சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் மே மாதம் வரை முதல் சீஸனும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை இரண்டாவது சீஸனும் நடத்தப்படுவது வழக்கம். இந்த இரண்டு கட்ட சீஸனிலும் நீலகிரிக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
ஆனால், தற்போது ஏற்பட்டுவரும் கொரோனா பதிப்பு காரணமாகவும், அதன் பரவலைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளுள் சுற்றுலாவும் ஒன்று.
Also Read: நீலகிரி: இரண்டாண்டில் 96 காட்டு மாடுகள்! - உயிர் பறிக்கும் ஊட்டி ரசாயன கேரட்டுகள்
கடந்த மே மாதம் கோடை சீஸன் நடத்தத் திட்டமிட்டு கோடை விழாக்கள் நடத்தப்படும் தேதிகளும் முடிவு செய்யப்பட்டு, தயாராகி வந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதமே சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன. மேலும், கோடை விழாக்களும் ரத்து செய்யப்பட்டன. பூங்காக்களில் லட்சக்கணக்கான மலர்கள் பூத்திருந்தும், கண்டு ரசிக்கச் சுற்றுலாப் பயணிகள் இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில், நம்பிக்கையுடன் இரண்டாவது சீஸனுக்கு நீலகிரியில் உள்ள பூங்காக்கள் தயாராகி வருகின்றன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
Also Read: `மலர்களுக்கு மனம் இரங்கிய பூங்கா ஊழியர்கள்..!' -நீலகிரி பூங்காக்களில் தினமும் நிகழும் நெகிழ்ச்சி
தூறல் மழையில் நம்பிக்கையுடன் மலர் நாற்றுகளை நடவு செய்துகொண்டிருந்த பெண் ஊழியர் ஒருவரிடம் பேசினோம். ``போன சீஸன் நடக்கல. இந்த நாலு அஞ்சு மாசமா நாங்க மட்டும்தான் வந்து வேலை செஞ்சிட்டுப்போறோம். மே மாசம் டூரிஸ்ட் யாரும் வரலன்னு கஷ்டமா இருந்துச்சு. ஆனா, எங்க உழைப்புல பூத்த பூக்களை பாக்க டாக்டருங்க, நகராட்சிக்காரங்க போலீஸ் என எல்லோரும் வந்தாங்க. அதுவே, எங்களுக்கு சந்தோசமா இருந்துச்சு.
இப்போ, நாத்து நட்டத்தான் செப்டம்பர்ல பூக்கும். அதுக்குள்ள கொரோனா பிரச்னை முடிஞ்சி பழைய மாதிரி டூரிஸ்ட் வருவாங்கனு நம்புறோம்" என்றார் நம்பிக்கையுடன்.
இரண்டாவது கட்ட சீஸன் ஏற்படு குறித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நிர்வாகம் தரப்பில் பேசினோம்.``நடப்பாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக, கோடை சீஸன் ரத்து செய்யப்பட்டது. தற்போது இரண்டாவது சீஸனுக்காக நாற்று நடவு பணிகளைத் துவக்கியுள்ளோம்.
இந்த முறை பூங்கா முழுவதிலும் 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். 7,000 தொட்டிகளில் மலர் அலங்காரங்கள் செய்ய உள்ளோம் .மேலும், 3,000 தொட்டிகளில் லில்லியம் நடவு செய்யப்பட்டு, பராமரித்து வருகிறோம். அதற்குள் கொரோனா பிரச்னை முடியும" என நம்புவதாகத் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/nilgiri-gardens-prepare-for-second-season
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக