Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

கோதாவரி - காவிரி நீர்ப்பங்கீடு... தமிழிசையால் தமிழகத்துக்கு வரப்போகும் புதுத் திட்டம்!

மகாராஷ்டிரா, ஆந்திரா, கோவா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஒடிக்கொண்டிருக்கும் ஆறு கோதாவரி. இந்த ஆற்றின் உபரிநீர் கடலில் போய் கலக்கிறது. `அதன் ஒரு பகுதியை தமிழத்துக்குக் கொண்டுவர வேண்டும்’ என்று தமிழக விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். அந்தத் திட்டத்துக்குப் புதிய செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் தெலங்கானா மாநிலத்தின் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன். இந்தநிலையில், `கோதாவரி ஆற்றுநீரை முதலில் சென்னைக்குக் கொண்டுவர வேண்டும்’ என்று சிலர் குரல் கொடுக்க, `காவிரி ஆற்றுடன் கொண்டு வந்து இணைக்க வேண்டும்’ என்று குரல்கொடுத்துவருகிறார்கள் டெல்டா பாசன விவசாயிகள்.

சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவின் கனவுத்திட்டம் `காளீஸ்வரம் திட்டம்.’ அதாவது, கோதாவரி ஆறு நீரேற்றுத் திட்டம். பாசன வசதியை மேம்படுத்தும் நோக்கில், சுமார் ஒரு லட்சம் கோடியில் `காளீஸ்வரம் திட்டம்’ போடப்பட்டு, முதற்கட்ட வேலைகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் உபரி கோதாவரி நீர் தெலங்கானா மாநிலத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட மேட்டுப் பகுதிகளுக்கு, சுமார் 310 மீட்டர் உயரத்துக்கு, 11 குழாய்களில் மேலே ஏற்றி, அங்கிருந்து ஒரு செயற்கை ஆற்றை சுமார் 150 கி.மீ நீளத்துக்கு ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம், 12 மாவட்டங்களிலுள்ள, 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நவீன தொழில்நுட்பம் மூலம் உருவாக்கவிருக்கின்றனர்.

தற்போது முதற்கட்டமாக, ஐந்து மாவட்டங்கள் பயன்பெற்றுவருகின்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை கவனிக்கும் தனியார் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பொறியாளர் ஒருவர் இருந்துவருகிறார். சில இடங்களில் மலைகளைக் குடைந்து ஆற்று வாய்க்கால் அமைத்திருப்பதை நேரில் `விசிட்’ அடித்துப் பார்த்து ஆச்சர்யப்பட்டாராம் கவர்னர் தமிழிசை.

இந்தத் திட்டத்தை ஹெலிகாப்டரில் போய்ப் பார்வையிடும்படி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கவர்னர் தமிழிசையிடம் வேண்டுகோள் வைத்தாராம். அதை நிராகரித்துவிட்டு, தரைமார்க்கமாகவே காரில் சுமார் 500 கி.மீ தூரம் பயணம் செய்து அதத் திட்டத்தை நேரில் பார்வையிட்டாராம் தமிழிசை.

கடந்த சில நாடள்களாக தெலங்கானா, ஆந்திர மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அணைகள், ஆறுகள், நீர்நிலைகள் நிறைந்து வழிகின்றன. வாராங்கல் நகரின் சில பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களைப் படகு மூலம் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்திவருகிறது தெலங்கானா அரசு. ஹைதராபாத்திலுள்ள ராஜ்பவனில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், ``வெள்ள நீர் வீணாகப் போய் கடலில் கலக்கிறது. எங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் தண்ணீரில்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். காளீஸ்வரம் திட்டம்போல் இன்னொரு திட்டத்தை உருவாக்கி, கோதாவரி ஆற்றின்வழியாக கடலில் போய்க் கலக்கும் நீரின் ஒரு பகுதியை தமிழகத்துக்குத் திருப்பிவிட்டால் உதவிகரமாக இருக்குமே...’’ என்று அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார்.

கவர்னர் தமிழிசை

உடனடியாக இது குறித்து தெலங்கானா முதலமைச்சரிடம் பேசியிருக்கிறார் தமிழிசை. அப்போது அவர், ``ஆந்திரா வழியாகத்தான் நீர் தமிழகத்துக்குப் போக வேண்டும். எனவே, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனிடம் பேசுங்கள். பிறகு, தமிழ்நாடு முதல்வரிடம் பேசலாம்’’ என்று சொல்லியிருக்கிறார். அடுத்து, விஜயவாடாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கவர்னர் தமிழிசை போயிருக்கிறார். அங்கே, ஆந்திர முதல்வர் ஜெகனும் இருந்தாராம். அவரிடமும் தமிழகத்துக்கான தண்ணீர்த் தேவையை எடுத்துச் சொல்லியிருக்க்கிறார் கவர்னர் தமிழிசை. அவரும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டுச் சொல்வதாக பாசிட்டிவ் சிக்னல் காட்டியிருக்கிறார். அதேநேரத்தில்,தமிழக முதலமைச்சர் எடப்பாடியும் கோதாவரித் திட்டத்தில் ஆர்வமாக இருந்ததால், தமிழக அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ஜெயக்குமார் இருவரையும் தெலங்கானா முதல்வரைச் சந்தித்து பேசவைத்திருக்கிறார். இந்த இரண்டு அமைசசர்களும் ஹைதராபாத்திலுள்ள ராஜ்பவனில் தங்கி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சுமார் நான்கு மணி நேரம் சந்தித்து, நீர்ப் பங்கீடு பற்றி விவாதித்திருக்கிறார்கள்.

Also Read: `ராஜமாதா' தமிழிசை - `பாகுபலி' முருகன்... தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் ஆன கதை!

இதன் தொடர்ச்சியாக கவர்னர் தமிழிசை, மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்திடம் பேச முயன்றாராம். தற்போது கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருக்கிறார் ஷெகாவாத். அவர் குணமாகி வந்ததும், கவர்னர் தமிழிசை அவருடன் இந்தத் திட்டம் பற்றிப் பேசவிருக்கிறாராம்.

இதற்கிடையில், சென்னை வந்தார் தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன். விமான நிலையத்தில் தன்னை சந்திக்க வந்தவர்களிடம், ``கோதாவிரி - காவிரித் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயல்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடியும் ஆர்வமாக இருக்கிறார். நானும், பல்வேறு திட்டங்கள் மூலமாக கோதாவிரி உபரி நீர் தமிழகம் வருவதற்கு என்னால் இயன்ற முயற்சிகளைச் செய்வேன்’’ என்று சொல்லியிருக்கிறார்.

ஜெகன் மோகன் ரெட்டி

சொன்னதோடு மட்டுமல்லாமல், செயலிலும் இறங்கிவிட்டார். மத்திய அரசு மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய மூன்று முதலமைச்சர்களையும் இணைத்து, தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதற்கான முயற்சியை சத்தமில்லாமல் கவர்னர் தமிழிசை தொடங்கிவிட்டார்.

ஒருவேளை கோதாவரி நீர் தமிழகத்துக்கு வந்தால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் யோசனைப்படி கால்வாய் மூலம் முதலில் சென்னைக்குத்தான் வரும்போலத் தெரிகிறது. ஆனால், மத்திய அரசு, கடற்கரைவழியாக ராட்சதக் குழாய்களில் காவிரி ஆற்றுடன் இணைக்கவும் திட்டம் வைத்திருக்கிறது. இரண்டில் எது நடந்தாலும் தமிழகத்துக்கு நல்லதுதான்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/godavari-cauvery-water-sharing-project-may-come-to-practical-by-the-initiatives-from-governor-tamilisai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக