Ad

வியாழன், 30 செப்டம்பர், 2021

பழநி அரசு மருத்துவமனை: திடீர் புகை; ஆக்சிஜன் குழாய் வெடித்ததாக வதந்தி! - அலறி ஓடிய கர்ப்பிணிகள்

பழநி நகரின் மையப்பகுதியில், பழநி அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு, சித்தா பிரிவு, தாய், சேய் நலப்பிரிவு, மகப்பேறு மற்றும் புறநோளிகள் பிரிவு, கொரோனா பிரிவு மற்றும் ரத்த வங்கி ஆகியவற்றுக்கு தனித்தனியாகக் கட்டடங்கள் உள்ளன. இதில் மகப்பேறு பிரிவு 70 படுக்கைகளுடன் இயங்கிவருகிறது. இந்தநிலையில் புதன்கிழமை பகல் 12 மணி அளவில் மின்கம்பத்திலிருந்து கட்டடத்துக்குள் வரும் இணைப்புப் பகுதியில் ஷார்ட் சர்க்கியூட் ஏற்பட்டிருக்கிறது. இதில் சிறிய அளவில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கட்டடத்துக்குள் ஆக்சிஜன் குழாய் வெடித்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் வார்டில் இருந்த கர்ப்பிணிகள், தாய்மார்கள் பச்சிளங்குழந்தைகளுடன் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். ஒரே நேரத்தில் அனைவரும் வெளியேறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கட்டடத்தின் பின்பக்க நுழைவுவாயில் கண்ணாடிக் கதவு உடைந்தது.

மகப்பேறு பிரிவு

இதற்கிடையே கட்டடத்தில் இருந்த தீத்தடுப்பு உபகரணங்களைக்கொண்டு தீ ஏற்படாமல் தடுக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களும் விரைந்து வந்து மின் இணைப்புகளைச் சரிசெய்தனர்.

இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வார்டிலிருந்து வெளியேறிய கர்ப்பிணிகள், தாய்மார்கள் பாதுகாப்பாக உள்ளே அழைத்துவரப்பட்டனர்.

Also Read: மகப்பேறுக்கு தயாரான கர்ப்பிணி ஊழியர்; குட்டி வளைகாப்பு நடத்தி சர்ப்ரைஸ் தந்த அரசு அலுவலக ஊழியர்கள்!

`மகப்பேறு பிரிவு கட்டடத்தில் போதிய படுக்கை வசதி இல்லாததால், கர்ப்பிணிகள், தாய்மார்கள் படுக்கையின்றி கீழே படுக்கும் நிலை இருக்கிறது. படுக்கைகள் 70 இருந்தாலும், இங்கு கூடுதலான பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுவருகிறது. இத்தகையை சூழலில் தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடத்தால் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே தாய், சேய் நலப்பிரிவுக்குக் கூடுதல் கட்டடம் அமைக்க வேண்டும் எனவும், மருத்துவமனையை முறையாகப் பராமரிக்க வேண்டும்’ எனவும் பழநி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Also Read: மீண்டும் புயலைக் கிளப்பும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை விவகாரம்... தி.மு.க-வின் திட்டம்தான் என்ன?

இது குறித்து பழநி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமாரிடம் பேசினோம். ``மருத்துவனை முறையாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது. முதலுதவி மற்றும் தீத்தடுப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறு மின்கசிவு காரணமாக புகை ஏற்பட்டுள்ளது. இதனால் வார்டில் இருந்தவர்கள் பதறிப்போய் வெளியேறியுள்ளனர். மின் ஊழியர்ளை உடனடியாக வரவழைத்து மின் இணைப்பு பிரச்னை சரிசெய்யப்பட்டது. போதிய இடவசதி இல்லாதது உண்மைதான். கூடுதல் கட்டடத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் புதிய கட்டடம் அமையவிருக்கிறது” என்றார்.



source https://www.vikatan.com/news/accident/panic-at-palani-government-hospital-after-smoke-came-out

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக