Ad

சனி, 30 ஜனவரி, 2021

மும்பை: `வன்கொடுமை வழக்கு; வலுவான ஆதாரம் தேவை!’ -10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதி

மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலா அடுத்தடுத்து வழங்கிய தீர்ப்புகள் விவாதத்தை கிளப்பி வருகிறது. முன்னதாக, சிறுமியை தொட்டு மானபங்கம் செய்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பே விவாதபொருள் ஆன நிலையில், மற்றொரு வழக்கில் மைனர் பெண் முன்னிலையில் ஜிப்பை கழற்றுவது மற்றும் சிறுமியின் கையை பிடிப்பது பாலியல் வன்முறை என்றாகாது என்று கூறினார்.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில், `பெண்ணின் வாயை பொத்தி, அவரது ஆடையை கழற்றி எந்த வித கைகலப்பும் இல்லாமல் குற்றவாளி வன்முறை செய்திருக்க முடியாது’ என்று நீதிபதி புஷ்பா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் பகுதியை சேர்ந்த 15 வயது மைனர் பெண் இரவு வீட்டில் தனியாக இருந்த போது அங்கு அத்துமீறி நுழைந்த சூரஜ் காசர்கர் என்பவர், அப்பெண்ணின் வாயை மூடி, ஆடையை கழற்றி பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.

நீதிபதி புஷ்பா

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்துள்ள புகாரில், `இரவு 9.30 மணிக்கு நான் வெளியில் சென்று இருந்த போது, குடிபோதையில் வீட்டிற்குள் வந்த சூரஜ், எனது மகளின் வாயை பொத்தி, ஆடையை கழற்றி வன்கொடுமை செய்துவிட்டு தப்பிஓடிவிட்டார். நான் வீட்டிற்கு வந்த போது என்னிடம் எனது மகள் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அதன் அடிப்படையில் புகார் செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண் 18 வயதை கடந்தவரா என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து சூரஜ் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல் முறையீடு செய்தார். இம்மனு நிதிபதி புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது.

குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இச்சம்பவம் இருவரும் விருப்பப்பட்டு செய்தது என்றும், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு சம்பவம் நடந்த போது 18 வயதை தண்டி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்துள்ள வாக்குமூலம் நீதிமன்றம் நம்பும்படியாக இல்லை. கட்டாய வன்கொடுமை செய்யப்பட்டு இருந்தால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு நடந்திருக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை

ஆனால் மருத்துவ அறிக்கையில் கைகலப்பு நடந்ததற்கான அறிகுறியோ அல்லது காயமோ ஏற்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. குறுக்கு விசாரணையிலும் பாதிக்கப்பட்ட பெண் தனது தாயார் வராமல் இருந்திருந்தால் சம்பவம் குறித்து புகார் செய்திருக்கமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு கட்டாய வன்கொடுமை என்றால் வாயை பொத்தி, ஆடையை கழற்றி எந்த வித கைகலப்பும் இல்லாமல் ஒருவரால் வன்கொடுமை செய்திருக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

கடுமையான தண்டனைக்கு வலுவான ஆதாரம் தேவை. வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் போதுமானது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அதேசமயம் அரைகுறையான வாக்குமூலத்தால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடக்கூடாது என்றும் கூறி கீழ் கோர்ட் வழங்கிய 10ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து விடுவித்தார். ஏற்கனவே சர்ச்சைக்குறிய தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி புஷ்பாவின் எதிர்கால பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு சர்ச்சைக்குறிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Also Read: நாக்பூர்: சர்ச்சை தீர்ப்பளித்த நீதிபதி...`நிரந்தர நீதிபதி' பரிந்துரையைத் திரும்பப் பெற்ற கொலீஜியம்!



source https://www.vikatan.com/news/crime/no-chance-of-rape-without-protest-verdict-in-mumbai-high-court

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக