Ad

செவ்வாய், 28 ஜூலை, 2020

`ஆடியில் அம்மன் வழிபாடு' - வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்?

ஆடி மாதம் வந்துவிட்டால் போதும், சின்னஞ்சிறிய அம்மன் கோயிலில்கூட வேப்பிலைத் தோரணங்கள், கூழ் வார்த்தல், துள்ளுமாவு படைத்தல் என்பது விமர்சையாக நடக்கும். இதற்குக் காரணமாக புராணத்தில் சொல்லப்படும் கதை ஒன்றுண்டு.

அம்மன்

ஜமதக்னி என்ற முனிவரும் அவர் மனைவியான ரேணுகாதேவியும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர். தன்னுவன், அனுவன், விஸ்வாசு, பரசுராமன் என நால்வர் மகன்களாகப் பிறந்தார்கள்.

அதன்பின் ஒருமுறை, கார்த்தவீரியனின் பிள்ளைகள் ஜமதக்னி முனிவரிடம் பகை கொண்டு அவரைக் கொன்று விட்டார்கள். கணவரை இழந்த ரேணுகாதேவி உயிர் வாழ விரும்பாமல் தீயில் இறங்கினாள். அப்போது, இந்திரன் வருண பகவானைக் கொண்டு மழை  பொழியச் செய்தான். தீ அணைந்தது. ஆனால், அதற்குள் ரேணுகாதேவியின் ஆடைகள் எல்லாம் எரிந்து , உடலில் தீக்கொப்புளங்கள் உண்டாயின. அவள் ஆடை இல்லாத நிலையில் காட்டிலிருந்த வேப்பிலையைப் பறித்து ஆடை போல் அணிந்து கொண்டாள். இதுவே, அம்மனுக்கு வேப்பிலை ஆடை அணியும் வழக்கம் உருவான வரலாறு.

வேப்பிலை ஆடையில் புறப்பட்ட ரேணுகா தேவி, காட்டில் வாழ்ந்தவர்களிடம், `பசிக்கிறது’ என உணவு கேட்டாள். அங்கிருந்தவர்கள் சற்று விலகி நின்று, ``அம்மா, எங்களிடம் இருக்கும் பச்சரிசி மாவு, வெல்லம், பானகம், இளநீர் இவற்றைப் பெற்றுக் கொள்” என்று அளித்தனர். இந்தப் பச்சரிசி மாவையே திருநெல்வேலி மாவட்டக் கிராமங்களில் `துள்ளு மாவு’ என்கிறார்கள். உரலில் இட்டு இடிக்கும்போது துள்ளிக்குதிப்பதால் இந்தப் பெயர் வந்தது. அரிசிமாவு கொண்டு ரேணுகாதேவி கூழ் காய்ச்சிக் குடித்துப் பசியாறினாள்.

அதன்பின் சலவைத் தொழிலாளர்கள் வாழும் பகுதிக்கு வந்து அவர்கள் அளித்த ஆடைகளை அணிந்து கொண்டாள். அப்போது ரேணுகாதேவியின் மனதில் மீண்டும் துயரம் எழுந்தது. கணவரை எண்ணிக் கண்ணீர் சிந்தினாள். சிவபெருமான் அவளுக்குக் காட்சியளித்து, ``சக்தியின் அம்சம் நீ. மனித குலத்தைத் தீமையில் இருந்து காப்பாற்றும் சக்தியை உனக்கு அளிக்கிறேன். நீ கொண்ட கொப்புளங்கள், மக்களுக்கு அம்மைக் கொப்புளங்களாக ஆகும். நீ அணிந்த வேப்பிலை ஆடையே, அந்தத் துன்பத்தை நீக்கும் மருந்தாக அமையும். நீ உணவாகக் கொண்ட பானகம், இளநீர், பச்சரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் நைவேத்யமாகப் படைப்பார்கள். உன்னை நாடி வழிபடுவோரின் துயரத்தை நீக்குவாயாக” என்று வரம் அளித்து மறைந்தார். அதன் பின், ரேணுகா தேவி முத்துமாரி எனப் பெயர் பெற்றாள்.

ஸ்ரீ ஏழுலோகநாயகி அம்மன்

இந்த நிகழ்ச்சி ஆடி மாதத்தில் நடந்தது. அதன் காரணமாகவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் கூழ் வார்த்தலும், பெண்கள் வேப்பிலை ஆடை கட்டி வலம் வரும் வேண்டுதலும் நடக்கின்றன. ஆகாய மழையும் அருள் மழையும் பொழியுமாறு அன்னை மாரியை, புனிதமான ஆடி மாதத்தில் பக்தர்கள் வேண்டி வழிபடுகிறார்கள்.



source https://www.vikatan.com/spiritual/gods/goddess-worship-in-aadi-month

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக