Ad

வெள்ளி, 31 ஜூலை, 2020

கர்நாடகா: `குழந்தைகளுக்கு கல்வி முக்கியம்!’ - தாலியை விற்று டி.வி வாங்கிய தாய்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாதிப்புகள் தொடர்ந்து அதிகமாகி வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பான இறுதியான முடிவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்னும் எடுக்கவில்லை. இதனால், பல்வேறு பள்ளிகளும் ஆன்லைன் வழியாக வகுப்பை எடுத்து வருகின்றன. இதனால், ஏழை மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலையில் நன்றாகப் படிக்கும் திறமை உள்ள மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு தற்கொலை செய்துகொள்ளும் முடிவையும் கையில் எடுக்கின்றனர். இதனால், ஆன்லைன் வழியான வகுப்புகளுக்கு எதிர்ப்புகளும் எழுந்த வண்ணம் உள்ளன.

குழந்தைகள்

பஞ்சாப் போன்ற மாநிலங்கள் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஸ்மார்ட்போன் வழங்கி அவர்களுக்கு உதவி செய்து வருகின்றன. இன்னும் சில மாநிலங்களில் தொலைக்காட்சியின் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. எனினும், தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுதொடர்பான விவாதங்களும் இருந்து வரும் நிலையில் கர்நாடக மாநிலம் தொலைக்காட்சியின் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து தன் குழந்தைகளின் கல்வி எந்த வகையிலும் பாதிப்படைக் கூடாது என்பதற்காக அம்மாநிலத்தில் கடக் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது தாலியை அடமானம் வைத்து குழந்தைகளின் கல்விக்காகத் தொலைக்காட்சி வாங்கியுள்ள செய்தி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

டி.வி

இதுதொடர்பாகக் குழந்தைகளின் தாய் கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசும்போது, ``ஆசிரியர் எங்களை தொலைக்காட்சி வாங்க வலியுறுத்தினார். ஆனால், எங்களிடம் அதற்கான பணம் இல்லை. தினமும் குழந்தைகளை அருகில் உள்ள வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது. எனவே, தாலியை அடமானம் வைத்து குழந்தைகளுக்காகத் தொலைக்காட்சி வாங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்ரனர்.

Also Read: புதிய கல்விக் கொள்கை `அனைவருக்கும் கல்வி டு எம்.பில் நிறுத்தம்!’ - மத்திய அமைச்சரவை ஒப்புதல்



source https://www.vikatan.com/news/india/mother-sell-her-mangalsutra-to-buy-a-tv-for-her-childrens-education

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக