Ad

வியாழன், 30 ஜூலை, 2020

சிவகங்கை: `வெளிநாட்டில் சிக்கிய கணவர்; கஷ்டத்தை கடக்க பருத்திப்பால்’ - போராடும் பெண்

பரபரப்பாக மனு எழுதிக் கொடுக்கும் பணிகளைச் செய்துகொண்டிருந்த மாற்றுத்திறனாளிகள் வரிசையில் குட்டி பருத்திப் பால் கடை போட்டு விற்பனை செய்துகொண்டிருந்தார் அந்தப் பெண். 10 ரூபாய் பருத்திப் பாலை குடித்துக் கொண்டே அவரிடம் பேச்சுக்கொடுத்தோம். வெல்லக்கட்டி இனிப்பைத் தாண்டி அவரின் சோகக் கதை கசப்பைத் தட்டியது.

சக்தி தனது பிள்ளைகளுடன்

சிவகங்கை மாவட்டம் சக்கந்தி பகுதியை சேர்ந்தவர்தான் சக்தி. இவரது மாற்றுத்திறனாளி கணவர் கஷ்டத்தைக் கடக்க வேண்டும் என வெளிநாடு சென்றுள்ளார். வேலைக்கு சென்ற ஒரே மாதத்திலேயே கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து வெளிநாட்டில் தவித்து வருவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து நம்மிடம், ``எங்களுக்கு சொந்த ஊர் மதுரை. ஜெய்ஹிந்த் புரத்தில்தான் வாடகைக்கு குடியிருந்தோம். எங்களுக்கு 3 பொண்ணும் ஒரு பையனும் இருக்காங்க. மாதம் 3,000 கொடுத்து அங்க எங்களால குடி இருக்க முடியல. வேலை வாய்ப்பு, குறைந்த வாடகைய கணக்கு பண்ணி சக்கந்திக்கு வந்துவிட்டோம்.

இங்கு வாடகை மாதம் 1,000 ரூபாய்தான். என் கணவருக்கு வலது கையில் 2 விரல்கள் இருக்காது. வாயிலையும் கால்லையும் நரம்பு சரியாக வேலை செய்யாது. இந்த நிலைமைலதான் என் வீட்டுக்காரர் மர ஆசாரி வேலை செஞ்சார். எங்களுக்கு 4 பிள்ளைங்கனால, அவுகல கவனுச்சுகிறதே நேரம் சரியாக இருக்கும். அதனால கஷ்டம் அதிகமாகி, என் வீட்டுக்காரர் வெளிநாடு போயிட்டாக. கடன் வாங்கி சோமாலிய நாட்டுக்கு போனாக. `அங்கையும் ஆசாரி வேலைதான்னு’ சொன்னாங்க. ஆனா மீன் கடையில மீன் எடுத்துப் போடும் வேலை கொடுத்துருக்காங்க.

பருத்திப் பால் கடையில் சக்தி

சரினு கிடைச்ச வேலைய செஞ்ச மனுசன் ஒரு மாசம் சம்பளம் அனுப்புனாக. அதுக்கப்பறம் அங்க கொரோனா ஊரடங்கு பாதிப்பால் வேலையில்லாமல் போயிருச்சு. அதுக்கப்பறம் அவுக சம்பளம் அனுப்பல. ஊருக்கு திரும்பவும் வழியில்லை. இங்க என் பிள்ளைகள வைத்து நான் கஷ்டப்படுறேன். அவரு சோமாலியால இருந்து ஊர் திரும்ப முடியாம கஷ்டப்படுறார். வீட்டு ஓனர் வேற தினமும் சத்தம் போடுறாங்க. 4 மாதம் வீட்டு வாடைகை குடுக்கல.

கஷ்டத்த போக்க வீட்லையே நெல்லிக்காய் ஜூஸ், கேரட் ஜூஸ்னு போட்டு சிவகங்கையில் விற்றேன். ஒரு நாளைக்கு 2, மூனு ஜூஸ்க்கு மேல விற்பனையாகல. முயற்சிய விடாம இப்ப கொஞ்ச நாளா சிவகங்க தாசில்தார் ஆபிஸ் பக்கத்தில் பருத்திப் பால் கடை போட்ருக்கேன். எதோ இதில் கொஞ்சம் வருமானம் கிடைக்குது. ஒருநாளைக்கு 120 ரூ, 150 ரூபானு மனச தேத்திக்கிற்ற அளவு வருமானம் கிடைக்கிது. பருத்திப் பால் பானை, ஒரு டேபிள், ஸ்டவ், கிளாஸ், இதுகதான் என் மொத்த கடையும். எனக்கு சின்ன மரப்பெட்டி மாதிரி கிடைச்சா உதவியா இருக்கும்.

பருத்திப் பால்

ஜாமன்கள தினமும் வீட்டுக்கு சுமந்துட்டு போகாம அதுக்குள்ள வச்சு பாதுகாத்துக்குவேன். வியாபாரத்து நேரத்தில் அதையே கடையாவும் மாத்திக்குவேன். எனக்கு இப்படி சின்ன உதவி யாராவது செஞ்சா நல்லா இருக்கும். சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. இந்த நிலைமைல முதலீடு எப்புடி போடுவது. தினமும் வெந்த கஞ்சியதான் என் பிள்ளைங்க குடிக்குதுக. 2 நாளைக்கு ஒரு முறைதான் குழம்பு வைக்கிறோம். என் பிள்ளைகளுக்கு ஒரு ரொட்டிக் கட்டு கூட வாங்கி கொடுக்க முடியல” என்று தன் சேலையால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

வீட்டு வாடைகை கொடுத்து குழந்தைங்க பசி ஆற்ற வேண்டும் என போராடும் பெண் சக்திக்கு, உரிய உதவிகள் கிடைக்கணும்னு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/sivaganga-woman-working-hard-against-poverty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக