Ad

செவ்வாய், 5 ஜனவரி, 2021

புதுச்சேரி அரசியலை கலக்கும் காங்கிரஸ் - பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் புகைப்படம்! - பின்னணி என்ன?

புதுச்சேரியில் 2016 சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. தொடர்ந்து தேர்தலை சந்திக்காத நாராயணசாமியை முதல்வராக்கியது காங்கிரஸ் கட்சியின் தலைமை. அதே வேகத்தில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக  கிரண் பேடியை நியமித்து நாராயணசாமி தலைமையிலான ஆட்சிக்கு ‘செக்’ வைத்தது மத்திய பா.ஜ.க அரசு.

கிரண் பேடி - நாராயணசாமி

கிரண் பேடியும், மாநில அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தினார். அப்போதிலிருந்து `யாருக்கு அதிகாரம்?’ என்ற விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கும், அமைச்சரவைக்கும் மோதல் நீடித்துவருகிறது. இதற்கிடையில் ஆட்சியில் அமர்ந்ததும் நிலவிய உள்கட்சி பூசலால், 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்கும் விவகாரத்தை தாமதமாக்கினார் முதல்வர் நாராயணசாமி.

ஒருகட்டத்தில் நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்கும் விவகாரத்தை நாராயணசாமி கையிலெடுத்தபோது, மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பா.ஜ.க நிர்வாகிகளை எம்.எல்.ஏக்களாக நியமித்து உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். அவர்களுக்கு இரவோடு இரவாக பதவிப் பிரமாணம் செய்துவைத்து அதிர்ச்சி கொடுத்தார் கிரண் பேடி. அன்றுமுதல் கிரண் பேடிக்கு நிகராக அந்த 3 எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவைக்குள்ளேயே ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள்

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது காங்கிரஸ் கட்சி. உடனே ஆளுநர் மாளிகை இருக்கும் பகுதியில் 144 தடையுத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க். அதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் துணை இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று பா.ஜ.கவும் அறிவித்திருப்பதால் புதுச்சேரியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Also Read: `புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே தொடரும்!' - மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

இந்தச் சூழலில்தான் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார், பா.ஜ.கவின் நியமன எம்.எல்.ஏக்கள் சாமிநாதன்(புதுச்சேரி பா.ஜ.க தலைவர்), சங்கர் அனைவரும் ஒரே அறையில் அமர்ந்துகொண்டு உணவருந்தும் புகைப்படம் கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் படத்தின் பின்னணி தெரியாததால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சில காங்கிரஸ் தொண்டர்களும் குழம்பிப் போய் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏனாம் பிராந்தியத்தின் எம்.எல்.ஏவும், தற்போதைய அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணராவ் புதுச்சேரி சட்டப்பேரவை சார்பில் சிறந்த எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக பணியாற்றிய அவருக்கு இன்று மாலை ஏனாமில் பாராட்டு விழாவை நடத்துகிறது புதுச்சேரி சட்டப்பேரவை செயலம். அதற்காக முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களும், பா..ஜ.கவின் நியமன எம்.எல்.ஏக்களும் ஏனாம் சென்றிருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/news/background-behind-the-viral-picture-of-congress-bjp-mlas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக