Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

`தனியார் ஆங்கிலப் பள்ளி டு அரசுப் பள்ளி!’ - அட்மிஷனில் கலக்கும் ஈரோடு மாநகராட்சிப் பள்ளி

கொரோனா சூழலால் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே பாதுகாப்பு வழிமுறைகளுடன் மாணவர் சேர்க்கையை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது என்ற நிலையே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு அந்த நிலைமை தலைகீழாக மாற ஆரம்பித்திருக்கிறது. கொரோனாவால் கைகளில் பணப்புழக்கம் இல்லாத பல குடும்பங்கள், தனியார் மற்றும் ஆங்கிலப் பள்ளிகளில் படித்துவந்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

பள்ளியில் நடைபெறும் அட்மிஷன்

குறிப்பாக, ஈரோட்டில் சி.பி.எஸ்.சி, மெட்ரிக்குலேஷன், தனியார் பள்ளிகளில் படித்துவந்த பல குழந்தைகள் ஈரோடு எஸ்.கே.சி சாலையிலுள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு பெருந்துறை தனியார் பள்ளியில் தமிழாசிரியாக இருக்கும் சரவணக்குமார் என்பவர் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துவந்த அவருடைய மகனை 6-ம் வகுப்பில் சேர்த்திருக்கிறார்.

மகன் அட்மிஷனின் போது கார்த்திகேயன்

அதேபோல ஈரோடு கச்சேரி வீதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர், சி.பி.எஸ்.சி பள்ளியில் படித்து வந்த அவருடைய மகனை 8-ம் வகுப்பில் சேர்த்திருக்கிறார். `இன்னைக்கு கல்வி பெரிய வியாபாரம் ஆகிடுச்சிங்க. அரசுப்பள்ளி புத்தகங்கள் தொடங்கி, கல்வி வரை எல்லாமே நல்லாத்தான் இருக்கு’ என்று கூறும் ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், ஆங்கிலப் பள்ளியில் யூ.கே.ஜி முடித்த அவருடைய மகனை 1-ம் வகுப்பில் சேர்த்திருக்கிறார்.

Also Read: சிவகங்கை: `213 டு 1,320; அதிகரித்த மாணவர் சேர்க்கை!’ - அரசுப் பள்ளி அட்மிஷனுக்கு போட்டி

ஈரோடு எஸ்.கே.சி சாலையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரோ, ``ஈரோட்டிலுள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில்தான் என்னோட பொண்ணும், பையனும் படிச்சிட்டு வந்தாங்க. இப்போ பையனை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பிலும், பொண்ணை அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பிலும் சேர்த்திருக்கேன். நானும், என்னோட மனைவியும் டெய்லரிங் தான் செஞ்சிக்கிட்டு இருக்கோம். எப்படியாவது குழந்தைகளைப் படிக்க வச்சு வாழ்க்கையில மேல ஏத்தி விட்டுடலாம்ங்கிற குருட்டு நம்பிக்கையில இதுவரைக்கும் படிப்புக்காக மட்டுமே 15 லட்ச ரூபாய் செலவு செஞ்சிருக்கேன். வட்டிக்குக் கடனை வாங்கி, மனைவி நகையை அடகு வச்சின்னு சிரமப்பட்டுதான் இதுவரைக்கு புள்ளைங்களை படிக்க வச்சேன்.

தலைமையாசிரியர் சுமதி

கொஞ்ச ஆங்கில அறிவுக்காக இவ்வளவு காசைக் கொட்டணுமான்னு கொரோனா காலத்துல யோசிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைச்சது. ஒரே ராத்திரியில முடிவு செஞ்சு, குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாற்றி சேர்த்துட்டோம்” என்றார்.

மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சுமதியிடம் பேசினோம். ``வசதியில்லாத பலரும் கூட ஈகோ, ஸ்டேட்டஸ்க்காக அவர்களுடைய குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் படிக்க வைத்து வருகிறார்கள். கடுமையான பொருளாதாரப் பிரச்னைகள் இருந்தாலும் ஆங்கிலப் பள்ளிகளில் குழந்தைகள் படிப்பதைப் பெருமையான நினைக்கின்றனர். அந்த எண்ணம் இந்த கொரோனா சூழலில் ஓரளவு மாறியிருக்கிறது. பல பெற்றோர்கள் ஆங்கிலப் பள்ளிகளில் படித்துவந்த அவர்களுடைய குழந்தைகளை, அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதுவரை எங்கள் பள்ளியில் 17 அட்மிஷன் ஆகியிருக்கிறது. அதில் 5 பேர் தனியார் ஆங்கிலப் பள்ளியிலிருந்து வந்தவர்கள்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/education/erode-corporation-government-school-gets-good-number-of-admissions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக