Ad

புதன், 28 ஜூலை, 2021

5 ஆண்டுகளில் 20 கோடி பேர்; ஐரோப்பாவை வதைத்த புபோனிக் பிளேக்! - கொள்ளை நோய்களின் வரலாறு - பகுதி 4

முந்தைய அத்தியாயங்கள்

1. சிர்கா முதல் கோவிட் வரை; உலகை உலுக்கிய கொள்ளை நோய்களின் வரலாறு! - பகுதி 1

2. ரோமப் பேரரசையே புரட்டிப்போட்ட பிளேக்; உலகை உலுக்கிய கொள்ளை நோய்களின் வரலாறு - பகுதி 2

3. 200 ஆண்டுகளாக உலகை உலுக்கிய ஜஸ்டினியன் பிளேக்! - கொள்ளை நோய்களின் வரலாறு - பகுதி 3

புபோனிக் பிளேக் (காலம் கி.பி. 1346 - 1351)

கி.பி 1347-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கருங்கடலைக் கடந்து, ஐரோப்பா கண்டத்தின் மத்திய தரைக்கடலை நோக்கி விரைந்துகொண்டிருந்தன அந்த 12 கப்பல்கள். மெசினாவிலுள்ள சிசிலியன் துறைமுகத்துக்கு வந்தடைந்த வணிகக் கப்பல்களில்தான் இந்த முறையும் ஆபத்து காத்திருந்தது! ஆனால், இம்முறை சற்றே வேறுவிதமாக இருந்தது. வழக்கமாகக் கப்பலிலிருந்து சரக்குகளை இறக்க வந்த மக்களின் கண்முன்னே, இறந்துபோன மாலுமிகளின் சடலங்கள் குவிந்துகிடந்தன.

அதிர்ந்துபோன மக்கள், என்ன செய்வதென்றே புரியாமல் திகைத்து நிற்க, அங்கே மரண ஓலங்கள்... ஆம் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்த சில மாலுமிகளின் முனகல்கள்தான் அவை. உடல்முழுவதும் ஆப்பிள் வடிவ கொப்புளங்களும், அவை உடைந்து ரத்தமும் சீழுமாக அவர்களின் உடல்களை உருத்தெரியாமல் கொதறிப்போட்டிருந்தது அக்கொடூர நோய். கேட்பதற்கே, நெஞ்சம் பதைபதைக்க, அந்தக் காட்சிகளை நேரில் கண்டவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்! நம்மால் கற்பனைகூட செய்திட முடியாது. ஏதோ ஓர் ஆபத்து, கப்பலேறி வந்திருக்கிறது என்று மட்டும் உணர்ந்துகொண்ட சிசிலியன் துறைமுக அதிகாரிகள் அவசர அவசரமாக அந்த `மரணக் கப்பல்களை' துறைமுகத்துக்கு வெளியே அப்புறப்படுத்தக் கட்டளையிட்டனர். ஆனால், அது மிகவும் தாமதமான செயல்!

Bubonic plague

அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஐரோப்பாவில் இருந்த 20 கோடி மக்களை இதேபோல் இரக்கமின்றிக் கொன்று தின்றது அந்த் நோய். இந்த எண்ணிக்கை ஐரோப்பா கண்டத்தின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு. இந்த அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்திய ஒரு நோயைப்போல் வேறொரு நோயை இன்றும் சரி, அதற்கு முன்பும் சரி இந்த உலகம் கண்டிருக்கவில்லை.

பிளாக் டெத்தின் அறிகுறிகளை இத்தாலியக் கவிஞர் ஜியோவானி போகாசியோ, ``நோயின் ஆரம்பத்தில், இடுப்பு, கழுத்து, அக்குள்களின் கீழ் சில வீக்கங்கள் தோன்றும். பொதுவாக ஒவ்வொன்றும் ஓர் ஆப்பிளின் அளவுக்கும், சிலருக்கு முட்டை அளவுக்கும் பெரியதாக அந்தக் கொப்புளங்கள் மாற்றமடையும். இந்த மோசமான அறிகுறிகள் பிளேக்-கொதிப்பு என அழைக்கப்பட்டன" என்கிறார். மேலும், காய்ச்சல், குளிர், வாந்தி, வயிற்றுப்போக்கு, பயங்கர வலிகள் போன்ற பல விரும்பத்தகாத அறிகுறிகளைத் தொடர்ந்து வந்த இந்த விசித்திரமான வீக்கங்களிலிருந்து ரத்தம் மற்றும் சீழ் வெளியேறியது. அதன் பின்னர், குறுகியகாலத்தில் மரணமே நிகழ்ந்தது என ஜியோவானி போகாசியோ அவர்கண்ட நிகழ்வுகளைப் பதிவுசெய்துள்ளார்.

Also Read: ரோமப் பேரரசையே புரட்டிப்போட்ட பிளேக்; உலகை உலுக்கிய கொள்ளை நோய்களின் வரலாறு - பகுதி 2

அதனால்தான் இந்தக் கொடிய நோயை, ``பிளாக் டெத் - கறுப்பு மரணம்" எனத் துயரக்குரலில் விளிக்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்கு முன்பு தோன்றிய இதே ஐரோப்பாவில் பரவிய பிளேக் முதல் அலையான ஜஸ்டினியன் பிளேக், இரண்டு நூற்றாண்டுகள் அதாவது, இருநூறு ஆண்டுகள் தொடர்ந்த போதும் 5 கோடி மக்களைத்தான் கொன்று சென்றது. இது பெருந்தொகைதான் என்றாலும்கூட, இந்த இரண்டாம் அலையான பிளாக் டெத், வெறும் ஐந்தே ஆண்டுகளில் 20 கோடி மக்களை விழுங்கியது. அதாவது, முன்பைவிட நான்குமடங்கு மக்களை வேட்டையாடிச் சென்றுள்ளது.

மனிதர்கள் மட்டுமல்லாது, ஆடு, மாடுகள் எனக் கால்நடைகளையும் விட்டு வைக்கவில்லை. இதற்கெல்லாம் உண்மையான காரணம் புரியாத மக்கள், இது கடவுளின் சாபம் என்றே நம்பினர். அங்குள்ள கத்தோலிக்க மதகுருமார்களும், ``கடவுளுக்கு எதிரான நாத்திக கொள்கை, மனிதனின் பேராசை குணங்களால் கோபமுற்ற கடவுள் இப்படித் தண்டிக்கிறார். இதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி கடவுளிடம் மன்னிப்பு கேட்பதுதான்" எனப் பிரசாரங்களையும் மேற்கொண்டனர்.

பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்து, உயிரைப் பறித்துச் செல்லும் இந்தக் கொடிய பிளேக் நோய்க்கு, எலிகளால் பரவக்கூடிய எர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியா கிருமிதான் உண்மையான காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது 19-ம் நூற்றாண்டில்தான். அதைக் கண்டுபிடித்தவர் பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் அலெக்ஸாண்டர் எர்சின். அதுவரையில் இந்த நோயைக் கடவுள் கொடுத்த தண்டனையாகவே அம்மக்கள் கருதினார்கள்.

Also Read: 200 ஆண்டுகளாக உலகை உலுக்கிய ஜஸ்டினியன் பிளேக்! - கொள்ளை நோய்களின் வரலாறு - பகுதி 3

புபோனிக் பிளேக் என மருத்துவ ரீதியில் இந்த நோய் அழைக்கப்பட்டாலும், வரலாற்றைப் பொறுத்தவரையில் இது பிளாக் டெத் எனும் `கறுப்பு மரணம்தான்!'

பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவை தாக்கிய இந்த நோய், ஆசியா, ஆப்பிரிக்கா என மூன்று கண்டங்களையும் ஒருசேர ஒழித்துக்கட்டியது. மேலும், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைக் காவு வாங்கியதாகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. ஐரோப்பாவின் மக்கள்தொகையில் 30% - 60% மக்களை பலியாக்கிய இந்த நோயால், இழந்த மக்கள்தொகையை ஐரோப்பா மீண்டும் எட்டுவதற்கு சுமார் 200 ஆண்டுகள் ஆயின என்பது வரலாறு.



source https://www.vikatan.com/health/news/story-of-deadliest-diseases-of-history-bubonic-plague

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக