Ad

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

திருச்சி: பூங்காவில் மண்டை ஓடுகள், மனித எலும்புகள்! - பதறிய சிறுவர்கள்; போலீஸ் விசாரணை

திருச்சி பூங்கா அருகே மண்டை ஓடுகள், இரண்டு சாக்கு மூட்டைகளில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எலும்புகள் மாந்திரீகம் செய்வதற்காக எடுத்து வந்ததா? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மண்டை ஓடுகள்

திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பொழுது போக்கும் விதமாகப் பசுமை பூங்காக்கள் உள்ளன. ஏற்கெனவே உள்ள பூங்காக்களில் புதர்மண்டிக்கிடக்கும் பூங்காக்களைச் சுத்தப்படுத்தி பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். இந்த பூங்காக்களில் முதியோர் முதல் குழந்தைகள் வரை நடைப்பயிற்சி மற்றும் அங்குள்ள விளையாட்டுப்பொருட்களில் விளையாடி மகிழ்கின்றன.

இந்நிலையில், திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவின் அருகேயுள்ள முட்புதரில் மனித மண்டை ஓடுகள், எலும்புகள் இரண்டு மூட்டைகளில் கட்டப்பட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

முட்புதர்

அதன் பெயரில் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்ததில், 9 மனித மண்டை ஓடுகள், இரண்டு மூட்டைகளில் மனித எலும்புகளும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த எலும்புகள் எப்படி வந்தது என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதேபோல் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியிலும் இதே போன்ற எலும்புகள் கிடந்ததாகவும் அச்சம்பவத்தையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் விசாரித்தோம். ”இப்பகுதியில் புதர்மண்டிக்கிடப்பதால் பொதுமக்கள் இந்த பகுதிக்குச் சரியாக வரமாட்டார்கள். இரு மூட்டையில் மண்டை ஓடுகள், பிரிக்கப்படாமல் இருந்தன. அதைச் சுற்றி மனித எலும்புகள் கிடந்தன. அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் தான் முதலில் பார்த்தது, அவர்கள் அதிர்ந்து போய் பெற்றோர்களிடம் சொல்ல அவர்கள் தான் போலீஸாருக்கு தகவல் அளித்தார்கள். போலீஸார்களும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மண்டை ஓடுகள்

இத்தனை மனித மண்டை ஓடுகள் இங்கு எப்படி வந்தது. சுடுகாட்டில் தோண்டி எடுத்து இங்குக் கொண்டுவந்து போட்டார்களா? இல்லை மந்திரவாதிகள் யாரேனும் பில்லி, சூனியம், மாந்திரீக வேலைகளைச் செய்துவிட்டு இங்கு வந்து போட்டார்களா? அல்லது யாராவது கொலை செய்துவிட்டு மூட்டையாகக் கட்டி எலும்புக்கூடுகளை இங்கு வீசி சென்றார்களா என்று பல சந்தேகங்கள் எங்களுக்குள் எழுகிறது. போலீஸார் விசாரித்தால் தான் முழுமையாகத் தெரியவரும்" என்றனர்,

Also Read: தஞ்சாவூர்: குப்பையில் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புகள்! - அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்



source https://www.vikatan.com/news/crime/skulls-human-bones-in-the-park-police-investigating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக