Ad

வியாழன், 21 ஜனவரி, 2021

வீட்டுச்சாப்பாடு விற்பவர்களுக்கும் வந்துவிட்டது கட்டுப்பாடு... FSSAI-ன் புதிய விதிமுறை சொல்வது என்ன?

வீட்டிலிருந்து சமைத்து விற்பனை செய்து வருபவர்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சமூக ஊடகங்கள் வழியே கண்காணித்து வருகிறார்கள், மேலும் உணவுப் பொருள்கள், வீட்டில் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப் படுவதைக் கண்டுபிடிக்க நகரம் முழுவதும் உள்ள சில்லறைக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில், பல்வேறு தொழில் செய்து வருபவர்களும், தொழிற்சாலை பணியாளர்களும் தனியே வசித்து வருவது வழக்கம். சில வீடுகளில் கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்பவர்களாக இருப்பார்கள். தினம் வீட்டில் சமைத்து, சாப்பிட நேராமில்லாதவர்களுக்கும், சமைக்கத் தெரியாதவர்களுக்கும் உதவும்வகையில் நகரத்தில் பல்வேறு இடங்களில் உணவை வீட்டிலேயே சமைத்து விற்பனை செய்து வருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

உணவு/ Representational Image

வீட்டிலிருந்து உணவைத் தயாரித்து விற்கும் நபர்களுக்கு தற்போது புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI). இனி, தனிநபர் தங்கள் வீடுகளில் உணவை சமைத்து, விற்பனை செய்ய மாநிலத் துறையின் ஒப்புதலை அல்லது உணவுப் பாதுகாப்புத்துறையின் ஒப்புதலைப் பெற்று உரிமம் பெற வேண்டும்.

உணவுப் பொருள்களை வீட்டிலிருந்து சமைத்து விற்பனை செய்பவர்களின், ஆண்டு வருமானம் ரூபாய் 12 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் மாநில உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்ய வேண்டும், ரூபாய் 12 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மாநில அரசின் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த மூன்று வாரங்களுக்குள் உரிமம் வழங்கப்படும் என்றும், விண்ணப்பிக்கத் தவறினால், முதலில் அவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டு, அதையும் மீறும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். உணவுப் பாதுகாப்புத் துறையின் ஒப்புதல் பெறாமல், விதியை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், வீட்டிலிருந்து சமைத்து விற்பனை செய்யும் உணவு வணிகங்கள் பெருகிய பின்னர், கடந்த மூன்று மாதங்களில் இந்தச் செயல்முறையை விரைவுபடுத்தியதாகவும், இதுவரை சுமார் 150 வணிகங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் கூறுகையில், ``ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து, தயாரிப்புகளின் தரம் குறைவாக இருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் உணவு வணிகங்களைக் கண்டுபிடித்து புகார்களை ஆராயத் தொடங்கினோம். ஆனால், ஒவ்வொரு முறையும் நாங்கள் சரிபார்க்கச் சென்றபோது, குடியிருப்பு வளாகங்களுக்குள் இன்னும் பல வீட்டு உணவங்கள் இயங்குவதைக் கண்டோம். அந்த உணவங்களைக் கண்டறிய சமூக ஊடகங்கள், சில்லறைக் கடைகள், குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்களை அணுக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் வீட்டு உணவங்கள் அனைத்தையும் உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் கொண்டு வந்து ஒழுங்குபடுத்த முடியும்" என்றார்.

உணவு / Representational Image

உரிமம் விண்ணப்பிக்கும் முறை

உணவுப் பொருள்களை வீட்டில் சமைத்து விற்பனை செய்து வருபவர்கள், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உரிமம் பெற உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) foscos.fssai.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து பதிவு உரிமங்களை வழங்குவார்கள்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) விதி 2011 கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் சடகோபன், "வீட்டு உணவு வணிகத்தின் உரிமம் பதிவு செய்ய வலியுறுத்துவதற்கு முன்பு, அதிகாரிகள் முதலில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகள் மற்றும் செய்ய வேண்டியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

- ஹரீஷ். ம



source https://www.vikatan.com/news/healthy/fssai-new-rule-on-home-chefs-for-business-registration

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக