Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

அரபு எரிவாயுக் குழாய் வெடிப்பால் இருளில் மூழ்கிய சிரியா! - தீவிரவாதத் தாக்குதல் காரணமா?

சிரியாவில் அரபு எரிவாயுக் குழாய் வெடிப்பின் காரணமாக அந்நாடு முழுவதும் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான இக்பாரியா டிவி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், எரிவாயுக் குழாய் வெடிப்பைத் தொடர்ந்து வானத்தை நோக்கி பெரும் ஜுவாலை எழும் காட்சிகள் தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது. இந்த வெடிவிபத்து குறித்து சிரியாவின் எரிசக்தித் துறை அமைச்சர் கூறுகையில், ``அரபு எரிவாயு குழாய் வெடிப்பால் சிரியா மின்சாரமின்றி இருண்டுள்ளது. இது அரசுக்கெதிரான கிளர்ச்சியாளர்களின் தாக்குதலாக இருக்குமென்று சந்தேகிக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

சிரியா

எகிப்தில் இருந்து ஜோர்டன் வழியாக சிரியா வரை அமைக்கப்பட்டுள்ள இந்த எரிவாயுக் குழாய் அமைப்பு அரபு எரிவாயுக் குழாய் என்றழைக்கப்படுகிறது. இக்பாரியா டி.வியில் வெடி விபத்து குறித்து பேசிய பெட்ரோலிய மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் அலி கானெம், இதை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: சிரியா போருக்குக் காரணமான மூன்று சிறுவர்கள்! - அரபு தேசம் ரத்த பூமியான கதை #Syria

இந்த எரிவாயுக் குழாய் இணைப்பு, சிரியாவின் தென்பகுதிகளில் உள்ள மின் நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கி வந்தது. நிலைமையை சீராக்க ஏற்கனவே தொழில்நுட்பக் குழுவினர் களத்தில் செயலாற்றி வருவதாக கூறினார். இதுகுறித்து பேசிய சிரிய மின்சாரத் துறை அமைச்சர் முகமது கர்பௌட்லி, ``தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதி வழியாகச் செல்லும் எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட வெடிவிபத்தால் சிரியா முழுவதும் மின்சார வசதி தடைபட்டுள்ளது. அல்துமைர் மற்றும் அட்ரா பகுதிகளுக்கு இடையிலான ஒரு இடத்தில் ஏற்பட்ட இந்த வெடிப்பால் மின் உற்பத்தி நிலையங்களுக்குச் செல்லும் எரிவாயு கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவற்றில் சில மின் உற்பத்தி நிலையங்களுக்கு மீண்டும் இணைப்புக் கொடுக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சில மாகாணங்களில் உடனடியாக மின்வசதியைத் திரும்பக் கொடுக்கும் வேலைகளிலும் அரசு ஈடுபட்டு வருகிறது. மக்களுக்கு மின்வசதியைக் கொடுப்பதே உடனடித் தேவை'' என்று குறிப்பிட்டார்.

கடந்த 2013 -ம் ஆண்டில் நடந்த உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்கள் எரிவாயுக் குழாய் மீது நிகழ்த்திய தாக்குதலால் சிரியாவில் பெரும்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.



source https://www.vikatan.com/news/world/syria-blackout-after-suspected-pipeline-attack

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக