Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

`கட்சி தொடங்கவில்லை; கூட வருபவர்களைப் பலிகடாவாக்க விரும்பவில்லை!’ - ரஜினி

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை நோக்கி எழுப்பப்பட்டு வந்த கேள்விக்கு கடந்த டிசம்பர் 3-ம் தேதி பதில் சொல்லியிருந்தார் ரஜினி. டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பு, 2021 ஜனவரியில் புதிய கட்சி என ட்விட்டரில் அறிவித்திருந்தார் ரஜினி. தொடர்ந்து தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியையும் நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ` அரசியலில் மாற்றம் வேண்டும். இப்போ இல்லைன்னா... எப்பவும் இல்லை' என்றும் முழங்கினார். இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ரஜினி

ஆனால், அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் கட்சி ஆரம்பித்து தேர்தல் அரசியலில் ஈடுபட நினைத்த ரஜினியை, அந்த முடிவிலிருந்து பின்வாங்க வைத்துவிட்டது என்கிறார்கள். கட்சி அறிவிப்புக்கு முன்பாக `அண்ணாத்த’ ஷூட்டிங்கை முடித்துக் கொடுக்க வேண்டியது கடமை என்று சொல்லியிருந்த ரஜினி, சொன்னபடியே தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கொரோனா விதிமுறைகளுடன் ஷூட்டிங் தொடர்ந்த நிலையில், படக்குழுவினர் சிலருக்குக் கடந்த 24-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஹோட்டலில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் ரஜினி. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானாலும், ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தது.

இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினி கடந்த 25-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இரண்டு நாள்கள் சிகிச்சையிலிருந்த ரஜினி, சிகிச்சை முடிந்து 27-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், தனி விமானம் மூலம் உடனடியாக அவர் சென்னை திரும்பினார். டிசம்பர் 31-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பு என்று கூறியிருந்தநிலையில், ஒருவாரம் அவருக்கு முழுமையாக ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். மேலும், ஏற்கெனவே உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழலுக்கு ஆளாக வேண்டாம் எனவும் மருத்துவர்கள் ரஜினிக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

இந்தநிலையில்தான், கட்சி தொடங்கி அரசியலுக்கு வரவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக ரஜினி அறிக்கை விட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம். `ஜனவரியில் கட்சி தொடங்குவேன்’ என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முகக்கவசம் அணிவித்து மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பு நடத்தி வந்தோம்.

Also Read: ``ரஜினி-கமல், அ.தி.மு.க-வுக்கு வாக்கு சேகரிக்கிறார்கள்!''- சீமான் சொல்லும் ரகசியம் என்ன?

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது .உடனே இயக்குநர் படப்பிடிப்பை நிறுத்தி, நான் உட்பட அனைவருக்கும் பரிசோதனை செய்வித்தார். எனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தது. ஆனால், எனக்கு ரத்தக்கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தை கொண்டும் எனக்கு ரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வும் இருக்கக் கூடாது. அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தைத் கடுமையாக பாதிக்கும். ஆகையால், மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாள்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. என் உடல் லை கருதி தயாரிப்பாளர் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என் உடல் நிலை.

ரஜினி

இதை ஆண்டவன் எனக்குக் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக மட்டும் பிரசாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி, தேர்தலில் பெரிய வெற்றியைப்பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களைச் சந்தித்து கூட்டங்களைக் கூட்டி பிரசாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாள்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது. இப்போது இந்த உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளைச் சாப்பிடும் நான் இந்த காலத்தில் மக்களைச் சந்தித்து பிரசாரத்தின்போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், என்னை நம்பி என் கூட வந்து, என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும். இல்லை, நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமா என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும்தான் தெரியும்.

ரஜினி

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள். மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள். அது வீண் போகாது. அந்தப் புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும். கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நான் உங்களைச் சந்தித்தபோது நீங்கள் எல்லோரும் ஒருமனதாக, `உங்கள் உடல் நலம்தான் எங்களுக்கு முக்கியம். நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே’ என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.

நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்புக்கும் பாசத்துக்கும் தலைவணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும்போல் செயல்படும். மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், தொடர்ந்து என்னை ஆதரித்து, `முதலில் உங்கள் உடல் நலத்தைக் கவனியுங்கள். அதுதான் எங்களுக்கு முக்கியம்’ என்று அன்புடன் கூடிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என்கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜுனமூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப் பட்டுள்ளேன்.

Also Read: கீர்த்தி சுரேஷை நெருங்கிய கொரோனா... பதற்றமான ரஜினி... இப்போது எல்லாம் நலம்! #Rajini

மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ, அதை நான் செய்வேன். உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையும் வெளிப்படைத்தன்மையும் விரும்பும் என் நலத்தில் அக்கறை உள்ள என் மேல் அன்புகொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களும் தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று ரஜினி தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/rajinis-new-announcement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக