Ad

திங்கள், 28 ஜூன், 2021

திருச்சி: `போதை தெளிஞ்சா நம்மள கொன்னுடுவான்!' - ரெளடி உடலை புதைத்துச் சென்ற நண்பர்கள்

நண்பர்கள் ஒன்று சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட மோதலில் பிரபல ரெளடியை கொன்று, கொள்ளிடம் ஆற்றில் புதைத்திருக்கும் சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொலையை மறைக்க அவர்கள் நடத்திய நாடகத்தைக் கண்டு போலீஸாரே அதிர்ந்துவிட்டனர்.

திருச்சி

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகேயுள்ள சங்கர் நகரைச் சேர்ந்தவர் நவீன்குமார். 2013-ல் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இவர் ரெளடி பட்டியலில் உள்ளார். இந்நிலையில் கடந்த 7-ம் அன்று நண்பர்களுடன் வீட்டை விட்டுச் சென்றவர், வீடு திரும்பவில்லை என்று அவரது தந்தை கணேசன் 25-ம் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில் தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த கோவில் பிள்ளை, சந்திரசேகர், சந்துரு, டாங்கிசங்கர், மணிமாறன் உள்ளிட்ட ஐந்து பேர் சிக்கியுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நவீன்குமாரை கொன்று கொள்ளிடம் ஆற்றில் புதைத்ததாக சொல்லியிருக்கிறார்கள். அதனடிப்படையில் ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பழனியப்பன் தலைமையில் போலீஸார் ஆய்வு செய்தனர்.

நவீன் புதைக்கப்பட்ட இடம்

ஸ்ரீரங்கம் தாசில்தார் மகேந்திரன், துணை தாசில்தார் சுரேஷ், வி.ஏ.ஓ பத்மா ஆகியோர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் உடலைத் தோண்டி அங்கேயே மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கை விசாரித்துவரும் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் பேசினோம். ``நவீன்குமார் பெரிய ரெளடி. அவன் மேல் பல அடிதடி மற்றும் கொலை வழக்குகள் உள்ளது. அவரின் தந்தை கொடுத்த புகாரில் ஐந்து பேர் என் மகனை அழைத்துச்சென்றார்கள். அதன் பிறகு அவன் வீட்டிற்கு வரவில்லை என்று புகாரில் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன ஐந்து பேரையும் பிடித்து விசாரித்தோம். ஐந்து பேரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு எங்களுக்கே உண்டான பாணியில் விசாரிக்க எல்லாத்தையும் சொல்லத் தொடங்கினார்கள்.

ரெளடி நவீன்

கோவில் பிள்ளை என்பவர் வீட்டு விஷேசம் சிறப்பாக முடிந்ததற்காக கடந்த 8-ம் தேதி நண்பர்களுக்கு பார்ட்டிக் கொடுத்திருக்கிறார். கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த போது, நவீன் அவரது நண்பர் சந்திரசேகரிடம் ரூ.2,000 பணம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என்று சொல்ல, பதிலுக்கு நவீன் பணம் இல்லாம குடிக்க எதற்கு வந்தான்னு சந்திரசேகரை விளையாட்டுக்குத் தலையில் அடித்திருக்கிறான். கடுப்பான சந்திரசேகர் போதையில் நவீனை தள்ளி விட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார்.

போலீஸார் விசாரணை

``நம்மவேற அடிச்சிட்டோம். அவனுக்குப் போதை தெளிஞ்சா நம்மள கொன்னுடுவான். இவன் உயிரோடு விடக்கூடாது”ன்னு நண்பர்களே சேர்ந்து பிளேடால் தொண்டையை அறுத்து கொன்றிருக்கிறார்கள். சந்தேகம் எதுவும் வராமல் இருக்க இரத்தம் சிந்திய இடத்தில் நவீனின் துணி மற்றும் இவர்கள் ஐந்து பேர்கள் அணிந்திருந்த துணியை அதே இடத்தில் கொளுத்தியிருக்கிறார்கள். பின்பு உடலை கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் குழி தோன்றி புதைவிட்டு விட்டு ஒன்றுமே தெரியாததது போல் வீட்டுக்கு வந்து தூங்கியிருக்கிறார்கள்.

அத்தோடு, அவர்கள் குடும்பத்தை தொடர்ந்து கண்காணித்திருக்கிறார்கள். போலீஸாருடைய நகர்வுகளையும் கண்காணித்திருக்கிறார்கள். இப்போது தான் கைது செய்துசெய்திருக்கிறோம். முழுமையாக விசாரித்துவிட்டுப் பேசுகிறோம்" என்று முடித்துக்கொண்டார்.



source https://www.vikatan.com/news/crime/hes-a-great-rowdy-hes-a-drug-addict-friends-who-buried-his-body-in-a-ditch

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக