Ad

செவ்வாய், 29 ஜூன், 2021

`எங்க வீட்டுக்கு திரும்ப வந்துட்டோம்; ரொம்ப நன்றி!’ - மகனால் கைவிடப்பட்ட பெற்றோர் நெகிழ்ச்சி

தஞ்சையைச் சேர்ந்த மனோகரன் - தனலட்சுமி தம்பதி, தங்கள் மகனால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டு, நிராதரவாய் வாழ்ந்து வந்த அவலத்தை சில தினங்களுக்கு முன்பு விகடன் இணையத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதோடு, இவர்களுக்கு நியாயம் கிடைக்க, அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவின் கவனத்துக்கும் இதை உடனடியாகக் கொண்டு சென்றோம். அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் கோட்டாட்சியர் வேலுமணி எடுத்த நடவடிக்கையால், மனோகரன் - தனலட்சுமி தம்பதி தங்களது வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.

``எங்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லையேனு பரிதவிச்சு, நொந்து கிடந்தோம். நீங்க எடுத்த முயற்சியாலும் கலெக்டர் அய்யாவும், ஆர்.டி.ஓ அம்மாவும் எடுத்த நடவடிக்கையாலும் இப்ப நாங்க எங்க வீட்டுக்கு வந்துட்டோம். எங்க பையனை அதிகாரிகள் கண்டிச்சதோடு, நிறைய புத்தி சொல்லி அனுப்பியிருக்காங்க. உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி’’ என நெகிழ்ச்சியோடு பேசினார்கள் மனோகரன் - தனலட்சுமி தம்பதி.

மனோகரன் - தனலட்சுமி தம்பதி

முதுமைக் காலத்தில் பெற்றோரின் மனம், தங்களின் பிள்ளைகளின் அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும். தங்களால் வளர்த்து ஆளாக்கப்பட்ட பிள்ளைகள், கடைசி காலத்தில் தங்களை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கும்போது, அதை உடைத்து சுக்குநூறாக்கினால் அவர்கள் அடையும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தஞ்சையைச் சேர்ந்த இந்த வயோதிக பெற்றோர், தங்களின் மகனால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, கடந்த ஒரு மாதமாக, அகதி போல் வாழ்ந்து வந்தது காண்போரை கண்கலங்கச் செய்தது.

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள அருள்மொழிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர்கள் மனோகரன் - தனலட்சுமி தம்பதி. சுமார் 70 வயதான மனோகரன், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். கடந்த ஒரு மாதமாக சலூன் கடை மூடப்பட்டதால் வருமானம் இழந்து தவித்திருக்கிறார். இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான நேரத்தில் அனுசரணையாக இருக்க வேண்டிய அவர்களின் மகன், அவர்களை வீட்டை வீட்டு விரட்டியடித்துவிட்ட துயரத்துடன் கண்ணீர் மல்க நின்றிருக்கிறார்கள். இவர்களுக்கு நேர்ந்த அவலத்தை தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஜீவக்குமார் நம் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

மனோகரன் - தனலட்சுமி தம்பதியிடம் நாம் அப்போது பேசியபோது, ``எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். எங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டோம். எங்களுக்கு ஒரே ஆண் வாரிசுங்கறதுனால, பையன் மேல பாசத்தைக் கொட்டி வளர்த்தோம். நான் சலூன் கடை வச்சிருக்கேன். ஆனாலும், என் பையன் சிவானந்தத்தை பி.காம், எம்.சி.ஏ வரை படிக்க வச்சேன். ஆனா, அவனுக்கு வேலை கிடைக்கல.

என்கிட்ட முடி வெட்ட, நிறைய அரசு அதிகாரிகள் வருவாங்க. அதுல ஒருத்தர்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி, அரசு கொள்முதல் நிலையத்துல என் மகனை வேலைக்குச் சேர்த்துவிட்டேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் பையனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன். அதுக்கு பிறகு அவனோட நடவடிக்கைகள் தலைகீழா மாற ஆரம்பிச்சிடுச்சு. எங்களை எடுத்தெறிஞ்சி பேசினான். `இனிமே இந்த வீட்ல இருக்கக்கூடாது... வெளியில போயிடுங்க'னு சொல்லிக்கிட்டே இருந்தான். நாங்களும் கூட, கோவத்துலதான் இப்படி சொல்றான்னு நினைச்சிக்கிட்டு இருந்தோம்.

மனோகரன் - தனலட்சுமி தம்பதி

இதுக்கிடையில, எங்க பொண்ணுக்குப் பிரசவம். மன்னார்குடி பக்கத்துல வடுவூர்ல உள்ள எங்களோட சம்பந்தி வீட்டுக்குப் போயிட்டு நாங்க திரும்பி வந்து பார்த்தா, எங்களோட வீடு பூட்டப்பட்டு கிடக்கு. வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கிட்டு, எங்க மகன் சிவானந்தம், தன்னோட மாமியார் வீட்டுக்குப் போயிட்டான். அங்க போயி அவன்கிட்ட வீட்டுச் சாவியைக் கேட்டோம். ரொம்ப மோசமா எங்களைத் திட்டி அனுப்பிட்டான்.

கடந்த ஒரு மாசமா மாரியம்மன் கோயில், சொந்தக்காரங்க வீடுனு அகதி மாதிரி தங்கியிருந்து வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கோம். இனிமே வீட்டுக்குள்ள அனுமதிக்கவே மாட்டேன்னு எங்க மகனும் மருமகளும் பிடிவாதமா சொல்லிட்டாங்க. வீட்டு வரி ரசீது, குடிநீர் வரி ரசிது, கரன்ட் பில் எல்லாமே என் மனைவி தனலட்சுமி பேருலதான் இருக்கு. அந்த வீட்டை தன்னோட பேருக்கு மாத்தி எழுதிக் கொடுங்கனு மிரட்டிக்கிட்டு இருக்கான் பையன். அந்த வீட்டை விட்டால், நாங்க வாழ வேற இடம் கிடையாது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கோயில்லயும் சொந்தக்காரங்க வீட்லயும் மாறி மாறி தங்கிக்கிட்டு இருக்க முடியும்? எங்க வீட்ல நாங்க வசிக்க, ஏதாவது வழி பண்ணிக் கொடுங்கய்யா...’’ எனக் கதறினார் மனோகரன்.

``எங்க மகனும் மருமகளும் எங்களை எவ்வளவோ அவமானப்படுத்தியிருக்காங்க. அதையெல்லாம் கூட பொறுத்துக்கிட்டோம். இப்ப வீட்டை விட்டே எங்களை விரட்டினா, இந்த வயசான காலத்துல நாங்க எங்க போயி வாழ முடியும்?’’ என அழுது புலம்பினார் தனலட்சுமி.

இவர்களுக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமையான பரிதாப நிலையை, அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவின் கவனத்துக்கு நாம் கொண்டு சென்றோம். ``கேக்குறதுக்கே ரொம்ப வேதனையா இருக்கு. உடனடியாக நடவடிக்கை எடுக்குறேன்’’ என உறுதி அளித்தார். தங்களுக்கு நீதி கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையோடும் பரிதவிப்போடும் காத்திருந்தார்கள் இந்த வயது முதிர்ந்த பெற்றோர்.

தஞ்சாவூர் ஆர்.டி.ஒ வேலுமணி, தாசில்தார், வி.ஏ.ஓ ஆகியோருடன் நேரில் சென்று விசாரணை செய்தார். மேலும், இந்த வயோதிக தம்பதியின் மகன் சிவானந்தத்தை தஞ்சாவூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரவழைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

Also Read: ``மகன் வீட்டைவிட்டு விரட்டிட்டான்; அனாதரவா திரியுறோம்!'' - வயோதிகப் பெற்றோரின் கண்ணீர்க் கதை

இந்நிலையில்தான் நம்மை தொடர்புக்கொண்ட மனோகரன் - தனலட்சுமி தம்பதி மிகவும் உணர்வுவயப்பட்ட குரலில், ``நீங்க வெளியிட்ட செய்தியைப் பார்த்துட்டு, எங்க சொந்தக்காரங்க பலர் அதிர்ச்சி அடைஞ்சிட்டாங்க. ஆர்.டி.ஓ ஆபீஸ்ல விசாரணை நடந்துச்சு. எங்க மகனை ஆர்.டி.ஓ அம்மா கண்டிச்சதோடு, `இனிமே இதுமாதிரி தவறு செய்ய மாட்டேன்’னு அவன்கிட்ட எழுதி வாங்கிக்கிட்டாங்க. `ஒரு மாசம் ஒண்ணா இருந்து பாருங்க. ஏதாவது பிரச்னை பண்ணினால், அடுத்தகட்டமா கடுமையான நடவடிக்கை எடுக்குறோம்'னு சொல்லி அனுப்பினாங்க, இப்ப எங்க வீட்லதான் இருக்கோம்’’ என்றார்கள்.

தஞ்சாவூர் ஆர்.டி.ஓ வேலுமணியிடம் நாம் பேசியபோது, ``இவங்களோட மகன் சிவானந்தத்தைக் கடுமையாக எச்சரிக்கை பண்ணி அனுப்பியிருக்கோம். இனிமே இதுமாதிரி தவறு செய்யமாட்டேன்னு அவர் உத்தரவாதம் கொடுத்து எழுதிக் கொடுத்திருக்கார். இதுக்கு சாட்சியாக, சொந்தக்காரங்களையும் பதிவு செஞ்சிருக்கோம். இதுக்கு மேலயும் தவறு செய்தால், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் படி, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்னு சிவானந்தத்தை எச்சரிக்கை செஞ்சிருக்கேன்’’ எனத் தெரிவித்தார்.

``விகடன் எடுத்த தொடர் முயற்சியால இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கு. விபரீத முடிவெடுக்குற மனநிலையில மனோகரனும் - தனலட்சுமியும் புலம்பிக்கிட்டு இருந்தாங்க. இப்ப மீண்டு வந்திருக்காங்க. பெத்த மனசு பித்துனு சொல்லுவாங்க... பெருந்தன்மையோடும் கருணையோடும் தங்களது வீட்டுக்குள்ளார வசிக்க, மகன் சிவானந்தத்தை அனுமதிச்சிருக்காங்க’’ என இவர்களது குடும்ப நண்பர்கள் நெகிழ்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/after-district-collector-intervened-thanjavur-elder-couple-returned-to-their-home

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக