Ad

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

`குடியரசு தின சம்பவத்தால் நாடே அதிர்ச்சியடைந்தது!’ - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுகிழமையன்று `மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களுடன் உரையாடிவருகிறார்.

அதன்படி, 2021-ம் ஆண்டிற்கான முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சி, இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

மோடி தனது 'மன் கி பாத்' உரையில், கடந்த மாதம் நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும், தேசிய தலைநகர் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் டெல்லி காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைகள் உட்பட அனைத்தையும் எடுத்துரைத்தார். இதற்கிடையில், ``ஜனவரி 26-ம் தேதி இந்தியாவின் மூவர்ணக் கொடி அவமதித்ததைக் கண்டு இந்தியா அதிர்ச்சியடைந்தது. வன்முறை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது. வேளாண் துறையை நவீனமாயமாக்க அரசு எடுக்கும் பல்வேறு முயற்சிகள் தொடரும். நாம் இனி வரும் காலங்களை நம்பிக்கை புதுமை ஆகியவற்றால் நிரப்ப வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, "புதிய ஆண்டு துவங்கியவுடன், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போர் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக மாறியது போலவே, நமது தடுப்பூசி திட்டமும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக மாறி வருகிறது. எங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் நாங்கள் வேகமாக செயல்பட்டு, உலகிற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறோம்" என்றார்.

தடுப்பு மருந்து

மேலும், "உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும். மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் துறையில் இந்தியா இன்று தன்னம்பிக்கை கொண்டுள்ளதால் மட்டுமே இந்தியாவால் மற்றவர்களுக்கு உதவ முடிந்தது" என்றார்.

மேலும் 'மன் கி பாத்' உரையில் தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, "நம்முடைய நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பிடும்படியாக நம்முடைய இளைய நண்பர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களை பற்றியும், அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் பற்றியும் எழுதுங்கள். தங்களுடைய பகுதியில் நடந்த வீரதீர நிகழ்வுகளை நூல்களாக எழுத வேண்டும்” என்று மோடி வேண்டுகோள் விடுத்தார்.

``இந்தியா தனது 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட போகிறது. உங்களுடைய எழுத்துகள் சுதந்திர போராட்ட நாயகர்களுக்கு ஒரு தனித்துவம் வாய்ந்த அஞ்சலியாக இருக்கும்” என்றார்.

செவிலியர்கள்

பெண் விமாணிகளின் குழுவிற்கு பாராட்டு:

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானங்களின் முதல் இடைவிடாத விமானத்தை இயக்கிய நான்கு பெண்களை மோடி பாராட்டினார். ``10,000 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய இந்த விமானம் 225 பேரை இந்தியாவுக்கு அழைத்து வந்தது. எந்தவொரு துறையாக இருந்தாலும், நாட்டின் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று கூறினார்.

முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது இந்தியாவின் முன்னுரிமை :

இந்தியாவின் தற்போதைய தடுப்பூசி இயக்கத்தின் வெற்றி குறித்து பேசிய மோடி, நமது தடுப்பூசி திட்டம், உலகிலேயே மிகப்பெரியது. கொடிய தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போரில் முன்னணியில் இருக்கும் கொரோனா வீரர்களுக்கு தடுப்பூசி போடுவது நாட்டின் முன்னுரிமை" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/india-saddened-on-republic-day-event-says-pm-modi-speech-in-mann-ki-baat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக