட்ஸ் அளவுக்குத் தரவுகள் உற்பத்தி செய்கின்றனர். 2025-ல் 463 எக்ஸாபைட்ஸ் அளவுக்கான தரவுகளை நாளொன்றில் மனிதர்கள் உற்பத்தி செய்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 'Data is the new oil' என்று கூறும் அளவுக்கு தரவுகளின் ஆற்றல் வளர்ந்திருக்கிறது; ஆம், நாம் வாழ்வது பெருந்தரவுகளின் யுகத்தில்!

2020-ம் ஆண்டு இந்தியாவில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 69 கோடியாக இருந்தநிலையில், இந்த ஆண்டு அது 76 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு 82 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது; 2017-ல் இந்தியாவில் 24 கோடியாக இருந்த ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை, 2020-ல் 34 கோடியாக உயர்ந்திருக்கிறது. இத்தனை கோடி பயனாளர்களின் இணையச் செயல்பாடுகள் உற்பத்தி செய்யும் தரவுகளின் அடிப்படையில் தான் விளம்பரங்களும், பரிந்துரைகளும் இன்னும் பிறவும் திரையில் தோன்றுகின்றன. இந்தக் கட்டற்ற தரவுகளைக் கொண்டு தரவு அறிவியலின் அடிப்படையில் உருவாக்கப்படும் நிரல்கள்தான் இணைய உலகை இன்று ஆள்கின்றன.

ஆக, டிஜிட்டல் உலகில் நம்முடைய இயக்கம் என்பது நாம் உற்பத்தி செய்யும் தரவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது; அது நம் யதார்த்த வாழ்விலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தப் பின்னணியில் தான் தரவு அறிவியல் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஒன்றாக இன்றைக்குப் பரிணமித்திருக்கிறது.

தரவு அறிவியல் என்றால் என்ன என்று இப்போது உங்களுக்கு ஓர் அறிமுகம் கிடைத்திருக்கும். இது அடிப்படையில் ஒரு தகவல் தொழில்நுட்பப் பிரிவு. உற்பத்தியாகும் ஒட்டுமொத்த தரவுகளைத் தொகுத்து, அவற்றை ஒருங்கிணைத்து அவற்றிலிருந்து பயன்படக்கூடிய தேவையாக தரவுகளைப் பிரித்து குறிப்பிட்ட புதிய தரவுகளை எதிர்காலச் செயல்பாட்டுக்கு உருவாக்குதல் தரவு அறிவியல் எனப்படுகிறது.

Data
நடந்துமுடிந்த அனைத்து தேர்தல்களில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் குறிப்பிட்ட தொகுதியில் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை ஒரு அரசியல் கட்சி அறிவதில் இருந்து, ஒரு வாரத்தில் பதிவாகியிருக்கும் கொரோனா தொற்றின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த வாரங்களில் தொற்றுப் பரவலில் எண்ணிக்கையை கணிப்பது வரை என பல தளங்களில் விரியும் பயன்பாடு என இன்றைக்கு ஏறக்குறைய அனைத்து செயல்பாடுகளிலும் தரவு அறிவியல் தாக்கம் செலுத்துகிறது.

யாரெல்லாம் படிக்கலாம்?

எந்தவொன்றின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதும், அதன் அடுத்தடுத்த நிலைகள் மீதும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற துறையாக தரவு அறிவியல் விளங்குகிறது. எண்கள், கணக்குகளில் ஆர்வம் கொண்ட கணிதம், புள்ளியியல் மாணவர்கள் தரவு அறிவியலை எளிமையாகப் படிக்க முடியும்; கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், பொறியியல் படித்தவர்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமானதாக இருக்கும். மற்ற படிப்புகளில் இருந்து சற்றே மாறுபட்ட இந்தத் துறையில், கட்டற்ற எண்ணிக்கையிலான தரவுகளைக் கையாள்வதற்கு மன ஆற்றலும் அவசியமாகிறது. எக்ஸெல் (Excel) குறித்த அறிவும் தேவை; ஆர் (R) ப்ரோகிராமிங், டாப்ளூ (Tableau), மைக்ரோசாஃப்ட் பிஐ (BI), கூகுள் சார்ட்ஸ் (Charts), பைதன் (Python), சாஸ் (SAS) போன்ற நிரல்கள் குறித்த அறிவு இருப்பதும் அவசியமானது. இந்தத் தகுதிகளோடு தரவு அறிவியலைப் படிப்பவர்கள் துறை சார் வல்லுநர்களாக மிளிரலாம்.

Education

எங்கு படிக்கலாம்?

இந்தியாவில் கீழ்கண்ட இடங்களில் டேட்டா சயின்ஸ் பயிலலாம்:

Indian Institute of Information Technology and Management (IITM) – Kerala, IIT Madras, IIIT Delhi, Jawaharlal Nehru University (JNU), Indian Institute of Science (IISc) - Bangalore, National Institute of Securities Markets (NISM), IIM Calcutta, IIT Hyderabad, IIT Kharagpur, Ahmedabad University, Academy of Maritime Education and Training, Bharathiar University Coimbatore.

தமிழகத்தில் வி.ஐ.டி பல்கலைக்கழகம், சென்னை லயோலா கல்லூரி போன்ற இடங்களில் எம்.ஸ்.சி., டேட்டா சயின்ஸ் படிப்பு வழங்கப்படுகிறது. இவை தவிர, இணைய வழியிலான டேட்டா சயின்ஸ் படிப்பைச் சென்னை ஐ.ஐ.டி. வழங்குகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை ஐ.ஐ.டி-யில் வழங்கப்படும் இணைய வழியிலான டேட்டா சயின்ஸ் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக அறிய இந்த இணையப் பக்கத்துக்குச் செல்லலாம்: https://onlinedegree.iitm.ac.in/admissions.html#AD1

கொல்கத்தாவிலுள்ள பிராக்ஸிஸ் பிஸ்னஸ் ஸ்கூல் போன்ற தனியார் நிறுவனங்கள் உதவித்தொகையுடன் டேட்டா சயின்ஸ் படிப்பை வழங்குகின்றன; மேலதிக விவரங்களுக்கு இந்த இணையப் பக்கத்துக்குச் செல்லலாம்: https://praxis.ac.in/Programs/data-science-course-program/

சான்றிதழ் படிப்பாகவும் வழங்கப்படும் டேட்டா சயின்ஸ் பயில புள்ளியியல், கணினியியல், கணிதம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகள்

டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு, Data Scientist, Data Architect, Data Mining Engineer, Business Intelligence Analyst என ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழகம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான வேலைவாய்ப்புகள் உள்ளதால், வரும் காலங்களில் மாணவர்களின் தவிர்க்கமுடியாத தேர்வாக டேட்டா சயின்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!



source https://www.vikatan.com/news/career/emerging-opportunities-in-data-science-courses

முதல்வரிடம் பாராட்டு பெற்ற தூய்மைப் பணியாளர்; உடல்நலக் குறைவால் முடக்கம்... உதவுமா அரசு?

பெரம்பலூர் மாவட்டம் வேப்பம்தட்டையடுத்துள்ள வ.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை (45). அதே ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி. இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. அய்யாதுரை கொரோனா தடுப்புப் பணியில் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொண்டு ஊராட்சிப் பகுதி முழுவதும் தூய்மையாக இருப்பதற்கு முழு காரணமாக இருந்து வந்தவர்.

தூய்மை பணியில் அய்யாதுரை

கடந்த வருடம் கொரோனா பரவலை தடுப்பதற்காக அய்யாதுரை தான் பணிபுரிந்த ஊராட்சியில் தூய்மை பணியினை தீவிரமாக மோற்கொண்டு வந்தார். அப்போது அவரின் அம்மா அங்கம்மாள்(65) உயிரிழந்தார். தன் அம்மாவிற்கான இறுதிச் சடங்கை செய்த அடுத்த நாளே பணிக்கு வந்து தூய்மை பணியினை செய்யத் தொடங்கி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் அய்யாதுரை. தன் தாய் மறைந்த நிலையிலும், பெரும் தொற்றுப் பரவிய அந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு, தன் சோகத்தையும் பொருட்படுத்தாமல் பணிக்கு வந்ததை அந்த நேரத்தில் பலரும் பாராட்டினார்கள்.

இதனையறிந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் மூலம் அய்யாதுரையை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா பரவலின் இரண்டாவது அலையிலும் தன் பணியை சிறப்பாகச் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதையடுத்து அவருக்குக் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. ஆனாலும் அய்யாதுரைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

கொரோனா வார்டில் சிகிச்சையிலிருக்கும் தூய்மை பணியாளர்

Also Read: `தாயின் இறுதிச்சடங்கு முடிஞ்சதும் கொரோனா தடுப்பு வேலை' -கலங்கவைத்த பெரம்பலூர் தூய்மைப் பணியாளர்

இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா வார்டில் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து வருகிறது. இதனையறிந்த வ.களத்தூர் ஊராட்சியினர், தன்னலம் பாராமல் பணிசெய்த அய்யாதுரைக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கையினை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக ஊராட்சி மன்றத் தலைவரான கோ.பிரபு தனது முகநூல் பக்கத்தில் உதவி கேட்டு பதிவிட்டுள்ளார்.

``அய்யாத்துரை உடல்நிலையில் ஏற்பட்ட குறைபாட்டால் மருத்துவமனையில் முடங்கிக் கிடக்கிறார். அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்தால்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்காரா எனத் தெரியவரும். ஆனால் சிடி ஸ்கேன் எடுப்பது தாமதமாகி வருகிறது. உடனடியாக அவருக்கு நல்ல முறையில் உரிய சிகிச்சை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பொருளாதார ரீதியான உதவிகள் கிடைப்பது அய்யாதுரையின் குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்'' என்கிறார் கோ.பிரபு.

அலுவலகத்தில் அய்யாதுரை

பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரன் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றோம். அய்யாதுரைக்கு உரிய சிகிச்சையும், உதவியும் கிடைக்க உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/perambalur-frontline-worker-who-received-many-appreciation-is-in-need-of-financial-aid

`துரைமுருகனைச் சந்தித்ததால் நிலோபர் கபிலை கட்சியிலிருந்து நீக்கினோம்!’ -கே.சி.வீரமணி விளக்கம்

கடந்த ஆட்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், கட்சியில் திருப்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்த நிலோபர் கபில், சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க-விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த நிலோபர் கபில், ‘‘கட்சியிலிருந்து என்னை நீக்கியதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணிதான் காரணம். நான் நீக்கப்படப் பண மோசடிப் புகார்தான் காரணம் என்றால், அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீதும் மோசடிப் புகார்கள் இருக்கின்றன. முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீதும்கூட ஊழல் புகாரை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்’’ என்று பல விவகாரங்களை வெளிப்படையாகப் போட்டுடைத்தார். இதையடுத்து, அவர் தி.மு.க-வில் இணைவதற்கான முயற்சியிலும் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலோபர் கபில்

இந்த நிலையில், நிலோபர் நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணி விளக்கமளித்திருக்கிறார். திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, ‘‘நிலோபர் கபில் மீதான ஊழல் புகார் எந்த அளவில் உண்மையென எனக்குத் தெரியவில்லை. அது போலீஸ் பார்த்துக்கொள்ளும். வாணியம்பாடி தொகுதியில் மீண்டும் சீட் கொடுக்காதபோதே நிலோபர் கபில் எதிர்ப்பாளராகிவிட்டார். நகருக்குள் இருக்கும் அவரின் வார்டில் அமைக்கப்பட்டிருக்கிற ஒரு பூத்தில் இரண்டு ஓட்டுகள் மட்டுமே அ.தி.மு.க-வுக்கு விழுந்திருக்கிறது. மேலும் சில பூத்களிலும் 12, 16, 31 என்ற அளவிலேயே வாக்குகள் விழுந்துள்ளன. நிலோபரின் செயல்பாடுகள் எப்படியிருந்திருக்கிறது என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

எம்.எல்.ஏ நிதி முழுவதையும் தன் சமூக மக்கள் வசிக்கும் நகரப் பகுதியிலேயே செலவழித்துவிட்டார். ‘கிராம மக்களும் எதிர்ப்பார்க்கிறாங்க. அங்கேயும் எதையாவது செய்யிங்க’ என்று நான் அப்போதே அட்வைஸ் பண்ணிணேன். அவர் செவி சாய்க்கலை. அந்த நேரத்தில், ‘நானும் அமைச்சர்; நானும் அமைச்சர்’ என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார் நிலோபர். நான் சொல்வதற்கு செவி சாய்த்திருந்தால், நல்லப் பெயர் எடுத்திருக்கலாம். வாணியம்பாடி தொகுதியில் மீண்டும் நின்று ஜெயித்திருக்கலாம். வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்று நினைத்து தலைமை முடிவு செய்ததால் சீட் மறுக்கப்பட்டது. மாவட்ட அமைச்சராக இருந்ததால் என்னிடமும் கேட்டார்கள். ‘வாணியம்பாடியில் நிலோபருக்கு வெற்றி வாய்ப்பு கண்டிப்பாக இல்லை’ என நானும் தலைமையிடமும் சொன்னேன்.

கே.சி.வீரமணி

மந்திரி பதவி மட்டும்தான் நிலோபரின் கண்ணுக்குத் தெரிந்தது. இதனால்தான் மக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தது. கட்சியினரும் புறக்கணித்துவிட்டார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்டப் பின்னர் தொண்டர்களிடம் வாங்க தி.மு.க-வுக்குப் போகலாம் என்று கூப்பிட்டிருக்கிறார். யாருமே போகவில்லை. தேர்தலுக்குப் பின் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க செயலாளர் தேவராஜியின் வீட்டுக்கே போய் சால்வைப் போட்டிருக்கிறார் நிலோபர். தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தி.மு.க அமைச்சர் துரைமுருகனின் வீட்டுக்கும் போய் அவரைச் சந்தித்துள்ளார். அப்புறம் எப்படி கட்சியிலிருந்து எடுக்காமல் இருப்போம். நிலோபரின் குற்றச்சாட்டுகளை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

2016 தேர்தலில் அவருக்கு ‘சீட்’ கிடைக்க காரணமே நான்தான். ‘ஏம்பா, உனக்கு வேற ஆள் கிடைக்கலையா?’ என்று அப்போதே அம்மா சொன்னார். நகரமன்ற தலைவராக இருந்திருக்கிறார். கொஞ்சம் வசதி வாய்ப்பும் இருக்கிறது. சீட் கொடுத்தால் செய்வார் என்று நான்தான் ரெக்கமென்ட் செய்தேன். நிலோபர் கபிலுக்கு மீண்டும் சீட் கொடுத்திருந்தால் வாணியம்பாடி தொகுதியும் கைவிட்டுப் போயிருக்கும். புதியவருக்கு, அதிலும் படித்த இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால் வாணியம்பாடி தொகுதி தற்போது மீண்டும் அ.தி.மு.க வசம் இருக்கிறது’’ என்றார் கே.சி.வீரமணி.



source https://www.vikatan.com/government-and-politics/politics/why-was-former-minister-nilofer-kabil-expelled-from-the-admk-kcveeramani

கொரோனா: ஒரே நாளில் 1,27,510 பேருக்கு பாதிப்பு; 2,795 மரணங்கள்! - இந்தியாவில் குறையும் தினசரி பாதிப்புகள் #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,27,510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து 5-வது நாளாக இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,81,75,044 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,795. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,31,895 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,59,47,629 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 18,95,520 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,55,287 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 21,60,46,638 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/01-06-2021-just-in-live-updates

ஆந்திரா: `மதுக்கொள்கையில் மாற்றம்’ - பூரண மதுவிலக்கிலிருந்து பின்வாங்கிய ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்று நேற்றுடன் 2 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். நேற்றைய தினம் இரண்டாண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஜெகன்மோகன் ரெட்டி தான் தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் 94.5 சதவிகிதத்தை ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் நிறைவேற்றி இருப்பதாக மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டு பெருமிதம் அடைந்தார்.

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகம் செய்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி இருக்கிறார் என்று அனைவரும் மனம் நெகிழ்ந்து போயிருந்த வேளையில், நேற்றைய தினம் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்ட திடீர் அறிவிப்பு ஒன்று சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஜெகன்மோகன் ரெட்டி

2019-ம் ஆண்டு ஆந்திர சட்டசபைத் தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்த போதிலும், அனைவரையும் உற்று நோக்க வைத்தது 'மதுவிலக்கு' அறிவிப்பு தான். தேர்தல் அறிக்கையின் நவரத்ன அம்சங்களில் மதுவிலக்கும் ஒன்றாக இருந்தது. ஆந்திரத்தில் பூரண மதுவிலக்கு விரைவில் அமல்படுத்தப்படும் என்று ஆட்சிக்கு வந்ததிலிருந்து உறுதியாகக் கூறி வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு தற்போது தனது முடிவை மாற்றியிருக்கிறது.

2019-ல் ஆட்சி அமைத்த நேரத்தில் கூடிய விரைவில் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் மதுக்கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு மதுவிலக்கு அமலுக்கு வரும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மதுவிலக்கு நிச்சயம் நீடிக்கும் என்றும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் அரசாங்கம் திடமாகத் தெரிவித்தது. அதற்கான செயல்திட்டத்தைத் தயாரிக்கும் பணியினை ஜனசைத்தன்ய வேதிகா என்ற தொண்டு நிறுவனத்திடம் அப்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒப்படைத்திருந்தார். அவர்களும் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தி விடுவோம் என்று நம்பிக்கையூட்டினார்கள்.

மது விற்பனை

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரையிலும், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராகப் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தனியார் நடத்தி வந்த மது விற்பனையை அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார். தமிழகத்தில் 'டாஸ்மாக்' என்ற பெயரில் மது விற்பனை நடைபெறுவதைப் போல் ஆந்திராவில் 'ஆந்திரப்பிரதேச டிரிங்க்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்' என்பதன் மூலமாக மதுவிற்பனை நடைபெறுவதற்கு வழிவகுத்தார். ஆட்சிக்கு வந்து ஓராண்டுக் காலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் அறிவிப்பு காற்றில் எழுதப்பட்ட வாக்கியமானது.

Also Read: ஆந்திரா: `2 வருடத்தில் 94.5% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன்!' - ஜெகன்மோகன் ரெட்டி

மேலும், மதுவிலக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக மாநில அரசு ஆந்திராவில் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தையும், கடைகளின் எண்ணிக்கையை 4,380-லிருந்து 2,934 ஆகக் குறைத்து நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், இன்று வரையிலும் ஆந்திராவில் மதுவிலக்கு அமல்படுத்தப் படவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். நேற்று நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து அறிக்கை வெளியிட்ட கையோடு ஆந்திராவில் மதுவிலக்கு அமலுக்கு வரப்போவதில்லை என்ற அறிவிப்பினையும் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டிருக்கிறார்.

16 பக்க கையேடு ஒன்றினை வெளியிட்டுள்ள முதல்வர் ஜெகன்மோகன் மதுக்கொள்கையில் மாநில அரசு மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். மதுக்கொள்கை மாற்றம் குறித்து அவர் கூறுகையில், "ஆந்திர மாநில மதுக்கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த மாற்றங்களின் படி அரசு 'பூரண மதுவிலக்கு' என்பதிலிருந்து 'கட்டுப்பாடுகளுடன் விற்பனை' என்ற முடிவிற்கு அரசு வந்திருக்கிறது. மது என்னும் அரக்கனிடம் இருந்து குடும்பங்களைக் காப்பாற்றக் குறிப்பிட்ட கால அளவில் மிக அதிக கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்" என்றார்.

மது விலக்கு

இத்தனை ஆண்டுகாலமாகப் பூரண மதுவிலக்கு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வந்த மாநில அரசு, வருவாய் காரணமாகவே தன்னுடைய முடிவினை மாற்றி இருப்பதாகவும், கடந்த நிதியாண்டில் மட்டும் ஆந்திர அரசுக்கு மதுவிற்பனையின் மூலம் 17,600 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் மதுபானங்களின் விலை 125 சதவிகிதம் வரை அரசு உயர்த்தி இருப்பதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குஜராத், பீகார், திரிபுரா, நாகாலாந்து, மிஸோரம் வரிசையில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என்று எதிர்பார்த்துக் கிடந்த ஆந்திரப் பிரதேசத்துக்கு மதுவிலக்கிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது அம்மாநில அரசு.



source https://www.vikatan.com/government-and-politics/politics/andhra-government-altered-its-liquor-policy

உச்சத்தில் கோவிட் 2-ம் அலை... குழந்தைகளுக்கு ஃப்ளூ தடுப்பூசி ஏன் அவசியம்?

இந்தியாவில் கோவிட்-19 மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். மேலும் இந்தச் சமயத்தில் அவர்களுக்கு ஃப்ளூ தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

அதுபற்றிய சந்தேகங்களுக்குத் தீர்வளிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.அரவிந்த்.

``மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்பது கணிப்புதான். இந்தியாவில் இரண்டாம் அலைக்கு முக்கிய காரணம், பொதுமக்களில் பலர் கோவிட்-19 தொற்றுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கைவிட்டதுதான். இதுபோன்ற பெருந்தொற்றுக் காலத்தில் கட்டுப்பாடான பொது நடத்தைகளின் மூலம் இதைக் கட்டுப்படுத்துவதில் இன்னுமே சிரமம் உள்ளது. இரண்டாம் அலைக்குப் பிறகு மீண்டும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கத் தொடங்கினால் மீண்டும் அடுத்த அலை ஏற்படக்கூடும். இது பெரியவர்கள், குழந்தைகள் அனைவருக்கும் பொருந்தும்.

vaccine for children

இந்தியாவைப் பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளனர். குழந்தைகளுக்கு இதுவரை போடத் தொடங்கவில்லை. இரண்டாம் அலை முடிந்து மூன்றாம் அலை ஏற்படுவதற்கு சில மாதங்கள் ஆகும். அதற்குள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அநேகம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. இருந்தாலும் குழந்தைகள் ஆபத்தானவர்கள் பட்டியலில்தான் இருப்பார்கள். இரண்டாம் அலைக்குப் பிறகு, ஒருவேளை பள்ளிகள் திறக்கப்பட்டால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால் அதன் தன்மையும் குணமும் மாறும். கடந்த அலையில் வீட்டில் ஒருவருக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டது. இரண்டாம் அலையில் குடும்பம் குடும்பமாகப் பாதிக்கப்படுகின்றனர். தற்போதே அதன் பரவும் தன்மை அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த அலையில் நோயின் தீவிரம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

வைரஸ் தொடர்ச்சியாக மாற்றம் அடைந்துகொண்டே இருப்பதால் தடுப்பூசிகள் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது. இதன் மூலமாகவும் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

Baby (Representational Image)

இந்தியாவில் 2 - 12 வயது குழந்தைகளுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி பரிசோதனை தற்போதுதான் தொடங்கியுள்ளது. பரிசோதனை நிறைவடைந்து அதுபற்றிய தரவுகள் இந்த ஆண்டு இறுதியில் வெளிவருவதற்கே சாத்தியம் குறைவுதான்.

அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், இஸ்ரேல், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கவிட்டனர். அதற்காக அமெரிக்காவின் ஃபைஸர் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஃபைஸர், மாடர்னா போன்ற தடுப்பூசிகளை குழந்தைகளுக்குச் செலுத்துவதற்கான பரிசோதனைகள் வெளிநாடுகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி வருவதற்கு அடுத்த ஆண்டாகிவிடும்.

ஃப்ளூ தடுப்பூசி

ஃப்ளூ என்பது மருத்துவ பெயரில் இன்ஃபுளுயென்சா என்று அழைக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் ஃப்ளூ வகையைச் சேர்ந்த காய்ச்சல்கள்தான். இந்த ஃப்ளூவைப் பரப்பும் வைரஸின் தன்மையும் ஆண்டுக்கு ஆண்டு மாறுபட்டுக்கொண்டே வரும். அதனால் ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனம் ஃப்ளூ தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தடுப்பூசியை அப்டேட் செய்வதற்கான பரிந்துரைகளை அனுப்புவார்கள். அதன் அடிப்படையில் அப்டேட் செய்யப்பட்ட தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்.

இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் அகாடமி இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ஃப்ளு தடுப்பூசி கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கட்டுப்படுத்த முடியாத ஆஸ்துமா அல்லது நுரையீரல் சம்பந்தப்பட்ட வேறு பிரச்னைகள், நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால் அவர்களுக்குத் தொடர்ந்து ஃப்ளூ தடுப்பூசி செலுத்தினால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளது.

Children

பெருந்தொற்றுக்கும் ஃப்ளூ தடுப்பூசிக்கும் என்ன தொடர்பு?

பருவமழைக் காலம் தொடங்கிவிட்டால் ஆண்டுதோறும் ஃப்ளூவினால் அதிக குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு சிறிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டுச் சென்றுவிடும் என்றாலும் சில குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை, வென்டிலேட்டர் உதவிகூட தேவைப்படலாம். தற்போது கோவிட் தடுப்பூசி குழந்தைகளுக்குக் கொடுக்கப்படவில்லை.

அப்படியிருக்கும் சூழலில் மற்றொரு தொற்றிலிருந்தாவது குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கலாம் என்பதற்காக ஃப்ளூ தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறதே தவிர, ஃப்ளூ தடுப்பூசிக்கும் கோவிட் தொற்றுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஃப்ளூ தடுப்பூசி எடுத்துக்கொண்டால் கோவிட் தொற்று ஏற்படுவதிலிருந்து கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்ற கருத்தும் தவறானது.

அட்டவணையில் சேர்க்க வேண்டும்!

மத்திய அரசின் பரிந்துரைகளுடன் அனைத்து மாநிலங்களுக்கும் தனித்தனி தடுப்பூசி அட்டவணை இருக்கும். அரசு மருத்துவமனைகளில் அவை இலவசமாக வழங்கப்படும். அதனுடன் இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் அகாடமி பரிந்துரைத்த ஒரு சில தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் போடப்படும்.

தமிழகத்தில் அரசின் அட்டவணையில் ஃப்ளூ தடுப்பூசி இல்லை. இதைவிட விலை அதிகமான தடுப்பூசிகள்கூட அரசின் இலவச தடுப்பூசி அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பெருந்தொற்றுக் காலத்தில் அதையும் அட்டவணையில் சேர்த்துக்கொள்வது நல்லது.

வழக்கமான தடுப்பூசிகள் எப்போது?

Pediatrician Dr.S.Aravind

ஒரு குழந்தைக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை முடிந்து இயல்புக்குத் திரும்ப 2 வாரங்கள் ஆகும். அதற்குப் பிறகு கூடுதலாக 2 வாரங்கள் கழித்து வழக்கமான அட்டவணைப்படி வழக்கமான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம். அதாவது, நோய்த்தொற்று ஏற்பட்டு ஒரு மாதம் கழித்து தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம்.

இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!

குழந்தை பிறந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாகவே தடுப்பூசிகள் போடப்படும். அதற்குப் பிறகு 6, 10, 14 வாரத்திலும் சில தடுப்பூசிகள் போட வேண்டும். போலியோ, டெட்டனெஸ், டிப்தீரியா போன்ற முக்கியமான தடுப்பூசிகள் இந்தச் சமயத்தில் போடப்படும். இவற்றையெல்லாம் எந்தக் காரணம் கொண்டும் தாமதிக்கக் கூடாது.

பெருந்தொற்றுக் காலமாக இருந்தாலும் இவற்றைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். மாநில அரசு நிர்ணயித்துள்ள அட்டவணையிலுள்ள தடுப்பூசிகளை எப்போதும் தவறவிடக் கூடாது.

Vaccines

Also Read: `சீக்கிரமா எல்லோரும் நல்லாகிடணும்!’ - நிவாரண நிதிக்கு ரூ.5,000 கொடுத்த குழந்தைகள் #SpreadPositivity

வளர்ந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளில் சிலவற்றை ஓரிரு மாதங்கள்கூட தள்ளிப்போடுவதால் பெரிய விளைவுகள் ஏற்படாது. எனவே, தடுப்பூசி வழக்கமான நேரத்தில் போட முடியாத நிலை ஏற்பட்டால்கூட அதை அப்படியே விட்டுவிடக் கூடாது.

பெருந்தொற்றுக் காலத்தில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் தாமதிக்கப்படுகின்றன. இது யாரும் எதிர்பாராத சூழ்நிலை. அதனால் தடுப்பூசியைத் தவறவிட்டதற்கு யாரும் யாரையும் குறைசொல்ல முடியாது. எனவே, மருத்துவர்கள் கடிந்துகொள்வார்கள் என்பதற்காக மருத்துவரிடம் தடுப்பூசி பற்றிய விவரங்களை மறைக்க வேண்டாம். தவறவிடப்பட்ட தடுப்பூசி பற்றி குழந்தைகள்நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அவர்கள் போடலாம் என்று தெரிவிக்கும்பட்சத்தில் தாமதித்தாலும் போட்டுக்கொள்ளலாம்" என்கிறார்,



source https://www.vikatan.com/health/healthy/why-doctors-says-flu-vaccine-should-be-given-to-children-who-are-below-5-years

`ஊரடங்கினை நீட்டித்துக்கொண்டே செல்லமுடியாது; விரைவில் முற்றுப்புள்ளி!’ - முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு குறைந்து வருகிறது. கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரம் பாதிப்பு அதிகரித்து வந்தாலும், இந்த வாரம் அங்கும் பாதிப்புகள் குறைய தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார், அதில், தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாகவும் ஊரடங்கு தொடர்பாகவும் உரையாற்றி இருக்கிறார்.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்

முதல்வர் ஸ்டாலின், ``கொரோனா நோய் தொற்று ஒருவரிடம் இருந்துதான் மற்றொருவருக்கு பரவுகிறது. அதனால் நோய் தொற்று தங்களுக்கு பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். அதே போல நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும். தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட முடியும்.

கடந்த மே 24 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. அது தற்போது மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரத்தில் பாதிப்பு அதிகரித்து வந்தது. அதுவும் இந்த வாரம் குறையத் தொடங்கி இருக்கிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கும் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

முழு ஊரடங்கு காரணமாக மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மக்களை நோக்கி காய்கறிகள், மளிகை பொருட்கள் வந்துசேர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களுக்கு தேவையான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக குறிப்பிட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவது உண்மைதான். அதன் காரணமாகத்தான் நிவாரண நிதியாக முதற்கட்டமாக 2,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அடுத்த 2,000 ரூபாயும் வழங்கப்படும். இதை பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கூட பாராட்டியிருக்கிறார். இருந்தாலும் ஊரடங்கினை நீடித்துக்கொண்டே செல்லமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அது மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக தற்போது படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. படுக்கை தட்டுப்பாடு என்பது தற்போது தமிழகத்தில் இல்லை. அதே போன்று ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்ற நிலைமையும் தமிழகத்தில் இல்லை. ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். தமிழகம் அளவுக்கு வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்யப்படவில்லை. தமிழக மக்களை காக்கவே என்னை நான் ஒப்படைத்துக் கொண்டுள்ளேன்.

திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வாரங்கள் தான் ஆகிறது. பல்வேறு துறைகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு தடையாக இருக்கும் இந்த கொரோனாவை விரைவில் வீழ்த்துவோம். அதன் பிறகு பல்வேறு துறைகளிலும் புதிய நடவடிக்கைகள் எடுத்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம். கொரோனாவை வெல்வோம். நமக்கான வளமான தமிழகத்தை அமைப்போம்” என்றார்,



source https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-speaks-about-corona-and-lock-down

`தமிழகத்தில் இந்துத்துவா சித்தாந்தம் வளரப் பாடுபடுவேன்’ -வேலூர் இப்ராஹிமிற்கு பாஜக-வில் தேசிய பதவி

பிரதமர் மோடியின் ஆதரவாளரும், ‘தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத்’ என்ற அமைப்பின் தலைவருமான வேலூர் சையது இப்ராஹிம், பா.ஜ.க-வில், தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து, இப்ராஹிமிடம் பேசினோம்.

‘‘தேசிய நீரோட்டத்தில், சிறுபான்மையின மக்களை மத ரீதியாக அல்லாமல், சம ரீதியாக இணைக்க வேண்டும் என்பதே பா.ஜ.க-வின் அடிப்படை நோக்கம். அந்த அடிப்படையில்தான் மத நல்லிணத்துக்காக இங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளை எதிர்த்து திறம்பட செயலாற்ற தேசிய செயலாளராக என்னை நியமித்திருக்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரசாரம் செய்யவும், கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் இந்த பொறுப்பு பெரிய வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.

பதவி பட்டியல்

வரும் காலத்தில் இஸ்லாமிய மக்களையும், கிறிஸ்தவ மக்களையும், இந்த சமூகத்தில் சமத்துவமான நிலைக்கு கொண்டு வர பிரசாரம் செய்வேன். பொருளாதாரம், கல்வியில் பின்னடைந்த அந்த மக்களின் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு திட்டங்களையும் இலகுவாக கொண்டுப்போய் சேர்ப்பது என்னுடைய முதல் பணியாக இருக்கும். அனைத்து மாநிலங்களிலுமே மாநில வெறி ஊட்டப்படுகிறது. தேசத்தின் மீதான நம்பிக்கை, தேசப்பற்று சம்பந்தமான விஷயங்கள் பேசபட்டால் கிண்டலடிக்ககூடிய நிலை காணப்படுகிறது. அந்த நிலையை மாற்ற வேண்டும். இதற்கெல்லாம், சிறுபான்மையின மக்கள்தான் பலியாகிறார்கள்.

குறிப்பாக, பா.ஜ.க-க்கு எதிராக நின்றால்தான் பாதுகாப்பு என்ற மனநிலையில் சிறுபான்மையின மக்களை ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். அது உண்மையில்லை என்பதையும் இந்துத்துவா சித்தாந்தம் இஸ்லாமியர், கிறிஸ்துவர்களுக்கு எதிரானதொரு மாயை என்பதையும் மக்களிடம் தெளிவுப்படுத்துவோம். தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் இந்துத்துவா சித்தாந்தத்தை வளர்க்க கடுமையாகப் பாடுபடுவேன். தி.மு.க-வின் எதிர்ப்பையெல்லாம் பார்த்து அஞ்சக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. மாநில ரீதியாக தி.மு.க அடக்குமுறைகளை மேற்கொண்டால் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம். அதன்மூலம் தி.மு.க-வின் தவறான செயல்பாடுகளை மக்களிடம் விளக்குவோம்.

வேலூர் இப்ராஹிம்

சமீப காலமாக, ஜனநாயக முறையில் தவறுகளை சுட்டிக்காட்டும் பா.ஜ.க நிர்வாகிகள் குறித்து தி.மு.க அமைச்சர்கள் வரம்பு மீறி மரியாதை குறைவாக பேசுவதும் தொடர்கிறது. இது, தொடருமேயானால் ஜனநாயக ரீதியாக நாங்களும் பதிலடி தருவோம். பா.ஜ.க தான் அனைவருக்குமான கட்சி. ‘தமிழகத்தில் தாமரையே மலராது’ என்று சொன்னார்கள். ஆனால், நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கக்கூடிய வாணியம்பாடி, கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில்கூட பா.ஜ.க கூட்டணியிலுள்ள அ.தி.மு.க-தான் வெற்றி பெற்றிருக்கிறது. இஸ்லாமியர்கள் மத்தியிலும் ஓர் தெளிவு வந்திருக்கிறது. ‘தி.மு.க ஓர் சிறந்த கட்சி; கடந்த காலங்களில் நன்றாக செயல்பட்டிருக்கிறார்கள்’ என்கிற எண்ணத்தில் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. பத்து ஆண்டுகளாக ஒரே ஆட்சி நீடித்துவந்த நிலையில், ஆட்சி மாற்ற மனநிலையில் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க இன்னும் அதிகமாக காலூன்றும். அதில், சிறுபான்மையின மக்களின் பங்கும் அதிகமாகவே இருக்கும்’’ என்கிறார் வேலூர் இப்ராஹிம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vellore-ibrahim-gets-national-level-post-in-bjp

சென்னை: சிறுமிகளுக்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொல்லை - போக்சோ வழக்கில் 3 பேர் கைது

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமியை கடந்த 5.5.2021-ம் தேதி முதல் காணவில்லை என அவரின் அம்மா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடிவந்தனர். போலீஸாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காணாமல் போன 17 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

பாலியல் தொல்லை

இதையடுத்து திருவொற்றியூர் போலீஸார் அந்த இளைஞரைத் தேடிவந்தனர். போலீஸாரின் தேடுதலில் காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரைச் சேர்ந்த முருகேசன் (23) என்பவர்தான் சிறுமியை அழைத்துச் சென்றார் என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

பின்னர் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, முருகேசனையும் சிறுமியையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது சிறுமியைக் காதலிப்பதாகக்கூறி அவரைத் திருமணம் செய்து கொள்வதாக முருகேசன் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியிருக்கிறார். பின்னர் சிறுமியை அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக தாலிகட்டி பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸார் முருகேசனைக் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

Also Read: போக்சோ: `பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொள்கிறீர்களா?' - உச்ச நீதிமன்றத்தின் கேள்வியும் எதிர்வினையும்!

மற்றொரு சம்பவத்தில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் கடந்த 15.4.2021-ம் தேதி முதல் காணவில்லை என அவரின் அம்மா ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமியைத் தேடிவந்தனர். போலீஸ் விசாரணையில் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை அழைத்துச் சென்ற செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல் (19) என்பவரை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். சிறுமியை திருமணம் செய்ததோடு, அவருக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்திருக்கிறார். இதையடுத்து ஞானவேல் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

கைது

ஆன்லைன் விபரீதம்:

சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, 28.5.2021-ம் தேதி முதல் காணவில்லை என நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. நொளம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியை ஒருவர் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி மதுரை, அலங்காநல்லூரைச் சேர்ந்த சதீஷ் (21) என்பவரை பிடித்து சிறுமியை மீட்டனர். விசாரணையில் 16 வயது சிறுமிக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் சதீஷ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் சிறுமியிடம் ஆசைவார்த்தைகளைக் பேசி அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் போலீஸார் சதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு அவரைக் கைது செய்தனர்.

நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் வெவ்வேறு சம்பவங்களில் போக்சோ வழக்குகளில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-3-youths-in-pocso-case

#GoBackStalin: முதல்வர் ஸ்டாலினின் இமேஜை பாதித்ததா? - ட்ரெண்ட் செய்யப்பட்ட நோக்கம் என்ன?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் நேற்று அந்த மாவட்டங்களுக்குச் சென்றார். அப்போது ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அந்த ஹேஷ்டேக்கில், கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காததால் தி.மு.க அரசு அப்பகுதியைக் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டும் பதிவுகளைக் காண முடிந்தது. மேலும், கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தி.மு.க அரசு காட்டிய பாராமுகம்தான் தற்போது கோவையில் வேகமாகத் தொற்று பரவுகிறது என்றும், தங்கள் மீது ஏற்பட்ட கலங்கத்தை போக்கத்தான் பி.பி.இ கிட்டுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார் எனவும் பதிவிடப்பட்டன.

கொரோனா பாதுகாப்பு கவச உடையில் மு.க.ஸ்டாலின்

#GoBackStalin என்ற ட்விட்டர் ட்ரெண்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்கொண்டார், அதன் நோக்கம் என்ன, உண்மையில் தமிழக அரசு கொங்கு மண்டலத்தைக் கைவிட்டுவிட்டதா என தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம்.``#GoBackStalin என அதிகபட்சமாக ஒரு லட்சம் பேர் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதேநேரத்தில் #WeStandWithStalin எனக் கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி தங்கள் ஆதரவை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் அவர்களின் நோக்கத்தை முதல்வர் ஸ்டாலின் முறியடித்துவிட்டார் என்பது வெளிப்படை. அதுமட்டுமல்ல, இது மக்கள் மனதிலிருந்து வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. பா.ஜ.க vs தி.மு.க என்றுதான் நேற்று ட்விட்டரில் ஓடிக் கொண்டிருந்தது. எனவே, இதனால் மக்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ள மரியாதையில் எந்த அளவும் இது பாதிப்பையும் ஏற்படுத்தாது.

Also Read: கோவை விசிட்: பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு.. தேசிய அளவில் ட்ரெண்ட்டான #GoBackStalin

முதலில் கோவைக்கும் கழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லாததுபோல பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், சென்னைக்கு அடுத்து கோவையில்தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது, அதிக ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதைப் புள்ளி விவரங்களுடன் அரசு நிரூபித்ததும் தற்போது என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். பதவியேற்று 20 நாட்களுக்குள் முதல்வர் இரண்டு முறையும் அமைச்சர்கள் இரண்டு முறையும் கோவை சென்று ஆய்வு செய்திருக்கிறார்கள்.

கான்ஸ்டைன் ரவீந்திரன்

நீட் தேர்வு, புதிய தேசிய கல்விக் கொள்கை, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை இப்படி எல்லாவற்றிலும் நாம் பரிதவித்துக்கொண்டிருந்தோம். அதிலிருந்து நமக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாம் போராடிக்கொண்டிருக்கும்போது பிரதமர் மோடி நம் ஊருக்கு விழாவில் பங்கேற்க வந்தார். எங்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க்க நேரமில்லாத மோடிக்கு விழாவில் மட்டும் பங்கேற்க எப்படி நேரம் கிடைத்தது என்ற வேதனையில் மக்கள் #GoBackModi எனத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அதில் ஒரு லாஜிக் இருக்கிறது.

ஆனால், நேற்று தலைவர் ஸ்டாலின், மக்களின் அச்சத்தைப் போக்கி கொரோனா தொற்றை அப்பகுதியில் கட்டுக்குள் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்யச் சென்றார். அப்படி முதல்வர் ஆய்வு செய்யும் போது அதிகாரிகள் துரிதமாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். மக்கள் பணிக்காகச் செல்லும் போது #GoBackStalin என்பதை ட்ரெண்ட் செய்கிறார்கள் என்றால் அதில் என்ன லாஜிக் இருக்கிறது?அது அறிவுப்பூர்வமானதாக எனக்குப்படவில்லை.

#GoBackModi

உண்மையில் இது அடிமுட்டாள்தனமானது. உண்மையில் அறிவு உள்ளர்வகள் முதல்வர் வேகமாக வர வேண்டும் என்ற ஹேஸ்டாக்கைத்தான் உருவாக்கி ட்ரெண்ட் செய்திருப்பார்கள். இப்படிச் செய்து கோவை மக்களுக்கு எதிரானதாகத் தமிழக அரசைக் காட்டி, கொங்குப் பகுதி மக்களுக்கு ஏதும் கிடைக்காமல் செய்துவிட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வினரின் நோக்கம். அதன்மூலம் தங்களுக்கு உரிய இடமாகக் கொங்குப் பகுதியைக் கட்டமைத்துக்கொள்ளலாம் என்ற அரசியல் ஆதாயத்தையும் அடைய முயல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க தலைவர்கள் நம் மக்களுக்கானவர்கள் என்றால் மத்திய அரசிடம் இருந்து நமக்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெற்றுத்தர வேண்டும். தடுப்பூசி தயாரித்துக்கொள்ள அனுமதியை வாங்கித் தர வேண்டும். ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை கிடைக்கத் தமிழக அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு மத்திய அரசு நமக்குச் செய்யும் துரோகத்திற்கு அவர்கள் முட்டுக்கொடுக்கிறார்கள் என்றால் இங்கிருக்கும் பா.ஜ.க தலைவர்கள் தமிழினத் துரோகிகள் இல்லையா?” என விளக்கத்தையும் தமிழக பா.ஜ.க தலைவர்களுக்கு எதிரான சில கேள்விகளையும் முன்வைத்தார்.

Also Read: அலட்சியப்போக்கு... அறம் இல்லை... மாற்றாந்தாய் மனநிலை!

ஹேஷ்டாக் மோதல்கள் குறித்து பா.ஜ.க மாநில துணைத்தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.துரைசாமியிடம் பேசினோம்,``பாரதப் பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போது #GoBackModi எனப் பெரிய பலூனில் கட்டி பறக்கவிட்டார் தற்போது அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியம். அது சட்டப்படியும் நியாயப்படியும் மிகப்பெரிய தவறு. இந்தியாவின் ஒரு பகுதியான சென்னையிலோ நாட்டின் பிற பகுதிகளுக்கோ அரசு விழாவிற்காகவோ மற்ற பிற காரியங்களுக்காகவோ செல்வதற்கு பிரதமருக்கு எல்லா உரிமையும் அதிகாரமும் இருக்கும்போது, அவரது வருகையை ஒட்டி #GoBackModi என்று சொன்னது மிகப்பெரிய தவறு.

அதேபோல தமிழக முதல்வர் போனபோது #GoBackStalin என சமூக வலைத்தளங்களில் யார் பதிவிட்டிருந்தாலும் தவறுதான். ஆனால், இதைப் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள்தான் செய்தார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான ஆதாரங்களும் இல்லை. #GoBackStalin என்பது மக்களின் மனதில் இருந்து வெளிவந்திருக்கும். அதை அரசு சரி செய்ய வேண்டுமே தவிர அதற்கு பா.ஜ.க-வை பொறுப்பாக்கக் கூடாது. ஏனெனில், பாரதிய ஜனதா கட்சி கண்ணியமான, கட்டுப்பாடுகளுடன் இயங்கும் கட்சி என்பதால் இந்த மாதிரியான மட்டமான விஷயங்களில் ஈடுபட்டிருக்காது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றவர்...

வி.பி.துரைசாமி - பா.ஜ.க

``தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடே இல்லை என முதல்வர் ஒருபக்கம் சொல்கிறார். அடுத்த ஐந்து நிமிடங்களில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழக பா.ஜ.க தலைவர்கள் தமிழகத்தில் இருக்கும் தடுப்பூசி தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்குத் தேவையான அளவு தடுப்பூசியைப் பெற்றுத்தர வேண்டும் எனப் பேசுகிறார். முதலில் நிர்வாகத்திற்குள் இருக்கும் இதுபோன்ற முரண்பாடுகளில் கவனம் செலுத்தி கொரோனா பேரிடரிலிருந்து மீண்டுவர அரசு கவனம் செலுத்த வேண்டும். விமர்சனங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/does-gobackstalin-affected-the-image-of-cm-stalin

நேற்றுவரை தீயவழியில் இருந்தவர் இன்று நல்லவராக மாறிவிட்டால் அவர் செய்யும் உபதேசத்தைக் கேட்கலாமா?

இன்றைய பஞ்சாங்கம்

1. 6. 21 வைகாசி 18 செவ்வாய்க்கிழமை

திதி: சஷ்டி காலை 6.49 வரை பிறகு சப்தமி

நட்சத்திரம்: அவிட்டம் இரவு 9.33 வரை பிறகு சதயம்

யோகம்: சித்தயோகம் இரவு 9.33 வரை மரணயோகம்

ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை

எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை

முருகப்பெருமான்

சந்திராஷ்டமம்: புனர்பூசம் இரவு 9.33 வரை பிறகு பூசம்

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

நேற்றுவரை தீயவழியில் இருந்தவர் இன்று நல்லவராகிச் செய்யும் உபதேசத்தைக் கேட்கலாமா?

ஒருவர் தன் கடந்த காலத்தில் தீய வழியில் இருந்திருப்பார். பின்பு இறையருளால் நல்வழிக்குத் திரும்பியிருப்பார். அப்படி நல்வழி திரும்பியது தனிப்பட்ட அனுபவத்தினால் என்பதால் அவர் நல்லுபதேசங்களை மற்றவர்களுக்குச் சொல்வார். நம் மரபில் அப்படித் தீய வாழ்வில் இருந்து நன்னெறிக்கு மாறிய ஞானிகள் அநேகர். இப்போதும் அப்படிப்பட்ட சிலரை நாம் வாழ்க்கையில் சந்திப்போம். அப்படிப்பட்டவர்கள் செய்யும் உபதேசத்தை சிலர் ஏற்க மறுப்பார்கள். ‘உன்னைப்பற்றித் தெரியாதா...’ என்று அவர்களின் பழைய வாழ்வை நினைத்து அவமதித்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். கடந்த காலத்தில் கெட்டவர்களாக இருந்து நல்லவர்களாக மாறிவிட்டவர்கள் சொல்லும் உபதேசங்களைக் கேட்கலாமா என்னும் கேள்வி பலருக்குள்ளும் இருக்கிறது. அதற்கான பதிலை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

சாதகம் : நன்மைகள் நடைபெறும் நாள். புதிய முயற்சிகள் சாதகமாகும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். - சாதகமான ஜாதகம் இன்று!

ரிஷபம்

ஆரோக்கியம் : உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உணவு தொடர்பான அலர்ஜி அல்லது அஜீரணம் ஏற்படலாம். பேச்சில் பொறுமை அவசியம். - ஹெல்த் இஸ் வெல்த்!

மிதுனம்

தெளிவு : நேற்று வரையிருந்த குழப்பங்கள் படிப்படியாகக் குறையும். உடல்நலனில் சிறிது அக்கறை தேவை. பிற்பகலுக்கு மேல் சூழ்நிலை அனுகூலமாகும் என்பதால் கவலையில்லை. - ஆல் இஸ் வெல்!

கடகம்

கவனம் : முற்பகல் உற்சாகமாகவும் பிற்பகலில் கவனமாகவும் இருக்கவேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். சகோதர உறவுகள் உதவிக்கு வருவார்கள். - ஆல் தி பெஸ்ட்!

சிம்மம்

ஆலோசனை : செயல்களைத் திட்டமிட உகந்த நாள். என்றாலும் செலவுகள் அதிகரிப்பதால் கவலைப்படுவீர்கள். முடிவுகள் எடுக்கும்போது தீர ஆலோசிக்க வேண்டியது அவசியம். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கன்னி

பொறுமை : பொறுமை அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

துலாம்

உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகச் செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் சமாளித்துவிடுவீர்கள். - ஜாலி டே!

விருச்சிகம்

பணவரவு : தடைப்பட்டிருந்த பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது மகிழ்ச்சி அளிக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். - என்ஜாய் தி டே!

தனுசு:

அலைச்சல் : உறவினர்களால் ஆதாயம் ஏற்படும் நாள். அவசர முடிவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கலாம். திடீர் பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - நாள் நல்ல நாள்!

மகரம்

பிரச்னை : சின்னச் சின்னப் பிரச்னைகள் தோன்றிமறையும். யாரிடமும் கோபத்தைக்காட்ட வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

கும்பம்

குழப்பம் : குழப்பங்களால் மனம் அலைபாயும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். குடும்பத்தினரோடு வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

மீனம்

மகிழ்ச்சி : குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொடங்கும் செயல்கள் சாதகமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளிக்கு ஆதரவாக இருப்பார்கள். - பெஸ்ட் ஆஃப் லக்!



source https://www.vikatan.com/spiritual/gods/can-we-follow-the-teachings-of-all