அமைச்சர் செல்லூர் ராஜூ சர்ச்சைக்குரிய வகையில் பேசி, பின்பு அதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், யாதவ சமூக அமைப்புகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதுபரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ, தி.மு.க தலைவரை விமர்சித்து பேசும்போது குறிப்பிட்ட சாதியினரை பற்றி இழிவாகப் பேசியதாக புகார் எழுந்தது. இது ஊடகங்களில் பரவியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அதற்கு உடனே விளக்கம் அளித்த செல்லூர் ராஜூ, ``செய்தியாளர் சந்திப்பில் யதார்த்தமாக பழமொழியை குறிப்பிட்டேன். நான் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. தேர்தல் நேரத்தில் எனக்கு சாதி சாயம் பூச வேண்டாம். அப்படி பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பிட்ட சமுதாயம் குறித்து நான் பேசியதாக நினைத்தால் வருத்தம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்" என்றார்.
இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி செல்லூர் பகுதியில் யாதவர் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து ஆர்பாட்டம் நடத்தினார்கள். அதோடு அருகிலிருக்கும் செல்லூர் ராஜூவின் வீட்டை முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
ஆர்பாட்டத்தில், ``இதற்கு முன் எங்கள் சமூகத்தை சேர்ந்த எம்.பியை இழிவாகப் பேசினார். அடுத்து, செல்லூரில் எங்கள் சமூகத்தின் அடையாளமான அழகு முத்துக்கோன் சிலை வைக்க அனுமதி கேட்டதற்கு மாநகராட்சி அனுமதி அளிக்கவில்லை. ஆனால், அதே இடத்தில் கபடி வீரர் சிலையை வைக்க அமைச்சருக்கு அனுமதி அளித்துள்ளனர். இப்படி இவர் தொடர்ந்து யாதவ சமூகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இவரை முதலமைச்சர் எடப்பாடி, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்று பேசினார்கள்.
இதேபோல் சங்கரன்கோவிலில் யாதவ சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு செல்லூர் ராஜூவின் படத்தை எரித்து கைதானார்கள். திருச்செந்தூரிலும் ஆர்பாட்டம் நடத்தினார்கள். பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், பல்வேறு மாவட்ட யாதவ சமூக அமைப்பினர் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் இந்த பிரச்னை பூதாகரமாகி வருகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/tn-minister-sellur-raju-speech-create-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக