Ad

திங்கள், 27 ஜூலை, 2020

தங்கம் கடத்தல் விவகாரம்: 16 விநாடி அமைதி! - தகுதியில்லாத கேள்வி என பினராயி விஜயன் காட்டம்

கொரோனா நோய்த் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தினமும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதும், அதன்பிறகு மாலை நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில், சுமார் முக்கால் மணி நேரம் கொரோனா பாதிப்புகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பினராயி விஜயன் பேசுவார். அதன் பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார். நேற்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பினராயி விஜயன் கூறுகையில், "இன்று 702 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 745 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இப்போது 9,609 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 10,049 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 1,55,148 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகினனர். 495 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன" என்றார்.

பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பினராயி விஜயன் கூறுகையில், ``கொரோனா சம்பந்தமாக பல துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. அதில் கொரோனா பரவலை தடுக்க முழு லாக்டெளன் பரிகாரம் இல்லை எனக் கூறினார்கள். எனவே தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படுக்கையில் உள்ள பிற நோயாளிகளை வீட்டில் இருந்து மாற்றி வேறு இடங்களில் வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நோயாளிகளின் விருப்பம்தான் முக்கியம்" என்றார்.

அப்போது ஒரு செய்தியாளர், "தங்கம் கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை என்.ஐ.ஏ இதுவரை 15 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. இதில் அரசுக்கு ஆதங்கம் உள்ளதா" எனக் கேட்டார். அதற்கு பினராயி விஜயன், ``எங்களுக்கு எந்தவித ஆதங்கமும் இல்லை. ஏனென்றால் விசாரணை அதன் வழியில் செல்லட்டும். விசாரணையில் என்ன நிலைபாடு எடுக்க வேண்டும் என்று என்.ஐ.ஏ-தான் முடிவு செய்வார்கள்" என்றார்.

பணிக்கு ஆள் நியமனம் செய்தது அல்லாமல், தங்கம் கடத்தல் வழக்கில் சிவசங்கரன் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அல்லது அதுபற்றிய தகவல் தெரியவந்ததா என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, "இது அபத்தமான கேள்வி. என்.ஐ.ஏ விசாரணை நடக்கும்போது எனக்கு தெரிந்திருக்கிறது என்பதா முக்கியம். விசாரணை முடியும்வரை நாம் காத்திருக்க வேண்டும்" என்று சற்று சூடாகக் கூறினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

அடுத்ததாக ஒரு செய்தியாளர், ``தங்கம் கடத்தல் வழக்கில் சி.பி.எம் மற்றும் பி.ஜே.பி-க்கு இடையே ஒரு புரிதல் ஏற்படுள்ளது. வரும் சட்டசபை தேர்தலை கருத்தில்கொண்டு இருவரும் சமாதனாம் ஆகியுள்ளார்கள் எனக் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளாரே" என்றார். அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் 16 விநாடிகள் அமைதியாக இருந்தார் பினராயி விஜயன். அப்போது அந்த செய்தியாளர், `நான் சொன்னது சி.எம்-க்கு கேட்டதா' என்றார். `கேள்வி எனக்கு கேட்டது. அது பதில் சொல்ல தகுதி இல்லாத கேள்வி என்பதால், அதுபற்றி சொல்லவில்லை" என்றார். இதுவரை எந்தக் கேள்வி கேட்டாலும் அசராமல் பதில் சொல்லும் பினராயி விஜயனிடம் இருந்து இந்தப் பதிலை எதிர்பார்க்காத செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/pinarayi-vijayan-angry-replay-in-press-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக