Ad

செவ்வாய், 29 ஜூன், 2021

மின்வெட்டு: அம்பியா இருந்த அணிலை இப்படி அந்நியனாக்கிட்டீங்களே அமைச்சரே..!

10 வருடங்களுக்கு முன்பு கரன்ட் கட்டானால் ஆற்காட்டார்தான் நினைவுக்கு வருவாரு... இப்ப அணிலார்..!

அதுபாட்டுக்கு அங்குமிங்கும் ஓடிக்கிட்டும், செடி கொடி மரத்துல ஏறி விளையாடிகிட்டும் அம்பியா இருந்த அணிலை, அமைச்சர் செந்தில் பாலாஜி இழுத்து கரன்ட் கம்பியில விட்டதால அந்நியனாக்கி டெரராக்கிட்டாய்ங்க...!

மின் கம்பத்தில் அணில்

பவர் கட்டுக்கு காரணம் அணிப்பிள்ளைதான்னு அமைச்சரே சொன்ன பெறகு அத மறுக்க முடியுமா? பேப்பரு, டிவி, யூ டியூப்பு, ஃபேஸ்புக்கு, ட்விட்டரு, வாட்ஸ் அப்புன்னு எல்லாத்துலயும் நம்ம ஆளுங்க அணிலைத்தான் வெறிகொண்டு தொரத்திட்டிருக்காய்ங்க.

நம்ம வீட்டு வாண்டுங்ககூட அணில் மேல காண்டாயிருக்காங்க.

அது என்னவோ தெரியல. என்ன மாயமோ தெரியலை, திமுக ஆட்சிக்கு வந்தாலே பவர் கட்டாகும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.

தேர்தல் ரிசல்ட் வரதுக்கு முன்பே நண்பர் ஒருத்தர் `திமுகதான் ஆட்சிக்கு வரும்'னு அடிச்சு சொன்னாரு. `எப்படின்னு?' கேட்டதுக்கு, `தமிழகத்தில் பல இடங்களில் பவர் கட் தொடங்கிடுச்சு'டுன்னு சொன்னதை முதல்ல வெளையாட்டா நெனைச்சேன். ஆனால் அது உண்மைன்னு இப்பத் தெரியுது.

மின் வாரியம்

`திமுக ஆட்சியில கரன்டு கம்பியில் துணி காயப் போட்டதை மக்கள் மறந்து விடக் கூடாது ?'னு அதிமுக அமைச்சர்கள் அடிக்கடி பேசுவாங்க.

அது கொஞ்சம் ஓவரா தெரிஞ்சாலும் உண்மை அதுதானே. அதிலும், அதிமுக ஆட்சியில அறிவிச்சுட்டு மாதந்தோறும் அரை நாள் ஷட் டவுன் செய்வாங்க...அவ்வளவுதான். ஆனா, கரன்ட் இப்படி கட் பண்ணி பார்க்கலயே.

இப்ப இருக்க சூழல்ல கரன்டு கம்பில மட்டுமில்ல, எச்.டி. லைன், டிரான்ஸ்பார்மர்ல கூட துணிகளைக் காயப்போடலாம்'ங்கிற நிலைமை உருவாகிடும் போலிருக்கு.

திமுக ஆட்சியமைச்சு மக்கள் மகிழ்ச்சியடையிற மாதிரி கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொண்ணா நிறைவேத்திட்டு வர்றாரு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனா, அதையெல்லாம் வெறுக்க வெச்சிடுச்சு பவர் கட் பிரச்னை. ஆட்சி மேல உருவாகிட்டு இருந்த நல்ல பேரை நாற வெச்சுட்டு இருக்கு கரன்ட் கட் பிரச்னை.

`புதிய மின் மாற்றிகளை மாற்றாமலே கடந்த ஆட்சியில் ஒப்பேற்றி விட்டார்கள். இப்போது நாங்கள் மாற்றுகிறோம்; அதனால் மின் தடை ஏற்படுகிறது'னு சொல்றாரு மின்சாரத்துறை அமைச்சர். நீங்க சொல்றதை ஏத்துக்கிறோம்... ஆனா, மாற்றுவழியை உருவாக்கிட்டுத்தானே நீங்க மாத்தணும். இன்னிக்கு குட்டி கிராமம் முதல் சென்னைப் பட்டணம் வரைக்கும் பவர்கட். நிலைமை இப்படியே போனா, கொரோனாவுக்கு கோயில் கட்டுன மாதிரி நம்மாளுங்க பவர் கட் பகவானுக்கும் கோயில் கட்டிடுவாங்க. அந்த அளவுக்கு தினம்தினம் அதிகமாகிட்டு இருக்கு பிரச்னை.

செல்லூர் ராஜூ -செந்தில் பாலாஜி

இத்தனை முக்கியமான புகாருக்கு வெளக்கெண்ணெய்ல முக்குன வெண்டைக்காய் மாதிரி அமைச்சர் விளக்கம் சொல்லியிருந்தாக்கூட மக்கள் குழப்பமா போயிருப்பாங்க.

இப்படி அணிலையெல்லாம் இழுத்து விட்டதைத்தான் ஏத்துக்க முடியாம தவிக்கிறாங்க. அதனால ஏற்பட்டிருக்க விளைவுகள் தமிழ்நாட்டுல அதிரி புதிரியா போயிட்டிருக்கு.

நம்ம ஊருல ரொம்ப சேட்டை பண்றவங்கள சனி புடிச்சவனேன்னு திட்டுவாங்க... இப்ப அணில் புடிச்சவனேன்னு திட்டுறாங்க...!

அனில் கபூர்

நடிகர் அனில் கபூர், கிரிக்கெட்டர் அனில் கும்ளே, தொழிலதிபர் அனில் அம்பானி எல்லோரும் இப்ப நம்ம ஆளுங்களுக்கு எதிரியா தெரியுறாங்க...!

சுந்தரா டிராவல்ஸ் படத்துல எலியைப் பார்த்தா வடிவேலு முகம் சிவக்கும்... இப்ப நம்ம மக்களுக்கு அணில்னு பேரைச்சொன்னாலே முகம் செவக்குது...!

சமீபத்துல பலசரக்கு கடையில பொருள் வங்க நின்னுக்கிட்டிருக்கும்போது வேகமா வந்து `பவர் கட் விலங்கு சேமியா' தாங்கன்னு கேட்டதை பார்த்து அதிர்ச்சியாயிட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது அந்த மனுஷர் கேட்டது அணில் சேமியான்னு...!

அணில் மீம்ஸ்

`டைனோசர், காட்ஸில்லா, கிங்காங்க வச்சு பிரமாண்டமா படமா எடுத்து மிரட்டுன ஹாலிவுட்காரன், அடுத்து அணில் கூட்டம் திரண்டு வந்து உலகத்தை இருட்டாக்கி மக்களை அழிக்கிற மாதிரி பயங்கரமான படம் எடுப்பான்'னு சொல்லுறான் ஊரடங்கு நேரத்துல ஓடிடில ஓவர்டைம் பாக்குற எங்க வீட்டு சுள்ளான்...!

இதைவிட மரண பங்கமா, ``என் செல்லக்குட்டி, பட்டுக்குட்டி, வயரில் எல்லாம் ஏறாதே, இதனால் அடிக்கடி கரன்ட் கட் ஆகுது. அக்கா அப்புறம் படிக்கணும், நீதான் கரன்ட் கட்டுக்கு காரணம்னு சொல்றாங்க. உன்னை போலீஸ் பிடிச்சிட்டு போயிடுவாங்க. அப்புறம் அக்கா உன்னை தேடிட்டிருப்பேன்"னு அணிலை கையில வெச்சுகிட்டு ஒரு சிறுமி மழலை மொழியில புத்தி சொல்ற வீடியோ சமூக ஊடகங்கள்ல வைரலாகிட்டு இருக்கு.

Squirrel

மரத்துலயும், வீட்டுக் கூரைலயும் ஓடிக்கிட்டு திரிஞ்ச அணிப்புள்ளையை இப்படி அனகோண்டாவோட புள்ளை மாதிரி உருமாத்திட்டாங்க....

தமிழ்நாடு முழுவதும் இப்ப இதுதாங்க பேச்சு...

முதுகுல மூணு கோட்டோடு சும்மா கெடந்த அணில் முதுக தேவையில்லாம சொறிஞ்சு விட்டுட்டாய்ங்க...

ஆட்சிக்கு வந்ததிலிருந்து பவர் கட்டானதுக்கு தொழில்நுட்பரீதியா எத்தனையோ காரணங்களை அமைச்சர் சொல்லியிருக்கலாம். இல்லைன்னா கரன்ட் கட் ஆகாம பார்த்திருக்கலாம். ஆனா, அணிலும் ஒரு காரணம்னு சொன்னாரு பாருங்க... அதைத்தான் ஏத்துக்க முடியல.

Squirrel

இதுக்கு பேசாம, `திமுக ஆட்சிக்கு வந்தா பவர் கட் வரத்தான் செய்யும்'ன்னு ஒடைச்சு சொல்லியிருந்தாக் கூட மக்கள் கவலைப்பட்டிருக்க மாட்டாங்க... ஏன்னா, 2006-லிருந்து 2011 வரை அதுல ஒரு கோர்ஸ் முடிச்சவங்கதானே நாம... பழகினதுதானேன்னு இருந்திருப்போம்.

அதிலும் சிட்னி விஞ்ஞானி, அதாங்க நம்ம செல்லூர் ராஜூ அடிச்சு துவம்சம் பண்றாரு. `ஹேப்பி... இன்றுமுதல் ஹேப்பினு' பாட்டு பாட ஆரம்பிச்சுட்டாரு.
``நோபல் மட்டுமில்ல, ஆஸ்காரையும் சேர்த்து செந்தில் பாலாஜிக்கு கொடுங்க, விஞ்ஞானிங்கிற பட்டத்தை விட்டுக்கொடுக்கிறேன்"னு சிபாரிசு வேற பண்றாரு... இதைவிட பங்கம் வேற இல்ல.

செல்லூர் ராஜூ

சத்தமில்லாம ஓரமா இதுங்கி இருந்த நத்தம் விஸ்வநாதன் கூட, ``பிரிக்க முடியாதது தி.மு.க ஆட்சியும் பவர் கட்டும்"னு திருவிளையாடல் வசனத்தைச் சொல்லிச் சொல்லி சிரிக்கிறாரு.

``அதிமுக ஆட்சியில வெளிநாட்டுக்கு போயிருந்த அணில்கள் இப்போது திரும்பி வந்துவிட்டது"னு ஆர்.பி.உதயகுமார் லந்தடிக்கிறாரு.

ஆர்.பி.உதயகுமார்

Also Read: "உங்க வீட்டு ஒயர்ல அணில் படுத்திருக்கு!"- அமைச்சர் செந்தில் பாலாஜியும், பவர்கட் பஞ்சாயத்தும்! #Memes

``சென்னையில் அணில்கள் பூமிக்கடியில் ஓடுகிறதோ" ன்னு சந்தேகத்தை கிளப்புறாரு மருத்துவர் ராமதாஸ்.

எதிர்க்கட்சியினர் ஒருபக்கம், சமூக ஊடகங்கள் மறுபக்கம்னு இந்தப் பிரச்னையை வச்சு செய்ய.... அதற்கும் பொறுமையா விளக்கம் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி, ``அணிலால் இங்கு மட்டுமல்ல, அமெரிக்காவிலும் மின் தடை ஏற்படுகிறது. அணில்களால் மின் தடை ஏற்படுவது பல நாடுகளில் நடக்கிறது. இதற்கான ஆதாரங்கள் நிறைய காட்ட முடியும். அது மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் மின் பராமரிப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மின் தடை ஏற்படுகிறது. கடந்த ஆட்சியில் 9 மாத காலமாக மின்மாற்றிகள் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை.

செந்தில் பாலாஜி

Also Read: ‘நவீன விஞ்ஞானி’ செந்தில் பாலாஜி! - கலாய்க்கிறார் முன்னாள் ‘விஞ்ஞானி’ செல்லூர் ராஜூ

தற்போது பணிகள் முடிந்ததும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். சென்னையில் பூமிக்கடியில் அணில்கள் ஓடுகிறதா என்று டாக்டர் ராமதாஸ் ட்வீட் போட்டிருந்தார். பூமிக்கடியில் பெருச்சாளிகள் வயரை கடித்து மின் தடையை ஏற்படுத்தும் என்பதை நான் சொன்னதும் அவர் ட்வீட்டை எடுத்துவிட்டார்" என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.

``எல்லாம் சரிதான், போன அதிமுக ஆட்சியிலும் மின் கம்பியில அணில்கள் ஓடியிருக்குமே... அப்ப இந்த பவர் கட் இல்லையே. இப்ப மட்டும் அம்பியா இருந்த அணில்கள் எப்படி அந்நியனா மாறிச்சு?" இதுதாங்க எங்களை மாதிரி மாண்புமிகு. பொதுஜனங்களோட கேள்வி. இதுக்கு என்ன பதில் சொல்லப்போறாரு அணில்துறை அமைச்சர்... மன்னிக்கவும் மின்சாரத்துறை அமைச்சர்.

அடுத்த மேட்டர் ட்ரெண்டாகும் வரை அணில்தான் இப்போ..!



source https://www.vikatan.com/oddities/humoursatire/satire-article-on-minister-senthil-balajis-statement-on-power-cut-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக