Ad

செவ்வாய், 29 ஜூன், 2021

ஜோலார்பேட்டை: உறவு முறைச் சிக்கல்; குடும்பத்தில் எதிர்ப்பு! விஷம் குடித்து பலியான உயிர்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்துள்ள பெரிய மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி ஒருவரின் 19 வயது மகளும், அதே பகுதியில் வசிக்கும் ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவரின் 22 வயது மகனும் கடந்த ஓராண்டாக காதலித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டுப் பெற்றோர்களுக்கும் சமீபத்தில்தான் தெரியவந்துள்ளது. இரு தரப்பும் பங்காளி உறவு முறை எனக் கூறப்படுகிறது. இதனால், அண்ணன் தங்கை முறை எனக் கூறி காதலை முறித்துக்கொள்ளுமாறு பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர்.

விஷம் குடித்த இளம் ஜோடி

எதிர்ப்பை மீறி, இருவரும் இரண்டு தினங்களுக்கு முன் வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறியுள்ளனர். நாட்றம்பள்ளி அருகே அக்ரஹாரத்திலுள்ள மலைக்கோயிலுக்கு சென்று திருமணம் செய்துகொண்டு மணக்கோலத்தில் வீட்டுக்கு வந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கடுமையாகத் திட்டித் தீர்த்து வீட்டுக்குள் அனுமதிக்காமல் விரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மன வேதனையடைந்தவர்கள், திருமணம் செய்த கோயிலுக்கே சென்று விஷம் குடித்தனர். மயக்கமடைந்த நிலையில் கிடந்த இருவரையும் அங்கிருந்த சிலர் உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல், பெண் உயிரிழந்தார். இளைஞன் கவலைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சூறையாடப்பட்ட காதலன் வீடு

இந்தநிலையில், பெண்ணின் உறவினர்கள் சிலர் ஆத்திரமடைந்து அந்த இளைஞனின் வீட்டுக்குள் புகுந்து பொருள்கள் சிலவற்றை அடித்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஜோலார்பேட்டை போலீஸார் இரு தரப்பையும் சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். அதன் பின்னரே பெண் வீட்டுத் தரப்பினர் அமைதி காத்தனர். தற்கொலை தொடர்பாக நாட்றம்பள்ளி போலீஸாரும், இளைஞன் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/police-investigating-a-suicide-incident-in-jolarpet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக