Ad

சனி, 28 ஆகஸ்ட், 2021

கிருஷ்ண தரிசனம்: வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கண்ணன் ஆலயங்கள்... அபூர்வ தகவல்கள்!

ர்நாடகத்தின் குருவாயூர் என்று போற்றப்படும் இடம் மல்லேஸ்வரம். பெங்களூரு நகரில், மல்லேஸ்வரத்தில் அமைந்துள்ள வேணுகோபால ஸ்வாமி திருக்கோயிலே அதற்குக் காரணம். ருக்மிணிதேவியுடன் ஸ்வாமி அருளும் இந்தக் கோயிலில் கிருஷ்ண புஷ்கரணி தீர்த்தமும் பாரிஜாத விருட்சமும் விசேஷமானவை. இங்கு வந்து தொட்டில் கட்டிப் பிரார்த்தனை செய்து வழிபட்டால், விரைவில் சந்தான பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்!

ர்நாடக மாநிலத்தில் உள்ள திருத்தலம் உடுப்பி. சந்திரன் சாப விமோசனம் பெறும் பொருட்டு 27 நட்சத்திரங்களுடன் சேர்ந்து கிருஷ்ணரை வழிபட்ட தலமே உடுப்பி. இங்கே அருள்பாலிக்கும் கிருஷ்ணர் விக்கிரகம், ருக்மிணியால் பூஜிக்கப்பட்ட சிறப்புபெற்றது. கண்ணனின் குழந்தை வடிவைக் காணவேண்டும் எனும் ருக்மிணியின் ஆசைக்காக, விஸ்வகர்மா உருவாக்கிய விக்கிரகம் இது என்கிறார்கள். இங்குள்ள மத்வ தீர்த்தத்தின் பெயரைச் சொன்னாலே பெரும் புண்ணிய மாம்!

தென்னாங்குர்

துராவில் தேவகி - வசுதேவருக்கு 8-வது மகனாக கிருஷ்ணன் அவதரித்தது சிறைச்சாலையில். தற்போது அந்த இடத்துக்கு மேல் கத்ர கேஷப் தேவ் எனும் கிருஷ்ணர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

த்தரப்பிரதேசம் - மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில், ஸ்ரீகிருஷ்ண பக்தர்கள் தரிசிக்கவேண்டிய இடம் வம்சீவட். கண்ணன் தனது புல்லாங்குழல் இசையால் கோபியரைக் கவர்ந்த இடம் இது. ‘வம்சீ’ என்றால் புல்லாங்குழல்; ‘வட்’ என்றால் ஆலமரம் என்று பொருள்.

குஜராத் மாநிலம், போர்பந்தரில் குசேலருக்கு ஆலயம் அமைந்துள்ளது. இதை சுதாமா கோயில் என்கின்றனர். கோயில் சுவர்களில் கிருஷ்ண பகவானின் லீலைகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

துவாரகையில் கோயில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகாதீசன் என்று திருப்பெயர். ஜகத் மந்திர் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் பிரதான வாசலுக்கு, சுவர்க்க துவாரம் என்று பெயர்.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ‘நாத்வாரா’ ஆலயத்தின் நாயகன் ஸ்ரீநாத்ஜீ ஸ்வாமிக்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளன ராம். பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு, குங்குமப்பூ கலந்த கோதுமைப் பொங்கல். மேலும் லட்டு, இனிப்புப் பூரிகளுடன் மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்ததாம்.

சென்னைக்கு அருகில் பொன்னேரியில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில், விசேஷ கோலத்தில் அருள்கிறார் மூலவர். இடது கை இடுப்பில் தாங்கி நிற்க, வலது கையில் சாட்டையுடன், சிறிய பால்குடம் ஒன்றை சுமந்திருக்கும் சிரத்தை சற்றே வலப்புறமாகச் சாய்த்தபடி அழகு தரிசனம் தருகிறார் இந்த ஸ்வாமி.

பாண்டுரங்கன்

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில், வந்தவாசியிலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்திலும் காஞ்சிபுரத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில். பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் உள்ளது போன்றே கோபுரம் அமைந்திருக்கிறது. இந்த கோபுர தரிசனம் நமக்குப் பூரிக்குச் சென்ற புண்ணியத்தையும், இந்தப் பீடத்தில் அருள்மிகு ரகுமாயி சமேதராகக் காட்சி தரும் பாண்டுரங்கன் தரிசனம் நமக்குப் பண்டரிபுரம் சென்ற புண்ணியத்தையும் ஒருசேரத் தரும் என்பது ஐதிகம்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை அருகிலுள்ள கிராமம் அரியதுறை. இங்கே மரகதவல்லி சமேதராக வரமூர்த்தீஸ்வரர் அருளும் ஆலயத்தில், கிருஷ்ண பரமாத்மாவின் அம்சமாக ஓர் அரசமரம் வணங்கப்பட்டு வருகிறது!

துரை, மேல மாசி வீதியில் அமைந்துள்ள மதனகோபால ஸ்வாமி ஆலயத்தை ‘தென்னக பிருந்தாவனம்’ எனப் போற்றுகின்றனர் கிருஷ்ண பக்தர்கள். சிவனாரின் கடும் தவத்தால் ஏற்பட்ட வெம்மையைப் போக்க இங்கே எழுந்தருளி, தனது வேணு கானத்தால் குளிர்ச்சியை தந்தாராம் இந்த மாதவன்! இங்கு, நின்ற கோலம், இருந்த கோலம், சயனக் கோலம் என மூன்று கோலங்களில் காட்சி தருகிறார் பெருமாள்.

ஞ்சாவூர் - கரந்தை எனும் பகுதியில் உள்ளது கிருஷ்ண ஸ்வாமி யாதவக் கண்ணன் ஆலயம். இங்குள்ள தொட்டில் கிருஷ்ணனை, தம்பதிகள் மடியில் ஏந்தி தாலாட்டி வழிபட, விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்பது உறுதியாம்.

நெல்லையில் இருந்து சுமார் 27 கி.மீ தூரத்தில், ‘மேலச்செவல்’ எனும் அழகிய கிராமத்தில் அமைந்திருக்கிறது, நவநீத கிருஷ்ண பெருமாள் திருக்கோயில். தொடர்ந்து ஐந்து பவுர்ணமி தினங்களில், இந்தத் தலத்துக்கு வந்து விரதம் இருந்து வழிபட்டால், விரைவில் புத்திர பாக்கியம் கிடைக் கும் என்பது நம்பிக்கை.

உடுப்பி கிருஷ்ணன்

திண்டுக்கல்-பழநி சாலையில் உள்ளது ரெட்டியார் சத்திரம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோபிநாத மலை. இங்கு அருளும் கண்ணனுக்கு பால் மற்றும் தயிர் அபிஷேகம் செய்து வழிபட்டால், நினைத்த காரியம் யாவும் நடந்தேறும்; வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது நம்பிக்கை. பசு போன்ற கால்நடைகளின் நோய்கள் தீரவும் இவரை வழிபடுகிறார்கள்.

ஞ்சாவூரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது மன்னார்குடி. செண்பகாரண்ய க்ஷேத்திரம் என்றும், சர்வ தோஷ நிவர்த்தி தலம் என்றும் இந்தத் தலத்தைப் போற்றுகின்றனர் பக்தர்கள். இங்கு உற்சவர் வித்யா ராஜகோபால ஸ்வாமி, சேலையை வேஷ்டியாகவும், தலைக்கு முண்டாசாகவும் கட்டிக் கொண்டும் காட்சி தருகிறார். ரோகிணி அன்று இத் தலத்துக்கு வந்து பிரார்த்திப்பது விசேஷம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் ஆலயத்தில் அருள்புரியும் கண்ணனின் விக்கிரகம், நேபாள நாட்டில் பாயும் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது.

Also Read: சீர்காழி: 30 ஆண்டுகளுக்குப்பின் சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்... தொடங்கிய திருப்பணிகள்!

மிழகத்திலேயே மிகவும் உயரமான வழுக்கு மரம் உள்ள கிருஷ்ணன் கோயில், மதுரை வடக்கு மாசி வீதியிலுள்ள நவநீத கிருஷ்ணன் கோயில்தான்.

கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், பட்டீஸ்வரம் துர்கை ஆலயம் ஆகியவற்றைக் கடந்து சென்றால், சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள ஊத்துக்காடு ஸ்ரீகாளிங்கநர்த்தனர் கோயிலை அடையலாம். ஊத்துக்காடு வேங்கடசுப்பய்யர் அருள்பெற்ற தலம் இது. காமதேனுவுக்குக் காளிங்க நர்த்தனராக கண்ணன் காட்சி தந்த தலம் இது.

குழந்தைகள் இசைத் துறையில் வல்லுநராக வேண்டும்; பாடுவதில், ஆடுவதில், வாத்தியக் கருவிகளை இசைப்பதில் பேரும் புகழும் பெற வேண்டும் என விரும்புபவர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து காளிங்க நர்த்தனரை பிரார்த்தித்துச் செல்ல... நினைத்த காரியம் இனிதே நடந்தேறும்!

ரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும், சென்னிமலையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது கிருஷ்ணபெருமாள் ஆலயம். இந்த ஸ்வாமிக்குச் சர்க்கரைப் பொங்கல், பால், வெண்ணெய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட்டு, தொழிலைத் துவக்கினால், வியாபாரம் சீரும் சிறப்புமாக நடைபெறும்; லாபம் கொழிக்கும் என்கின்றனர் ஊர்க்காரர்கள்.

திருச்சி பீம்நகர் பகுதியில் வேணுகோபால கிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்கு அருளும் கிருஷ்ணன் சக்திமிக்கவர். கிருஷ்ண ஜயந்தி அன்று நடைபெறும் உறியடித் திருவிழா இங்கு விசேஷம்.

ண்ணன், ராஜகோபாலனாக செங்கமலவல்லி நாச்சியாருடன் அருளும் கோயில் கடலூர், புதுப்பாளையத்தில் உள்ளது. திருப்பதி பெருமாளுக்கான காணிக்கைகளை இங்கு சேர்க்கலாம் என்பது ஐதீகம்.

ண்ணன், பாமா - ருக்மிணியுடன் அருளும் ஆலயம், மதுரை குரார் – கள்ளிக்குடியில் உள்ளது. இங்குள்ள நந்தவனத்தில் உள்ள புளியமரம் பூப்பதோ காய்ப்பதோ இல்லை!

கேரள மாநிலம் குருவாயூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஉன்னிகிருஷ்ணன், பாதாள அஞ்சனம் மற்றும் மூலிகையினால் உருவானவர்.

கேரளாவில் திருச்சம்பரம் எனும் இடத்தில் உள்ள கண்ணன் கோயிலில், அதிகாலையில் கர்ப்பக்கிரக கதவுகள் திறந்ததும் நிர்மால்ய பூஜை, ஆராதனை என்ற விதிமுறைகள் ஏதுமின்றி, முதலில் சூடான பச்சரிசி சாதம் நைவேத்தியம் செய்யப்படுகிறது!



source https://www.vikatan.com/spiritual/gods/some-must-visit-lord-krishna-temples-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக