Ad

திங்கள், 27 ஜூலை, 2020

புதுச்சேரி: `நள்ளிரவில் தாக்குதல்’ - முதல்வர் தொகுதியை தெறிக்க விடும் கஞ்சா பாய்ஸ்

முதல்வர் தொகுதியில் கஞ்சா விற்பனை:

புதுச்சேரியில் தங்கு தடையின்றி நடைபெற்றுவரும் கஞ்சா விற்பனையால் சட்டம் - ஒழுங்கு கேள்விக் குறியாகி வருகிறது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை மட்டுமே குறிவைக்கிறது கஞ்சா கும்பல். கஞ்சா கும்பலால் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை எழும்போது மட்டும், காவல்துறை அதிரடி ரெய்டுகளை நடத்தி கஞ்சா விற்பனைக் கும்பலை கைது செய்து, கிலோ கணக்கில் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்யும். ஆனால், அதற்கடுத்த சில நாள்களிலேயே மீண்டும் கஞ்சா கும்பலின் அட்டகாசம் அதிகரித்துவிடும்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

சில மாதங்களுக்கு முன்பு வில்லியனூரில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதையில் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியையே கலவர பூமியாக மாற்றியது. திருவண்ணாமலை, ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து டன் கணக்கில் வந்திறங்கும் கஞ்சா மூட்டைகள், சிறு சிறு பாக்கெட்டுகளாகப் பிரிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் கடைவிரிக்கப்படுகிறது. முதல்வர் நாராயணசாமியின் தொகுதியான நெல்லித்தோப்புதான் கஞ்சா விற்பனையில் தலைமையிடமாக விளங்குகிறது என்று எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவையில் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தி வந்தனர்.

கஞ்சா சிறுவர்கள்:

அதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று முன் தினம் இரவு நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் கோழியைத் திருடியிருக்கின்றனர். அதுகுறித்துக் கேட்ட ஒரு முதியவரை கஞ்சா போதையில் இருந்த அந்தச் சிறுவர்கள் கொடூரமாகத் தாக்கினார்கள்.

கஞ்சா பாய்ஸால் தாக்கப்பட்ட முதியவர்

அதில் அந்த முதியவரின் வாய் மற்றும் உடல் பகுதி முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்தச் சிறுவர்களை தடுக்க முயன்ற அப்பகுதி மக்களை கற்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர் அந்தச் சிறுவர்கள். இதுகுறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், “சின்ன சின்னப் பசங்களெல்லாம் தினமும் கஞ்சா குடித்துவிட்டு தகராறு செய்கிறார்கள். வீடு புகுந்து திருடுகிறார்கள். அதனை தடுக்க முயன்றால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

சிறுவர்களை குறி வைப்பது ஏன்?

போலீஸ் புடிச்சிக்கிட்டுப் போனாலும் அரசியல் செல்வாக்குல உடனே திரும்ப வந்துடுறாங்க. அதனால் அவங்களப்பத்தி போலீஸுக்கு புகார் குடுக்கவும் பயமாயிருக்கு. முதல்வர் தொகுதினுதான் பேரு. ஆனால், இங்கதான் ரவுடியிஸமும் திருட்டும் அதிகமா இருக்குது. எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்ன செய்வீங்கனு தைரியமா மிரட்டுறாங்க. அப்படியும் யாராச்சும் தைரியமா போலீஸுக்கு தகவல் சொல்லிட்டா நைட்ல அவங்க வீடு புகுந்து அடிக்கறானுங்க” என்று புலம்புகின்றனர்.

Also Read: `புதுச்சேரி முதல்வர் சொன்ன தகவல்!' - தி.மலையில் சிக்கிய 62,550 கிலோ கஞ்சா

”சிறுவர்களையும் மாணவர்களையும் குறிவைக்கும் கஞ்சா கும்பல், ’சுறுசுறுப்பாகப் இருக்கலாம், நன்றாகப் படிக்கலாம்’ என்று கூறி முதலில் அவர்களுக்கு கஞ்சாவை புகைக்கக் கற்றுக் கொடுக்கிறது. பின்னர் ’கஞ்சா விற்றால் தினமும் கிடைக்கும் பாக்கெட் மணியில் பைக் வாங்கலாம்’ என்று ஆசை காட்டி அவர்களை வளைக்கிறது. கஞ்சா விற்பனையின்போது போலீஸ் பிடித்தாலும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. இதுதான் கஞ்சா கும்பல் சிறுவர்களையும், மாணவர்களையும் குறி வைப்பதற்கான காரணம். கஞ்சா பாய்ஸ் என்பதுதான் இவர்களது செல்லப்பெயர்” என்கிறது போலீஸ் தரப்பு.



source https://www.vikatan.com/government-and-politics/crime/anti-social-activities-by-ganja-boys-in-chief-minster-narayanasamys-constituency

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக