Ad

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

கோலியின் சைக்கிளில் ஏறிய வாத்தியார் புஜாரா... உருமாறிய டிராவிட் & லட்சுமண் கூட்டணி இதுதானா?!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று முடிந்திருக்கிறது. முதல் இன்னிங்ஸில் மிக மோசமாக பேட்டிங் ஆடியிருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி வருகிறது. 215-2 என்ற நிலையில் ஸ்கோர் வலுவான நிலையில் உள்ளது. ஆனாலும் இந்தியா இன்னமும் கடக்க வேண்டிய தூரம் அதிகமாகவே இருக்கிறது. மூன்றாம் நாளில் நடந்த சில முக்கிய மொமன்ட்ஸ் இங்கே!

டெய்ல் எண்டர்களை விரட்டிய பௌலர்கள்!

இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது. பெரிய லீட் எடுத்த பிறகும் ஜோ ரூட் டிக்ளேர் கொடுக்கவில்லை. டெய்ல் எண்டர்கள் எவ்வளவு ஆடுகிறார்களோ ஆடட்டும். இனிமேல் வருவதெல்லாம் போனஸ் என்ற மனநிலையில் இருந்தார். ஆனால், இந்திய பௌலர்கள் இங்கிலாந்தின் டெய்ல் எணடர்களை பெரிதாக ஸ்கோர் செய்ய விடவில்லை. மூன்றாம் நாள் தொடக்கத்தில் ஓவர்டன் மட்டும் ஷமியின் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். ஷமி பந்திலேயே அவர் அவுட் ஆக, ராபின்சன் பும்ராவின் பந்துவீச்சில் போல்டானார்.

கடைசி 49 ரன்களுக்கு மட்டும் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. டெய்ல் எண்டர்களை கட்டுப்படித்தியிருக்காவிடில் லீட் 400+ ஆக கூட மாறியிருக்கலாம்.
ENG Vs IND

ராகுலின் நிதானம்!

இந்த இங்கிலாந்து சீரிஸில் இந்தியாவின் பெரிய நம்பிக்கையாக இருப்பது ரோஹித்-ராகுல் ஓப்பனிங் கூட்டணியே. இருவருமே முதல் இரண்டு டெஸ்ட்களிலும் மிகச்சிறப்பாக ஆடியிருந்தனர். ஆனால், இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துக்கு பெட்டை விட்டு டக் அவுட் ஆகி வெளியேறியிருந்தார். ராகுல் மாதிரியான முழு ஃபார்மிலிருந்த ஒரு வீரரிடமிருந்து இப்படி ஒரு மோசமான டிஸ்மிசலை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. 78-க்கு ஆல் அவுட் என்கிற இந்தியாவின் மோசமான வீழ்ச்சிக்கு தொடக்கமாக அமைந்திருந்தார் ராகுல். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித்துடன் கூட்டணி போட்டு 19 ஓவர்கள் வரை க்ரீஸில் நின்றார். ரொம்பவே பொறுமையாக ஒவ்வொரு பந்தையும் முழுமையாக கவனித்து சிறப்பாக டிஃபன்ஸ் செய்தார்.

ராகுல் வெறும் 8 ரன்களைத்தான் எடுத்தார். ஆனால், 19 ஓவர்களுக்கு ரோஹித்துடன் விக்கெட் விடாமல் நின்றிருந்தார். நியுபால் சவாலை முழுமையாக எதிர்கொண்டு அடுத்தடுத்த பேட்ஸ்மேன்களுக்கு சவாலை எளிமையாக்கிவிட்டு சென்றார்.
ENG Vs IND

ஓவர்டன் பந்தில் அவர் எட்ஜ் ஆகி அவுட் ஆன விதமுமே பெரிதாக விமர்சிக்கும்படி இல்லை. ''ராகுலை குறை கூற ஒன்றுமே இல்லை. அவர் சிறப்பாகவே டிஃபன்ஸ் செய்ய முயன்றார். இது ஒரு அட்டகாசமான டெலிவரி'' என கமென்ட்ரியில் கவாஸ்கரும் பேசியிருந்தார். மேலும், ஸ்லிப்பில் பேர்ஸ்ட்டோ இடக்கையில் தாவி அந்த கேட்ச்சை சிறப்பாக பிடித்திருப்பார். ராகுலுக்கு அதிர்ஷ்டம் இருந்திருந்தால் அந்த கேட்ச் டிராப் ஆகியிருக்கும்.

ரோஹித்தின் பொறுப்பான ஆட்டம்!

தன்னை ஒரு முழுமையான டெஸ்ட் கிரிக்கெட்டராக உணர்ந்து ரோஹித் ஆடிவரும் முதல் சீரிஸ் இதுதான். இந்த போட்டியிலுமே முதல் இன்னிங்ஸில் ஒட்டுமொத்த அணியும் சரிந்த போது 100+ டெலிவரிக்களை சந்தித்து க்ரீஸில் அதிக நேரம் நின்றிருந்தார். நேற்று இரண்டாவது இன்னிங்ஸிலும் உபயோகமளிக்கும் வகையில் 156 பந்துகளை சந்தித்து ஒரு அரைசதம் அடித்துவிட்டு அவுட் ஆகியிருந்தார். முதல் இன்னிங்ஸை விட இந்த இன்னிங்ஸில் அதீத கவனத்துடனும் அதீத ஜாக்கிரதையுடனும் ஆடினார். முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சன் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய முதல் பந்தையே தட்டி விட்டு சிங்கிள் எடுத்திருப்பார் ரோஹித். ஆனால், நேற்று ஆண்டர்சன் ஃபுல் லென்த்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லுமாறு வீசிய முதல் பந்தையே லீவ் செய்திருந்தார். இந்த அணுகுமுறை மாற்றமே அவருடைய இன்னிங்ஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ENG Vs IND
ஷார்ட் பால்களை வைத்து கட்டம் கட்ட முயன்ற போது அவற்றை முடிந்தளவுக்கு தரையோடு தரையாக அடிக்க முயன்றிருப்பார்.

ரோஹித்துக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. ஒரு lbw-க்கு ரூட் அதிக நேரம் எடுத்ததால் ரிவியூ கேட்க முடியாமல் போனது. சரியான நேரத்தில் ரிவீயூ எடுத்திருந்தால் அவுட் என்பது தெரிந்திருந்தது. இதன்பிறகு, சாம் கரணுடைய பந்துவீச்சில் தன்னுடைய அக்மார்க் டிரைவ்கள் சிலவற்றை ஆடியிருந்தார் ரோஹித். ஆனால், மீண்டும் 59 ரன்களில் ராபின்சன் பந்துவீச்சில் lbw ஆனார்.

சர்ப்ரைஸ் கொடுத்த புஜாரா!

இந்திய அணி இந்த போட்டியை எப்படி அணுகப்போகிறது என்பதே புஜாராவின் வருகைக்கு பிறகுதான் தெரிய வந்தது. தற்காப்பு ஆட்டமே வேண்டாம் முடிந்த வரை சண்டை செய்து பார்ப்போம் என்பதே இந்திய அணியின் மனநிலையாக இருந்திருக்கிறது. புஜாராவின் அணுகுமுறை அதைத்தான் உறுதிப்படுத்தியது.

ENG Vs IND
எப்போதும் முதல் ரன்னை எடுப்பதற்கே க்ரீஸுக்குள் மாமாங்கம் தவமிருக்கும் புஜாரா, நேற்று பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார். தொடர்ந்து ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அடித்துக் கொண்டே இருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 75-க்கும் மேல் இருந்தது.

புஜாராவிடமிருந்து இப்படியான அணுகுமுறையை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே புஜாராவிடம் இருந்த பிரச்னையே அதுதான். க்ரீஸுக்குள் ரொம்ப நேரம் இருந்தாலும் ரன்னே வரவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தது. கோலியே மறைமுகமாக புஜாராவை சாடியிருந்தார். ஆனால், நேற்று புஜாரா வேறொரு விஸ்வரூபம் எடுத்துவிட்டார். வேகமாக ரன்களையும் சேர்த்தார். அவுட் ஆகாமல் சென்சுரியை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறார்.

விராட் கோலி!

இந்தியா லார்ட்ஸில் டெஸ்ட் போட்டியை வென்ற மகிழ்ச்சியையெல்லாம் தாண்டி இந்திய ரசிகர்களுக்கு வருத்தமளித்தது கோலியின் ஃபார்ம். 2014 இளம் வீரராக ஆண்டர்சனிடம் எப்படி அவுட் ஆனாரோ அதேமாதிரியே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பேட்டை விட்டு அவுட் ஆகிக்கொண்டிருந்தார்.

ஆனால், நேற்று கோலியினுடைய ஆட்டமுமே நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தது. நேற்றும் ஆண்டர்சனின் பந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பேட்டை விட்டிருந்தார். இரண்டு மூன்று டிரைவ்களை ஆடியிருந்தார். ஆனால், அத்தனையும் சரியான டைமிங்கில் சரியாக கனெக்ட் ஆகியிருந்தது.
ENG Vs IND

45 ரன்னில் நாட் அவுட்டாக க்ரீஸில் இருக்கிறார். 50 இன்னிங்ஸ்களாக கோலியிடமிருந்து வராத சதம் இந்த இன்னிங்ஸில் வருவதற்கான சமிக்ஞைகள் தெரிகிறது.

இந்தியா இப்போது 215-2 என்ற நிலையில் இருக்கிறது. தனியாக பார்த்தோமேயானால் இந்திய அணி ரொம்பவே வலுவாக இருப்பது போல தோன்றும். ஆனால், இங்கிலாந்தின் லீடே இன்னும் 139 ரன்கள் இருக்கிறது. அதை கடந்து இங்கிலாந்துக்கு ஒரு டார்கெட்டை செட் செய்ய வேண்டும். நேற்று ஆடியதை விட இன்னும் சிறப்பாக ஆடினாலே அது சாத்தியப்படும். குறைந்தபட்சம் இன்றைய நாள் முழுக்க நின்று ஆட வேண்டும். புஜாரா இரட்டை சதம், கோலி சதம், ரஹானே ஒரு ஸ்பெஷல் இன்னிங்ஸ் என அத்தனையும் சாத்தியப்படும் பட்சத்தில் இந்திய அணி வெற்றியை நோக்கி செல்லலாம்.



source https://sports.vikatan.com/cricket/kohli-and-pujara-struggling-to-save-india-in-leeds-test

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக