Ad

வெள்ளி, 30 ஜூலை, 2021

இன்ஸ்டாகிராம் அறிமுகம்; காதல் தொல்லை! -மருத்துவ மாணவியை சுட்டுக்கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் நாறாத்து இரண்டாம் மைல் பகுதியைச் சேர்ந்தவர் மானஷா(24). இவரது தந்தை மாதவன் கண்ணூர் போக்குவரத்து காவல் துறையில் ஹோம்கார்டாக பணி செய்து வருகிறார். தாய் பீனா பள்ளி ஆசிரியராக இருக்கிறார். மானஷா கொச்சி கோதமங்கலம் நெல்லிக்குழி இந்திராகாந்தி தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்தார். இவர் தனது தோழிகளுடன் கல்லூரிக்கு அருகிலேயே ஒரு வீட்டின் மேல் பகுதியில் அறை எடுத்து வசித்து வந்தார். நேற்று மாலை 3 மணி அளவில் மானஷா தங்கியிருந்த அறைக்கு கண்ணூர் மாவட்டம் தலசேரியை அடுத்த மேலூரைச் சேர்ந்த ராஹில்(32) என்பவர் சென்றுள்ளார். அங்கு மானஷாவும், அவருடன் வசிக்கும் மூன்று மாணவிகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் மானஷா. அப்போது ராஹில் அங்கு சென்றதும் இங்கு எதற்காக வந்தாய் எனக் கேட்டுள்ளார் மானஷா. உடனே ராஹில், மானஷாவை பிடித்து இழுத்து அருகில் இருந்த அறைக்கு கொண்டு சென்றுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த சக மாணவிகள் வீட்டு உரிமையாளரிடம் தகவல் சொல்லுவதற்காக சென்றுள்ளனர். அந்த சமயத்தில் மானஷா தங்கியிருந்த அறையில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே அங்கு சென்று பார்த்தபோது மானஷாவும், ராஹிலும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அதைப்பார்த்து மாணவிகள் அலறினர்.

ராஹில், மானஷா

சத்தம் கேட்டு கூடிய அப்பகுதி மக்கள் இருவரையும் ஆட்டோவில் கோதமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோதமங்கலம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அங்கு சென்று இரண்டுபேரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கியையும் போலீஸார் கைப்பற்றினர்.

Also Read: கேரளா: குறையாத கொரோனா... 16 நாள்களில் 50-ஐ கடந்த ஜிகா வைரஸ் பாதிப்பு!

மானஷாவின் தலை மற்றும் மார்பின் கீழ் பகுதி என இரண்டு இடங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. ராஹிலின் தலைப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. இதுகுறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மானஷாவும், ராஹிலும் இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகியுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் ராஹிலின் நட்பை துண்டித்துள்ளார் மானஷா. ஆனால் ராஹில் காதல்வலை வீசி தொடர்ச்சியாக மானஷாவுக்கு தொல்லை கொடுத்திருக்கிறார். ஆனால் ராஹிலை விட்டு விலகி சென்றுள்ளார் மானஷா. ராஹிலின் தொல்லை அதிகரிக்கவே இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மானஷாவின் தந்தை மாதவன் கண்ணூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் ராஹிலை விசாரித்த போலீஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

துப்பாக்கியால் சுட்டு மாணவி கொலை செய்யப்பட்ட கட்டடம்

இதற்கிடையில் கடந்த 4-ம் தேதி வாக்கில் நெல்லிக்குழிக்குச் சென்று லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருக்கிறார் ராஹில். அப்போது மானஷா தங்கியிருக்கும் இடம் உள்ளிட்டவைகளை கண்காணித்துவிட்டு மீண்டும் கண்ணூர் சென்றிருக்கிறார். அதன் பிறகு நேற்று துப்பாக்கியுடன் நெல்லிக்குழிக்குச் சென்று மானஷாவை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கிறார் ராஹில். அவருக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் மருத்துவ மாணவி கொலைச்செய்யப்பட்ட சம்பவம் கேரளத்தை உலுக்கியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/medical-student-was-killed-by-the-youngster-who-killed-himself-after-that-in-kerala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக