Ad

புதன், 30 ஜூன், 2021

''சசிகலாவின் ஜெராக்ஸ்தான் தினகரன்!'' - சொல்கிறார் ஜெயக்குமார்

ஆட்சி அரியணையிலிருந்து இறங்கிவிட்டாலும்கூட, 'இரட்டைத் தலைமை சர்ச்சை, சசிகலா ஆடியோ ரிலீஸ், சசிகலாவோடு தொடர்பிலிருந்தவர்கள் நீக்கம்' என தொடர்ச்சியாக அதிர்ந்து வருகிறது அ.தி.மு.க வட்டாரம்!" அரசியலைவிட்டு இனி ஒருபோதும் விலகமாட்டேன்" என வீறுகொண்டு எழுந்துள்ள சசிகலா, 100-வது ஆடியோ ரிலீஸை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்தேன்....

''அ.தி.மு.க தோல்வி குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கான அறிவிப்புகூட இன்னும் கட்சித் தலைமையிடமிருந்து வெளிவரவில்லையே ஏன்?''

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.

''ஜனநாயக அரசியலில், வெற்றி - தோல்வி இயல்பானதுதான் என்றாலும்கூட கட்சியின் தோல்வி குறித்து ஆராயப்படவேண்டும். ஆனால், அதற்கு இன்னும் கால நேரம் இருக்கிறது. இது கோவிட் நோய்த்தொற்றின் 2-வது அலை பரவிவரும் நேரம். அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடந்துவரும் அ.தி.மு.க., இந்தப் பெருந்தொற்று நேரத்தில், பெருங்கூட்டம் கூட்டுவதைத் தவிர்க்கவேண்டும் என நினைக்கிறது.

கட்சி சார்பில் நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே, 'சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து விரைவில் ஒவ்வொரு மாவட்டத்தினருடனும் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ஒருங்கிணைப்பாளரும் துணை ஒருங்கிணைப்பாளரும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள். எனவே, நோய்த்தொற்று குறையும்போது நிச்சயம் இதுகுறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெறும்!''

''அ.தி.மு.க-வின் தோல்விக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?''

''அரசின் நிதி நிலைமையைக் கருத்திற்கொண்டு, எந்தெந்த திட்டங்களையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அவற்றை மட்டுமே தேர்தல் வாக்குறுதிகளாக முன்வைத்தது அ.தி.மு.க. ஆனால், நிறைவேற்ற சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளை எல்லாம் முன்வைத்து பிரசாரம் செய்தது தி.மு.க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் நிறைவேற்றவே முடியாத பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க கூட்டணியினர் வெளியிட்டனர். இந்த சட்டமன்றத் தேர்தலிலும் 500 வாக்குறுதிகள் கொடுத்துள்ளனர். இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால், பல லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். அவ்வளவு பணம் எங்கே இருக்கிறது? அதனால்தான் இப்போதே, 'நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்கப்போகிறோம்' என்கிறார் நிதி அமைச்சர். தேர்தலின்போது, தி.மு.க-வின் பிரசார பலத்தினால் இந்தப் பொய்யான வாக்குறுதிகள் எல்லாம் மக்களிடையே எடுபட்டுவிட்டது. இந்த தற்காலிக வெற்றியினால், இன்றைக்கு ஆட்சிப் பொறுப்புக்கும் வந்துவிட்டனர். மற்றபடி மக்கள் யாரும் தி.மு.க-வை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.... தி.மு.க கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது!''

மு.க.ஸ்டாலின்

''கட்சித் தலைமைகள் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொண்டிருந்தால், அ.தி.மு.க-வுக்கு வெற்றி சாத்தியப்பட்டிருக்கும்தானே?''

''அப்படியெல்லாம் எங்கள் கட்சித் தலைமைக்குள் எந்தவித பிணக்கும் இல்லை. அ.தி.மு.க என்பது மிகப்பெரிய கட்சி. இங்கே அண்ணன் தம்பிக்குள் சில கருத்துகள் இருக்கும். அதை மீடியாதான் ஹேஸ்யமாக பூதாகரப்படுத்துகின்றன. கட்சிக்குள் என்னென்னவோ பிரச்னைகள் இருப்பதாக செய்தி வெளியிட்டனர். ஆனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் கையொப்பமிட்டே முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்படுகிறன. ஆக, கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை!'' சில முடிவுகளில் உடன்பாடு குறித்த சில கருத்துகள் அவ்வப்போது வெளிவந்தாலும்கூட, இறுதியில் நல்லதொரு முடிவு எட்டப்படுகிறதா என்பதை மட்டும்தான் பார்க்கவேண்டும்! உதாரணமாக கட்சி எடுத்த முடிவின்படி எதிர்க்கட்சித் தலைவர், கொறடா, பொருளாளர், செயலாளர் என நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பேற்றுக்கொண்டு சட்டசபை கூட்டத்தொடரில் ஒற்றுமையாக பங்கேற்றதையும் பார்த்தீர்கள்தானே!''

''ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்-ஸில் ஆரம்பித்து நீங்கள் உள்பட கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட பொறுப்புகளை வகித்துவருவது எந்தவகையில் நியாயம்?''

''பதவிகளை எப்படி பகிர்ந்து அளிக்கவேண்டும் என்பதெல்லாம் கட்சியின் கொள்கை முடிவு... 'ஒருவருக்கு ஒரு பதவி' என்று நான் சொல்லமுடியாது! எனவே, இப்போது நீங்கள் சொல்கிற இந்த கருத்தைக்கூட நாளை கட்சி கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்... அல்லது எடுத்துக்கொள்ளாமலும் போகலாம்!''

''அ.தி.மு.க-வினர் யாரும் சசிகலாவை நம்பமாட்டார்கள்; அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்றெல்லாம் பேசிவிட்டு, சசிகலா ஆடியோ ரிலீஸாவதைக் கண்டு பதற்றமடைவது ஏன்?''

டி.டி.வி.தினகரன் - சசிகலா

''பதற்றமெல்லாம் ஒன்றும் கிடையாது. சசிகலாவையும் டி.டி.வி தினகரனையும் ஒருநாளும் பிரிக்க முடியாது. சசிகலாவின் ஜெராக்ஸ்தான் தின்கரன்! சசிகலா ஆசீர்வாதத்தினால்தான் அ.ம.மு.க என்ற கட்சியே ஆரம்பிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் 3 % வாக்குகளைக்கூட அவர்களால் பெறமுடியவில்லை. ஆக, கட்சிக்காரர்களிடமும் செல்வாக்கு இல்லாத, மக்களிடமும் செல்வாக்கு இல்லாத ஒருவரை யார் தலைவராக அங்கீகரிப்பார்கள்? எனவே, அ.தி.மு.க-வில் ஒரு வீண் குழப்பத்தை ஏற்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார்... அது ஒருபோதும் நடக்காது! ஏனெனில், அ.தி.மு.க-வினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்! ஜெயலலிதாவோடு உடனிருந்தவர் சசிகலா. 'ஜெயலலிதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது, இதற்கு யார் காரணம்...' என்ற கேள்விகளுக்கான விடையை எதிர்நோக்கி அ.தி.மு.க-வினரும் மக்களும் காத்திருக்கின்றனர். எனவேதான், அந்த உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக எங்கள் ஆட்சியின்போது விசாரணை கமிஷனை அமைத்தோம்!''

''அ.தி.மு.க குறிப்பிட்ட ஜாதியினருக்கான கட்சியாக சுருங்கிவிட்டது என்ற விமர்சனம் பரவலாக எழுந்துள்ளதே...?''

''அப்படியெல்லாம் திட்டமிட்ட ஒரு கோயபல்ஸ் பிரசாரம், பிம்பம், மாயை உருவாக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க மீது ஜாதி சாயம் பூசுவதற்காக தொடர்ந்து சிலர் பொய் சொல்லி வருகின்றனர். ஆனால், ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் அ.தி.மு.க. உதாரணமாக, நான் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவன். கடந்தகாலத்தில் எதிர்க்கட்சியினரது கேள்விகளுக்குப் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு எனக்கு அ.தி.மு.க-வில் சுதந்திரம் கொடுத்திருந்தார்கள்தானே.... நான் என்ன அவர்கள் சொல்வதுபோல் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவனா... சொல்லுங்கள்! கட்சியின் வழிகாட்டும் குழுவிலேயேகூட அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்களே!''

அஸ்பயர் சுவாமிநாதன்

''அ.தி.மு.க-விலிருந்து விலகிய அஸ்பயர் சுவாமிநாதன், 'அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலே, ஜாதிக்கட்சியாக மாறிவிட்டதைச் சொல்லும்' என்கிறாரே?''

''கட்சியைவிட்டு விலகியபிறகு, ஏதாவது ஒரு காரணம் சொல்லவேண்டுமே என்பதற்காக அவர் இப்படியொரு காரணத்தை சொல்லியிருக்கலாம். எனவே இதில் எந்த உண்மையும் கிடையாது.கட்சிக்காக விசுவாசத்தோடு உழைப்பவர்களை எந்தவகையிலும் யாராலும் புறந்தள்ள முடியாது. அவர்களுக்கான உரிய மரியாதை கொடுக்கப்பட்டே வருகிறது. அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு சமுதாயத்துக்கு மட்டுமே சலுகைகளைக் கொடுத்தது, அரசின் திட்டங்கள் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டுமே சென்று சேர்ந்தது என்றெல்லாம் எந்த ஒரு புகாரும் இதுநாள்வரையில் வந்தது கிடையாது. அப்படியொரு விஷயம் அ.தி.மு.க வில் நடக்கவும் நடக்காது!''

''கஷ்டப்பட்டு வளர்த்த அ.தி.மு.க-வை சாதி ரீதியாக சிதறிப்போக விடமாட்டேன் என சசிகலாவும் அண்மையில் வெளியிட்ட ஆடியோவில் கூறியிருக்கிறாரே...?''

''அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாதவர் சசிகலா. எனவே அவர் செய்ய விரும்பும் வேலையை, அ.ம.மு.க-வில் வேண்டுமானால் செய்யலாம்; அ.தி.மு.க-வில் செய்ய முடியாது.''

புகழேந்தி

''ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசிவந்த புகழேந்தி, கட்சியை விட்டே நீக்கப்படுகிறார் என்றால், கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்குகிறதா?''

''இல்லையில்லை... யார் கையும் ஓங்கவில்லை. ஒரு கூட்டணியில் இருந்துகொண்டே கூட்டணியை விமர்சிப்பதென்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அடுத்து, சொந்தக் கட்சியைப் பற்றி, அதன் தலைவர்களைப் பற்றி அல்லது அந்த கட்சியின் கொள்கை முடிவுகளைப் பற்றி நான் விமர்சனம் செய்வது கிடையாது. எந்தவொரு முடிவு என்றாலும் கட்சியை கலந்தாலோசித்து, அங்கே எடுக்கப்படுகிற முடிவுகளைத்தான் பொதுவெளியில் சொல்வேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க அழிந்துவிடும் என சிலர் நினைத்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. ஒற்றுமையாக செயல்பட்டு ஒவ்வொரு தடைகளையும் தகர்த்தெறிந்து வருகிறது அ.தி.மு.க. இது நிறைய பேர்களது கண்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இல்லாததும் பொல்லாததுமாக செய்தி கிளப்பிவிடுகிறார்கள். ஆனால், அ.தி.மு.க இன்னும் நூறாண்டுகளுக்கு நிலைக்கும்; தழைக்கும்!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/former-admk-minister-jayakumar-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக