Ad

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, வீடியோக்கள்! -குட்காவைப் பிடிக்க சென்றபோது சிக்கிய கடைக்காரர்

சென்னை டிபிசத்திரம் பகுதியில் குளிர்பானக் கடை நடத்திவருபவர் பெருமாள் (வயது48). இவரின் கடையில் குட்கா விற்கப்படுவதாக டிபி சத்திரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் கடையை சோதனை செய்தனர். அப்போது 30 கிலோ குட்காவை போலீஸார் பறிமுதல் செய்ததோடு பெருமாளைக் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது குட்கா சப்ளை குறித்த எந்த தகவலையும் பெருமாள் சொல்லவில்லை. அதனால் அவரின் செல்போனை வாங்கி போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் சில சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. அதுகுறித்து பெருமாளிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பெருமாள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் அம்மாவுக்கும் பெருமாளுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அதனால் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு பெருமாள் அடிக்கடி சென்றிருக்கிறார். அப்போது அவர் சிறுமியுடன் அன்பாக பழகியிருக்கிறார். அதன்பிறகு சிறுமிக்கு பெருமாள் பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னுடைய தாயிடம் பெருமாள் குறித்து கூறியிருக்கிறார். ஆனால் சிறுமியின் அம்மா, எதையும் கண்டுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தச் சிறுமியைப் போல இன்னும் 4 சிறுமிகளுக்கு பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. அதனால் பெருமாள், குறிப்பிட்ட சிறுமியின் அம்மா, அவருக்கு உதவியாக இருந்த அவரின் சகோதரி ஆகிய மூன்று பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். பாலியல் தொல்லை கொடுத்த பெருமாள், அவ்வப்போது 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை செலவுக்கு பணமும் கொடுத்திருக்கிறார்" என்றனர்.

Also Read: `ஒரே நாளில் 3 வழக்குகள்'- சகோதரிக்குப் பாலியல் தொல்லை; சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்; பகீர் பின்னணி!

பாலியல் தொல்லை

சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பதால் டிபிசத்திரம் போலீஸார், இந்த வழக்கை உடனடியாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெருமாள், அவருடன் நட்பில் இருந்த சிறுமியின் அம்மா, சிறுமியின் அம்மாவுடைய சகோதரி ஆகியோரிடம் மகளிர் போலீஸார் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது சிறுமியின் அம்மாவுக்கு தெரிந்தது தான் இந்த விஷயம் நடந்திருக்கிறது. சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வரும் பெருமாள், பெண் குழந்தைகளுடன் எப்போதும் அன்பாக பேசி மிட்டாய்களைக் கொடுத்து பழகிவந்திருக்கிறார். அதன்பிறகுதான் தன்னுடைய சுயரூபத்தை வெளியில் காட்டிவந்திருக்கிறார். பெருமாள் கைது செய்யப்பட்ட தகவலைக் கேட்ட டிபி சத்திரம் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். தொடர்ந்து பெருமாளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



source https://www.vikatan.com/news/crime/5-girl-children-abused-by-a-shop-owner-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக