Ad

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

`விண்ணப்ப மொழியிலே பதிலும் இருக்க வேண்டும்!’ -மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

``ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இந்திய அலுவலக மொழி சட்டமும் இதனை உறுதி செய்கிறது" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "குரூப் பி, குரூப் சி பிரிவில் 780 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரியில் தேர்வு மையம் அமைக்கவில்லை. இப்பகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையம் அமைக்கக் கோரி உள்துறை அமைச்சகம்,  சி.ஆர்.பி.எப் பொது இயக்குநருக்கு அக்டோபர் 9-ல் கடிதம் அனுப்பினேன்.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நவம்பர் 9-ல் இந்தியில் பதில் அனுப்பியிருந்தார். அதில் என்ன கூறியிருந்தார் என்பதை அறிய முடியவில்லை. இந்தியில் பதில் அளித்தது சட்ட மீறலாகும். தமிழக மக்கள் தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பும்போது இதுபோல் இந்தியில் பதிலளிப்பது தொடர்கிறது. இது அரசியலமைப்பு சட்ட உரிமைகளுக்கும்,1963-ம் ஆண்டின் அலுவல் மொழிச் சட்டத்திற்கும் முரணானது. இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் உரிமைகளை மீறுவதாகும்.

சு.வெங்கடேசன். எம்.பி

எனவே, தமிழக அரசு, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக மக்களுக்கு இந்தியில் கடிதம் அனுப்பக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். விதியை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

Also Read: `சம்ஸ்கிருதம் தேசிய மொழி’... அம்பேத்கர் அப்படிச் சொன்னாரா?

இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், "தாய்மொழி மிகவும் முக்கியமானது. அடிப்படை கல்வி தாய் மொழியிலேயே வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆங்கில மொழிக்கு பொருளாதார அடிப்படையிலேயே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் சில மொழிகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. பல மொழிகள் நூறு ஆண்டுகள் பழமையானவை. ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றின் வளர்ச்சிக்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இந்திய அலுவலக மொழி சட்டமும் இதனை உறுதி செய்கிறது. ஆனால், மனுதாரருக்கு இந்தி மொழியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

விதியை மீறும் எண்ணமில்லை என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய அரசும், அதன் அலுவலர்களும் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும்" என நீதிபதிகள் கிருபாகரன்-துரைசாமி அமர்வு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Also Read: `தமிழ் கல்வெட்டுகள் எப்படி திராவிட கல்வெட்டுகளாயின?’ - வரலாற்றுப் பேராசிரியர் விளக்கம்



source https://www.vikatan.com/government-and-politics/politics/high-court-madurai-bench-order-to-union-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக