Ad

வியாழன், 17 மார்ச், 2022

"இதுவரை 20,000 புத்தகங்களை படித்திருக்கிறேன்..!" - கல்லூரி விழாவில் அண்ணாமலை

மதுரை சௌராஷ்டிரா மகளிர் கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவில் கலந்து கொண்டார் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அந்நிகழ்ச்சியில் பேசிய விஷயங்கள் பல வைரல் ஆகி வருகிறது. "அதிக நேரம் பேசினால் நானே தூங்கிவிடுவேன்” என்று ஆரம்பித்த அண்ணாமலை, ``இளைஞர்களின் மனதை சமூக ஊடகங்கள் ஆக்கிரமித்துள்ளன.

அண்ணாமலை

மாணவர்கள் மூலமாக சமூக ஊடகங்கள் சம்பாதிக்கின்றன. தமிழகத்தில் 74 சதவிகித மக்கள் சமூக ஊடகங்களில் மூழ்கியுள்ளனர். சமூக ஊடகங்களை சரியான முறையில் பயன்படுத்துவது மிக முக்கியம்.

நம் நாடு எப்போதும் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் நாடு. இந்திய பெண்கள் உலகத்துக்கே முன்மாதிரியாக இருப்பதற்கு அதுதான் காரணம். நம் பண்பாடு உலக நாடுகளுக்கு முன் மாதிரியாக உள்ளது. சில நாடுகளில் வாக்களிக்க கூட மகளிரை அனுமதிக்கவில்லை.

ஆனால், இந்தியாவில் மகளிருக்கான மரியாதை பண்டைய காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் பெண்களுக்கு எல்லா இடங்களிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை

இந்தியாவில் வாழ்வது நமக்கு கிடைத்த பாக்கியம். இங்கே யார் வேண்டுமானாலும் வாழ்வின் உயரத்தை எட்டலாம். சில விஷயங்களை சரியாக செய்யும்போதுதான் முன்னேற முடியும். நம் நாடு உலகத்துக்கே விஷ்வ குருவாக மாறி வருகிறது. வெளிநாடுகளுக்கு படிக்க செல்ல மாணவர்கள் விரும்பவில்லை.

நம் நாட்டிலயே படித்து நம் நாட்டிலயே தொழில் தொடங்க திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் பெண்கள்தான் அதிக அளவில் கடன் வாங்கி தொழில் தொடங்கியிருகிறார்கள். இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கும். தமிழகத்தில் முத்ரா திட்டத்தினால் 72 சதவிகித பெண்கள் பயனடைந்துள்ளனர்.

மகாபாரதத்தில் ஒவ்வொருவரின் வாழ்கையும் நேரில் பார்ப்பதுபோல் இருக்கும். பிரச்னையும் அதை தீர்க்க முடிவெடுப்பது போன்றவை மகாபாரதத்தில் உள்ளது. மகாபாரதத்தை ஆயிரம் முறை படிக்க வேண்டும்.

ஆயிரம் புத்தகங்களை படிப்பதை விட ஒரு புத்தகத்தை ஆயிரம் முறை படிக்க வேண்டும். மொழி பெயர்ப்பு புத்தகங்களை படிக்க வேண்டும்.

அண்ணாமலை

வாட்ஸ் ஆப்பில் கிசு கிசு பேசுவதை இளைஞர்கள் குறைத்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி போல் பெரிய பதவிகளில் அமர வேண்டுமென்றால் அதிகமாக புத்தகங்கள் வாசித்து வரலாறு, அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும். நான் இதுவரை 20,000 புத்தகங்களை படித்திருக்குறேன். அதில் சில புத்தகங்களை திரும்பத்திரும்ப படித்திருக்கிறேன். அலுவலகம், வீடு என எங்கிருந்தாலும் 2 புத்தகங்களை வைத்திருப்பேன். உலகம் முதல் உள்ளூர் வரை அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

சென்னை புத்தக திருவிழாவில் இளைஞர்களை பார்க்க முடியவில்லை. இது வருத்தம் அளிக்கிறது. சாதனை பெண்கள் எல்லாரும் ரிஸ்க் எடுத்தவர்கள்தான். கிரண் பேடிக்கு காவல்துறையின் உயர் பதவி முதலில் வழங்கப்பட்டது.

காவல்துறையில் ஆண்கள் எடுக்கும் அனைத்து ரிஸ்கையும் கிரண் பேடி எடுத்தார். அதனால்தான் அவர் நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகரியாக கொண்டாடப்படுகிறார். வாழ்க்கையில் முன்னேற இளைஞர்கள் ரிஸ்க் எடுத்தே ஆக வேண்டும்.

அண்ணாமலை

இன்று ஐபிஎஸ்ஸில் 47 சதவிகிதத்திற்கு மேல் பெண்கள் உள்ளனர். மதிப்பெண் என்பது நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதை தீர்மானிக்க கூடாது. கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்.

எனக்கு சிறு வயதில் வாய் பேசவே வராது. தடுமாறித்தான் பேசுவேன். ஆசிரியர் புனிதா என்பவர்தான் என்னை கண்டுபிடித்து பள்ளியில் வழிபாட்டு நேரத்தில் செய்தித்தாளை மாணவர்கள் முன் படிக்க வைத்து என்னை சரி செய்தார். பொறியியல் படித்து முடித்து அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கோச்சிங் சென்டரில் வகுப்பு எடுத்து ஐஐஎம்மில் சேர்ந்து ரிஸ்க் எடுத்தேன். ஏன் பிறந்தோம் என்பதை கண்டுபிடிக்க வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க வேண்டும்.

பொறியியல் கல்லூரி கற்றுக் கொடுக்காத வாழ்க்கையை கோச்சிங் கிளாஸில் கற்று கொண்டேன். வாழ்கையை வாழ கற்றுக் கொண்ட பிறகுதான், குடியரசு மாளிகை தேனீரும் இனித்தது. அதேபோல் திருநெல்வேலியில் கட்சி நிர்வாகி அன்போடு அளிக்கும் எளிய உணவும் இனித்தது.

அண்ணாமலை

என்னோடு பொறியியல் கல்லூரியில் படித்த நண்பருக்கு சினிமா மீது மிகுந்த ஆசை இருந்தது. அவருக்கு 10 மேற்பட்ட அரியர் இருந்தது. ஆனால் சினிமாவை எந்த கட்டத்திலும் அவர் விடவேயில்லை. 20 ஆண்டுகளுக்குப் பின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை எடுத்து பெரியசாமி வெற்றியடைந்தார். அடுத்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்க உள்ளார். அவரின் உழைப்புதான் இந்த அளவிற்கு அவரை உயர்த்தியது.

அரசியல்வாதியாக மாறி 2 வருடங்களுக்குப் பின் அரசியல் இல்லாமல் வாழ்க்கை குறித்து இங்கு பேசியது திருப்தியளிக்கிறது" என்று கலகலவென்று பேசினார்.



source https://www.vikatan.com/news/politics/bjp-leader-annamalai-speech-at-madurai-college-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக