Ad

ஞாயிறு, 27 ஜூன், 2021

எகிறிய சுகாதாரத்துறை அமைச்சர் முதல் கமலாலயத்தில் பதவி ரேஸ் வரை கழுகார் அப்டேட்ஸ்...

சமீபத்தில், நெல்லை மாவட்டச் செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் முன்னிலையில், நெல்லை மாவட்டத்தின் முருகன் என்பவர் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். வள்ளியூர் காவல் நிலையத்தில் 1992-ம் ஆண்டு தலைமைக் காவலரை வெட்டிக் கொலை செய்தது உள்ளிட்ட ஏழு கொலை வழக்குகளும், பணம் கேட்டு மிரட்டல், ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 40-க்கும் அதிகமான வழக்குகளிலும் முருகனுக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம்

சில வழக்குகளிலிருந்து அவர் விடுதலையான போதிலும், பல வழக்குகள் நிலுவையில்தான் இருக்கின்றன என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். ஐந்து முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவரை கட்சியில் சேர்த்திருப்பது என்ன நியாயம்? என்று பொருமுகிறார்கள் நெல்லை தி.மு.க-வினர்.

பா.ஜ.க கட்சிக்கூட போட்டி போடுவாங்களோ!

சுகாதாரத்துறையில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் 15,000 ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தியபோது, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அவர்கள் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீதான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையிலுள்ள சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மா.சுப்பிரமணியன்

அப்போது தேசிய சுகாதாரத் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் தாரேஷ் அகமது, ‘ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்பில்லை’ என்றாராம். சடாரென டென்ஷனான அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘உங்கக்கிட்ட பணி நிரந்தரம் செய்யலாமா, வேணாமா கருத்து கேட்கலை. ஆக வேண்டிய வேலையை மட்டும் பாருங்க’ என்று எகிறினாராம். இந்த கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் முட்டல்மோதல்கள் தொடங்கியுள்ளன.

டெரர் அதிகாரி... கறார் அமைச்சர்!

வட மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் அவர். கடந்த பத்தாண்டுகளாக எம்.எல்.ஏ-வாக இருந்தபோதே கட்சியினரை அவர் பெரிதாகக் கண்டுகொண்டதில்லை. தற்போது அமைச்சராக ஆகிவிட்டதால், வழக்கம்போல தொண்டர்களை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லையாம். ஆனால், சொந்த ஊருக்கு செல்லும்போது, தினமும் அவர் வீட்டில் ஒப்பந்ததாரர்கள் மட்டும் குவிந்துவிடுகிறார்கள். அப்போது கட்சியினர் யாரோனும் சந்திக்க வந்தால், ‘தலைவர் பிஸியாக இருக்கார்’ என்று சொல்லி திருப்பி அனுப்பிவிடுகிறார்களாம். இதனால், கடுப்பிலிருக்கும் லோக்கல் தி.மு.க-வினர், “போஸ்டர் ஒட்டுன நாங்க இனி எங்க கண்ணுக்கு தெரியப் போறோம். இனி தேர்தல் வரும்போதுதான், ‘தம்பி நல்லா இருக்கியா?’னு சிரிச்சுக்கிட்டு வருவாரு” என்று புலம்பித் தீர்க்கிறார்கள்.

தொரைசாமி பிஸியோ பிஸி!

விரைவில் தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவருக்கு துணை நிலை ஆளுநர் பொறுப்பு அளிக்க டெல்லி மேலிடம் முடிவெடுத்திருக்கிறதாம். பதவியைப் பிடிக்க இப்போதே சீனியர்கள் சிலர் அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். பதவிக்கான ரேஸில் கொங்கு மண்டல சீனியர் ஒருவருக்கும், சென்னை தி.நகர் சீனியர் ஒருவருக்கும் இடையேதான் போட்டி கடுமையாகியிருக்கிறது.

கமலாலயம்

‘அவர் அந்த விஷயத்துல வீக்குங்க’ என தி.நகர் சீனியர் பற்றி கொங்கு பார்ட்டியும், ‘டெல்லில ஒரு பொறுப்புல இருந்தபோது, லாபி பண்ணியே சம்பாதிச்சுட்டாரு. இவருக்கெல்லாம் பதவிக் கிடைக்காது’ என்று கொங்கு சீனியர் பற்றி தி.நகர் பார்ட்டியும் மாறி மாறி தகவல்களைப் பரப்புகிறார்களாம். ‘இன்னும் பதவியே கிடைக்கல, அதுக்குள்ள அடிதடியா?’ என தலையிலடித்துக் கொள்கிறது கமலாலயம்.

இதுவும் பா.ஜ.க பதவி சண்டை தகவல் தான்.... மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று தெரிகிறது. மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் வகித்த உணவுத்துறையை தற்போது பியூஷ் கோயல் கூடுதலாக கவனித்துவருகிறார். அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ஒருவரை ராஜ்ய சபா எம்.பி-யாக்கி, உணவுத்துறையை அவரிடம் அளிக்க டெல்லி மேலிடம் திட்டமிட்டிருக்கிறதாம். மேற்கண்ட பதவியை பிடிக்கவும் முக்கியத் தலைவர்கள் முட்டி மோதிவருகிறார்கள்.

பதவி பத்தும் செய்யும்!

‘பெருநகரங்களில் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக துணை நகரங்கள் அமைக்கப்படும்’ என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டிருக்கிறது. அதற்கான பணிகளில் ஒருபக்கம் வருவாய், உள்ளாட்சி, நிதித்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கும் நிலையில், புதிய குடியிருப்பு ஏரியாக்களை உருவாக்க, பெருநகரங்களுக்கு அருகிலிருக்கும் புறம்போக்கு நிலங்களை தனியாருக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

Also Read: சசிகலாவைச் சமாளித்து தப்பிய முன்னாள் அமைச்சர் முதல் விஜய்யிடம் காம்ப்ளக்ஸை விற்கும் எஸ்.ஏ.சி வரை! -கழுகார் அப்டேட்ஸ்

இதைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருக்கும் மேலிடத்து மாப்பிள்ளையைச் சுற்றியிருக்கும் ஒரு கும்பல், ‘இங்கேதான் சாட்டிலைட் டவுன்ஷிப் வரப்போகிறது. மேலிடத்துல பேசி உங்களுக்கு சார்பாக நில விவகாரங்களை முடித்துத் தருகிறோம்’ என்று சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் வியாபார பேரத்தை ஆரம்பித்திருக்கிறார்களாம்.

திட்டமே முடிவாகல... கடையை விரிச்சுட்டாங்களே!

பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜாவைக் கண்டித்து சிவகங்கை மாவட்ட பா.ஜ.க-வினர் அடுத்தடுத்து தங்கள் கட்சிப் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த விவகாரம் தேசிய தலைமைக்கும் சென்றதால், பா.ஜ.க அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தை, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லியிருக்கிறது டெல்லி மேலிடம்.

ஹெச்.ராஜா

இதையடுத்து, சமீபத்தில் காரைக்குடிக்குச் சென்ற கேசவ விநாயகத்திடம் ஹெச்.ராஜா மீதான புகார்களை பட்டியலிட்ட கட்சி நிர்வாகிகள், காரைக்குடி சுப்பிரமணியன்புரத்தில் ஹெச்.ராஜா புதிதாக கட்டிவரும் வீட்டின் போட்டோக்களையும், அவற்றுக்கு எங்கேயிருந்து, யார் வழியாக கட்டடப் பொருள்கள் வருகின்றன என்பது வரை ஆதாரங்களையும் அடுக்கியிருக்கிறார்கள். இதுபோக, ஹெச்.ராஜாவின் மருமகன் சூர்யநாராயணன் மீதான புகார்களும் கேசவ விநாயகத்திடம் வரிசை கட்டியிருக்கின்றன. விசாரணை நியாயமாக நடந்தால், ஹெச்.ராஜா மீது நடவடிக்கை நிச்சயம் என்கிறது பா.ஜ.க வட்டாரம்.

எனக்கே ராஜாவ இனிமே இருக்க முடியாது போலிருக்கே!



source https://www.vikatan.com/news/politics/kazhugar-updates-minister-masubramanian-meeting-and-tamilnadu-bjp-party-news

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக