Ad

வியாழன், 29 செப்டம்பர், 2022

பாஜக, இந்து அமைப்பு நிர்வாகிகள் இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு - கவனிக்கப்படும் அண்ணாமலை ‘மூவ்’

தொடர்க் குண்டு வீச்சு :

கோவை, திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல், செங்கல்பட்டு, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளால் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவமும், அவர்களின் வாகனங்களை தீ வைத்து எரிக்கும் சம்பவமும் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பெட்ரோல் குண்டு வீச்சு

கோவையில் அதிகப்படியான இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்ததையடுத்து, அங்கு காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். தலைமைச் செயலர் இறையன்பு, சட்டம் - ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

பாஜக மனு:

இந்நிலையில், பாஜக அலுவலகம், அந்தக் கட்சியின் பிரமுகர்களின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எழுதிய கடிதத்தை, கட்சியின் நிர்வாகிகள் உள்துறைச் செயலரிடம் வழங்கியுள்ளனர். மேலும், இதுகுறித்து டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடமும் மனு வழங்கப்பட்டிருக்கிறது.

பாஜக மனு

இந்த சம்பவம் தொடர்பாக டி.ஜி.பி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர், குற்றச்செயலில் ஈடுபடுவோர், தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். குற்றச்செயலில் ஈடுபடுவோர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. இதுவரை 250 பேரிடம் விசாரணை நடக்கிறது. கோவையில் கூடுதலாக 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடு, கார் மீது கல்வீசியது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விளக்கம்:

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், ``இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு நடத்திவருகின்றோம். அமைதியைச் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாயும். நகரின் 28 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த அண்ணாமலை

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், ``தனக்கு தானே பெட்ரோல் குண்டு வீசி விளம்பரம் தேடிக் கொண்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறைச் சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தென் மண்டலத்தில் சுமார் 20 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்" என்று கூறியிருந்தார்.

முதல்வருக்கு எச்சரிக்கை:

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளரிடம் பேசிய அண்ணாமலை, ``தமிழ்நாட்டில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது. அதனால், அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. இதனைப் பலமுறை கூறியுள்ளோம். தாக்குதல் நடத்துவதால் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. இந்த சூழல் தொடர்ந்தால், தொடர்களின் கோபத்துக்கு அரசு ஆளாகும். குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும். பாஜகவைச் சேர்ந்தவர்களை உளவுத்துறையினர் உன்னிப்பாக கண்காணிக்கிறார்கள். அண்ணாமலை என்ன செய்கிறார். என்ன சாப்பிடுகிறார் எனக் கண்காணிப்பவர்கள், கலவரம் செய்பவர்களைக் கண்காணிப்பதில் என்ன பிரச்னை.

கோவை பாஜக போராட்டம்

தேசத்துக்கு எதிராகப் பேசக்கூடிய சக்திகள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரை மணி நேரம் போதும். பாரதிய ஜனதா கட்சி அமைதியே விரும்பக் கூடிய கட்சி. தமிழ்நாடு அரசின் செயல்பாடு, காவல்துறையின் செயல்பாடுகளை அடுத்த இரண்டு நாள்களுக்குப் பார்ப்போம். அதன் பிறகு எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் எடுப்போம். பாஜக-வினரை கைதுசெய்வதில் இவர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், பாஜக நண்பர்கள், சகோதரர்கள்மீது நடத்தப்படக்கூடிய தாக்குதல்களில் தொடர்புடையவர்களைக் கைதுசெய்வதில் ஏன் இந்த மெத்தனப்போக்கு எனத் தெரியவில்லை. சட்டத்தை எங்களுடைய கையில் எடுப்பதற்கு எங்களுக்கு விருப்பம் கிடையாது. பாஜக அமைதியின் வழியில் செல்ல வேண்டும் என நினைக்கிறது. தொடர்ந்து இது போன்ற தாக்குதல்கள் நடந்தால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கிறோம்" என்று பேசியிருந்தார்.

போராட்டம் செய்யும் பாஜக:

திருப்பூர், கோவை சென்ற அண்ணாமலை, அங்கே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களுக்குச் சென்று நிர்வாகிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும், நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாகச் சேத மதிப்புகளை ஆய்வு நடத்தி அந்த தகவல்களை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளார். அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசியதாகவும் கூறியுள்ளார். அதோடு, இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, அண்ணாமலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடமும் தொலைபேசியில் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையில் பாஜக போராட்டம்

கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், கோவையில் போராட்டம் நடத்த காவல்துறை தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவை மீறி, அண்ணாமலை தலைமையில், கோவை சிவானந்த காலனி பகுதியில் ``தமிழக சட்டம் ஒழுங்கில் மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வேண்டுமென்றே கைது செய்வதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்" நடைபெறும் என்று தமிழக பாஜக அறிவித்தபடி அங்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளால் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது குறித்து, அண்ணாமலை, பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பது, ஆய்வு மேற்கொள்வது, ஆய்வு செய்யக் குழு, கண்டன ஆர்ப்பாட்டம், மத்திய அரசுக்குக் கடிதம் என்று அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-next-step-in-annamalai-when-petrol-bombs-are-being-hurled-at-bjp-cadres-in-tn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக