Ad

சனி, 31 ஜூலை, 2021

புதுக்கோட்டை: 400 ரூபாயைத் திருப்பிக்கேட்ட இளைஞர் கொலை; தம்பதிக்கு ஆயுள் தண்டனை!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பூவற்றக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. கொத்தனார் வேலை பார்த்து வந்த துரை, அதே பகுதியைச் சேர்ந்த நாகூரான் என்பவரிடம் ரூ.1000 பணத்தைக் கடனாக வாங்கியுள்ளார். அதில் 600 ரூபாயை துரை, நாகூரானிடம் திரும்பிக் கொடுத்துவிட்ட நிலையில் ரூ.400-ஐக் கொடுக்காமல் நீண்டநாள் நாகூரானை அலையவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், நாகூரானின் மகன் மாரிமுத்து (22) மீதிப் பணத்தைக் கேட்டு துரையின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது மாரிமுத்து, துரை மற்றும் அவரது மனைவியையும் கோபமாகப் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த கணவன் மனைவி இருவரும் மாரிமுத்துவைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.

Also Read: தஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

கடந்த 2019ல் நடந்த இந்தச் சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி அப்துல் காதர் பரபரப்பு தீர்ப்பு கொடுத்தார். கணவன்- மனைவி இருவருக்கும் 342 பிரிவின் கீழ் ஒரு மாத சிறைத் தண்டனை, ரூ.400 அபராதமும், 302 பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.400 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு கொடுத்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை எனத் தீர்ப்பு எழுதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட துரையை அறந்தாங்கி கிளை சிறைக்கும், செல்வராணியை திருச்சி பெண்கள் மத்தியச் சிறையிலும் அடைத்தனர்..



source https://www.vikatan.com/news/crime/in-puthukottai-youth-killed-by-the-couple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக