Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

டாஸ்மாக்: `படிப்படியாக மூடுவோம்னு சொன்னாங்க!’ - புதிய கடைகளால் மக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுப்பான கடைகளால், பல்வேறு விதமான சமூக சீர்கேடுகள் ஏற்படுவதாகவும், இதனால் இக்கடைகளை தமிழக அரசு நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ச்சியாக, கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில்தான் படிபடியாக இக்கடைகள் மூடப்படும் என ஆளும் அ.தி..மு.க அரசு வாக்குறுதி அளித்து வருகிறது. ஆனால் யதார்த்தமோ கசப்பானது. திருவாரூர் மற்றும் தஞ்சை பகுதிகளில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, புதிய மதுபான கடைகள் திறக்கப்படுகின்றன. இது இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அமைந்துள்ளது குன்னியூர் கிராமம். இங்கு பள்ளிக்கூடம் மற்றும் வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள பகுதியில் டாஸ்மாக்கின் புதிய மதுபான கடை திறப்பதற்கான நடடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கினார்கள். இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டபோதே இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் இதற்கான ஏற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆகஸ்டு 21-ம் புதிய மதுபான கடை திறக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் ஆதங்கத்தோடு பேசிய இப்பகுதி மக்கள் ‘’கொரோனா ஊரடங்கால் கடந்த நாலு மாசமா, எங்க ஊர் ஜனங்க வருமானம் இல்லாமல் தவிச்சிக்கிட்டு இருக்கோம். இப்பதான் கூலி வேலைகளுக்கு போயி, கொஞ்சம் கொஞ்சமாக வருமானம் வர ஆரம்பிச்சிருக்கு. இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நேரத்துல, மக்களை பத்தி கொஞ்சமும் கவலைப்படாமல், டாஸ்மாக் கடையை திறக்க இந்த அதிகாரிகளுக்கு எப்படிதான் மனசு வந்துச்சோ தெரியலை. அதுமட்டுமில்லாம, இங்க ஸ்கூல், கோயில் எல்லாம் இருக்கும். வெளியில வேலைக்கு போயிட்டு வரக்கூடிய பெண்களும் இந்த வழியாகதான் வருவாங்க. இந்த இடத்துல டாஸ்மாக் கடையை திறந்தால், மக்கள் எப்படி நிம்மதியா இருக்க முடியும். இதை உடனடியாக இங்கயிருந்து அகற்றணும்னு திருவாரூர் ஆட்சியரை வலியுறுத்திக்கிட்டு இருக்கோம்’’ என்றார்.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகில் உள்ள உசிலம்பட்டி கிராமத்திலும் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு கடை திறக்கப்படவுள்ள பகுதியின் வழியாக, பாளையபட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட இன்னும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்து செல்கிறார்கள்.

இங்கு மதுபான கடை திறக்கப்பட்டால், பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து பேசும் சமூக ஆர்வலர்கள் ‘’மதுவால் ஏற்படும் சீரழிவுகள் கொஞ்சநஞ்சமல்ல. இது நம்மோட ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நல்லாவே தெரியும். மது விலக்கை அமல்படுத்தி கோரி, தொடர்ச்சியாக பல போராட்டங்கள் இங்க நடந்துக்கிட்டே தான் இருக்கு. தியாகி சசி பெருமாள் இதுக்காகவே உயிர் தியாகம் செய்தார். படிபடியாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்னு, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா அறிவிச்சாங்க. ஆட்சிக்கு வந்த பிறகும் கூட இந்த உறுதிமொழியை கொடுத்தாங்க. இப்ப முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியும் இதை தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கார். ஆனால் இதுக்கு நேர் மாறாக, புதுசு புதுசா மதுக்கடைகளை திறந்துக்கிட்டே இருக்காங்க. ஏற்கனவே உள்ள கடைகளையே மூடணும்னு வலியுறுத்திக்கிட்டு இருக்குற நேரத்துல, புதிதாக கடைகள் திறக்குறதுங்கறது, மக்கள் விரோத செயல்” என கொந்தளிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/new-tasmac-shops-open-in-tanjore-thiruvarur-area-shocks-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக