Ad

வெள்ளி, 22 ஜனவரி, 2021

ஒரே நாளில் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவை! - என்ன நடக்கிறது கர்நாடகாவில்?

கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராகக் காரணமாக இருந்த பதவி விலகிய எம்.எல்.ஏ-க்களான உமேஷ்கத்தி, எஸ்.அங்காரா, முருகேஷ் நிரானி, அரவிந்த் லிம்பாவளி, ஆா்.சங்கர், எம்.டி.பி.நாகராஜ், சி.பி.யோகேஷ்வா் ஏழு பேர் கடந்த ஜனவரி 13-ம் தேதி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். அமைச்சரவை விரிவாக்கப்பட்டிருந்த போதிலும் அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தனர்.

எடியூரப்பா

இந்நிலையில், புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு கடந்த 21-ம் தேதி துறைகள் ஒதுக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது, முன்பிருந்த சில அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. இதனால், அமைச்சர்கள் சிலர் கடும் அதிருப்தியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கே.சுதாகா், கே.கோபாலையா, கே.சி.நாராயண கௌடா ஜே.சி.மாதுசாமி, எம்.டி.பி.நாகராஜ் போன்ற அதிருப்தி அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து பேசிய எடியூரப்பா, ``அமைச்சரவை மாற்றத்தின்போது இதுபோன்ற அதிருப்தி ஏற்படுவது வழக்கம்தான். துறைகள் மாற்றி அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். அமைச்சர்கள் கூட்டத்துக்கு வராத காரணத்தை முன்கூட்டியே என்னிடம் கூறி அவர்கள் அனுமதி பெற்றிருந்தனர். அடுத்த கூட்டங்களில் அவர்கள் பங்கேற்பார்கள். தற்போதைய நிலையில் ஒதுக்கப்பட்ட துறைகளை மாற்ற இயலாது" என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், அமைச்சரவை பொறுப்புகள் ஒதுக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் மீண்டும் அமைச்சரவை மாற்றியமைத்திருப்பது கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருப்தி அமைச்சர்களைச் சாந்தப்படுத்த மீண்டும் அமைச்சரவை மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தங்களுக்கு வழங்கப்பட இலாக்காக்களை மாற்றித் தருமாறு முதல்வரிடம் புதிய அமைச்சர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

Also Read: `எடியூரப்பா நீண்டநாள் முதல்வராக இருக்க மாட்டார்!’- உட்கட்சிப் பூசலால் தள்ளாடும் கர்நாடக பா.ஜ.க

தனக்குக் கலால் துறை வழங்கப்படத்தில் அதிருப்தியிலிருந்த எம்.டி.பி.நாகராஜனுக்கு தற்போது நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் கரும்பு மேம்பாடு, சர்க்கரை இயக்குநரகம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஜே.சி.மதுசாமிக்கு வழங்கப்பட்டிருந்த கன்னடம் மற்றும் கலாசாரத் துறைக்குப் பதிலாக ஹஜ் மற்றும் வக்ஃபு துறை வழங்கப்பட்டுள்ளது. அரவிந்த் லிம்பாவலிக்கு கொடுக்கப்பட்ட வனத்துறையுடன், கன்னடம் மற்றும் கலாசாரத் துறையும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

எடியூரப்பா

முன்பு தோட்டக்கலைத் துறை ஒதுக்கப்பட்டிருந்த கே.கோபாலையாவுக்கு இப்போது கலால் துறை வழங்கப்பட்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த ஆர்.சங்கருக்குத் தற்போது தோட்டக்கலைத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஹஜ் மற்றும் வக்ஃபு துறை வழங்கப்பட்டிருந்த கே.சி. நாராயண கௌடாவிடம் திட்டமிடல், திட்டக் கண்காணிப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கே.சி.நாராயண கௌடா இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார்.

எடியூரப்பாவின் அந்தரங்க சி.டி?

எடியூரப்பாவின் அந்தரங்க சி.டி ஒன்று பா.ஜ.க மூத்த அமைச்சர்கள் கையில் இருப்பதாகவும், அதை வைத்து மிரட்டி தங்களுக்கான துறைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வதாகவும் கர்நாடகாவில் சர்ச்சை எழுந்தது. எடியூரப்பாவின் சி.டி குறித்த இதுபோன்ற ஒரு சர்ச்சை மூன்று ஆண்டுகளுக்கு முன்னரும் எழுந்தது. சொந்தக் கட்சிக்காரர்கள் மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலரும் இந்த சி.டி-யை வைத்து மிரட்டி காரியம் சாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

எடியூரப்பா

இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை வாய்திறக்காத எடியூரப்பா, ``அப்படி ஒரு சி.டி-யே இல்லை. பா.ஜ.க-வில் 120 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்குத் தான் அமைச்சரவையில் பதவி வழங்க முடியும். என் மீது குற்றச்சாட்டு இருந்தால் பா.ஜ.க தலைமையிடம் புகார் அளிக்கட்டும். இப்படி பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பது சரியல்ல" என்று கூறியிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/karnataka-new-cabinet-reshuffled-in-24-hours-what-is-happening-in-karnataka

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக