Ad

புதன், 26 ஆகஸ்ட், 2020

நாகப்பட்டினம்: `மைதானத்தைக் காணவில்லை!’ - வடிவேலு பாணியில் எஸ்.பி-யிடம் புகார்

காணாமல் போன விளையாட்டு மைதானத்தைக் கண்டுபிடித்து தரக்கோரி நாகை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகேயுள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் தலைமையில் நாகை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் இதுதான்.

நாகப்பட்டினம் எஸ்.பி செல்வநாகரத்தினம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் கடந்த 2019 - 2020-ம் நிதியாண்டில் அம்மா இளைஞர் விளையாட்டுத்  திட்டத்தின்கீழ் விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்குத் தேவையான கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் நடந்து இருப்பதாகவும் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மைதானம் அமைக்கப்பட்டு தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 30 நபர்கள் பணிகள் செய்ததாகவும், அவர்களுக்கு ரூ.6,870 ஊதியமாக  வழங்கப்பட்டிருப்பதாகவும், இதுபோல தூய்மைப் பணியை செய்த 10 நபர்களுக்கு ரூ.2,290 ஊதியமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மைதானம் கட்டமைப்பு பணிகளில் மூன்று கட்டங்களாக 100 - க்கும்  மேற்பட்டவர்கள்  வேலைகளை செய்துள்ளனர். அவர்களுக்கும்  ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: வேளாங்கண்ணி: வி.ஏ.ஓ-க்களைத் தாக்கிய மணல் மாஃபியா! போலீஸ் கண்முன்னே விடுவிக்கப்பட்ட டிராக்டர்

ஆனால், குறிப்பிட்ட அந்த இடத்தில் எந்தவிதமான பணிகளும் இதுவரை நடைபெறவே இல்லை. அப்படியோர்  மைதானமே அப்பகுதியில் இல்லை. அப்பகுதியில் மைதானம் கட்டி அதற்குரிய தொகை பெறப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மைதானம் கட்டியதாகப் பணம் கையாடல் செய்த நபர்கள் யாரென்று தெரியவில்லை. அந்த இடத்தில் மைதானமே இல்லை என்பதற்குரிய ஆவணங்கள் என்னிடம் உள்ளது. எனவே, மைதானம் கட்டியதாக போலி ஆவணங்களை காட்டி அரசுப் பணத்தை கையாடல் செய்தவர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மைதானம் கட்டியிருந்தால்  காணாமல்போன மைதானத்தை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் எஸ்.பி அலுவலகம்

இதுகுறித்து திட்டச்சேரி காவல் நிலையத்தில் விசாரித்தோம். ```எஸ்.பி.யிடம் கொடுக்கப்பட்டுள்ள புகார் இதுவரையில் எங்களுக்கு வரவில்லை. வந்தபின் தக்க நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.

ஒரு சினிமா படத்தில் 'கிணற்றை காணோம்'என்று வடிவேலு போலீஸில் புகார் கொடுத்திருப்பார். அதே பாணியில் மைதானம் கட்டியதாக ஆவணங்கள் இருக்கிறது. ஆனால், மைதானத்தை காணவில்லை. கட்டாத மைதானத்திற்கு பணம் கையாடல் செய்திருப்பது நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/nagappattinam-sp-office-gets-bizarrie-complaint-over-sports-ground-missing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக