Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

ஜூம்-க்கு பதில் `வீகன்சோல்’; ரூபாய் ஒரு கோடி பரிசு! - அசத்திய கேரள நிறுவனம்

கொரோனா லாக்டெளன் காரணமாக இப்போது அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. பல அலுவலகங்களில் குறைந்த அளவு ஊழியர்கள் நேரில் சென்று பணியாற்றுகிறார்கள் மற்றவர்கள் வீடுகளை அலுவலகமாக மாற்றி பணி செய்கிறார்கள். அதுமட்டுமல்லாது அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் நேரடியாக சந்தித்து உரையாடுவதை தவிர்த்து வருகின்றனர். இதற்கு மாற்றாக ஜூம் மற்றும் கூகுள் மீட் உள்ளிட்ட ஆப்கள் மூலம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கின்றன.

கொரோனா தொற்று முழுவதும் ஒழிக்கப்படும் வரை இந்த நிலை தொடர வாய்ப்பு உள்ளது. காணொளி காட்சி மூலம் கூட்டங்கள் நடப்பதால் அதற்கான தேவை அதிகரித்து உள்ளது. அதே சமயம் வெளிநாட்டு ஆப்கள் மூலமாக தகவல் திருட்டு உள்ளிட்டவை நடப்பதால் அதன் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்த நிலையில். ஜூம் ஆப்பிற்கு பதிலாக உள் நாட்டிலேயே வீடியோ கான்பரன்ஸுக்காக புதிய ஆப் கண்டுபிடிக்கும் சேலன்சை மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் 12 கம்பெனிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட்ட பணிக்காக தலா ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கியிருந்தது.

போட்டி முடிவை அறிவிக்கும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

அதில் இறுதி கட்டமாக மூன்று கம்பெனிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவர்களுக்கு இறுதிகட்ட பணிக்காக தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில் நல்லமுறையில் சிறந்த ஆப் தயாரித்த கேரள மாநிலம் ஆலப்புழா சேர்த்தலாவில் உள்ள இன்போபார்க்கில் செயல்பட்டுவரும் டெக் ஜென்சியா என்ற நிறுவனம் தயாரித்த "வீகன்சோல்" (vconsol) என்ற ஆப் முதலிடம் பிடித்து மத்திய அரசின் போட்டியில் வெற்றிபெற்றது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டார்.

இந்த நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு மற்றும் இந்த ஆப்பை மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்துவதற்கான மத்திய அரசின் ஒப்பந்தமும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து டெக் ஜென்சியா நிறுவனத்தின் உரிமையாளரான சேர்த்தலா பாதிரப்பள்ளியைச் சேர்ந்த ஜோயி செபாஸ்டியன் கூறுகையில், "பல சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்தநான் 2009-ம் ஆண்டு நண்பர் ஒருவருடன் சேர்ந்து தனியாக கம்பெனி தொடங்கினேன். வீடியோ கான்பரன்ஸ் சாப்ட்வேர் தயாரிப்பில் யு.எஸ் மற்றும் ஐரோப்பாவில் நிறைய கிளைண்டுகள் உள்ளனர்.

ஜோயி செபாஸ்டியன்

இந்த நிலையில் இந்தியாவுக்காக ஒரு ஆப் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி. எங்கள் டீமில் கிராமப்புறங்களில் இருந்து வந்த மலையாளிகள் உள்ளனர். வீடியோ கான்பிரன்ஸ் இன்ஜின் நாங்கள் கண்டுபிடித்து மத்திய அரசுக்கு வழங்கியுள்ளோம். வீடியோ மீட்டிங் மட்டுமல்லாது டெலி மெடிசின், ஸ்கூல் கிளாஸ் ரூம் ஆகியவற்றில் பயன்படுத்தும் வகையில் இந்த இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.



source https://www.vikatan.com/technology/tech-news/vconsol-new-video-conference-app-by-kerala-company

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக